தொடரும் தோழர்கள்

வியாழன், ஆகஸ்ட் 16, 2012

நாயுள்ளம்!(தொடர்கிறது)

நடராஜனின்  பத்து  வயதுப்  பேரன் வருணுக்கு நாய் வளர்க்கும் பலநாளைய  ஆசை  நிறைவேறி   சில நிமிடங்களே ஆகி இருந்தது.

வருணின்  தந்தை  6  மாதங்களுக்கு  முன் அமெரிக்காவில்  நல்ல வேலையில்    சேர்ந்திருந்தார்.  2  வார விடுமுறையில் இந்தியாவுக்கு  வந்த  தந்தையுடன்,வருண்  4  நாட்கள்  பெங்களுர் போயிருந்தான்.  ஒரு  5  நிமிடங்களுக்கு  முன்பு  தான்  அவனுடைய பெங்களுர்  பெரியப்பா  அவனுக்காக தருவித்த  1  மாத  வயதான ஒரு  லாப்ரடார் நாய்க்  குட்டியை பரிசாக  அளித்தார்.  இந்த  சுப  நிகழ்வை கைப்பேசி  மூலமாக தாத்தாவுடன்  பகிர்ந்து கொண்டான். 

வருண்  தன்  நாய்க்குட்டி  மற்றும்  பெற்றோர்களுடன்  அன்று  இரவு  சென்னை  திரும்பும்  செய்தியை வீடு  திரும்பியவுடன் தன்  மனைவி வித்யாவிடம் நடரஜன்  அறிவித்தார்.  

தன்  பிறந்த வீட்டில் செல்லமாய்  வளர்ந்த மணி   என்ற  நாயுடன்  தான்  பகிர்ந்துகொண்ட  இன்ப  துன்பங்களை  நினைவு  கூர்ந்தாள்  வித்யா. 

அது  வேறுமாதிரியான   நாய், இது உயர் ஜாதி  நாய்  என்று  நடராஜன்  வித்யாவை  சீண்டி விட்டார்.

குட்டி நாயை கவனமாக  பத்திரப்  படுத்தி  சென்னைக்கு  எடுத்து  வந்தாகி  விட்டது.    சதாப்தியின் பதமான  ஏ.சி குளுகுளுப்பில்   இதமாகத்தூங்கி ,  பெருங்குடியை ஐ-10 காரில் சீரான குளுமையில் செளகரியமாக சென்றடைந்தது.  வீட்டின்  ஹாலில்  சிறிது நேரம்  அங்குமிங்கும் ஓடி எல்லோரையும்  மகிழ்வித்து,  சிறிது  பாலுண்டு தூங்கியது. 

மறு  நாள்  காலை நாய்குட்டிக்கு   நாமகரணம்.   பெயரை  தேர்ந்தெடுக்க மற்றவர்களுக்கு முழு  சுதந்திரம்  அளித்துவிட்டு, டாமி  என்ற  பெயரை எதேச்சதிகாரமாய்  சூட்டினான்  வருண். வித்யா  சூட்ட முனைந்த மணி என்ற  பெயரை சுதந்திரமாக  நிராகரித்தான். 

டாமி  நாளொருமேனியும்  பொழுதொரு  வண்ணமுமாக லேசான  மஞ்சள் கலந்த  வெள்ளை  நிறத்தில் நிறம்  மாறாமல்  வளர்ந்து  வந்தது.  குடும்பத்தில்  யாவரும் அதன்  ஒவ்வொரு அசைவையும் ஆர்வம்  கலந்த  மகிழ்ச்சியுடன் கண்டு  களித்தனர்.   

மாப்பிள்ளை  அமெரிக்கா திரும்பினார்.  பெண் விடுப்பு  முடிந்து  பணிக்குத்திரும்பினாள்.  வருண்  டிசம்பர் விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம்  சென்றான். 

நடராஜன்  நாய்  காவலர்  ஆனார்.  வித்யா கைவண்ணத்தில்,  ராகி  தோசை, ஒருலிட்டர் பால்  என்று  ஆரம்பித்த டாமியின்  உணவு  வகை முட்டை, பெடிக்ரி, ரோஸ்மில்க் என நீண்டது.  டாமி  முட்டை தின்னும்  சைவ  நாய்.    தாங்கமுடியாத லூட்டி  அடிக்கும்  சமயங்களில், ஒரு செய்திதாளை, சுருளாக வைத்துக்கொண்டு, வித்யா மிரட்டும்  போது  டாமி  பெட்டிப் பாம்பாக  அடங்கி,  தனது  வழக்கமான  ஜாகைக்குச்  சென்று  கப்சிப்  என்று பதுங்கிவிடும்.

