தொடரும் தோழர்கள்

புதன், செப்டம்பர் 02, 2009

ஓணம்


ஓணம் நல் வாழ்த்துகள்.
திருப்பதி பாலாஜி பிறந்த நட்சத்திரம்-திருவோணம்
சூபர் ஸ்டார் பி்றந்த நட்சத்திரம்-திருவோணம்
இவன் பிறந்த நட்சத்திரம்-திருவோணம்

முதல்வர் கோடி கோடீஸ்வரர்
இரண்டாமவர் கோடீஸ்வரர்.

இவன்?!

புதன், ஜூலை 29, 2009

முத்தத்தின் சுவை என்ன?

முத்தம்!!
சொல்லும்போதே,கேட்கும்போதே,நினைக்கும்போதே மனசெல்லாம் ஒரு மகிழ்ச்சியை, உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் ஒரு சொல். நாம் முத்தம் என்றவுடன் நினைப்பது உதடுகள் இணையும் முத்தத்தையே.ஆனால் முத்தத்தில் எத்தனை வகை?

பாசத்தின் வெளிப்பாடாக நெற்றியின் உச்சியில் இடும் முத்தம்.குழந்தையை அணைத்துக் கன்னத்தில் இடும் முத்தம்.(கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி)ஒரு மரியாதைக்காகக் கையில் இடும் முத்தம்.(இங்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.மங்களூரில் ஒரு கிருத்துவ நண்பரின் திருமணத்துக்கு சர்ச்சுக்குப் போயிருந்தோம்.திருமணம் முடிந்ததும் அனைவரும் மணப்பெண்ணின் கையில் முத்தமிட்டனர்.நாங்களும்தான்.எங்கள் நண்பர் ஒருவர் நேரம் கழித்து வந்தார்.நாங்கள் சொன்னதைக் கேட்டு ’மிஸ், பண்ணி விட்டேனே என்று வருத்தப்பட்டார்!)

முன்பெல்லாம் ஆங்கிலப் படங்களில்தான் முத்தத்தைப் பார்க்க முடியும்.ஆனால் இப்போதெல்லாம் தமிழ்ப் படங்களிலும் அவ்வப்போது முத்தத்தைப் பார்க்க முடிகிறது-உபயம்-உலகநாயகன்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த முத்தத்தில்?அதன் சுவை என்ன?

வள்ளுவர் சொல்கிறார்---
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.”

மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்,பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும் (டாக்டர்.மு.வ.-உரை).

இது உண்மையா?விவாதம் தொடங்கட்டும்!

வியாழன், ஜூன் 11, 2009

சில சாத்தியங்கள்

எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது.ஆனால் எனக்கு ஒரு(!) கனவு இருந்ததில்லை.பல கனவுகள்?

1)என் வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது வெவ்வேறு வயதில் நடந்த நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நான் சென்றிருக்கக்கூடிய பாதைகளின் சாத்தியங்களைக் காட்டுகின்றன.

என் 7 வயதில் சாத்தூரில் பொதுத்தேர்தலின் போது கையில் மெகா போனுடன் வீதி வீதியாகச் சென்று காங்கிரஸ் கட்சிக்காகத் தொண்டர்களுடன் சேர்ந்து பிரசா ரம் செய்தேன் .நாடாளுமன்றத்துக்கு திரு.காமராஜ் அவ்ர்களும் சட்டப் பேரவைக்கு திரு.எஸ்.ஆர்.நாயுடு அவர்களும் போட்டியிட்டனர் .வெற்றி ஊர்வலத்தில் திரு.நாயுடு அவர்களுடன் மகிழ்வுந்தில் அருகில் அமர்ந்து சென்றேன்.சில தெருக்கள் சென்றபின் தொண்டர்கள் என்னை இறக்கி ஹோட்டலுக்கு அழைத்து சென்று மைசூர்பாகும் தோசையும் வாங்கித்தந்தனர்.நான் இறங்கு முன் திரு.நாயுடு அவர்கள் என்னை அன்புடன் தட்டிக்கொடுத்தார்.

அன்று முதல் அந்தத்தொடர்புகள் விடாமல் ஒரு அரசியல் அஸ்திவாரம் எனக்கு அமைத்துத் த்ரப்பட்டிருந்தால் நான் என்னவாயிருப்பேன்?-அமைச்சர்?ஏன் அவ்வாறு நடக்கவில்லை?இழப்பு யாருக்கு???

