தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 29, 2013

அருகில் அமர அனுமதி கேட்ட பெண்!



சென்னையின் பொத்திக் காக்கும் கலாசாரத்தில் பேருந்தில் தெரியாத ஒரு பெண்ணின் அருகில் ஆண் அமர முடியாதுஅவ்வாறு அமர்பவர் ஒரு முதியவராகவே இருப்பினும் அப் பெண் முகத்தைச் சுளித்துக் கொள்வாள்.

ஆனால் நேற்று ஒரு வித்தியாசமான அனுபவம். 

பேருந்தில் செல்லும்போது என் அருகில் அமர்ந் திருந்தவர் இறங்கி விட இருக்கை காலி. 
அப்போது ஒரு பெண் அருகில் வந்து இங்கு அமரலாமா என என் அனுமதி கேட்டாள். 

எனக்குப் புரியவில்லை,ஏன் அந்தக் கேள்வி என.ஒரு பெண்ணின் அருகில் அமர ஆண் அனுமதி கேட்டால் அது இங்கு நியாயம்.ஆனால் ஓர் ஆணின் அருகில் அமர ஒரு பெண் அனுமதி கேட்பது எனக்குப் புதுமையாகப் பட்டது. 

என்னைப் பார்த்தால் பெண்களை வெறுப்பவன் போல் தோன்றியதா?அல்லது பெண்களுக்
காக ஒதுக்கப்பட்டாத இருக்கை என்பதால்   கேட்டாளா? ஒரு வேளை அக்கேள்வியின் விளைவாக என் முகத்தில் தோன்றும் மாறுதல்களைப் பார்த்து விட்டு அமரலாம் என்று கேட்டாளா?தெரியவில்லை.

ஒரு கேள்வியையே என் பதிலாக்கினேன்…”ஏன் கூடாது?”

அவள் சிரித்தவாறு அமர்ந்து கொண்டாள்.

22 ஆண்டுகளுக்கு முன்

அப்போது நான் அரியானாவில் வங்கி ஆய்வுப் பணியில் இருந்தேன்.

ஃபரிதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சுற்றியுள்ள ஊர்களில் உள்ள கிளைகளுக்கு ஆய்வுக்குச்  சென்று வர வேண்டும்.

பேருந்தில்தான் செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்கையில் ஒரு பெண்,.டி.ஐயில் படிப்பவள் எனத் தெரிந்தது,அருகில் இருந்த இருக்கை காலியானது.

சென்னைக்குப் பழகிப்போனநான் ,அருகில் நின்றிருந்தபோதும் அதில் அமரவில்லை.

அப்போது அப்பெண் என்னைப் பார்த்துச் சொன்னாள்,”சீக்கிரம் உட்காருங்கள்

நான் உடனே அமர்ந்து கொண்டு அவளை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தேன்.

அவள் சொன்னாள்நீங்கள் உட்காரவில்லையெனில் அதோ நிற்கிறான் பாருங்கள் (ஒரு இளைஞனைக்காட்டி) அவன் அமர்ந்து விடுவான்.அவன் சரியில்லை.எனவேதான் உங்களை சீக்கிரமாக அமரச் சொன்னேன்.”

எந்த ஊராயிருந்தாலும், சில்மிஷம் சில ஆண்கள் இருக்கத்தான் செய்வார்கள்.அவர்களை எப்படிக் கையாள்வது என்பதற்கான ஒரு பாடம் அந்தப் பெண்ணின் செய்கை.ஒரு வேளை அவன் அவள் அருகில் அமர நேர்ந்திருந்தாலும்,அவனது விஷமத்தைக் காட்ட அவள் வாய்ப்புக் கொடுத்திருக்க மாட்டாள்.தலைவனைப் பிரிந்து வாழும் தலைவியை வேறொருவன் உற்று நோக்கவே அதன் காரணமாகத் தலைவன் திரும்பி வரும் வரைத் தன் முகத்தைக் குரங்கு முகமாக்கிகொண்டு வாழும் காலமல்ல இது.

வள்ளுவர் அழகாகச் சொல்கிறார்....

“சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
 நிறைகாக்குங் காப்பே தலை”(57)

இன்றைய பெண்கள் பாரதியின் புதுமைப் பெண்கள்.

தற்காத்துக் கொள்ளத் தெரிந்தவர்கள்.

பெண்மையைப் போற்றுவோம்!மதிப்போம்!


வியாழன், நவம்பர் 28, 2013

பேய் வீடு!

புரோக்கர் காட்டிய அந்த வீடு எனக்குப் பிடித்திருந்தது.

சிறிய வராண்டா,வரவேற்பறை,ஒரு படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை என்று கச்சிதமான வீடு.

பத்து நாள் தேடலுக்குப் பின் இப்போதுதான் வீடு கிடைத்திருக்கிறது.

அலுவலக நண்பர்கள் கூடக் கேட்டார்கள், தனி ஆளுக்கு ஒரு வீடு எதற்காக, லாட்ஜில் ஒரு அறை போதுமே என்று.

ஆனால் எனக்கு லாட்ஜ் வாழ்க்கையும்,ஓட்டல் சாப்பாடும் பிடிப்பதில்லை.

தனியாக நிம்மதியாய் நானே சமைத்துச் சாப்பிடுவதே என் விருப்பம் .

வீடு முழுவதும் சுற்றிப்பார்த்தேன்.படுக்கையறை நிலைப்படியின் மேல் ஒரு தகடு அடிக்கப் பட்டிருந்தது.வீட்டிலிருந்து வெளியே வரும்போது பார்த்தேன்,வாசல் நிலைமேலும் ஒரு தகடு.

புரோக்கரைக் கேட்டேன்.வீட்டுச் சொந்தக்காரர் யாரோ சாமியாரின் பக்தராம்; அவர் கொடுத்த தகடை நன்மைக்காக அடித்திருக்கிறார் என்று சொன்னார்.

புரோக்கருடன் சென்று வீட்டுச் சொந்தக்காரரைப் பார்த்து முன் பணம் கொடுத்து வீட்டை முடித்தேன்.வாடகை கம்மிதான்.

அலுவலகத்தில் வீட்டைப் பற்றிச் சொன்னதும் நண்பர்கள் ”அய்யய்யோ,அந்த வீடா” என்றனர்.அந்த வீட்டில் பேய் இருக்கிறதாம்.அங்கு வசித்த ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள்;அவள் அங்கு பேயாகச் சுற்றுகிறாளாம்” என்றனர்.

நான் சொன்னேன் ‘என்னை எந்தப் பேயும் ஒன்றும் செய்ய முடியாது,நான் ஆஞ்சநேய பக்தன்”

மறு நாள் வீட்டில் குடி புகுந்தேன்.

சாமான்களை எடுத்து வைத்துகொண்டிருந்தபோது வாசலிலிருந்து சார் என்ற குரல் கேட்டது. போய்ப் பார்த்தேன். ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

”வாங்க,யார் நீங்க?” நான்.

அவர் சொன்னார்”நான் எதிர் வீட்டில் இருக்கிறேன்.இந்த வீட்டைப் பற்றித் தெரிந்துதான் குடி வந்தீர்களா?”

“ஆமாம் .ஏதோ பேய் இருப்பதாகச் சொன்னார்கள்,அதைத்தானே சொல்கிறீர்கள்?”

”ஆமாம்.அதனால்தான் யாரும் இங்கு குடி வரவில்லை.அதிலும் நீங்கள் தனியாக வேறு இருக்கிறீர்கள்.”

”அதனால்?”

”சார்! இந்த வீட்டில் ஒரு இளம் தம்பதி இருந்தனர்.பொருத்தமான ஜோடி.ஒரு நாள் இரவுப் பணிக்காகச் சென்ற அவன் வீடு திரும்பும்போது அவள் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து போயிருந்தாள். ”நான் இனி வாழ விரும்பவில்லை” என ஒரு சிறு சீட்டு மட்டும் எழுதி வைத்திருந்தாள்.போஸ்ட்மார்ட்டத்தில் அவள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டிருக்கிறாள் என்பது தெரிய வந்தது.போலீஸ் எவ்வளவு முயன்றும் காரணம் யாரென்று தெரியவில்லை. அதன் பின் அவன் ஊரை விட்டுப் போய்விட்டான்.இந்த வீடும் பேய் வீடு ஆகி விட்டது". அவர் சொன்னார்.

நான் கேட்டேன் “பேயை யாராவது பார்த்திருக்கிறார்களா ?”

“இல்லை. ஆனால் இரவுகளில் சிலநாள் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டதாகச் சொல்லியி ருக்கிறார்கள்’”அவர்.

நான் சிரித்தேன்.’நன்றி சார்.நான் ஜாக்கிரதையாக இருக்கிறேன்!”

அவர் சென்ற பின்,வாசல் நிலையில் அடிக்கப்படிருந்த தகடைப் பிய்த்து எறிந்தேன்.

இரவு வந்து கொண்டிருந்தது!

இரவு உணவை முடித்து விட்டுச் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல் 10 மணிக்குப் படுத்தேன்.இரவு விளக்கு இல்லாமல் நான் தூங்குவதில்லை. படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் உறங்கி விட்டேன்.

திடீரென்று விழிப்பு வந்தது.கண்விழித்தேன்.இருட்டாக இருந்தது.புழுக்கமாக இருந்தது. மின்சாரம் இல்லை என்பதை உணர்ந்தேன்.கைபேசியின் விளக்கு ஒளியில் மணி பார்த்தேன். 12.05.எழுந்து வெளியே போகலாமா என்று யோசித்தேன். அப்போதுதான் ’கம்’ மென்று மல்லிகைப் பூ மணம் என் நாசியைத் தாக்கிற்று. கிறங்க வைக்கும் மணம்.எங்கிருந்து வருகிறது என யோசித்தேன்.அதே நேரம் ஒரு பெண்ணின் அழு குரல் கேட்டது.பெரிய அழுகை இல்லை.சிறு விசும்பல்கள்.அதில் அதீத சோகம் இருந்தது.ஹால் பக்கமிருந்துதான் சத்தம் வந்துகொண்டிருந்தது. பேய்தானா? லேசாக பயம் வந்தது.ஹனுமான் சாலீஸா வைச் சொல்ல ஆரம்பித்தேன். சொல்லியவாறே படுத்தேன். தூங்கி விட்டேன்.

கண்விழிக்கும் போது காலை மணி 5.30.நான் வழக்கமாகக் கண்விழிக்கும் நேரமே. ஹாலுக்கு வந்தேன்.சுற்றிப் பார்த்தேன் எந்த மாற்றமும்,தடயமும் தெரியவில்லை. அதெல்லாம் கனவா?உண்மை நிகழ்வா எனப் புரியாத ஒரு குழப்பம்.

என் வேலைகளை முடித்துச் சாப்பிட்டு விட்டு அலுவலகம் புறப்பட்டேன்.சிலர் கேட்டார்கள் முதல் நாள் அனுபவம் எப்படி என்று.எனக்கு எதுவும் தெரியவில்ல என்று சொல்லி விட்டேன். அலுவலக வேலைகள் முடிய இரவு ஏழு மணி ஆகிவிட்டது. வீடு திரும்புமுன்,சில பொருட்கள் வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் சென்றேன்.அங்குதான் அவனைப் பார்த்தேன்.என் நண்பன் குமரன்.நீண்ட நாட்களுக்குப் பின் இப்போதுதான் பார்த்தேன்.

அவனைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.ஒரு மருந்துக் கம்பெனியில் ஃபீல்ட் மேனேஜர். ஜாலி யானவன்.ப்ளே பாய்.எந்தப் பெண்ணா யிருந்தாலும் வசியம் செய்து விடுவான்.காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது.காரியம் முடிந்ததும் கழற்றி விட்டு விடுவான்.

அங்கு சந்தித்து சிறிது நேரம் பேசிய பின் அவன் சொன்னான்.”வா,நமது இந்தச் சந்திப்பைக் கொண்டாடலாம்.”அவன் அகராதியில் கொண்டாட்டம் என்றால் ஒன்றுதான்—பாருக்குப்போவது.

போனோம்.அவன் விஸ்கியும்,நான் வழக்கம்போல் பியரும்.சுருதி ஏறினால் பேச்சு எப்போதுமே அதிகமாகுமே.அவனது புதிய நண்பிகள் பற்றியெல்லாம் சொன்னான்.

நான் குடியிருக்கும் வீடு பற்றியும் முதல் நாள் அனுபவம் பற்றியும் சொன்னேன்.

”வாவ்!சுவாரஸ்யம்! பெண்பேய்! மல்லிகைப்பூ!மோகினிப் பிசாசு என்றால் அழகாக இருக்குமே!நானா இருந்தா நேற்றே அந்தப் பேயை……… என்று சொல்லிச் சிரித்தான்.போதை ஏறியிருந்தது.

”போதும்,போகலாம்” என்று சொல்லி முடித்துக் கொண்டு எழுந்தேன்.அவனால் சரியாக நிற்க முடியாமல் தள்ளாடினான்.இந்த நிலையில் அவனை எப்படி விட்டு விட்டுப் போவது. ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன்.மணி 10 ஆகி விட்டது.ஹாலில் ஒரு படுக்கை போட்டு அவனைப் படுக்க வைத்துவிட்டு நான் அறையில் படுத்தேன்.

திடீரென்று விழிப்பு வந்தது -நேற்று போலவே.மணி பார்த்தேன்.12.15.மல்லிகைப்பூ மணம்!ஆனால் அழு குரல் கேட்கவில்லை.மாறாக வளையல் ஒலி.பெரு மூச்சுகள். முனகல்கள்.எழுந்து சென்று பார்க்க எண்ணினேன்.என்னால் படுக்கையிலிருந்து எழ முடியவில்லை.அப்படியே மயக்கம் போன்ற உறக்கம்.

காலை எழுந்து வந்து பார்த்தேன்.குமரனைக் காணவில்லை.வாசல் கதவு சும்மா சாத்தி இருந்தது.என்ன ஆனான்?மனது உறுத்தியது.அவன் தங்கியிருப்பதாகச் சொன்ன ஓட்டலுக்குச் சென்றேன்.ரிசப்ஷனில் கேட்டேன்.

”அவர் நேற்று இரவே காலி பண்ணிட்டுப் போயிட்டாரே. இரவு ஒரு மணி இருக்கும். வேகமாக வந்தார்.காலி செய்து போய்விட்டார்.”

பின் சிரித்துக் கொண்டே சொன்னான்.”அவர் வரும்போது அப்படி ஒரு மல்லிகை மணம்!அவர் அறைக்குச் சென்ற பின்னும் அந்தமணம் இங்கே இருந்தது.அவர் காலி செய்து போனபின் அந்த மணம் இல்லை! அந்த இரவில் என்ன செண்ட் போட்டாரோ?”

நாள் முழுவதும் அதே சிந்தனையிலேயே இருந்தேன்.


அன்று இரவு மல்லிகை மணமில்லை,அழுகையில்லை!

(இது ஒரு மீள் பதிவு!இப்போது ஆவி பற்றி எல்லோரும் எழுதுகிறார்களாமே!அதனால் இந்த மீள் பதிவு;முன்பு படிக்காதவர்கள் படிக்கட்டுமே!  படித்தவர்கள்  கண்டிப்பாகக் கருத்துச் சொல்லுங்கள்!இல்லையென்றால்...........இரவு பேய் மிரட்டும்!)

செவ்வாய், நவம்பர் 26, 2013

ஓய்வறைச் சம்பவம்!



கிளப்பில் இருந்தபோது  கழிப்பறை செல்ல நேர்ந்தது.

அடுத்தடுத்து இரண்டு கழிப்பறைகள்

 ஒன்றினுள் சென்று அமர்ந்தேன்.

அடுத்த கழிப்பறையில் இருந்து ஒரு குரல் கேட்டது”எப்படி இருக்கீங்க?சௌக்கியமா?”

யாரடா இது கக்கூசில் வந்து குசலம் விசாரிப்பது?

இருந்தாலும் பதில் அளித்தேன் ”சௌக்கியம்தான்”

“என்ன பண்ணிட்டிருக்கீங்க?”குரல் தொடர்ந்தது.

இது என்ன மடத்தனமான கேள்வி?கழிப்பறையில் என்ன செய்வார்கள்?என்ன பதில் சொல்வது?

பொதுவாகச் சொன்னேன்”சும்மாதான் இருக்கேன்”

இதென்ன தொந்தரவாகப் போய் விட்ட்து?அடுத்த கேள்வி வருமுன் போய்விட வேண்டும்!

மீண்டும் குரல்”இப்ப நான் வரலாமா?”

ஐயோ!என்ன கஷ்டகாலம் இது?எதையாவது சொல்வோம்”இன்னும் முடிக்கலை”

இப்போது குரல் மீண்டும் கேட்டது”நான் உங்கிட்ட அப்புறம் பேசறேன்.இங்க எவனோ முட்டாள் அடுத்த கக்கூசில் இருந்து உன்னிடம் நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான்!”

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


திங்கள், நவம்பர் 25, 2013

தேடி வந்த ஆவி!




அன்று அவர்கள் திருமண தினம்.

திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகள் ஓடி விட்டன.

ஆரம்பகாலத்தில் இருந்த பரஸ்பர அன்பு குறைந்து விட்டது

எல்லாவற்றுக்கும் விவாதம்;சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூடச் சச்சரவு என வாழ்க்கை மாறித்தான் போய் விட்டது.

ராதா காத்திருந்தாள்,கணவன் ராஜாவின் வருகைக்காக.

