தொடரும் தோழர்கள்

புதன், ஜூலை 27, 2011

மகிழ்வுந்து விற்பனைக்கு!

அயர்லாந்து செய்தித்தாள் ஒன்றில் வெளியான ஒரு விளம்பரம்----

”கார் விற்பனை.

1985ஆம் ஆண்டு வோல்க்ஸ்வேகன் கார்,நீல நிறம்.

மொத்தம் 50 மைல்கள்தான் ஓடியிருக்கிறது.

முதல் கியரும்,பின் செலுத்தும் கியரும் மட்டுமே உபயோகப் படுத்தப்பட்டுள்ளன.

என்றும் வேகமாக ஓட்டப்பட்டதில்லை.

முதலாவது டயர்,பிரேக்,பெட்ரோல் முதலியன இன்னும் மாற்றப்படவில்லை!

ஒருவரே ஓட்டி வந்தது.

சொந்தக்காரர் தற்பொழுது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் விற்கிறார்.

புகைப்படம் இணைக்கப் பட்டுள்ளது!”

வாவ்!எல்லாமே உண்மையே.கீழே,கீழே போய்ப் படத்தைப் பாருங்கள்!







திங்கள், ஜூலை 25, 2011

மூணோண் மூணு!--தொடர்பதிவு

நண்பர்கள் அப்பாதுரையும்,அதன் பின் பாலாவும் விடுத்த அன்பு அழைப்பை ஏற்றுக் களத்தில் நானும் குதிக்கிறேன்!அப்பாதுரை அவர்கள் மூன்று நாட்களுக்குள் எழுதாத ஒருவருக்கு ஏதோ காணாமல் போய் விட்டதாக வேறு பயமுறுத்தியிருந்தார்.எனக்கும் கொஞ்சம் பயம்தான்.மூன்று நாட்களுக்குப்பின் ஒரு நாள் சாப்பாட்டுக்குப் பின் இருமல் வந்தது.துப்பும்போது எச்சில் சிவப்பாக இருந்தது.சரிதான் அப்பாதுரை சொன்னது போல் ஏதோ விபரீதம் எனப் பயந்தேன். பின்னரே நினைவுக்கு வந்தது,சாப்பிட்ட பின் பீடா போட்டேன் என்பது!

இதோ மூன்று மூன்றாய்-----

1)எனக்குப் பிடித்த மூன்று-
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
இவற்றைக் கொள்கையாய்ச் சொன்னவர்கள் பறக்க விட்டு விட்டார்கள் .
நானாவது ’பிடித்துக்’ கொள்கிறேனே!

2)எனக்குப் பிடிக்காத மூன்று
பொது இடத்தில் புகை பிடித்தல்(அவர்கள் பிடிக்கிறார்கள்;எனக்குப் பிடிக்கவில்லை!)
நிகழ்ச்சியின் நடுவே கைபேசியில் பேசுவது
பைத்தியம்(இதுவரை பிடிக்கவில்லை)

3)நான் வணங்கும் மூன்று
என் தாய்
குலதெய்வம் ரங்கனாதபுரம் சாஸ்தா
என் அப்பன் தென்னாடுடைய சிவன்

4)என்னை வணங்கும் மூன்று
மூன்று,முப்பது,முன்னூறு,மூவாயிரம்……..எல்லா உயிரும் என்னைத் தொழும் ----(நான்கொல்லான்,புலால் மறுத்தான்)

5)பயப்படும் மூன்று
குரைக்கும் தெருநாய்கள்
நரைக்கும் காதோர முடி(இப்போ தலை முழுதும் நரைச்சாச்சு!)
முறைக்கும் மனைவி!

6)புரியாத மூன்று
நான் சில்லறையோடு பேருந்தில் செல்கையில் பலர் நூறு ரூபாய் நோட்டுக் கொடுத்துக்கூட டிக்கெட் எடுக்கிறார்கள்.ஆனால் என்றாவது நான் சில்லறை இல்லாமல் போய் பத்து ரூபாய் கொடுத்தால் கூட நடத்துனர் விரட்டுகிறாரே(சாவு கிராக்கி!) ஏன்?

தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சி என்று முன்பே தெரிந்து,திட்டமிட்டு அதைப் பார்க்க அமரும்போது மின்சாரம் போய் விடுகிறதே ஏன்?

என்னையே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே!

7)மேஜையின் மேல் உள்ள மூன்று
(மேஜையே கிடையாது,இதில் அதன் மேல் என்ன?)
கணினி மேஜை மேல்
கணினி
மோடம்
கண்டதெல்லாம்!

8)சிரிக்க வைக்கும் மூன்று
டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்
செந்தில்-கவுண்டமணி காமெடி
பதிவுகளில் வரும் பல ஜோக்ஸ்

9)தற்போது செய்து கொண்டிருக்கும் மூன்று
கைகள் கணினியைத்தட்டுகின்றன
காதுகள் பாம்பே ஜெயஸ்ரீ யின்(ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அல்ல!)
பாட்டைக் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
மூக்கு எங்கிருந்தோ வரும் வெங்காயம் வதக்கும் வாசனையை ரசித்துக் கொண்டிருக்கிறது.

10)வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று
மானசரோவர் யாத்திரை
ஆசிரம வாசம்
நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு சிவன் கோவில் அமைத்தல்

11)செய்யக்கூடிய மூன்று
இயன்ற வரை பிறருக்கு உதவுதல்.
வாய்ப்புக் கிடைத்தால் இன்னும் சிறிது வேதம் கற்றல்
ஆர்வமுள்ளவருக்குக் கற்பித்தல்.

12)கேட்க விரும்பாத மூன்று
நள்ளிரவில் நாயின் ஊளை
சுருதியேயில்லாத பாட்டு
பொருளேயில்லாத பேச்சு

13)பிடித்த உணவு வகை
மிளகு குழம்பு
பருப்புத் துவையல்
சுட்ட அப்பளம்
(மூன்றும் சேர்ந்து!)

14)அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள்
கர்நாடக இசையில்- பிறவா வரம் தாரும்
என்றைக்கு சிவ க்ருபை
தத்வமறிய
திரை இசையில்
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
செந்தமிழ்த் தேன் மொழியாள்
ஒருநாள் போதுமா

15)பிடித்த மூன்று படங்கள்
மூன்றாம் பிறை
கப்பலோட்டிய தமிழன்
மௌனராகம்

16)இது இல்லாமல் வாழ முடியாது என நினைப்பது

வலைப் பதிவும் பதிவுலக நண்பர்களும் அவர்கள் பதிவுகளும்!!ஹா,ஹா,ஹா!