2)சிவகாசியில் பள்ளியில் படிக்கும்போது பள்ளி நாடகங்களில் கதாநாயகனாக(ராஜபார்ட்)நடித்தேன்.மறக்கமுடியாத வேடம் ராஜ ராஜ நரேந்திரன்.நடிப்பின் காரணமாகவே தமிழ் ஆசிரியருக்கும் பள்ளி மேலாளருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தேன்.பள்ளி வளாகத்தில் நடக்கும் கண்காட்சியிலும் நாடகத்தில் நடித்தேன்.எல்லோரும் என்னை “குட்டி நடிகர் திலகம்” என்றே அழைத்து வந்தனர்.வங்கியில் பயிற்சியில் இருந்த போது நண்பர் ஒருவர் ,ஒரு பிரபல நடிகர் ஒருவரின் பெயரைக்கூறி அவரெல்லாம் நடிக்கும்போது நீ ஏன் நடிக்கக்கூடாது என்று கேட்டார்.இவ்வாறு பலநேரங்களில்,பல விதங்களில் எனக்குள் ஒரு ஆசை எழுப்பப்பட்டது.திரைத்துறையில் புகுந்திருந்தால் பெரிய நடிகனாயிருப்பேனோ? அவ்வாறு ஏன் நடக்கவில்லை?இழப்பு யாருக்கு????

3)பட்டமேற்படிப்புக்குப்பின் சிறிது காலம் வருமான வரித்துறையில் பணியாற்றி வந்த போது ஐ.ஏ.எஸ் படிப்பதில் தீவிரமாக இருந்தேன்.நன்கு தயார் செய்து கொண்டு இருந்தேன்.அந்த நேரத்தில் வங்கிப்பணிக்கான அழைப்பு வந்தது.செல்ல வேண்டாம் என்று எண்ணினேன்.என் அண்ணாஅவர்களும் ஆமோதித்தார்.ஆனால் போக வேண்டிய நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பாக வங்கிப்பணிக்குச்செல்லும்படி என் அண்ணா அறிவுரைத்தார்.அவரும் ஒரு வங்கி அதிகாரிதான்.வங்கியில் சேர்ந்து விட்டேன்.ஐ.ஏ.எஸ் அதோடு முடிந்தது. ஏன் எண்ணப்படி நடக்கவில்லை?இழப்பு யாருக்கு?????

முதல் கேள்விகளுக்கு விடை1.குடும்ப சூழ்நிலை2.Risk(த்மிழ் என்ன) எடுக்கத்துணியாத நடுத்தர வர்க்க மனோ பாவம்(சுருக்கமாக விதி என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாமா)

இரண்டாவது கேள்விகளுக்கான விடை;-இழப்பு அரசியலுக்கு,திரைப்படத்துறைக்கு,அரசுப்பணிக்கு என்று சொல்வேன் என எண்ணினீர்களா?இல்லை எனக்குத்தான்.

இதைப்படித்து விட்டு நான் வாழ்க்கையில் திருப்தியின்றி இருந்திருக்கிறேன் என்று எண்ண வேண்டாம்.

என் பணியிலும் நான் மகிழ்வுடன்தான் இருந்தேன்.இது வரை வாழ்க்கையை முழுமையாகவே வாழ்ந்திருக்கிறேன்.

எல்லாம் இறைவன் செயல்.

(பழைய வீட்டிலிருந்து)

சனி, மே 02, 2009

ஒரு வரலாறு-ராஜியும் பாட்டும்(அத்தியாயம் 3(a)

ராஜி பள்ளிக்கூடத்தில் பாடிய பாட்டு பற்றி சொல்லும்போதே அவளது வேறு ஒரு பாட்டு அனுபவம் பற்றியும் சொல்லியாக வேண்டும்.அந்தக்காலத்திலெல்லாம்,திருமணத்தன்றே சாந்தி முகூர்த்தமெல்லாம் கிடையாது.முக்கியமான காரணம் மணமாகும் போது பெரும்பாலும் பெண் வயதுக்கு வந்திருக்க மாட்டாள்.ராஜியைப் பொருத்தவரை,திருமணத்துக்கு முன்பே வயசுக்கு வந்து விட்டாலும்,அவளது சாந்திகல்யாணம் நான்கு மாதம கழித்துத்தான் நடந்தது.ஏப்ரலில் கல்யாணம்;ஆகஸ்டில் சாந்திகல்யாணம்..வயதென்னவோ அந்த ஜூலையில்தான் பதினான்கு முடிந்திருந்தது.எனவே அவள் ஒரு சிறுமிதானே?

நவராத்திரி சமயத்தில் யார் வீட்டிலெல்லாம் கொலு வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் அண்டை அயலில் உள்ள வீட்டுக்காரர்களை கொலுவுக்கு அழைப்பது வழக்கம்.இப்போதும் அந்த வழக்கம் இருக்கிறது என்றாலும்,ஏதாவதொரு குறிப்பிட்ட ஒரு நாளில்தான் அழைக்கிறார்கள்.அன்று தினமும் அழைப்பார்கள்.தினமும் ஏதாவது தின்பண்டமும் உண்டு.விஷயத்துக்கு வருவோம்.

