தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014

நட்பின் உச்சம்



அவன் காத்திருந்தான்.
நண்பனின் சமாதியருகில்……
அவனது இழப்புக்காக வருந்தி…
அவன் மீண்டு(ம்) வருவானோ என்ற ஒரு ஆசையில்……
வேறெந்த நினைவுமின்றிப் படுத்திருந்தான்.

ஐந்தாண்டுகளுக்கு முன்……
அங்கும் இங்குமாய் அலைந்து திரிந்து…
உண்ணச் சரியான உணவு கிட்டாமல்..
மழை வெயிலிலிருந்து காத்துக்கொள்ள ஒரு இடம் கிடைக்காமல்…
அனைவராலும் விரட்டப்பட்டு அலைந்திருந்த வேளையில்…
அவன் இவனை ஆதரித்தான்…
இருக்க இடம் தந்தான்…
உண்ண உணவு தந்தான்…
நண்பனாய் ஏற்று அரவணைத்தான்…

பத்து நாட்களுக்கு முன்..
ஒரு லாரி மோதியதில் அவன்,இறந்து விட்டான் என இங்கு மண்ணுக்குள் புதைக்கப் பட்டிருக்கிறான்.

அன்று முதல்,..
இவன் அவ்விடம் விட்டு அகலவில்லை .
உணவு,தண்ணீர் எல்லாம் துறந்து அங்கேயே கிடக்கிறான்.
பத்து நாட்களில் மெலிந்து விட்டான்….
இவனுக்கு இன்னும் எத்தனை நாட்களோ.....

யாரோ சமூக சேவகர்கள் வந்து பார்த்தனர்.
அவனை அழைத்துச் செல்ல முயன்றனர்.
அவன் நகர மறுத்து விட்டான்.
அருகில் இருந்த மக்களிடம் கேட்டனர்.

அவர்கள் சொன்னார்கள்,அங்கு புதைக்கப்பட்டிருப்பவன்  ராணி என்னும் பெண்ணின் ஒரே மகனான18 வயது குமார் எனவும் இவன் அவனது நண்பனான ராமு எனவும்.

தொலைவில் இருந்த குமாரின் வீட்டுக்குச் சென்றனர்.

ராணியைக்கண்டனர்.

அவள் அழுதவாறு சொன்னாள்,மகன் இறந்து 10 நாட்கள் ஆகி விட்டன;அன்று முதல் ராமுவையும் காணோம் என.

அவளை அழைத்துக் கொண்டு சமாதிக்கு வந்தனர்.

அவளைக் கண்ட ராமு,உணவின்றிச் சோர்ந்திருந்த உடலே ஒரு பாரமாய் ஓடி வந்து அவள் காலடியில் படுத்துக் கொண்டான்.

அவள் அவனை அள்ளி எடுத்தாள்.

தன்னுடன் அழைத்துச் சென்றாள்.

அப்போது அவன் காதோடு சொன்னாள்”இனி உன் பெயர் ராமு இல்லை;குமார்

·  செய்தி:18 வயது பாஸ்கர் என்பனின் இறப்புக்குப் பின்  அவன் வளர்த்த டாமிஎன்னும் நாய் பதினைந்து நாட்களாக சமாதிஅருகிலேயே நகர மறுத்து படுத்துக் கிடந்து பின் பாஸ்கரின் தாய் வந்ததும் அவளுடன் சென்றது,,,,”இந்தியாவின் நேரங்கள்-26-08-2014”

செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014

உன்னை நினைத்து!



என்றாவது உனக்கு
அழ வேண்டும் எனத் தோன்றினால்
அழை என்னை உடனே!
நான் வாக்களிக்கிறேன்
உன்னைச் சிரிக்க வைக்க முடியா விடினும்
உன்னுடன் சேர்ந்த அழ நான் இருக்கிறேன்.

என்றாவது உனக்கு
யார் பேசுவதையும் கேட்கப் பிடிக்கவில்லை என்றால்
அழை என்னை உடனே
நான் வாக்களிக்கிறேன்
உன் அமைதியில் நானும் பங்கு கொள்வேன்!

என்றாவது ஒரு நாள்
எல்லாம் துறந்து ஏகாந்தமாய்ச் செல்ல விரும்பினால்
அழை என்னை உடனே
நான் வாக்களிக்கிறேன்
உன்னைத் தடுத்து நிறுத்த மாட்டேன்
உன்னுடன் சேர்ந்து நானும் வருவேன் .

ஆனால்
என்றாவது ஒருநாள்
உன் அழைப்புக்குப் பதில் இல்லையென்றால்
விரைந்தோடி வா  என்னைக் காண
ஏனெனில்
அந்நேரம்
உன் அண்மையே என் தேவையென்பதால்!