ஒரு பதிவு எழுத இதுவரை நான் இந்த அளவு சிரமப்பட்டது கிடையாது!
இந்த இனிய சிரமம் கொடுத்த அப்பாதுரைக்கும்,பாலாவுக்கும் நன்றி

இதைத் தொடர நான் அழைப்பது---ஜோதியில் கலக்க யாருக்கெல்லாம் விருப்பமோ.வாங்க!

வெள்ளி, ஜூலை 22, 2011

பேய்!-(சிறுகதை இறுதிப் பகுதி)

இரவு உணவை முடித்து விட்டுச் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல் 10 மணிக்குப் படுத்தேன்.இரவு விளக்கு இல்லாமல் நான் தூங்குவதில்லை. படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் உறங்கி விட்டேன்.

திடீரென்று விழிப்பு வந்தது.கண்விழித்தேன்.இருட்டாக இருந்தது.புழுக்கமாக இருந்தது. மின்சாரம் இல்லை என்பதை உணர்ந்தேன்.கைபேசியின் விளக்கு ஒளியில் மணி பார்த்தேன். 12.05.எழுந்து வெளியே போகலாமா என்று யோசித்தேன். அப்போதுதான் ’கம்’ மென்று மல்லிகைப் பூ மணம் என் நாசியைத் தாக்கிற்று. கிறங்க வைக்கும் மணம்.எங்கிருந்து வருகிறது என யோசித்தேன்.அதே நேரம் ஒரு பெண்ணின் அழு குரல் கேட்டது.பெரிய அழுகை இல்லை.சிறு விசும்பல்கள்.அதில் அதீத சோகம் இருந்தது.ஹால் பக்கமிருந்துதான் சத்தம் வந்துகொண்டிருந்தது. பேய்தானா? லேசாக பயம் வந்தது.ஹனுமான் சாலீஸா வைச் சொல்ல ஆரம்பித்தேன். சொல்லியவாறே படுத்தேன். தூங்கி விட்டேன்.

கண்விழிக்கும் போது காலை மணி 5.30.நான் வழக்கமாகக் கண்விழிக்கும் நேரமே. ஹாலுக்கு வந்தேன்.சுற்றிப் பார்த்தேன் எந்த மாற்றமும்,தடயமும் தெரியவில்லை. அதெல்லாம் கனவா?உண்மை நிகழ்வா எனப் புரியாத ஒரு குழப்பம்.

என் வேலைகளை முடித்துச் சாப்பிட்டு விட்டு அலுவலகம் புறப்பட்டேன்.சிலர் கேட்டார்கள் முதல் நாள் அனுபவம் எப்படி என்று.எனக்கு எதுவும் தெரியவில்ல என்று சொல்லி விட்டேன்.அலுவலக வேலைகள் முடிய இரவு ஏழு மணி ஆகிவிட்டது. வீடு திரும்புமுன்,சில பொருட்கள் வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் சென்றேன்.அங்குதான் அவனைப் பார்த்தேன்.என் நண்பன் குமரன்.நீண்ட நாட்களுக்குப் பின் இப்போதுதான் பார்த்தேன்.

அவனைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.ஒரு மருந்துக் கம்பெனியில் ஃபீல்ட் மேனேஜர். ஜாலியானவன்.ப்ளே பாய்.எந்தப் பெண்ணா யிருந்தாலும் வசியம் செய்து விடுவான்.காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது.காரியம் முடிந்ததும் கழற்றி விட்டு விடுவான்.

அங்கு சந்தித்து சிறிது நேரம் பேசிய பின் அவன் சொன்னான்.”வா,நமது இந்தச் சந்திப்பைக் கொண்டாடலாம்.”அவன் அகராதியில் கொண்டாட்டம் என்றால் ஒன்றுதான்—பாருக்குப்போவது.

போனோம்.அவன் விஸ்கியும்,நான் வழக்கம்போல் பியரும்.சுருதி ஏறினால் பேச்சு எப்போதுமே அதிகமாகுமே.அவனது புதிய நண்பிகள் பற்றியெல்லாம் சொன்னான்.

நான் குடியிருக்கும் வீடு பற்றியும் முதல் நாள் அனுபவம் பற்றியும் சொன்னேன்.

”வாவ்!சுவாரஸ்யம்! பெண்பேய்! மல்லிகைப்பூ!மோகினிப் பிசாசு என்றால் அழகாக இருக்குமே!நானா இருந்தா நேற்றே அந்தப் பேயை……… என்று சொல்லிச் சிரித்தான்.போதை ஏறியிருந்தது.

”போதும்,போகலாம்” என்று சொல்லி முடித்துக் கொண்டு எழுந்தேன்.அவனால் சரியாக நிற்க முடியாமல் தள்ளாடினான்.இந்த நிலையில் அவனை எப்படி விட்டு விட்டுப் போவது. ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன்.மணி 10 ஆகி விட்டது.ஹாலில் ஒரு படுக்கை போட்டு அவனைப் படுக்க வைத்துவிட்டு நான் அறையில் படுத்தேன்.

திடீரென்று விழிப்பு வந்தது -நேற்று போலவே.மணி பார்த்தேன்.12.15.மல்லிகைப்பூ மணம்!ஆனால் அழு குரல் கேட்கவில்லை.மாறாக வளையல் ஒலி.பெரு மூச்சுகள். முனகல்கள்.எழுந்து சென்று பார்க்க எண்ணினேன்.என்னால் படுக்கையிலிருந்து எழ முடியவில்லை.அப்படியே மயக்கம் போன்ற உறக்கம்.

காலை எழுந்து வந்து பார்த்தேன்.குமரனைக் காணவில்லை.வாசல் கதவு சும்மா சாத்தி இருந்தது.என்ன ஆனான்?மனது உறுத்தியது.அவன் தங்கியிருப்பதாகச் சொன்ன ஓட்டலுக்குச் சென்றேன்.ரிசப்ஷனில் கேட்டேன்.

”அவர் நேற்று இரவே காலி பண்ணிட்டுப் போயிட்டாரே. இரவு ஒரு மணி இருக்கும். வேகமாக வந்தார்.காலி செய்து போய்விட்டார்.”

பின் சிரித்துக் கொண்டே சொன்னான்.”அவர் வரும்போது அப்படி ஒரு மல்லிகை மணம்!அவர் அறைக்குச் சென்ற பின்னும் அந்தமணம் இங்கே இருந்தது.அவர் காலி செய்து போனபின் அந்த மணம் இல்லை! அந்த இரவில் என்ன செண்ட் போட்டாரோ?”

நாள் முழுவதும் அதே சிந்தனையிலேயே இருந்தேன்.


அன்று இரவு மல்லிகை மணமில்லை,அழுகையில்லை!

