தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜனவரி 22, 2016

பயணங்கள் முடிவதில்லை...தொடரும் தொடர் பதிவு



என் தனியான பயணங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக அமைந்ததில்லை. தில்லி யிலிருந்து சென்னை வரும்போது ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மாதிரி அமையும். ஒரு முறை சுற்றியிருப்பவர்களுடன் கலகல உரையாடலில் நேரம் கழிப்பேன்;ஒரு முறை யாருடனும் பேசாமல் புத்தகத்தில் மூழ்கி நாளைக் கழிப்பேன். ஒரு முறை சாப்பிடுவதும் தூங்குவதும் தவிர வேறெதுவும் நடக்காது. பயண நாளில் என் மன நிலையைப் பொறுத்தது என் விருப்பு வெறுப்புகள்.!என் கல்லூரி நாட்களில் பயணிக்கும்போது கையில் இயான் ஃப்ளெமிங்க் நிச்சயம்!


பயணத்தில்  முன்பெல்லாம் வாக்மேன் இப்போதெல்லாம் ஐபாட் இவற்றில் ஏதோ கேட்டபடிப் பலர் பயணிப்பதைக் கண்டிருக்கிறேன்.ஒரு முறை ஜெயகாந்தன் சொன்னார்”என்னுள் நானே ஓர் இசையை உருவாக்கி ரசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று.நீங்களும் கவனித்திருக்கலாம்,பயணத்தின்போது உங்களுக்குப் பிடித்த ஒரு பாட்டு எங்கிருந்தோ ஒலித்தபடியே உங்களுடன் கூட வருவதை.நான் கூட நினைப் பதுண்டு,வழியில் இருக்கும் இடம் ஒன்றிலிருந்து அப்பாட்டுக் கேட்கிறதோ என்று. ஆனால் அது எவ்வாறு தொடர்ந்து வர முடியும்?  அந்த இசை தவிர நான் வேறு எந்த இசையையும் கேட்பதில்லை.எனக்கு எரிச்சல் தரும் ஒன்று,பேருந்துகளில் அலற விடும் இசைதான்.இசையின் மென்மை தொலைந்து போய்,மனத்தை வருடிக்கொடுக்கும் தன்மை அங்கு காணாமல் போகிறது.பயணிக்கும்போது சில நேரங்களில்  வாய்க்குள் முணு முணுக்கும் இசை என்றால் அது பெரும்பாலும் ஏதாவது கர்நாடக  சங்கீதமாகவே இருக்கும்; தப்பித் தவறிச் சப்தம் வெளியே கேட்காமல் பார்த்துக் கொள்வேன்;பின் விளைவுகள் பற்றிய பயம்தான்!


பயண நேரம் என்று பார்த்தால்,சிறு பயணமாயின் வசதிப்படும் நேரம்;நீண்ட பயண மாயின் வசதியான வண்டியின் நேரம் அவ்வளவே.வாழ்க்கைப் பயணத் திலேயே சிறந்த துணை நமக்கு நாமே எனும்போது ,இப்பயணங்களில் யார் துணை?


எனக்கு வெளிநாடுகள் செல்ல ஆர்வம் இல்லை;ஆனால் நம் நாட்டிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் எத்தனையோ?இந்த வாழ்க்கைப் பயணத்தில் சிலவற்றையேனும் காண இயலுமா,அல்லது கனவாய்ப் போகுமா? 

அவன்தான் தீர்மானிப்பான் .

வியாழன், ஜனவரி 21, 2016

பயணங்கள் முடிவதில்லை!...தொடர் பதிவு


அன்பு நண்பர் திரு தமிழ் இளங்கோ  அவர்களின் ஆணைக்கிணங்க(ஆணையின்றி எதுவும் நடக்குமோ!) தொடர்கிறேன்......  

//அந்தத் தொடர் வண்டி புகையைக் கக்கிக்கொண்டு மதராஸ் எழும்பூர் நிலையத்தை விட்டுப் புறப்பட்டது. ஆம்.அப்போது மதராஸ்தான்.அப்போது புகை விட்டுக் 
கொண்டுதான் ரயில் செல்லும்.டீசல் எஞ்சின் எல்லாம் கிடையாது.சன்னல் பக்கம் அமர்ந்திருந்தால் கண்களில் கரி விழுவது நிச்சயம்.பயணம் முடிந்து இறங்கும்போது சட்டை கருப்பாக இருப்பது உறுதி. 