வருண் பெரும்பாலான  விளயாட்டு நேரத்தை கிரிக்கெட் டாமி  என  சமமாக பகிர்ந்துகொண்டான்.  வீட்டில்  உள்ள எல்லோரது செல்லத்தையும்  அமோகமாகப் பெற்று,  2 மாதத்தில்  டாமி  நல்ல வளர்ச்சியை  அடைந்தது. 

 நடராஜன் காலையில், சூரியோதயத்திற்கு  முன்னமே  டாமியுடன்  வெளியே  புறப்பட்டுவிடுவார்.  அருகில்  உள்ள  பூங்காவில்,  டாமி  இரண்டு  சுற்று வேகமாக நடந்துவிட்டு, பின்  காலை  கடன்களை  ஆற்றும்.  எச்சங்களை  நடராஜன்  பிளாஸ்டிக் பையில்,  கைபடாமல்,  உபகரணங்களை  வைத்து  அள்ளி,  பக்கத்தில்  உள்ள  குப்பைத்தொட்டியில்  போட்டுவிடுவார்.    நாய்கள்  இடும்  எச்சங்களை  கண்டுகொள்ளாமல்  சாலைகளின்   நடுவில் மர ஓரங்களில், மற்றவர்களின்  வீட்டு  வாசல்களில் அப்படியே  விட்டுச் செல்லும் பெரும்பாலான நாய்  வளர்ப்பவர்களின்  மத்தியில் நடராஜன் விதிவிலக்காக ஒளிர்ந்தார்.  சிறு நீரையும்  ஒரு  குறிப்பிட்ட இடைவெளிகளில், வீட்டு  பின்புற  தோட்டத்தில்,  கழிக்க டாமியை பழக்கப்  படுத்தி இருந்தார்.    

நடராஜன்  பேண்ட்  அணிந்து கொண்டால்  ,  டாமி  வெளியில்  செல்லத் தயாராகிவிடும்.   சிறுது  நேரம்  குரைத்து, தன்னை வெளியே அழைத்து  போகாத அதிருப்தியை வெளிபடுத்தும். 

சாப்பாட்டிற்கு  வித்யா;
உலாவலுக்கு  நடராஜன்;
விளையாட்டிற்கு  வருண்;
பயிற்சிகளுக்கு  வருணின் அம்மா--.

எனத் தன்னை  வளர்க்கும்  குடும்பத்தினரை  பாகுபடுத்திப்  பாசத்தைப்  பொழிந்து  தன்னை  பராமரித்துக்  கொண்டது.   அவர்கள்  வீட்டு  க்ரவுண்ட் ஃப்ளோரில்  குடியிருக்கும்  வயதான தம்பதியரிடம் நன்கு  பழகி  ஒத்துழைத்து,  சௌகரியமாக காலத்தை  கழித்தது. 

ஒருமுறை,  காலை  நடையின்  போது,  பூங்காவிற்கு  செல்லும் வழியில் எதிர்கொண்ட   40  வயது நபர்  மீது  டாமி  பாய  முயன்று  அந்த  நபர்  கலவரமடைந்து  கீழே  விழுந்த  போது  டாமியை  கட்டுபடுத்தமுடியாமல் நடராஜன்  திண்டாடினார்.    கீழே  விழுந்த  நபர் அடி, கடி படாமல்  தப்பித்தது  நடராஜனுக்கு  பெரும்  நிம்மதி  அளித்தது.    அந்த  சம்பவத்திற்கு  பிறகு நடராஜன் ஒரு மிருக வைத்தியரின் ஆலோசனைபடி,  டாமியை  வெளியில்  கூட்டிச்செல்லும்  போது, சோக்கர் பெல்டை,  தனது  விருப்பத்திற்கு மாறாக, அணிவிக்க ஆரம்பித்தார்.  மருத்துவர் கொடுத்த அட்டவணைப்படி,  தடுப்பு  ஊசிகளை, தவறாமல் செலுத்தி, டாமியை சுகாதாரமாக  பராமரித்து  வந்தார். 

நாயின்  வேகத்திற்கு  எற்ப நாளிருமுறை  நடந்து,  அதன்  காரணமாக நடராஜனின்  ரத்த  இனிப்பு,  ரத்த அழுத்தம் மருத்துவரே  கண்டு  வியக்கும்  அளவிற்கு,  நார்மல்  அளவை எட்டி,  ஸ்டெடியாக நின்றது, அவரது  சந்தோஷ சாதனை.

நடராஜன் ஜெகந்நாதனை  குறைந்த பட்சம் வாரம்  இருமுறையாவது  சந்திப்பார்.  டாமியைப்   பற்றி  எல்லா  விவரங்களையும் ஈடுபாட்டுடன் கேட்டறிந்தார்.  சாதாரணமாக நாய்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில்  விலகி  வாழும்  ஜெகந்நாதனுக்கு நாளடைவில் டாமியின் மீது  எள்ளளவு பரிவு  ஏற்பட ஆரம்பித்தது.  அவர்   டாமியை சந்திக்கும்   தருணம் விரைவில்  வந்தது. 