டிஸ்கி:- முடிவுக்கு இரண்டு டிராக் வைத்திருந்தேன்.ஆனால் மூன்றாவதாக ஒரு சுவாரஸ்யமான டிராக் தந்தவர்,என் பள்ளியில் எனக்கு ஜு.....னியர்(!),நான் விளையாடிய செம்மண்ணில் விளையாடியவர்-நண்பர் செங்கோவி!(-சென்ற பதிவின் பின்னூட்டத்தில்!)அவருக்கு நன்றி.தொடக்கத்துக்குக் காரணம் அவர்;முடிவுக்கும் காரணம் அவரே!

வியாழன், ஜூலை 21, 2011

பேய் !(சிறுகதை)

புரோக்கர் காட்டிய அந்த வீடு எனக்குப் பிடித்திருந்தது.

சிறிய வராண்டா,வரவேற்பறை,ஒரு படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை என்று கச்சிதமான வீடு.

பத்து நாள் தேடலுக்குப் பின் இப்போதுதான் வீடு கிடைத்திருக்கிறது.
அலுவலக நண்பர்கள் கூடக் கேட்டார்கள், தனி ஆளுக்கு ஒரு வீடு எதற்காக, லாட்ஜில் ஒரு அறை போதுமே என்று.

ஆனால் எனக்கு லாட்ஜ் வாழ்க்கையும்,ஓட்டல் சாப்பாடும் பிடிப்பதில்லை.

தனியாக நிம்மதியாய் நானே சமைத்துச் சாப்பிடுவதே என் விருப்பம் .

வீடு முழுவதும் சுற்றிப்பார்த்தேன்.படுக்கையறை நிலைப்படியின் மேல் ஒரு தகடு அடிக்கப்பட்டிருந்தது.வீட்டிலிருந்து வெளியே வரும்போது பார்த்தேன்,வாசல் நிலைமேலும் ஒரு தகடு.

புரோக்கரைக் கேட்டேன்.வீட்டுச் சொந்தக்காரர் யாரோ சாமியாரின் பக்தராம்; அவர் கொடுத்த தகடை நன்மைக்காக அடித்திருக்கிறார் என்று சொன்னார்.
புரோக்கருடன் சென்று வீட்டுச் சொந்தக்காரரைப் பார்த்து முன் பணம் கொடுத்து வீட்டை முடித்தேன்.வாடகை கம்மிதான்.

அலுவலகத்தில் வீட்டைப் பற்றிச் சொன்னதும் நண்பர்கள் ”அய்யய்யோ,அந்த வீடா” என்றனர்.அந்த வீட்டில் பேய் இருக்கிறதாம்.அங்கு வசித்த ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள்;அவள் அங்கு பேயாகச் சுற்றுகிறாளாம்” என்றனர்.

நான் சொன்னேன் ‘என்னை எந்தப் பேயும் ஒன்றும் செய்ய முடியாது,நான் ஆஞ்சநேய பக்தன்”

மறு நாள் வீட்டில் குடி புகுந்தேன்.

சாமான்களை எடுத்து வைத்துகொண்டிருந்தபோது வாசலிலிருந்து சார் என்ற குரல் கேட்டது.போய்ப் பார்த்தேன். ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

”வாங்க,யார் நீங்க?” நான்.

அவர் சொன்னார்”நான் எதிர் வீட்டில் இருக்கிறேன்.இந்த வீட்டைப் பற்றித் தெரிந்துதான் குடி வந்தீர்களா?”

“ஆமாம் .ஏதோ பேய் இருப்பதாகச் சொன்னார்கள்,அதைத்தானே சொல்கிறீர்கள்?”

”ஆமாம்.அதனால்தான் யாரும் இங்கு குடி வரவில்லை.அதிலும் நீங்கள் தனியாக வேறு இருக்கிறீர்கள்.”

”அதனால்?”

”சார்! இந்த வீட்டில் ஒரு இளம் தம்பதி இருந்தனர்.பொருத்தமான ஜோடி.ஒரு நாள் இரவுப் பணிக்காகச் சென்ற அவன் வீடு திரும்பும்போது அவள் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து போயிருந்தாள். ”நான் இனி வாழ விரும்பவில்லை” என ஒரு சிறு சீட்டு மட்டும் எழுதி வைத்திருந்தாள்.போஸ்ட்மார்ட்டத்தில் அவள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டிருக்கிறாள் என்பது தெரிய வந்தது.போலீஸ் எவ்வளவு முயன்றும் காரணம் யாரென்று தெரியவில்லை. அதன் பின் அவன் ஊரை விட்டுப் போய்விட்டான்.இந்த வீடும் பேய் வீடு ஆகி விட்டது. ”அவர் சொன்னார்.

நான் கேட்டேன் “பேயை யாராவது பார்த்திருக்கிறார்களா ?”

“இல்லை. ஆனால் இரவுகளில் சிலநாள் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்’”அவர்.

நான் சிரித்தேன்.’நன்றி சார்.நான் ஜாக்கிரதையாக இருக்கிறேன்!”

அவர் சென்ற பின்,வாசல் நிலையில் அடிக்கப்படிருந்த தகடைப் பிய்த்து எறிந்தேன்.
இரவு வந்து கொண்டிருந்தது!

(சிறுகதை தொடரும்)

டிஸ்கி;தெரியாத்தனமா வார்த்தை கொடுத்து மாட்டிக்கிட்டேன். ஒரு பதிவின் பின்னூட்டத்தில்,நண்பர்கள் செங்கோவியும்,மைந்தன் சிவாவும் சிறுகதை என்று ஏமாந்ததாகச் சொல்ல, ஜம்பமாக அதே தலைப்பில் கதை எழுதி விடலாம் என்று சொல்லி விட்டு ஆரம்பித்து விட்டேன்.இப்போது எப்படித்தொடர்வது?தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறேன்.அதனால்தான் ---break!

திங்கள், ஜூலை 18, 2011

பெட்டைக்காய் ஏங்கும் பேதமை!(கவிதை)

முட்டை உடைந்தது குரீஇ பறந்தது

கட்டை கிடந்தது கர்ம வினை அறுந்தது

சட்டை கழன்றது சம்சாரம் அகன்றது

பெட்டைக்காய் ஏங்கும் பேதமை மறைந்தது!


கூட்டமாய்க் கூடி நின்று கூக்குரலிட்டு அழுவர்

காட்டுக்குத் தூக்கிச் சென்று கட்டையிலிட் டெரிப்பர்

வாட்டமாய்த் திரும்பி வந்து வழமைகள் பலவும் செய்வர்

நாட்டம் மாறிய பின் நாளையே மறந்து போவர்!




எரியப்போகும் உடலுக்கு எத்தனை சிங்காரம்

வாசனைத் தைலமென்ன,வாடாத மலர்களென்ன

பூசிடும் பொடிகளென்ன பூணுகின்ற அணிகளென்ன

இதழுக்குச் சாயமென்ன இளமைக்குக் கவசமென்ன!


பவள இதழ்களின் சிவப்பிலே மயக்கம்

பருவ மொட்டுக்களின் வனப்பிலே மயக்கம்!

தெரியாதா உனக்கு இதெல்லாம் சிலகாலம்!



இறுதி வரை இதுவே நம் வாழ்க்கையென்றால்

சுருதியில்லா சங்கீதம் போலாகி விடாதா?

நேற்றிருந்தோர் இன்றில்லை
இன்றிருப்போர் நாளையில்லை

நமக்குப்பின் நம் பெயர் நிலைக்க வேண்டுமெனில்

நன்றே செய்,அதை இன்றே செய்!

வான் புகழ் வள்ளுவன் சொன்னான்

“தக்கார் தகவிலர் என்பத வரவர்
எச்சத்தாற் காண ப்படும்”

நமக்குப் பின் எஞ்சுவது நல்லதாய் இருக்கட்டும்

நான்கு பேராவது நம் புகழ் சொல்லட்டும்!

வெள்ளி, ஜூலை 15, 2011

கோகுலும்,குங்குமப்பூ போண்டாவும்!

வாப்பா,சோமு,நல்லாருக்கியா?

நல்லாத்தான் இருக்கேன்,ராமு.நான் வரும்போது நீ தாமு கிட்டப் பேசிட்டிருந்தே, அதான் ஒரு பக்கமா நின்னுட்டேன்!

வர வேண்டியதுதானே.

இல்லைப்பா.உங்க பேச்சில் நான் ஏன் குறுக்க?ஆமாம்,குங்குமப்பூவெல்லாம் ஜாங்கிரில போடுவாங்க,பாத்திருக்கேன்.போண்டால போடுவாங்களா என்ன?

போண்டால குங்குமப் பூவா?என்னப்பா சொல்றே?

ஆமாப்பா.தாமு உங்கிட்டச் சொன்னானே ’குங்குமப்பூ போண்டா ’நல்லாருக்குன்னு?

அடக் கடவுளே !அது குங்குமப்பூ போண்டா இல்லை.குங் ஃபு பாண்டா!ஒரு சினிமா !

அப்படியா! மகாபாரதம் எப்ப எடுத்தாலும் நல்லாத்தான் இருக்கும்.

மகாபாரதமா?!

ஆமா,நீதானே சொன்னே,பாண்டவான்னு!

அது பாண்டவா இல்லை ,பாண்டா;ஒரு மிருகம்.

அப்படியா.சரி,கோகுல் யாரு?

கோகுலா?யாரு?

தாமு எதுவோ தெரியல்லைன்னு சொன்னதும் நீ கோகுலைக் கேளுன்னு சொன்னயே!

கஷ்டகாலம்.அது கோகுல் இல்ல.கூகிள்.ஒரு தேடு இயந்திரம்.எதாவது தெரியணும்னா அதுல பார்த்துத் தெரிஞ்சுக்கலாம்!

பரவாயில்லையே.எனக்கு ஒரு உதவி பண்ணேன்.நேற்றிலிருந்து எங்கள் வீட்டில் ஒரு குடத்தைக் காணோம்!அதைக் கோகுலைக் கேட்டுக் கண்டு பிடித்துக் கொடேன்!

அதெல்லாம் முடியாது!

ஏன்,உங்கிட்ட அந்த எந்திரம் இல்லையா?

எந்திரம்னா அது எந்திரம் இல்லை.கம்ப்யூட்டரில் இருக்கும்.

ஓகோ!கம்ப்யூட்டரே எந்திரம் அதற்குள் இன்னோர் எந்திரமா?

ஏதாவது விஷயம் தெரிஞ்சுக்கணும்னா கூகிள் ல தேடினா பதில் கிடைக்கும்.

அதான் கேட்டேன் குடத்தைத் தேடிப்பார் என்று.இதைக்கூடக்கண்டு பிடிக்க முடியாலைன்னா என்ன எந்திரம்?

ராமு சட்டையைக் கிழித்துக் கொண்டு ஓடுகிறான்.

வியாழன், ஜூலை 14, 2011

ரஜினி ரஜினிதான்!

ரஜினிகாந்த் அமிதாப்பிடம் சொன்னார்”எனாக்குத்தெரியாத ஆளே கிடையாது. ஏதாவதொரு ஆள் பேர் சொல்லுங்க.நிச்சயமாக எனக்குத் தெரிந்திருக்கும்.”

அமிதாப் எரிச்சலுடன் கேட்டார் “டாம் க்ரூஸ்ஸைத் தெரியுமா?”

”ஓ!என் பழைய நண்பராயிற்றே.வாங்க போய்ப் பார்க்கலாம்”என்றார் ரஜினி.

இருவரும் ஹாலிவுட் சென்று,ஸ்டூடியோவில் டாம் க்ரூஸ் அறைக் கதவைத்தட்டினர்.
டாம் க்ரூஸ் உரக்கக் குரல் கொடுத்தார்”தலைவா,வாங்க வாங்க.நீங்க வந்ததில் மிக மகிழ்ச்சி.நீங்களும் உங்கள் நண்பரும் என்னுடன் மதிய உணவு சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்”.

அமிதாப் கொஞ்சம் அசந்து போனார்.ஆனாலும் சந்தேகம்.கேட்டார்”அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைத் தெரியுமா?” என்று

ரஜினி சொன்னார் “நன்றாகத் தெரியும்”.

இருவரும் வெள்ளை மாளிகைக்குச் சென்றனர்.

ரஜினியைப் பார்த்த ஒபாமா சொன்னார்” என்ன ஒரு ஆச்சரியமான மகிழ்ச்சி.ஒரு கூட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.வாங்க ,காஃபி சாப்பிடுவோம்; கூட்டம் கிடக்கட்டும் !”

அமிதாப் கொஞ்சம் ஆடிப் போனார்.

இருந்தும் ஒப்புக் கொள்ள மனமில்லாமல் கேட்டார்”போப்பைத் தெரியுமா?”

ரஜினி சொன்னார்”என் மூதாதையர்கள் இத்தாலியில் இருந்தனர்.போப்பை நன்றாகத்தெரியும்.

இருவரும் வாடிகன் சென்றனர்.

போப்பைப் பார்க்கப் பெரிய கூட்டம் கூடியிருந்தது.ரஜினி சொன்னார்”இங்கு நின்றால் நான் வந்திருப்பது போப்புக்குத் தெரியாது.நான் காவலர்களிடம் சொல்லி விட்டு உள்ளே போய் போப்புடன் பால்கனியில் வந்து நிற்கிறேன் பாருங்கள்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் போப்புடன் பால்கனியில் வந்து நின்று கையசைத்தார் ரஜினி.திரும்பி வந்து பார்த்தால் அமிதாப்புக்கு ஒரு சிறிய நெஞ்சு வலி வந்து சிகிச்சை அளிக்கப் பட்டிருந்தது.

”என்ன ஆச்சு?” ரஜினி கேட்டார்.

அமிதாப் சொன்னார்.”நீங்கள் போப்புடன் பால்கனி வரும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை.நீங்கள் இருவரும் பால்கனிக்கு வந்தபின் அருகில் நின்ற இத்தாலியர் கேட்டார்---
.........
.........
“பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?!”

திங்கள், ஜூலை 11, 2011

நடிகை(சிறுகதை-நிறைவுப்பகுதி)

காட்சி முடிந்ததும் அவளைக் கை குலுக்கிப் பாராட்டினேன்!என்ன மென்மையான தொடுகை!

அவள் கேட்டாள்” சார் எப்படி இவ்வளவு பிரமாதமாக நடிக்கிறீர்கள்”

ரகு சொன்னான்”அவன் ஒரு நாடகக் குழு வைத்திருந்தான்,மிக அருமையான ஒரு நாடகம் தயார் செய்து மேடையேற்றினான்.மூன்று நாள் மட்டுமே நடந்தது. சென்னை சபாக்களின் ”உயர்தரத்துக்கு” அந்த நாடகம் ஒத்து வரவில்லை. அதோடு நாடகத்துக்கும் நடிப்புக்கும் தலை முழுகி விட்டான்”

பின் மற்ற நடிகர்களும் வந்துசேர,ஓரிரு காட்சிகள் சுடப்பட்டன!உணவு இடை வேளையின் போது சுமதி உணவுக்குப் பின் ஒரு நாற்காலியில் தனியே அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தாள்.அவளை நெருங்கினேன்.அவள் எழுந்தாள். அவளை அமரச் சொல்லி விட்டு,நானும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தேன்!

”என்ன படிக்கிறீர்கள்?”

புத்தகத்தைக் காட்டினாள்.’கோபல்ல கிராமம்’

ஆச்சரியப்பட்டேன்.அவளுக்கு,கி.ரா., தி.ஜானகிராமன்,சுந்தரராமசாமி போன்றோர் படிக்கப் பிடிக்கும் என்று சொன்னாள்.

என்னிடம் பல புத்தகங்கள் இருக்கின்றன;படிக்கத்தருகிறேன் என்று சொன்னேன். அவளைப் பற்றி விசாரித்தேன்.

அவளது சிறு வயதிலேயே தந்தை அவர்களை விட்டு எங்கோ போய்விட்டார்; அவள் தாய், தான் கற்றுக்கொண்ட இசையைச் சிறுவர் ,சிறுமிகளுக்குச் சொல்லிக் கொடுத்து அந்த வருமானத்தில் குடும்பம் நடந்தது.அவள் +2 வரை படித்துப் பின் ஓரிரு கடைகளில் வேலை பார்த்தாள்.பின்னர் சில தொலைக்காட்சித்தொடர்களில் சிறிய வேடங்கள்,சொற்ப வருமானம்.ரகு அவளைக் கண்டு அவளால்முடியும் என்று நம்பி இந்த ரோலைக் கொடுத்திருக்கிறான்.ஆனால் அது மெகா சீரியல் இல்லை.எனவே அதிக வருமானம் இல்லை.இதுவே அவள் நிலை.


மாலை புறப்படும்போது அவள் வசிக்குமிடத்தைத் தாண்டியே நான் போக வேண்டியதால் அவளை வண்டியில் ஏற்றிச் சென்று வீட்டில் விட்டேன்.உள்ளே வரச் சொன்னாள்.மறுநாள் புத்தகங்களோடு வருகிறேன் என்று சொல்லிப் புறப்பட்டேன்.அன்று தூங்கும் வரை அவள் நினைவாகவே இருந்தது.

மறு நாள் காலை உணவுக்குப் பின் அவள் வீட்டுக்குச் சென்றேன். எளிமையான சுரிதாரில் அழகாக இருந்தாள்! சிறிய வீடு;ஆனால் தூய்மையாக இருந்தது.அவள் அம்மாவை அறிமுகப் படுத்தி வைத்தாள்.புத்தகத்துக்கு நன்றி சொன்னாள்.தேநீர் கொடுத்தாள்.பேசிக்கொண்டிருந்தோம்.

வாசலில் அழைப்பு மணி ஓசை.போய்த்திறந்தாள்.மூன்று பேர் ,முரட்டுத்தோற்றம் உள்ளவர்கள் உள்ளே வந்தனர்.அவர்களைப் பார்த்ததும்,அம்மா,மகள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.முகம் வெளிறியது.

”என்னாம்மா?பணத்தக் குடுக்காம டபாய்ச்சுக்கிட்டே இருக்கீங்க.இன்னிக்கு பணத்த வாங்காமப் போக மாட்டோம்.”பயமுறுத்தும் குரல்.

”சார்,நேற்றுத்தான் புதுப் படப்பிடிப்பு ஆரம்பம் .இன்னும் கொஞ்ச நாளில் கொடுத்து விடுகிறேன்.” மெல்லிய குரலில் அவள்

”என்னாம்மா பெரிய படப் பிடிப்பு?நீ நெனச்சா ஒரே ராத்திரியில சம்பாதிச்சுட முடியாதா?”

அதைக் கேட்டு அவள் அவமானத்தால் கூனிக் குறுகிப் போனாள்.முகம் சுருங்கி,விழிகளில் நீர் திரண்டது.முகத்தில் அப்படி ஒரு வேதனை!

என்னால் பொறுக்க முடியவில்லை”என்னப்பா இப்படி அசிங்கமாப் பேசுறீங்க”கேட்டேன்.

”சார் கஷ்டமா இருந்தா நீங்க பணத்தைக் குடுங்க.நாங்க போயிடறோம்!”

”எவ்வளவு?”

“முப்பதாயிரம்.மூணுமாச வட்டி ஒன்பதாயிரம்.மொத்தம் முப்பத்தொன்பதாயிரம்.”

யோசித்தேன்.பின் சொன்னேன்.”பணமாக இல்லை.காசோலை தருகிறேன். சரியா?”

”உங்களை நம்புறோம்.குடுங்க”

கைப்பையிலிருந்து செக் புத்தகம் எடுத்தேன்.அவளது மறுப்பைப் பொருட் படுத்தாமல், செக் எழுதி அவனிடம் நீட்டினேன்.வாங்கிக் கொண்டு “தேங்க்ஸ் சார்.அம்மா, சார் நல்லவரா இருக்கார்.நல்லாப் பாத்துக்குங்க”என்று கிண்டலாகச் சொல்லி விட்டுப் போய் விட்டார்கள்.

அவர்கள் சென்ற பின் என் அருகில் வந்த அவள்,என் கைகளைப் பிடித்துத் தன் கண்களில் ஒத்திக்கொண்டாள் .அவளது கண்ணீரால் என் கைகள் நனைந்தன.

சிறிது நேரம் கழித்து நான் புறப்பட்டேன்.கண்ணீர் மல்க விடை கொடுத்தாள். சென்று கொண்டிருக்கும்போது நினைவு வந்தது,என் பேனாவை அங்கேயே விட்டு விட்டேன் என்பது.என் யு.எஸ் நண்பன் அளித்த பரிசு.

திரும்பப் போனேன்.கதவருகில் செல்லும்போது,கவனித்தேன்,கதவு லேசாகத் திறந்திருந்தது.உள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது.அவள் குரல்,மற்றும் ஒரு ஆண்குரல். கொஞ்ச நேரத்துக்கு முன் கேட்ட அதே குரல்!அவள் சொல்லிக் கொண்டிருந்தாள்” முப்பதாயிரம் என்று சொன்னதற்குப் பதில் ஐம்பதாயிரம் என்று சொல்லியிருக்கலாம்”பின் உரத்த சிரிப்பு!

புரிந்தது,நான் ஏமாற்றப்பட்டேன் என்பது. உடனே உள்ளே போய் அவர்கள் நாடகம் முடிந்து விட்டது என்பதை உணர்த்தலாமா?வேண்டாம்,என்ன பயன்?

இப்போது கூட வங்கிக்குக் கொடுப்பனவு நிறுத்தக் கட்டளை கொடுத்துக், காசோலையை நிறுத்தி விடலாம்.

வேண்டாம்.

அவள் ஒரு சிறந்த நடிகை.

அது அவள் நடிப்புக்கு நான் கொடுத்த பரிசாக இருக்கட்டும்!

வீடு நோக்கி வண்டியைச் செலுத்தினேன்!

வெள்ளி, ஜூலை 08, 2011

நடிகை! (சிறுகதை)

படப்பிடிப்பு நடக்கும் அந்த இடத்தை நான் அடைந்து,காம்பவுண்டுக்கு வெளியே என் ஸ்கூட்டரை நிறுத்தினேன்.கேட்டைத்திறந்து கொண்டு உள்ளே நுழையும் போது எதிரில் வந்த உதவி இயக்குனர்”வாங்க சார்.காலை வணக்கம்.இயக்குநர் உள்ளேதான் இருக்கிறார். போங்க” என்று சொல்லி விட்டு ஏதோ வேலையாக வேகமாகப் போய் விட்டார்!

உள்ளே சென்றேன். காட்சியைப் படமாக்க எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர்! காமிரா அருகே நின்று கொண்டிருந்த என் நண்பன்,இயக்குநர் ரகு ”ஹாய்.குமார்.வா” என உற்சாகமாக அழைத்தான்.அவன் யுனிட்டில் அநேகமாக எல்லாரும் எனக்கு அறிமுகமான வர்களே.பல தலையசைப்புகள், வணக்கங்கள், புன்னகைகள்!

ஒரு நாற்காலியில் அமர்ந்து ஒப்பனையைத் திருத்திக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து,”சுமதி” என்றழைக்க,அவள் எழுந்து வந்தாள்.அவளிடம் என்னைக் காட்டி”என் நண்பன் குமார்.மாநில அரசுப் பணி. சினிமா பற்றிச் சகலமும் தெரிந்தவன்.உலக சினிமா பற்றிய செய்திகள் அவன் விரல் நுனியில்”என அறிமுகப் படுத்தவும்”,போதும்,போதும் ’என அவனை அடக்கினேன்.

பின் அந்தப் பெண்ணைக்காட்டி,”சுமதி;இந்தத் தொடரில் ஒரு நல்ல ரோல் பண்றாங்க. இன்னைக்கு இவங்க மட்டும் நடிக்கும் ஒரு பதினைந்து நிமிடக் காட்சி இப்போது படமாக்கப்பட இருக்கிறது. படப்பிடிப்பைப் பார்.உன் கருத்தைச் சொல்” என்று என்னிடம் சொன்னான்.

சுமதி எனக்கு வணக்கம் சொன்னாள்!நான் அன்றைய காட்சி நன்கு அமைய வாழ்த்தினேன். காமிராவுக்கு வெளியே சென்று அமர்ந்தேன்.

எல்லாம் தயார்.

”ஒரு ஒத்திகை பார்த்துவிடலாமா?”-ரகு.

அந்தக் காட்சி எனக்கு ஏற்கனவே விளக்கப் பட்டிருந்தது..

சுமதி நடிக்க ஆரம்பித்தாள்.

அவள் முதல் வசனம் பேசி முடித்த பின் நண்பன் என்னைப் பார்த்தான்.
நான் அவளருகில் சென்றேன்.

“மிஸ்.சுமதி!எமோஷன் சரியா வரவில்லை!இதைக் கொஞ்சம் வித்தியாசமாகச் செய்ய வேண்டும்”உதவி இயக்குனரைப் பார்த்தேன்.

“அந்த வசனத்தைக் கொஞ்சம் சொல்லுங்க”

அவர் சொன்னார்.அந்தக் காட்சியை நான் நடித்துக் காட்ட ஆரம்பித்தேன்.சுமதி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.முடிந்தது.அனைவரும் கை தட்டினர்.


சுமதி அசந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இப்படி நடிக்க வேண்டும்.ரகு !இப்பச் சரியாப் பண்ணிடுவாங்க.நேர டேக் போயிடு”நான்.

“ஸ்டார்ட் காமிரா!

”காமிரா ரோலிங்க்!”

”ஆக்சன்”!

தொடங்கியது.அவள் கற்பூரம்தான்.என் நடிப்பை அப்படியே உள்வாங்கி அற்புதமாகச் செய்தாள்.

(தொடரும்)

புதன், ஜூலை 06, 2011

நவில்தொறும் நூல்நயம்--நண்பேன்டா-தொடர் பதிவு.

நண்பர் ரியாஸ் அஹமது அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று இப்பதிவைத் தொடர்கிறேன்.



பலருக்கு இளமைக்கால நட்பு இறுதி வரை தொடர்கிறது.
அதற்கெல்லாம் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒரு ஊர் வேண்டும்.எனக்கோ ”யாதும் ஊரே,யாவரும் கேளிர்”
பள்ளிப் படிப்பு மூன்று ஊர்களில்!
கல்லூரிப் படிப்பு இரண்டு ஊர்களில்!
அலுவலகப் பணி பத்து ஊர்களில்!
எங்குமே வேர் விட முடியாத ஒரு வாழ்க்கையில் ஆயுட்கால நட்பு எங்கிருந்து வரும்?

ஆயினும் அந்தந்தக் கால கட்டத்தில் நல்ல நண்பர்கள் இல்லாமல் இல்லை.

அப்பு என்கிற கணேசன்

என் ஆரம்பப் பள்ளிப் பருவத்தில் ஆறாண்டுக் கால நண்பன்.சாத்தூரில் என்னுடன் --கல்லெறிந்து மாங்காய் பறித்தவன்,வைப்பாற்று மணலில்கால் புதைய நடந்தவன்,மணல் மேடு எனும் இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் கதை பேசியவன்,ஓலையில் காற்றாடி செய்து,அதை முள்ளால் குச்சியில் குத்தி அதை லேசாகத் திருகி அதனிடம் ”குன்னாங்குன்னாங்குர்ரா” என்று சொல்லி(அப்போதுதான் நன்றாகச் சுற்றுமாம்!) கையில் பிடித்துக் கொண்டு என்னுடன் ஓடியவன், நானே எழுதி நடித்த என் முதல் நாடகத்தில் எனக்குச் சவாலாக நடித்தவன்.என் விளையாட்டுத் தோழன்.நான் சாத்தூரை விட்டுக் கோவில்பட்டி சென்றபின் ஓர் அரையாண்டு விடுமுறை சமயத்தில் கோவில் பட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன்.ஓரிரு நாட்களில் என் தாத்தா வெளியூரிலிருந்த வந்தவர் என்னை அவர் ஊருக்கு அழைக்கவே அவருடன் சென்று விட்டேன்.பின்னர் அப்பு வந்து நான் இல்லாததால் ஏமாற்றமடைந்து சென்று விட்டான்.அப்படி ஒரு நண்பேன்டா நான்! பின்னர் அடுத்த விடுமுறைக்கு அவன் வந்தான் எனபது வேறு!இப்போது எங்கு இருக்கிறானோ!

பெரிய ரமணி என்கிற ராமசாமி

கோவில்பட்டியில் என் நண்பன்.வகுப்புத்தோழன்.பெரிய வீட்டுப் பிள்ளை.நானும் அவனும் சேர்ந்து கிரிக்கெட்டில் கலக்கியிருக்கிறோம்.நான் சொல்லும் மர்மக்கதைகளின் பரம ரசிகன் அவன்.என் அண்ணா கானன் டாயில்,எட்கார் வேலஸ் என்று பலரது கதைகளைப் படித்துச் சுருக்கமாகச் சொல்வார்.அதற்குக் கண்,காது மூக்கெல்லாம் வைத்து நான் அவனுக்குச் சொல்வேன்.அக்கதைகளால் உந்தப்பட்ட அவன் தமிழில் வரும் துப்பறியும் கதைப் புத்தகங்கள் பல வாங்கிப் படித்து விட்டு எனக்கும் தருவான்.எனக்குப் பல நாட்கள் பால முருகன் கஃபேயில் டிஃபன் வாங்கிக் கொடுத்திருக்கிறான்.பின்னர் கால்நடை மருத்துவர் ஆனதாகக் கேள்விப் பட்டேன்.

கலந்தர்

என் வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வில் என்னுடன் எனக்கு ஒரு பலமாய் இருந்தவர்.சில உண்மைகளை எனக்கு எடுத்து உரைத்தவர்.சில முடிவுகளை எடுத்து அவற்றைச் செயல்படுத்த உதவியவர்.எனக்கு ஏற்பட்ட துயர் கண்டு வருந்தியவர்.எனது பிரச்சினையின் தீர்வுக்கு உதவினாலும்,அப்படி நிலை ஏற்பட்டதற்காக வருந்தியவர்.நீண்ட நாட்களாகத் தொடர்பில் இல்லாவிட்டாலும், இன்றும் என்றும் என் நெஞ்சில் நிற்பவர்.திருப்பூர் நண்பர்.

சேஷாத்ரி

என்னுடன் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்ட மேற்படிப்புப் படித்தவர்.சில ஆண்டுகள் தொடர்பில் இருந்த பின் அவர் வேலைக்காகக் குவைத் சென்று விட நானும் பல ஊர்களுக்கு மாற்றல் ஆகத் தொடர்பு அற்றுப் போனது.

நான் விருப்ப ஓய்வில் வந்து சென்னையில் மீண்டும் குடியேறிய பின்,அவரது தொலைபேசி எண்ணைத் தேடிக் கண்டு பிடித்து அவரைத் தொடர்பு கொண்டேன். அன்று நட்பு மீண்டும் துளிர்த்தது.என்னை விட ஒரு வயது மூத்தவர் ஆகையால் நான் அவரது தம்பி என்றே இன்று என்னைச் சொல்பவர்.அவரது ஆசை-கோவையில் அவரது நிலத்தில் சிவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி,அருகில் நாங்கள் குடியேற வேண்டும் .அந்த ஆலயப் பொறுப்பை நானேற்க வேண்டும் என்பது.அவன் சித்தம் எதுவோ?

இன்று என் பதிவின் மூலம் உலகெங்கும் நட்பு வட்டம் விரிந்தது போல் உனர்கிறேன்!

இதைத் தொடர நான் அழைப்பது

1)நினைத்துப் பார்க்கிறேன் வே,நடனசபாபதி

2)நினைவில் நின்றவை கே.ஆர்.விஜயன்

3)venkatnagaraj வெங்கட் நாகராஜ்

4)கூடல்பாலா கூடல்பாலா

என்னை எழுதப் பணித்த தம்பி ரியாஸ் அஹமதுக்கு நன்றி!

செவ்வாய், ஜூலை 05, 2011

மனிதம்-(பொன் மாலைப் பொழுது--2)

இதுவும் ஒரு பொன் மாலைப் பொழுது நிகழ்வே!
பொன் மாலைப் பொழுது எனச் சொல்வதை விடப் பின் மாலைப் பொழுது என்று சொல்லலாம்.

மாலை கோவிலுக்குச் சென்று வழிபாடு முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்தேன்.
அன்று பேண்ட்,டீ சர்ட் இல்லை;வேட்டி சட்டைதான்.கோவிலுக்குச் சென்று திரும்புவதால் நெற்றியில் திருநீறு,குங்குமம்!

மெள்ள இருள் சூழ்ந்து கொண்டிருந்த நேரம்.ஒரு தெருவில் வந்து கொண்டிருந்த போது,ஓரிடத்தில் சாலையோரத்தில் ஒருவர் படுத்துக் கிடக்கக் கண்டேன்.அருகில் சென்று பார்த்தேன்.குடி மகன்தான் .அளவுக்கு மீறிக் குடித்து விட்டு நினைவின்றி விழுந்து கிடந்தார்.அவர் கிடந்த இடத்தில் அவ்வளவாக வெளிச்சம் இல்லை. இன்னும் இருட்டி விட்டால் உற்றுப் பார்க்கவில்லையெனில் அவர் அங்கு கிடப்பதே தெரியாமல் போய் விடும்.

அந்தத்தெருவில் அவ்வளவாகப் போக்குவரத்துக் கிடையாது.எனவே அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் வேகமாகவே செல்லும். அவ்வாறு செல்லும் ஏதாவது வாகனம் கவனிக்காமல் அவர் மீது ஏறி விட வாய்ப்பு மிக அதிகம்.என் மனதில் கவலை சூழ்ந்தது.இவரது அந்தத் தவறுக்கு விலை அவரது உயிரோ, கை கால்களோ என்றால் அது மிக அதிகம்.அது நிகழக் கூடாது.அவரை சாலை யிலிருந்து நடை மேடை மேல் தூக்கிப் படுக்க வைப்பது நல்லது எனத் தீர்மானித்தேன்.

ஸ்கூட்டரில் வந்த ஒரு நபரை கைகாட்டி நிறுத்தி,விஷயத்தைச் சொன்னேன்.அவர் சொன்னார்”உங்களுக்கு ஏன் சார் வேண்டாத வேலை?ஏதாவது பிரச்சினை வந்து சேரும்.பேசாமல் போங்க”சென்று விட்டார்.

அடுத்து நடந்து வந்து கொண்டிருந்த ஒருவரை அணுகிப் பேசினேன்.அவர் என்னையும்,விழுந்து கிடக்கும் நபரையும் பார்த்து விட்டு.எதுவுமே பேசாமல் கையை ஆட்டி விட்டு வேகமாகச்(முதலில் வந்துகொண்டிருந்ததை விட வேகமாக) சென்று விட்டார்.

இனி சரியான நபரிடம் உதவி கேட்க வேண்டும் எனக் காத்திருந்தேன்-ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும்.வந்தார்.சைக்கிளில் வந்த அவரை நிறுத்தினேன். சொன்னேன்.என்னுடன் வந்தார்.இருவரும் சேர்ந்து குடிமகனை நடை மேடையில் தூக்கிப் படுக்க வைத்தோம்.அவர் புறப்படத் தயாரானார்.

நான் சொன்னேன்”யாருமே உதவிக்கு வராதபோது உதவியதற்கு நன்றி”

கண்கள் பனிக்க அவர் சொன்னார்”எனக்கெதுக்கு சார் நன்றி.முன் பின் தெரியாத ஒருவருக்காகக் கவலைப் பட்டுக் காத்திருந்து உதவி செய்த உங்களுக்கு உதவினேன். அவ்வளவே. உங்க நல்ல மனசுக்கு ஆண்டவன் உங்களை ரொம்ப நல்லா வைத்திருப்பான்” சைக்கிளில் ஏறிச் சென்று விட்டார்.

என் மனம் நிறைந்திருந்தது.செய்த செயலால் மட்டுமல்ல.ஒரு நல்ல உள்ளத்திலிருந்து வந்த அந்த வாழ்த்தாலும்தான்.

ஆனால் அது போன்ற ஒரு சிறிய செயலுக்குக் கூட தயங்குபவர் பலர் இருக்கிறார்களே, ஏன்?என்ன பயம்?பயம் மனித நேயத்தை வென்று விடுகிறதா? ஏன்?ஏன்?

வெள்ளி, ஜூலை 01, 2011

பொன் மாலைப் பொழுது!-டீ சர்ட்

நேற்று மாலை வெளியில் செல்வதற்காக,pant உம் டீ சர்ட்டும் அணிந்து கொண்டு புறப்பட்டேன்!வான் ஹ்யுசென் ஸ்டூடியோ டீ சர்ட்.என் நண்பரின் மகன் யு.எஸ்ஸிலிருந்து அனுப்பிய அன்பளிப்பு! (போதும் தற்பெருமை!)

வீட்டை விட்டு வெளியேறித் தெருவில் நடக்க ஆரம்பித்தேன்.எதிரில் வந்த ஓரிருவர் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு போவதைக் கண்டேன்.இந்த வயதிலும் எவ்வளவு ஸ்டைலாக உடையணிந்து கம்பீரமாக நடந்து போகிறார் என வியந்து பார்க்கிறார்கள் எனப் பெருமையுடன் நடந்தேன்!இரண்டு தெரு தாண்டி மூன்றாவது தெருவில் செல்லும் போதுதான் தற்செயலாகக் கவனித்தேன்—டீ சர்ட்டைத் திருப்பி அணிந்து கொண்டிருக்கிறேன் என்பதை!

அவர்கள் பார்த்தற்குக் காரணம் இதுதானே என வெட்கப்பட்டேன்.இப்படியே போக முடியாது.ஏதாவது குழந்தை பார்த்து விட்டால் “அய்யய்யோ!மாமாவுக்குச் சட்டையே போட்டுக்கத் தெரியலை” என்று கத்தி மானத்தை வாங்கி விடும்!(யாரப்பா அது? மாமாவா, தாத்தாவா என்று கேட்பது? ரி.அ. தானே?) எப்படி மாற்றுவது? யோசித்தேன்.

திடீரென்று உடம்பெல்லாம் அரிப்பது போல் சொறிந்து கொள்ள ஆரம்பித்தேன். சட்டையைக் கழற்றிப் பார்த்து விட்டு,நான்கு முறை உதறினேன்.பின் சரியாக அணிந்து கொண்டேன். என்னைக் கடந்து போக வேண்டிய நபர் நின்று கேட்டார்”என்ன சார் , எறும்பா?” ”ஆமாம் சார்,கவனிக்காமப் போட்டுக் கொண்டு விட்டேன்,பிடுங்கி விட்டது!” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினேன்!

எப்படி இந்த அனுபவம்!

அடுத்த பதிவும் ஒரு மாலைப் பொழுது அனுபவம்தான்.ஆனால் சிறிது வித்தியாசமான அனுபவம்!