ஆனால் இப்போது போல் கூட்டமெல்லாம் கிடையாது. இரண்டு மாதங்களுக்கு முன் பதிவு செய்தாலும் காத்திருப்புப்  பட்டியலில் இருக்கும் நிலை கிடையாது. ஆம்;அது 1950 ஆம் ஆண்டு,ஜூன் மாதம்.இப்போது எல்லோரும் எங்காவது போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள்.அநேகர் தேவையே இல்லாது பயணித்துக் கொண்டி ருக்கிறார்களோ என்ற சந்தேகம் பல நேரம் எழுகிறது. இன்றைய மக்கள் தொகைப் பெருக்கமும் ஒரு காரணம் அல்லவா?சரி விஷயத்துக்கு வருகிறேன்.
 

அந்த ரயிலில் பயணம் தொடங்கிய பலரில்,ஒரு குடும்பம். சமீபத்தில் அக்குடும்பத் தலைவர் இறந்து விட்டிருந்தார். கணவனை இழந்த,31 வயதே நிறைந்த,32 நடக்கும்  பெண்; அவளது குழந்தைகள்-முதல் பையன்,ராமசாமி(வயது 16), அடுத்த பெண், ரமணி(13), அடுத்தபெண்,ரமா(11), அடுத்த பெண்,மகா(7), கடைக்குட்டி  சுந்தர்(5).

அந்தக் கடைசிப் பையனைத்தவிர,மற்ற அனைவரும் அந்த இழப்பின் தாக்கத்தில் இருந்தனர். அப்பயணத்தை மகிழ்ச்சியாக எதிர்நோக்கியவன் அந்த சிறுவன் ஒருவன் தான்.மற்ற அனைவருக்கும் அந்தப்பயணம் ஒரு தெளிவில்லாத  எதிர் காலத்தின் தொடக்கமாகவே தோன்றியது. ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள்./

இது சில ஆண்டுக்ளுக்கு முன் நான் எழுத்த் தொடங்கிய “ஒரு வரலாறு” என்னும் தொடரின் தொடக்கம்.அந்தக்குட்டிப்பையன் ’சுந்தர்’ தான் நான்.இதுவே என் நினைவில் நிற்கும் முதல் இரயில் பயணம்!
.............
//திருச்சி இரயில் நிலையத்தில் திருவனந்தபுரம்-சென்னை பகல் நேர விரைவு வண்டி யில்சென்னை செல்வதற்காக நான் ஏறிய போது நினைக்கவேயில்லை,என் உள்ளத் தைத் தொலைக்கப்போகிறேன் என்று.

இரயிலில் ஒரே கூட்டம்.நான் ஏறிய பெட்டியிலும் கூட்டம்.உட்கார இடம் இல்லை. என் பார்வையை மெதுவாக பெட்டி முழுவதும் செலுத்தினேன்.சுழன்று வந்த என் பார்வை உன்னிடத்தில் வந்ததும் நிலை குத்தி நின்றது.அந்தக் கூட்டத்தில் நீ பளிச்என்று தனித்துத் தெரிந்தாய்-எனக்கு.சராசரி உயரம்,ஆண்களைச்சுண்டி இழுக்கும் கவர்ச்சி ஏதுமில்லாத தோற்றம் பகட்டில்லாத புடவை,குறைவான அணிகலன்கள் ,மாநிறம். ஆனால் என்னை ஈர்த்தது எது தெரியுமா?உன் முகம்.சாந்தம் தவழும் அந்தத் தெய்வீக அழகு.மற்ற நாகரிக மங்கையர் போலன்றி நீ அணிந்திருந்த மூக்குத்தி .லட்சுமி கரமான தோற்றம்.எனக்கு ரவிவர்மாவின் லட்சுமியைப் பார்ப்பது போலிருந்தது.அந்த வினாடியிலேயே நான் வீழ்ந்து விட்டேன்.

நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் நீயும் என்னைப் பார்த்தாய்.நம் கண்கள் கலந்த அந்த நொடியில் என் நாடி நரம்புகளில் எல்லாம் ஒரு மின் அதிர்ச்சி ஏற்பட்டது.விவரிக்க இயலாத ஒரு உணர்வு.நெஞ்சு பட,படஎன வேகமாக அடிக்கத் துவங்கிய்து.உன் கண்கள் என்னும் கடலில் முழ்கி மூச்சுத் திணற ஆரம்பித்தேன். பலவந்தமாக என் கண்களை உன் மீதிருந்து பிடுங்கி வேறு பக்கம் பார்க்க ஆரம்பித் தேன்.யோசித்தேன்என்ன ஆயிற்று எனக்கு?இது வரை எந்தப்பெண்ணும் பாதிக்காத அளவு இந்தப்பெண் ஏன் என்னைப் பாதிக்கிறாள்”.

மீண்டும் என் பார்வை பெட்டியைச் சுற்றி வந்தது.எங்கும் இருக்கை இல்லாத நிலையில் சாமான்கள் வைக்கும் மேல் பலகை மேல் உட்கார முடிவு செய்தேன்.ஒரு துள்ளலில் மேலே ஏறி அமர்ந்தேன்.இளமையின் வேகம்.நீ பார்த்துக் கொண்டி ருக்கிறாய் என்ற எண்ணம் தந்த எழுச்சி.மேலேறி அமர்ந்த பின் உன்னைப் பார்த்தேன்.நீ அவசரமாக உன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாய்.நான் தெரிந்துகொண்டேன்-நீயும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய் என்று. புரிந்துகொண்டேன்-உனக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் உணர்வுகளை.

மேலேறி அமர்ந்த பின் கையில் வைத்திருந்தஇந்துபத்திரிகையைப் பிரித்தேன். படிப்பது போன்ற பாவனையில் அடிக்கடி உன்னைப் பார்க்க ஆரம்பித்தேன். உன் பார்வையும் அவ்வப்போது என் மீது விழுந்தது.நான் உன்னைப்பார்க்கும் போதெல்லாம். அவசரமாக உன் பார்வையைத் திருப்பிக் கொண்டாய் .(யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்”). சிறிது நேரம் சென்று உன்னுடன் வந்த சிறுமியிடம் நீ சொன்னாய் இன்னைக்கு பேப்பரே பார்க்கவில்லை”.
நான் என் கையில் இருந்த பத்திரிக்கையை மடித்து அதன் மேல் பகுதியில் என் பெயரை எழுதி அந்தச்சிறுமியிடம் கொடுத்தேன்படிச்சிட்டுக் கொடுக்கலாம்என்றவாறே .நீ அதை வாங்கிப் பிரிக்காமலே மேலே எழுதியிருந்த என் பெயரைப் படித்தாய் .உன் செவ்வாய் அசைவையே நான் கவனித்தேன் ”ராதாகிருஷ்ணன்,M.A. கொஞ்ச நேரம் பேப்பரைப் புரட்டி விட்டு அந்த சிறுமியிடம் நீ என்னைப் பார்த்துக்கொண்டே சொன்னாய்மெட்ராசில் பெரியம்மா இப்ப சொல்லிட்டிருப்பா-ராதா ரயில்ல வந்திட்டிருப்பாஎன்று”.உன் பெயரை மிக நாகரிகமாக எனக்குத் தெரிவித்து விட்டாய். என்னில் பாதி நீ என்பதைத் தெரிந்து கொண்டேன்.இது நம் இருவர் வாழ்வின் முக்கியமான நாள் என உணர்ந்தேன்.நம் பார்வைகள் மீண்டும் கலந்தன, பிரிந்தன, மீண்டும் கலந்தன.இன்பமான ஒரு விளையாட்டு.

ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்ற போது பசியால் அழுத ஒரு குழந்தைக்குப் பால் வாங்கித் தர நான் சென்று திரும்புவதற்குள் வண்டி புறப்பட்டு விட ,நான் ஓடி வந்து ஏறும்போது சன்னல் வழியே தெரிந்த உன் முகத்தில் எத்தனை கவலை;உள்ளே வந்த என்னைப் பார்த்தபின் எத்தனை நிம்மதி;என்ன கனிவு; என்ன பாராட்டு .இது போதுமே ஒருவாலிபனுக்கு ,சாதனைகள் படைக்க.