வருணின்   பத்தாவது  பிறந்த நாளுக்கு மூன்று வயதான  ஜெகந்நாதன்  பேரனுக்கு அழைப்பு வந்தது.  பிறந்த நாளன்று  ஆயுஷ் உடன் ஜெகந்நாதன்  வருணை வாழ்த்த நடராஜன்  வீட்டிற்கு  சென்றார். 

வருண்  புதிய  ஆடைகளை  அணிந்துகொண்டு தன்  வயதொத்த சிறுவர்களுடன்  சந்தோஷமாகப் பிறந்த   நாள் திளைப்பில் மூழ்கி இருந்தான். பாட்டு,  நடனம் விளையாட்டு என சிறுவர், சிறுமியர்கள் சந்தோஷமாக கட்டுப்பாடுடன் துள்ளிக் கொண்டிருந்தனர். 

வெகுமதியைக்  கொடுத்த  ஆயுஷ் வருணை  மழலையில்  வாழ்த்தினான்.  பிறகு  ஆயுஷ் டாமி-ஐ  பார்க்கவேண்டும் என்று ஆர்வம்  காட்டி  அடம்  பிடிக்கவே நடராஜன்  தாத்தாவையும்  பேரனையும்  மொட்டை மாடிக்கு  அழைத்துச்  சென்றார்.  அவர்களை  கண்டவுடன்  டாமி,  சந்தோஷமாகத் தாவியது. ஜெகந்நாதன் தன்  பேரனைப் பாதுகாப்பான தூரத்தில்  தூக்கி  வைத்துக்கொண்டு டாமியை ஆழ்ந்த அதிசயத்துடன்  காணும்  தன் பேரனைக் கண்டு அகமகிழ்ந்தார்.  நடராஜன் டாமியை  அன்பாக மேல் கழுத்தில்  கோதிவிட ,  டாமி  அதை  இதமாக  ஏற்றுக் கொண்டது.   ஆயுஷ் டாமியை  தடவிக் கொடுக்க வேண்டும் என்ற  ஆசையை உறுதியாக  வெளிப்படுத்தினான். 

நல்ல   ஷாம்பு  போட்டு குளிப்பாட்டி இருக்கேன்   என்று  சொல்லிக்கொண்டே  ஆயுஷ்யை  தூக்கிக்கொணடு  டாமியை  தொட்டு, தடவி  கொடுக்கவைத்தார்  நடராஜன்.  ஆயுஷ்  சிறிது  பயம்  கலந்த  பிரமிப்பை  வெளிப்படுத்தினான்.  நடராஜனின்  இந்த  செய்கை ஜெகந்நாதனுக்கு  ஓரளவு பிடித்தே இருந்தது.    தன்னை  இந்த  மாதிரி  சிறுவயதில்  ஊக்க மூட்டி யாராவது  பயத்தைப்  போக்க முயற்சித்திருந்தால்,  நாய்  பயம்  இல்லாமல் வாழ்ந்திருக்கலாமே  என்று  தோன்றியது.  

ஜெகந்நாதன்  டாமியின்  வளர்ச்சியை  பார்த்து  வியந்து லைன் கிங்  சிம்பாவை போல இருக்கே என்றார்.

பிறகு  கீழே வந்து வாஷ்பேசின்  அருகில்  இருந்த ஹாண்ட் வாஷை  எடுத்து ஆயுஷின் கைகளை  சுத்தம்  செய்வித்து அவனை  பார்ட்டிக்கு தயார் செய்தார்.  பெரிய  சிறுவர்கள்  மத்தியில் ஆயுஷ்  புகுந்து  சுற்றி  வட்டமிட்டான்.  இருமுறை ம்யூஸிக் ஸிஸ்டத்தை  அணைத்து  மற்றவர்  கவனத்தை  ஈர்த்தான்.    அவனுக்கு  பிடித்த  முறுக்கு ஃப்ரெஞ்ச் ஃப்ரை கேக் ஐஸ் க்ரீம்  ஆகியவைகளை  சாப்பிட்ட உடன் வீட்டிற்குப்  போக  வேண்டும்  என்று  நச்சரிக்கத்  தொடங்கினான்.   வருணிடம்  சென்று  பிறந்த நாள்  வாழ்த்துக்களை  மீண்டும்  மழைந்து, மறு வெகுமதியை  பெற்றுக் கொண்டு தனக்குப்  பிடித்த  சில  அக்காக்களுக்கு  மட்டும்  பை   சொல்லிவிட்டு, தாத்தாவின்  கால்களை  கட்டிக்கொண்டான். 


