தொடரும் தோழர்கள்

வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 31, 2015

சந்திப்பும்,பிரிவும்!




தயங்கி நிற்கின்றாய் அங்கே

இருவருக்கும் தெரியும் நம் பிரிவு நிச்சயம் என்று

எஞ்சி நிற்கப் போகின்றவை உன் நினைவுகள் மட்டுமே!

எத்தனை உணர்ச்சிகளின் கலவை அந்த நாட்கள்

உற்சாகமாய்ச் சில,உயிரற்றவையாய் சில

இன்பத்தின் எல்லையைத் தொட்டவை சில

துன்பத்தில் அழுந்தித் துவண்டவை சில

ஆறுதல் அளித்தவை சில

ஆதரவற்றுத் தவித்தவை சில

இலாப நட்டக் கணக்குப் பார்த்தால்

இருப்பு என்னவோ பூச்சியம்தான்!

போ!

அடுத்தவள் உள் நுழையக்காத்திருக்கிறாள்

வரட்டும் அவள்.

என்ன வெல்லாம் சுமந்து வருவாளோ அவள்?

எதிர்பார்ப்பதுதானே என்னால் முடியும்?!

பழையன கழிதலும் 

புதியன புகுதலும்

நிகழ்வுதுதானே !

ஆனால் 

உன் சந்திப்பும் பிரிவும்

என் வயதைக் கூட்டி விட்டனவே! 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!



                                              வருக 2016



செவ்வாய், ஏப்ரல் 14, 2015

வா மன்மத,வா!





அழகாய் ஆடி அசைந்து வருகிறது ரதம்
பட பட வெனப் பறக்கிறது மீன் கொடி
அழகான வாலிபன் அவன் ரதத்தினில்
கையிலோர் வில்லுமுண்டு,கரும்பாலே
வரிசையாய் வண்டுகளே நாணாக
அம்புறாத்துணியினில் ஐந்து பாணங்கள்
அத்தனையும் மலர்க்கணைகள்
தாமரை,அசோகம்,மா,முல்லை,நீலோத்பலமென
வந்து விட்டான் அவன்,இது அவன் ஆண்டு
இளைஞர்களே,இளைஞிகளே,தயாராயிருங்கள்
பாணங்கள் உங்கள் நெஞ்சைத்துளைக்கும்
ஏனெனில் இது அவன் ஆண்டு
காதலில் நீர் விழுவது திண்ணம்
விழத்தான் முடியும்,வீழ்த்துபவன் அவன்
எழ முடியுமா மீண்டும்,இறைவனுக்கே முடியவில்லை!
மன்மத வருக!மகிழ்ச்சியைத் தருக!!

அனைவருக்கும் இனிய மன்மத ஆண்டு வாழ்த்துகள்.

காமன் கணையின் தாக்கம் பற்றிய ஒரு சித்தர் பாடல் உங்களுக்காக---

மாமன் மகளோ மச்சினியோ நானறியேன்,
காமன் கணையெனக்கு, கனலாக வேகுதடி,
மாமன் மகளாகி மச்சினியும், நீயானால்
காமன் கணை மூன்றும், கண் விழிக்க வேகாவோ.

சனி, நவம்பர் 02, 2013

தீபாவளி வாழ்த்துகள்!

இன்று தீபாவளி;நரகாசுரனைக் கொன்ற நாள்
ஒன்று கேட்பேன் நான் இந்நாளில், சொல்லுங்கள்
நம்முள்ளிருக்கும் நரகாசுரன்களைக் கொன்றோமா?
பேராசை,சினம்,கடும்பற்று,முறையற்ற காமம்,
உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் பொல்லாத
அசுரர்களைக் கொன்றொழிக்க வேண்டாமா?

அதற்கெல்லாம் நாளாகும்,இன்று தீபாவளி,
அதிகாலை குளிப்போம்,புதுத்துணி அணிவோம்
அதிரசம் புசிப்போம், ஆட்டம்பாம் வெடிப்போம்
அதன்பின் என்ன செய்ய?

முட்டாள் பெட்டி முன் முழுநாளும் அமர்ந்து
தட்டாமல் நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.
கொறிப்பதற்குப் பலகாரம் குறைவில்லை
லட்டு தின்னும் ஓநாயை சிங்கம் துரத்த ,
விஸ்வரூப தரிசனமும் உண்டின்று பார்ப்பதற்கு
யார் வந்தால் என்ன வாழ்த்துச் சொல்ல?
வெறுமிடைஞ்சல் ,கழுத்தறுப்பு, ரம்பம் என்றே
வெறுத்து ஒதுக்குவோம்,படத்தில் மூழ்குவோம்!
இதற்கு மேல் இன்பம் வேறென்ன வேண்டும்?!

தீபாவளி நல்வாழ்த்துகள்!

(இது ஒரு திருத்தப்பட்ட மீள் பதிவு)


புதன், அக்டோபர் 02, 2013

சாந்தி நிலவ வேண்டும்


வாழ்கநீ எம்மான்,இந்த
       வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
       விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
       பாரத தேசந் தன்னை
  வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்ம!நீ வாழ்க! வாழ்க!

               (பாரதியார்)
............................................................................................

சாந்தி நிலவ வேண்டும்.
உலகிலே சாந்தி நிலவ வேண்டும்,
ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்.
காந்தி மகாத்மா கட்டளை அதுவே
கருணை, ஒற்றுமை, கதிரொளி பரவி
சாந்தி நிலவ வேண்டும்!
உலகில் சாந்தி நிலவ வேண்டும்
கொடுமை செய் தீயோர், மனமது திருந்த
நற்குணம் அது புகட்டிடுவோம்!
மடமை அச்சம் அறுப்போம் – மக்களின்
மாசிலா நல்லொழுக்கம் வளர்ப்போம்!
திடம் தரும் அகிம்சாயோகி நம்
தந்தை ஆத்மானந்தம் பெறவே
கடமை மறவோம், அவர் கடன் தீர்ப்போம்
களங்கமின்றி அறம் வளர்ப்போம்!
(சாந்தி நிலவ வேண்டும்)
எங்கும் சாந்தி, எங்கும் சாந்தி, எங்கும் சாந்தி!

(இயற்றியவர்:சேதுமாதவராவ்)

.............................................