அவன் இன்று திருமண நாள் என்பதை நினைவில் வைத்திருப்பானா?

ராதாவுக்கு நம்பிக்கை இல்லை.

இருப்பினும் ஓர் அற்ப ஆசை,அவன் பரிசோடு வந்து ஆச்சரியப்படுத்த மாட்டானா என்று!

வெளியில் மழை வேறு .

ராதா காத்திருந்தாள்

அழைப்பு மணி ஒலித்தது.

ராதா ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்......

கையில் ஒரு பரிசுப் பொட்டலத்துடன் மழையில் நனைந்த கோலத்தில் ......ராஜா!

“இனிய மண நாள் வாழ்த்துகள்,அன்பே 

அவள் அவனை அணைத்த்க்கொண்டாள்.

மகிழ்ச்சி வெள்ளம்!

உள்ளே சென்றனர்.

அவன் தலையைத் துவட்டி விட்டாள்

மாற்று ஆடை கொடுத்தாள்

சூடான காபி தயாரித்துக் கொடுத்தாள்.

இருவரும் அந்தக்காலம் திரும்பி வந்தது போல் கொஞ்சியவாறு பேசத் துவங்கினர்.

அடுத்த அறையிலிருந்த் தொலைபேசி அலறத் தொடங்கியது.

சலிப்புடன் எழுந்தாள் ராதா...”சே! சிவ பூஜையில் கரடி மாதிரி!இது வேற”

எடுத்தாள்.

ஆண்குரல்,

“ஹலோ! இது ராஜா அவர்களின் வீடா?”

“ஆமாம்.”

“நாங்கள் டி-1  காவல் நிலையத்தில் இருந்து பேசுகிறோம்.ஒரு சாலை விபத்தில் ராஜா இறந்து விட்டார்.அவர் பர்சில் இருந்த  விசிடிங் கார்டிலிருந்து எண்ணைத் தெரிந்து கொண்டோம். வருந்துகிறோம் அம்மா.”

ராதாவுக்கு மயக்கம் வருவது போல் இருந்த்து!

இது எப்படி?

அடுத்த அறையில் கணவன் இருக்கிறானே!

ஒரு வேளை........

தன்னைப் பார்க்க வரும்போது இறந்த கணவனின் ஆவி அவளைத் தேடி வந்து விட்டதோ?

மேலுலகம் செல்லுமுன் அன்புக்குரியவரைக் காண ஆவி வரும் என்று கேள்விப்பட்டி ருக்கிறாள்

அடுத்த அறைக்கு ஓடினாள்

அங்கு.....

அவன் இல்லை!

உண்மைதான்

அவன் போய் விட்டான்.

பழைய வாழ்க்கையை மீண்டும் தொடங்கியிருக்கலாமே!என்ன செய்வேன்.நான் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பின்றி போனதே ”

அழத் தொடங்கினாள்

அப்போது...........

கழிப்பறைக்கதவு திறந்தது.....

ராஜா வெயே வந்தான்

”ராதா! சொல்ல மறந்துட்டேன்.இன்னிக்கு என் பர்ஸ் தொலைந்து போய் விட்டது.நல்ல வேளை ஏடிஎம் அட்டையெல்லாம் என் கைப்பயில் வைத்திருந்தேன்!”

.....................................................!

(இணையத்தில் படித்ததின் தழுவல்!)

ஞாயிறு, நவம்பர் 24, 2013

ஹாலிடே!ஜாலிடே!!



 ஒரு வயதான தம்பதிக்கு நினைவாற்றல் குறைந்து போய்விட்டது. நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளும் வகுப்பொன்றில் சேர்ந்தனர்.அதற்குப்பின் அந்த வகுப்பின் பயன் பற்றிப் பலரிடமும் பெருமையாய் எடுத்துரைத்தனர்.சில நாட்களுக்குப் பின் நண்பர் ஒருவர் அந்தக் கணவரிடம் வந்தார்.அவர்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர் பெயர் என்ன எனக் கேட்டார்.

அவர் யோசித்தார்;பின் வந்தவரிடம் கேட்டார்”அந்த வாசமுள்ள மலர்,செடியில் முள் கூட இருக்குமே ,அதன் பேரென்ன?”என்று கேட்டார்.நண்பர் சொன்னார் “ரோஜா”

க்கணவர் உடனே தன் மனைவியை கூப்பிட்டுக் கேட்டார்”ரோஜா! நமக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர் பெயர் என்ன?”

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!