ராஜியின் கணவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர்.
திருவல்லிக் கேணியில் அவரை அறியாதவர்கள் கிடையாது.
(அவர் பிரமாதமாகக் கொலு வைப்பார்.அதைப்பற்றிப் பின்னால் பார்ப்போம்.).எனவே ராஜியையும் பலர் கொலுவுக்கு அழைத்திருந்தனர்.ராஜியும் சாக்குப்போக்கு எதுவும் சொல்லாமல் போய் வந்தாள்.அப்படி அழைத்திருந்த வீடுகளில் ஒன்று ஒரு சங்கீத வித்வானுடையது.அங்கு ராஜி போயிருந்த போது அந்த வித்வானும் வீட்டில் இருந்தார்.அந்த வீட்டு மாமி அவரிடம்”ப்ரொஃபசர்.நாராயணனோட ஆத்துக்காரி” என்று அறிமுகம் செய்து வைத்தாள்.நவராத்திரியின் போது வீட்டுக்கு வரும் பெண்களைப் பாடச் சொல்வது வழக்கம்.அதுவும் ராஜி ப்ரொஃபசர் நாரயணின் பார்யா.எனவே அவர் அவளை ‘ஒரு பாட்டுப் பாடும்மா’ என்றுகேட்டார்.

முன்பே சொன்னது போல் யாராவது பாடச்சொன்னால் ராஜி தயக்கம் ஏதுமின்றி உடனே பாடி விடுவாள்.அவர் சொன்னவுடன் ஒரு பாட்டுப் பாடி விட்டாள்.

அதைப்பற்றி இப்போது நினைத்தாலும்,ராஜி பெருமை கொள்கிறாள்;வெட்கமும் அடைகிறாள்.

அவ்வளவு பெரிய வித்வான் தன்னைப் பாடச்சொல்லித் தான் பாடியதில் பெருமை,

சங்கீதத்தை முறையாகப் பயிலாத தான் அவர் முன் பாடினோமே என்ற வெட்கம்.

அந்த வித்வான் ஜி.என்.பி. என்று அழைக்கப்படும் திரு.ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்கள்!

மறக்க முடியாத நினைவுதானே!

திங்கள், ஏப்ரல் 27, 2009

நானும் இட்லிவடையும்!

எனது முந்தைய ’பச்சோந்தி’ என்ற இடுகையைப் பாருங்கள்.

இட்லிவடையின் இன்றைய ‘உண்ணாவிரதம் முடிந்தது’ என்ற வீடியோவைப் பாருங்கள்.

ஒரு விஷயத்தை வி்ஷுவலாகச் சொன்னால் எப்போதுமே எஃபெக்ட் அதிகம்தான்.

GREAT MEN THINK ALIKE!

வெள்ளி, ஏப்ரல் 24, 2009

பச்சோந்தி

என் வீட்டுத் தோட்டத்தில்
ஒரு பச்சோந்தி.
நீர் பாய்ச்சும்போதொரு நாள்
என்கண்ணில் பட்டதந்தப் பச்சோந்தி
சிறு கல்லெடுத்தெறிந்தேன் அதன் அருகே
வேகமாய் ஓடி மரத்திலேறியது.
எங்கு மறைந்ததென்று தேடினேன்
மரக்கிளையின் நிறமெடுத்துக்
கிளையோடு கிளையாய்க் கிடந்தது.
மீண்டும் ஒரு கல்.
ஓடியது.
எங்கு போயிற்று?
இப்போது இலைகளின் இடையே
இலையோடு இலையாய்
பச்சை நிறத்தில் அந்தப் பச்சோந்தி.
தன்னைக் காத்துக்கொள்ள
எத்தனை நிறம்தான் எடுக்குமந்தப் பச்சோந்தி?
அதன் உண்மை நிறமென்ன?
எனக்குத்தெரியாது.
அப் பச்சோந்திக்காவது தெரியுமா?

புதன், ஏப்ரல் 22, 2009

ஒரு வரலாறு

அத்தியாயம்-3--இன்றும் அன்றும்.
----------------------------
20-04-2009.
திங்கட்கிழமை.
ராஜி அந்த வார முடிவில் வரும் உள்ளூர் செய்திதாளைப் பிரித்தாள்.

இரண்டாவது பக்கத்தில் இருந்த அந்த, மறைவுச்செய்தி அவள் கண்ணில் பட்டது.

“உமா சுந்தரம்,வயது,90,ஏப்ரல் 10ஆம் தேதியன்று இறைவனடி சேர்ந்தார்.கர்னாடக இசையில் தேர்ச்சி பெற்ற அவர் இறுதி வரை குழந்தகளுக்குத் திருப்பாவை,திருவெம்பாவை மற்றும் பக்திப்பாடல்களை கற்பித்து வந்தார்.13 வயதிலேயே இசைக்காகப் பதக்கம் பெற்ற அவர் என்றுமே மேடைக் கச்சேரி செய்ய வேண்டும் என்று விரும்பியதில்லை.”அவரது குடும்பத்தினர் பற்றிய விவரமும்,தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டிருந்தன.

ராஜி அந்தப் புகைப் படத்தை உற்றுப் பார்த்தாள்.”அவளா இவள்?’மனதுக்குள் கேள்வி எழுந்தது.வயதான அப்பெண்மணியின் இடத்தில் தன் பள்ளித் தோழியை இருத்திப் பார்க்க இயலவில்லை.தான் இப்போது எப்படி இருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தாள்.தன் புகைப்படத்தைப் பார்த்தால் தன் இளமைக்காலத்தோழிகள் எவருக்கேனும் யாரென்று தெரியுமா என யோசித்தாள்.சிரிப்பு வந்தது.

மீண்டும் பத்திரிகையைப் பார்த்தாள்.ஒரு முடிவுக்கு வந்தாள்.

“ஹலோ!நமஸ்காரம்.நான் ராஜி பேசறேன்.நேத்திப் பேப்பர்லே உமா சுந்தரம் மறைவுச் செய்தி பார்த்தேன்.நான் 1931-32 ல மைலாப்பூர் நேஷனல் கர்ள்ஸ் ஹைஸ்கூல்ல படிச்சேன்.அப்போ எங்கூட உமான்னு ஒரு பொண்ணு படிச்சா.அப்பொவே ரொம்ப நன்னாப் பாடுவா.இது அந்த உமாவான்னு தெரிஞ்சுக்கலான்னுதான் ஃபோன் பண்ணினேன்.”

மறு முனையிலிருந்து பதில் வந்தது.”நான் உமாவோட தம்பி பேசறேன்.நாங்க மைலாப்பூர்லதான் இருந்தோம்.ஆனா அக்கா எந்த ஸ்கூல்ல படிச்சாங்கறது எனக்கு நினைவில்லை.எங்க அப்பா பேர் ராமாராவ்.ஏதாவது உங்களுக்கு ஞாபகம்வரதா?”

ராஜி யோசித்தாள்.அந்தப் பெண்ணின் தந்தை பெயர் நினைவில் இல்லை.”இல்லை.நினைவுக்கு வரல்லை”

ஃபோன் உரையாடல் முடிந்தது.

ராஜிக்கு அந்த நாள் நினைவுக்கு வந்தது.
அன்று.

விஞ்ஞான ஆசிரியர் அன்று பாடம் எதுவும் நடத்தப் போவதில்லை என்று அறிவித்து விட்டு,வகுப்பில் யாருக்கெல்லாம் பாடத்தெரியுமோ,அவர்களெல்லாம் பாடலாம் என ஒரு அறிவிப்பைச் செய்தார்.

உடனே ராஜியின் அருகில் இருந்தபெண்”சார்,ராஜி நன்னாப் பாடுவா” என்று சொல்ல அவரும் ராஜியைப் பாடும்படி பணித்தார்.ராஜிக்கு எப்போதுமே பலர் முன்னிலையில் பாடுவதில் சங்கோஜம் எதுவும் கிடையாது.ஊரில் இருக்கும்போது கூட,யார் வீட்டுக்காவது போகும்போது அங்குள்ளவர்கள் பாடச்சொன்னால் உடனே பாடி விடுவாள்.இத்தனைக்கும் அவள் முறையாக இசை பயின்றதில்லை.யாரோ சொல்லிக் கொடுத்த ஓரிரு பாட்டுக்கள்தான் தெரியும்.

ராஜி பாடத்தொடங்கினாள்.

பாடும்போது மற்ற மாணவிகளின் முகங்களைப் பார்த்தாள்.
கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த பெண்ணின் முகத்திலே ஒரு எரிச்சல் தெளிவாகத்தெரிந்தது.

ராஜி பாடி முடித்ததும் அந்தப் பெண்,பைரவி ராகத்தில் “தனயுனி ப்ரோவ” என்று கம்பீரமாகப் பாட ஆரம்பித்தாள்.
ராஜி பிரமித்துப் போனாள்.’என்ன பிரமாதமாகப் பாடுகிறாள் இந்தப் பெண்’ என வியந்து போனாள்.
இந்தப் பாட்டுக்கு முன் தான் பாடியதெல்லாம் ஒரு பாட்டா என நாணிப் போனாள்.
தான் பாடும்போது அந்தப் பெண் எரிச்சலடைந்ததன் காரணம் புரிந்து முகம் சிவந்து போனாள்.
ராஜியின் இந்த உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட அருகில் இருந்த தோழி சொன்னாள்”அவ,பாட்டுக் கத்துக்கறான்னா”

அந்தப் பெண்ணின் பெயர் உமா.