சென்னை நெருங்கிக்கொண்டிருந்தது.நாம் பிரிய வேண்டிய நேரமும்தான். இருவருமே அமைதி இழந்திருந்தோம்.பார்வைகள் பிரியாமல் பார்த்துக்கொண்டே இருந்தோம் .
சென்னை வந்து விட்டது.எல்லோரும் பரபரப்பாக இறங்க ஆரம்பித்தனர்.அந்த நெரிசலில் இற்ங்கும் வழியில் அருகருகே நின்ற நம் கைகள் கலந்தன. மெல்லக் கேட்டேன்மெட்ராஸில் எங்க?” நீ மெல்லிய குரலில் உன் பெரியப்பா பற்றிய விவரங்களைக் கூறும்போது பிளாட்பாரத்திலிருந்து எப்படியோ உன்னைப் பார்த்து விட்ட உன் உறவினர் உன்னைப் பெயர் சொல்லி அழைக்க நம் பேச்சு நின்றது.இறங்கிய பின் என்னை ஒரு முறை பார்த்துவிட்டு நீ சென்று விட்டாய்,என்மனதையும் எடுத்துக்கொண்டு.//

இது எனது “எங்கிருந்தாலும் வாழ்க “என்ற ிவின்  ஒரு பகுதி.இதை விட மகிழ்ச்சியான,மறக்க முடியாத பயணம் இருக்க முடியுமா?

இது ஒரு தொடர் பதிவல்லவா?எனவே நாளையும் தொடரும்!

டிஸ்கி:இரண்டு மூன்று நாட்களுக்கு அறுவை தாங்க முடியாமல்  இனிமேல் ஒருவரும் என்னைத் தொடர்பதிவுக்கு அழைக்க மாட்டார்கள்! நிம்மதி!!

ஞாயிறு, ஜனவரி 17, 2016

விடுமுறை,சிரிமுறை!



சமீபத்தில் வந்த பத்திரிகைச் செய்தி என்று குறிப்பிட்டு ஒர் வாட்ஸப் செய்தி வந்தது.இது உன்மையாக இருந்தால் ,,அன்றாட வாழ்க்கையில் நகைச்சுவை எவ்வாறு கலந்துள்ளது என்பது உறுதியாகிறது.

ஒரு பெண் ஒரு மருத்துவமனை மேல் வழக்குத் தொடர்ந்தாள்.அவள் சொன்னதாவது ”என் கணவர் அங்கு கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டபின் என்னை விரும்புவதேயில்லை”

மருத்துவ மனையினரின் விளக்கம்”அவர் கண் பார்வையில் குறை இருந்தது;அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்து அவருக்குத் தெளிவான பார்வை கிட்டச் செய்தோம்!”

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


செவ்வாய், ஜனவரி 12, 2016

ஆண்டாளின் சமையலறை!




”வைதேகி,வைதேகி”

“ஏன்னா கூப்பாடு போடறேள்”

இன்னிக்கு என்னதேதி

இதைக் கேக்கறதுக்கா கூப்பிட்டேள்

இல்லடி ;ஒனக்கு நெனவிருக்கா பாத்தேன்

இது கூடத்தெரியாதா? 12

 மார்கழி மாசம் என்ன தேதி? 27 டி

அதுக்கென்ன?

இன்னிக்குக் கூடாரவல்லியாச்சே!

தெரியுமே இன்னிக்குச் சக்கரைப் பொங்கல் ஞாபகம் வந்துடுத்தாக்கும்.ஏதாவது ஒரு பண்டிகைன்னு  சொல்லி விதவிதமாத் தின்னுட்டு அஜீர்த்தில அவஸ்தைப் பட வேண்டியது! அன்னிக்கு அப்படித்தான்;அனுமத் ஜெயந்திக்கு உளுந்தவடை பண்ணி னேன்; எத்தனை வடை தின்னேள்னு ஒங்களுக்கும் தெரியாது அந்த அனுமாருக்கும் தெரியாது. அப்பறம் ரெண்டு நாள் பத்தியம்.இன்னிக்குச் சக்கரைப் பொங்கல். கொஞ்சமாத்தான் பண்ணப் போறேன்

அடியே!எவ்வளவு பண்ணாலும் அதை நன்னாப் பண்ணணும்.நெய்யைக் கஞ்சத்தனம் பண்ணாம ஊத்தணும்!அள்ளிச் சாப்பிட்டா நெய் அப்படியே முழங்கை வழியா வழிஞ்சு ஓடணும்!

ஆமா! இன்னிக்கு நெய் ஓடும்;நாளைக்கு டாக்டர் கிட்ட நீங்க ஓடணும்;இந்தக் கொழுப்பு குறைய பத்து நாள் ஓடணும்! அதெல்லாம் அந்தக்காலத்துக்குச் சரின்னா! இப்பல்லாம் மாறிடுத்து;சக்கரை வியாதி,கொலஸ்ட்ரால்னு ஆயிரம் வியாதி.

போங்கோ,போய் மொதல்ல ஸ்நானம் பண்ணிட்டுக் கோவிந்தனைச் சேவிச்சுட்டு வாங்கோ; அப்பறம்தான் காபியே!

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்---




படத்தில் இருப்பது அக்கார அடிசில்! சகோதரி ஜெயஸ்ரீ கோவிந்தராஜனுக்கு நன்றி
எப்படிச் செய்வது? செய்முறை அவர் பதிவில்!








திங்கள், ஜனவரி 11, 2016

தூக்கம் வராத இரவு!



கவிதை எப்படிப் பிறக்கிறது?

கவிஞன் ரூம் போட்டு உக்காந்து யோசித்து எழுதுவானா?

இல்லை பல நாட்கள் சிந்தனையில் ஒரு கவிதை பிறக்குமா?

கவிதைக்கு ஏதாவது உந்துதல் தேவையா?

 இப்படிப் பல விதமான எண்ணங்கள் தோன்றலாம். 

கவிதை எப்படியும் பிறக்கலாம்

பலநாட்கள் கர்ப்பத்தில் இருந்தும் பிரசவமாகலாம்!

அல்லது ரிஷி கர்ப்பம் போல் உடனேயும் பிறக்கலாம்!

ஏதாவது ஒரு சிறு நிகழ்வு அவனைத் தூண்டி ஒரு கவிதைப் பிரசவம் நிகழலாம்.

உதாரணம்...

இரவு நேரம் 

எங்கும் இருள்

கவிஞன் தூக்கமின்றி நின்று கொண்டிருக்கிறான்

அப்போது தென்னை மரத்திலிருந்து நெற்று ஒன்று விழுகிறது

ஓசை கேட்டு அவசரமாக வெளியே வந்த வீட்டுச் சொந்தக்காரர் அதைப் பொறுக்கி எடுத்தவாறு அவனைப் பார்த்துக் கேட்கிறார்”இன்னும் தூக்கம்வரலியா?”

உடனே கவிதை பிறக்கிறது

ஆண்டு 1972 

அந்த எழுத்தாளரும் நானும் ராயப்பேட்டையில் என் மாமனார் வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்கிறோம்

அப்போது அவர் முதல்நாள் இரவில் நடந்த இந்த நிகழ்வைச் சொல்லி விட்டு உடனே பிறந்த கவிதையையும் சொன்னார்

நினைவிலிருந்து எழுதுகிறேன்

தவறுகள் இருக்கலாம்- விடுபாடுகளும்,சேர்க்கைகளும்!

ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்தும் என் நினைவில் தங்கியிருக்கிறது என்றால் அது அந்த நேரத்தில் என்னை எவ்வளவு பாதித்து என்பதை உணரலாம்

//முற்றிப் பழுத்த தென்னை நெற்றொன்று
கழன்று விழுந்தது சொத்தென்று
இருளில்நெற்றைத் தேடிப்
பொறுக்கிப் போன  ஐயங்கார்
நிமிர்ந்துகேட்டார் மெதுவாக
“இன்னும் தூக்கம் வரலியோ?”
நெற்றுக் கழன்றதற்கே தூக்கம் வரலியே
நெஞ்சே கழன்று கிடக்கே தூக்கம் வருமோ?//

கவிதை பிறந்து விட்டதல்லவா சட்டென்று!