வீடு  சென்று  அடைவதற்கு  முன்பே ஆயுஷ்  தூங்கிவிட்டான். நடராஜன்  வீட்டில்  இருந்தபோது டாமியின்  மூலம் எவ்வித அசம்பாவிதமும் நேராதது  குறித்து ஜெகந்நாதன்  இறைவனுக்கு  நன்றி செலுத்தினார்.  வால்தனம்  ததும்பும் சிறுவர்களின்  விஷம காரியங்களில்  ஒன்றான  நாயை  அவிழ்த்துவிட்டு  வேடிக்கை பார்க்கும் படலம் நடக்காமல்  பாதுகாத்த நடராஜனின்  பொறுப்புணர்ச்சியை   போன்  செய்து   பாராட்டினார். 

டாமி  காவலில்  கெட்டிக்காரனாக  இருந்தது.  புதிதாக  பார்ப்பவர்களை அச்சுறுத்தும்  பிரமாண்ட  உருவத்திற்கு  ஏற்ப பயமுறுத்தும்  குரல்  வளம் டாமியின்  பெரிய  வலு.  டாமியை  மீறி நடராஜனின்   வீட்டு எல்லைக்குள் எவரும்  ஊடுருவ முடியாது.  சில கட்டளைகளை  நிறைவேற்றும்   பயிற்சிகளை டாமி  திறம் பட  செய்தது.  நில், உட்கார்,  ஓடு,  தவழ்  ஆகியவற்றை  லாவகமாகச் செய்தது.  எறிந்த  பந்தை பொறுக்கி வரும், தூங்கச்சொன்னால் படுத்துக்கொள்ளும்.  இந்த  ஆறு  கட்டளைகளை  சிரமமின்றி  ஆற்றும். 

 டாமி வருண்  நட்பு நெருக்கமாகிக் கொண்டிருக்கும்  சமயத்தில் அவர்கள்  பிரியவேண்டிய  நிர்ப்பந்தம்  ஏற்பட்டது.  வருணின் தந்தை   மனைவியையும்,  மகனையும்  யு.எஸ் அழைத்து போக  எல்லா  எற்பாடுகளையும் மின்னல் வேகத்தில்  செய்து  முடித்தார்.   டாமியை பத்திரமாக  தாத்தா பாட்டியிடம்  ஒப்படைத்துவிட்டு பிரியாவிடை  பெற்று  யு.எஸ்  சென்றான்  வருண். 

(அடுத்த பகுதி நிறைவுப் பகுதி )

24 கருத்துகள்:

  1. இயலபாகச் சுவாரஸ்யமாகப் போகிறது தொடர்
    இறுதிப்பகுதியில் தான் எதிர்பாரா
    விஷயம் இருக்கிறது என நினைக்கிறேன்
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆகா,அங்கேயும் மின்தடையா? இந்தL.K.G.மாணவனின்
    ஆர்வத்திற்க்கு தடையா?

    பதிலளிநீக்கு
  3. /// நடராஜனின் ரத்த இனிப்பு, ரத்த அழுத்தம் நார்மல் அளவை எட்டி, ஸ்டெடியாக நின்ற அவரது சந்தோஷ சாதனை /// உண்மை தான்... (சில 'வாக்கிங் நண்பர்கள்' காலையில் சொன்னதுண்டு...

    எங்கே சார்...? ரகசியம்... நன்றி... (TM 3)

    பதிலளிநீக்கு
  4. கதை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. நான் நினைக்கிறேன் ‘டாமி’யை அதன் ஆயுள் முழுதும் பார்த்துக்கொள்ளப்போவது ஆயுஷ் தான் என்று. பார்க்கலாம் எனது கணிப்பு சரியா என்று.

    பதிலளிநீக்கு
  5. கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது...

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. ஏதோ நடக்கப் போகிறது என்று தெரிகிறது! என்ன, எப்போது என்று தெரியவில்லை! பெயர் வைக்கும் வரிகள் உட்பட பல இடங்களில் மெல்லிய நகைச்சுவையை ரசிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  7. வயதானவர்களுக்கு நல்ல துணை கிடைத்தது. தொடர்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  8. எனக்கு தெரிந்தவரின் வீட்டிலிருந்த நாயின் பெயர் "சிம்பா" தான். வெளி நபர்கள் அஞ்சும் தோற்றம். நமது சிறு அசைவுகளையும் அது புரிந்து கொள்ளும் திறன் என்னை வியக்க வைத்தது. உதாரணமாக வாக்கிங் அழைத்து செல்ல நாம் யோசித்து செயின் எடுக்கும் முன்பாக கழுத்தை காட்டி நிற்கும்.

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு