தொடரும் தோழர்கள்

வியாழன், பிப்ரவரி 27, 2014

வாங்க பழகலாம்-ரௌத்திரம்!

ரௌத்திரம் பழகென்றான் பாரதி
உண்மைதான்
பழகத்தான் வேண்டும்
பழக்கமில்லாத எதுவும் பழகத்தான் வேண்டும்.
சித்திரமும் கைப் பழக்கம்;
செந்தமிழும் நாப்பழக்கம்.
கை பழகப் பழகத்தான் சித்திரம் வரும்;
நா பழகப் பழகத்தான் செந்தமிழ் வரும்;
மனம் பழகப் பழகத்தான் ரௌத்திரம் வரும்.
நாமெல்லாம் பழகி விட்டோம்-
ரௌத்திரமல்ல!
சகிப்புத்தன்மை-ஆம்
புரையோடிப் போய் விட்ட சமூக அவலங்களை நாம்
பழகி விட்டோம் சகித்துக்கொள்ள!
சூழ் நிலையின் கைதிகளாய் வாழ்ந்து
பழகி விட்டோம் சகித்துக் கொள்ள!
நரி இடம் போனால் என்ன,
வலம் போனால் நமெக்கென்ன
நம்மைத்தாக்காதவரை என்னும் மனப்பாங்கால்
பழகி விட்டோம் சகித்துக் கொள்ள!
எல்லோரும் ஏசுவா என்ன?
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னமும் காட்டுவதற்கு!
நமது நேர்மையில் குறையில்லாத போது
ஒரு கன்னத்தில் அடித்தால்
திருப்பி ஒரு கன்னத்திலேனும்
அடிக்கும் துணிவு வர,
ரௌத்திரம் பழகு!
எளியோரை வலியோர் வாட்டினால்
வலியோரை வாட்ட வாராது இன்று தெய்வம்!
எளியோர்க்குத் துணை போக
உடல் வலிமை பெற வேண்டும்
பெற்றாலும் வேண்டும் மன வலிமை
அவ்வலிமை பெற வேண்டி
ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!

வாங்க பழகலாம்!!


(மீள் பதிவு)

வெள்ளி, பிப்ரவரி 21, 2014

அம்மாவின் பொய்கள்!




அம்மா!

அன்போடு அரவணைப்பாள்!

பசி அறிந்து அமுதளிப்பாள்

நல் வழி நடத்திச் செல்வாள்

ஆனால் அவளே பொய்யும் சொல்வாள்!

அன்றொரு நாள்

என் பசிக்கு அவள் உணவளித்த நேரம்

ஏக்கப்பார்வை பார்த்தேன் 

உணவு போதாமல்

எடுத்து எனக்களித்தாள் 

எஞ்சிய உணவனைத்தும்

என்னம்மா உனக்கு 

ஒன்றுமில்லையே என்றேன்

அவள் சொன்னாள்

என்னவென்று தெரியவில்லை

எனக்கு ஏனோ பசியே இல்லை!

அவள் சொன்ன பொய்!

தீபாவளி நேரம்!

எனக்கு உடை வாங்குதற்காய்

மற்றவர் உடைகளைத்தைத்து

நேரத்தில் கொடுக்க முனைந்து

கண்விழித்து வேலை செய்தாள்!

கண் விழித்த நான்  சொன்னேன்

”தூங்கம்மா,களைத்திருப்பாய்”!

சொன்னாள் சிரித்தவாறு

உறக்கமும் வரவில்லை

களைப்பும் அறவே இல்லை!  

அம்மா சொன்ன பொய்!

ஆம்

வள்ளுவத்தின் வழி நடந்தாள்.....!

”பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
 நன்மை பயக்கும் எனின்”