இன்று

அந்த உமாதானா இவள்?தன்னுடன் படித்த எத்தனை பேர் இப்போது உயிருடன் இருக்கப் போகிறார்கள்.

ராஜி ஒரு பெருமூச்சுடன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்

புதன், ஏப்ரல் 15, 2009

ஒரு வரலாறு

அத்தியாயம்-2-ராஜியின் மேற்படிப்பு

“ஏண்டி,ராஜி !வெளியூருக்குப் போய் படிக்கப் போறயாமே? எங்களையெல்லாம் விட்டுட்டுப் போகப் போறியாடி?”ராஜியின் தோழி கேட்டாள்.

“ஆமாண்டி,ராதா.இனிமே இந்த ஊரிலே பசங்களோட சேர்ந்து படிக்க வேண்டான்னு அப்பா சொல்லிட்டா.வெளியூர்ல கர்ள்ஸ் ஸ்கூல்ல படிக்கலாம்னு சொல்லிட்டா.”-ராஜி
“எந்த ஊருக்குடீ போகப்போறே.”
“ரெண்டு எடம் சொல்லியிருக்கா.ஒண்ணு கடலூர்;இன்னொண்ணு மெட்ராஸ்”
“நீதான் படிப்பிலே கெட்டிக்காரியாச்சே.போயி பெரிய படிப்பெல்லாம் படிச்சு பெரிய ஆளா வாடி”

இதுதான் அவள் தான் பிறந்து 13 வயது வரை வளர்ந்து , மூன்றாம் படிவம் வரை (8ஆம் வகுப்பு) படித்து முடித்த அந்த சாத்தூர் மண்ணை விட்டுத் தொலை தூரமான மதராசுக்கு வர நேர்ந்த காரணம்.

அவள் மூன்றாம் படிவம் படித்துத் தேறியபோது அவளுக்கு வயது 13.உயர் நிலைப் பள்ளியொன்றில் தலைமை ஆசிரியராக இருந்த அவளது தந்தை தன் பெண்ணுக்கும் உயர் கல்வி அளிக்கவேண்டும் என்று ஆசைப் பட்டார்.படித்து முடித்த வரை ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த ஓரிரு பெண்களில் அவளும் ஒருத்தி.ஆனால் இப்போது பெரியவளாகும் நேரம் வந்து விட்டது.பையன்களுடன் சேர்ந்து படிக்க வைக்க முடியாது. சாத்தூரிலோ,பெண்கள் உயர்நிலைப்பள்ளி கிடையாது.அவளது தந்தைக்குத் தெரிந்து,சென்னை மாகாணத்தில் இரு நல்ல பெண்கள் உயர் நிலைப்பள்ளிகள் இருந்தன.ஒன்று கடலூர் NT என்று அழைக்கப்பட்ட திருப்பாப்புலியூரில்(திருப்பாதிரிப்புலியூர்). மற்றது மதராஸ் மைலாப்பூரில் இருந்த நேஷனல் பெண்கள் உயர்நிலைப் பள்ளி.(இப்போது லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி)

ஒரு நல்ல நாளில் அவள் தன் அம்மா மற்றும் அத்தையுடன் கடலூர் புறப்பட்டாள்.அத்திம்பேர் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில்,ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார்.கடலூரில் பள்ளியில் இடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே ஒரு வீடும் பார்த்து ஏற்பாடு செய்து விட்டார்கள்,அவளும் அவள் அம்மாவும் தங்குவதற்கு.
அவர்கள் கடலூரை அடைந்தனார்.வேறு பள்ளியிலிருந்து வருவதால் அவளுக்கு ஒரு தகுதித்தேர்வு வைத்தனர் அப்பள்ளியில்.எட்டு வரை தமிழ் மீடியத்திலே படித்த அவளால் அந்த ஆங்கில மீடியப் பள்ளியின் தேர்வில் நன்றாக எழுத முடியவில்லை.முடிவு—அவளை மூன்றாம் படிவத்துக்கே எடுத்துக் கொள்ள முடியும் என்று சொல்லி விட்டனர். ஏமாற்றம்தான்.அவள் தந்தைக்குச் செய்தி போயிற்று.அவர் தன் தம்பியிடம் ரூ.200/= பணம் கொடுத்து மெட்ராஸ் சென்று மைலாப்பூர் பள்ளியில் முயற்சி செய்யச் சொன்னார்.அவரும் மெட்ராஸ் சென்றார்.பள்ளியின் முதல்வரை-ஒரு ஆங்கிலேயப் பெண்மணி- பார்த்தார்.பழைய பள்ளியின் T.C யைக் காட்டினார்.எந்தவிதமான மறுப்பும் இன்றி,ராஜியைப் பார்க்காமலே அவளுக்கு நான்காம் படிவத்தில் இடம் தரப் பட்டது.
அவள் சித்தப்பா,பள்ளியில் ஒரு டெர்ம் சம்பளம் கட்டினார். மைலாப்பூர் அப்ரஹாம் முதலித் தெருவிலே,பள்ளிக்கு மிக அருகிலே ஒரு வீடு பிடித்தார்.அவளுக்காக ஒரு சிறிய புத்தக அலமாரி,ஒரு நாற்காலி எல்லாம் வாங்கிப் போட்டார்.எல்லாம் ரூ.200/க்குள்!கடலூருக்குத் தகவல் சென்றது.

இதோ ராஜி மெட்ராஸ் புறப்படப் போகிறாள்.

(தொடரும்)

செவ்வாய், ஏப்ரல் 14, 2009

ஒரு வரலாறு

(எனது 5-3-09 தேதியிட இடுகையின் தொடர்ச்சி)
(இது ஒரு உண்மை சரிதம்.ஆயினும்,சில முக்கியமான மனிதர்களின் பெயரும்,சில இடங்களின் பெயரும் மாற்றப்பட்டிருக்கின்றன.)

அத்தியாயம்-1
-------------
பயணம் ஆரம்பம் என்று சொன்னேனல்லவா.ஒரு பயணத்திலேயே தொடங்குகிறேன் இந்த வரலாற்றை.

அந்தத் தொடர் வண்டி புகையைக் கக்கிக்கொண்டு மதராஸ் எழும்பூர் நிலையத்தை விட்டுப் புறப்பட்டது.ஆம்.அப்போது மதராஸ்தான்.அப்போது புகை விட்டுக்கொண்டுதான் ரயில் செல்லும்.டீசல் எஞ்சின் எல்லாம் கிடையாது.சன்னல் பக்கம் அமர்ந்திருந்தால் கண்களில் கரி விழுவது நிச்சயம்.பயணம் முடிந்து இறங்கும்போது சட்டை கருப்பாக இருப்பது உறுதி. ஆனால் இப்போது போல் கூட்டமெல்லாம் கிடையாது.இரண்டு மாதங்களுக்கு முன் பதிவு செய்தாலும் காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் நிலை கிடையாது.ஆம்;அது 1950 ஆம் ஆண்டு,ஜூன் மாதம்.இப்போது எல்லோரும் எங்காவது போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள்.அநேகர் தேவையே இல்லாது பயணித்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் பல நேரம் எழுகிறது. இன்றைய மக்கள்தொகைப் பெருக்கமும் ஒரு காரணம் அல்லவா?சரி விஷயத்துக்கு வருகிறேன்.

அந்த ரயிலில் பயணம் தொடங்கிய பலரில்,ஒரு குடும்பம். சமீபத்தில் அக்குடும்பத்தலைவர் இறந்து விட்டிருந்தார். கணவனை இழந்த,31 வயதே நிறைந்த,32 நடக்கும் பெண்;அவளது குழந்தைகள்-முதல் பையன்,ராமசாமி(வயது 16),அடுத்த பெண்,ரமணி(13),அடுத்தபெண்,ரமா(11),அடுத்தபெண்,மகா(7),
கடைக்குட்டி சுந்தர்(5).அந்தக் கடைசிப் பையனைத்தவிர,மற்ற அனைவரும் அந்த இழப்பின் தாக்கத்தில் இருந்தனர். அப்பயணத்தை மகிழ்ச்சியாக எதிர்நோக்கியவன் அந்த சிறுவன் ஒருவன்தான்.மற்ற அனவருக்கும் அந்தப்பயணம் ஒரு தெளிவில்லாத எதிர்காலத்தின் தொடக்கமாகவே தோன்றியது.ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள்.

அந்தத்தாய்;இந்த ஐந்து குழந்தைகளையும் எப்படி வளர்த்துப் பெரியவர்களாகி,அவர்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போகிறோம் என்பதே புரியாத தாய்.அவர்களை பார்க்கும்போதெல்லாம் அடி வயிற்றில் பந்து சுருளும் தாய்.பயம். எதிர்காலம் பற்றிய பயம்.முழுக்க முழுக்க வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய்,கணவன் ,மாமியார்,குழந்தைகளைத் தவிர வேறெதையும் கருத்தில் கொள்ளாது இத்தனை ஆண்டுகளைக் கழித்து விட்ட தாய்.இப்படி,நிர்க்கதியாக விட்டு விட்டுப் போய் விட்டாரே என்று எண்ணும்போதே,அழுது அழுது வறண்ட கண்களில் மீண்டும் கண்ணீர் சுரக்கிறது.மற்றவர் பார்க்காவண்ணம் கண்களைத்துடைத்துக் கொள்கிறாள்.அப்படியே கண்களை மூடியபடி இருக்கையில் சாய்கிறாள்.அவள் மனம் மெட்ராசுக்கு அவள் வந்த காரணத்தை,அந்த ஆரம்ப நாட்களைப் பற்றி நினைக்கிறது.

சனி, மார்ச் 07, 2009

என் நாடக அனுபவங்கள்-பகுதி-2

பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிக்கு வந்த பின் நாடகம் மட்டுமல்ல,வேறு எந்தக் கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.மீண்டும் மேடை ஏற பல ஆண்டுகள் ஆகி விட்டது.வங்கிப் பணியில் இருக்கும்போது வங்கி ஊழியர் சங்க விழாவில் ஒரு நாடகத்தில் என்னை நடிக்கும்படிக் கேட்டுக்கொண்டனர்.ஆச்சரியமாக மீண்டும் அந்த நாடகத்தில் இரு வேடங்களில் (!) நடிக்க வேண்டியதாயிற்று-ஒரு ‘தொண தொணப்பு‘க் கிழவனார்,மற்றும் காவல் துறை ஆய்வாளர்.நாடகம் தொடங்குமுன் ஆய்வாளர் வேடத்தில் நாடகம் நடந்த சபா அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்தவர்களை சிறிது மிரட்ட அவர்கள் நிஜமாகவே பயந்தது ஒரு சுவையான அனுபவம்.வழக்கம்போல் இந்த நாடகத்திலும் என் நடிப்பு பாராட்டப்பட்டது.(டம் டம் டம்).

மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி.சில ஆண்டுகளுக்குப் பின் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது,என் நண்பர் ஒருவர் மூலமாக.தொடரின் பெயர் “சந்திரலேகா”.அத்தொடரில் என்னுடன் பிரபலமான பலர் நடித்தனர்.(பெயர்களைத் தவிர்த்து விட்டேன்).கதாநாயகனின் அலுவலக முதலாளியாக ஒரு பாத்திரம் ஏற்றேன்.கதாநாயகியாக நடித்தவர் அப்போது கல்லூரியில் படித்து வந்தார்.கத்திப் பேசாத மிகையில்லாத நடிப்பு அவருடையது.இப்போது பெரும்பாலும் பேட்டி காண்பவராகவே இருக்கிறார்.முதல் நாள் படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ் தோட்டத்தில்.முதல் நாளே சிறிது உருக்கமான காட்சி.படப்பிடிப்பு முடிந்ததும் கதாநாயக நடிகர் “முதல் நாள் என்று சொல்கிறீர்கள்;ஆனால் மிக அனுபவமான நடிகர் போல நடிக்கிறீர்களே” என்று பாராட்டினார்.மகிழ்வுந்தில் என்னைத் திரும்ப அழைத்து வந்த ஒருவர் “நான் மானிட்டரில் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு இயல்பான ‘கெத்து’இருக்கிறது உங்களிடம் “என்று பாராட்டினார்.

பின் ஸ்ரீதேவி வீடு,ஏ.வி.எம்.ஸ்டுடியோ என்று நான்கைந்து நாள் படப்பிடிப்பு நடைபெற்றது.இயக்குனர் முதல் டச்-அப் பையன் வரை எல்லோரும் என்நடிப்பைப் பாராட்டினர்.

ஆனால் திடீரென்று படப்பிடிப்பு நின்று போனது.எந்தத் தொலைக்காட்சிக்காக தொடர் தயாரிக்கப்பட்டதோ அந்த சானல் மூடப்பட்டது.அத்தொடர் வெளி வரவில்லை.

மீண்டும் ஒரு முறை ‘காமிரா’ என்னுடனான விரோதத்தை உறுதி செய்து விட்டது!!!(என் பதிவு “நானும் காமிராவும்” பார்க்கவும்).
(பழைய வீட்டிலிருந்து)
முன்பு தவிர்த்த செய்திகள் கீழே(தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன?)

உடன் நடித்தவர்கள்--நிழல்கள் ரவி,பிரியதர்ஷினி,சபிதா ஆனந்த்,மலேசியா வாசுதேவன்,பி.ஆர்.வரலட்சுமி,மஹாநதி சங்கர்.இயக்குனர்-தினகரன்.சானல்,ஜே.ஜே.

வெள்ளி, மார்ச் 06, 2009

என் நாடக அனுபவங்கள்(பகுதி-1)

நான் ஏழாவது வகுப்பில் படிக்கும்போது, ஒரு சிவ ராத்திரியன்று இரவு, நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒரு நாடகம் நடித்தோம்.’நீதிபதி’ என்ற அந்த நாடகத்தை எழுதி இயக்கியவன் நான்தான்.அதில் கதானாயகனாக நடித்தவனும் நான்தான்.அடுக்குமொழி வசனங்கள் நிறைந்த அந்த நாடகம் பெரிய பாராட்டைப் பெற்றது.அந்த ஊர் இளைஞர் சங்கத்தினர் அவர்களின் அடுத்த நாடகத்தில் எனக்கு ஒரு பாத்திரம் அளிப்பதாகக் கூறினர்.ஆனால் நான் வேறு ஊர் சென்று விட்டதால் அவர்களின் நாடகத்தில் நடிக்கவில்லை.

நான் பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும்போது எங்கள் பள்ளியில் “நண்பர்கள் குழாம்”என்ற ஒருஅமைப்பில் ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது நிகழ்ச்சி தயார் செய்து அளிக்க வேண்டும்.ஒரு மாதம் என் வகுப்பின் சார்பில் நான் ஒரு நாடகம் தயார் செய்து நானே முக்கிய வேடத்தில் நடித்தேன்.பொறாமை கொண்ட ஒரு மன்னனாக நடித்தேன்.என் நடிப்பு மிகவும் பாராட்டப் பட்டது.அந்த நேரத்தில் எங்கள் பள்ளி ‘முத்தமிழ் விழா’வுக்காக ஒரு நாடகம் தயாரிக்கப் பட்டு வந்தது.பெயர்’தமிழ்——(முழுப்பெயர் நினைவில் இல்லை.)என் நடிப்பால் கவரப்பட்ட குழுவினர் என்னையும் அந்த நாடகத்தில் சேர்த்துக்கொண்டனர்.அந்த நாடகம் சில நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அமைந்த நாடகம்.நான் திருவள்ளுவர் வேடத்தில் நடித்தேன்.அதில் மன்னன் ஒருவனுக்கு அறிவுறுத்த நான் பேசிய குறள் இன்னும் மறக்கவில்லை.”உறு பசியும் ஓவாப்பிணியும் செறு பகையும் சேராதியல்வது நாடு” இந்த நாடகத்தில் நான் நடித்த மன்னன் நாடகமும் ஒரு அங்கமாகச் சேர்க்கப்பட்டு விட்டது.ஆக முதலிலியே நாடகத்தில் இரு வேடம் ஏற்று நடித்தேன்..திருவள்ளுவர் வேடத்தில் நடித்ததும் உள்ளே சென்று அவசரமாக ஒப்பனையைக் களைந்து மன்னன் வேடத்துக்கான ஒப்பனை செய்து கொண்டு உடைகளைத் தரித்துக் கொண்டு தயாரானது மிக சுவாரஸ்யமான அனுபவம்.

பள்ளி ஆண்டு விழாவில் ‘ராஜ ராஜ நரேந்திரன்’ என்ற நாடகம் நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.ஏற்கனவே நல்ல நடிகனாக அங்கீகரிக்கப்பட்டு விட்டதால் அந்த நாடகத்திலும் எனக்கு ஒரு வேடம் தருவதாக முடிவு செய்யப்பட்டது.நான் முன்பு நடித்த மன்னன் பாத்திரம் ஒரு வில்லத்தனமான நாயகன் என்பதால் இந்த நாடகத்திலும் எனக்கு ‘மகாசயர்’ என்ற வில்லன் வேடம் என்று முடிவு செய்தார்கள்(image ! !).ஆனால் கதானாயகன் நரேந்திரனாக நடிப்பதற்கு சரியான மாணவன் கிடைக்காததால் நானே நரேந்திரனாக நடித்தேன். அதில் சில காட்சிகளில் வசனம் பேசி நடிக்கும்போது என் துரோணாசாரியார் ‘சிவாஜி’ அவர்களையே மனதில் நிறுத்தி நடித்தேன்.என் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.என்னை எல்லோரும் “குட்டி நடிகர் திலகம்” என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

இதே நாடகம் கோடை விடுமுறையில் நடக்கும் பொருட்காட்சியிலும் நடத்தப்பட்டது.என் ஜோடி அம்மங்கையாக நடித்த மாணவன் என்னை விட சிறிது உயரம்.எனவே அவனை மேடையில் சிறிது தலையைக்குனிந்து கொண்டே நடிக்கச் சொல்லியிருந்தேன்.இருந்தும் இந்த உயர வித்தியாசம் பார்வையாளர்களிடம் கேலிச் சிரிப்பை எழுப்பியது.நாடகம் பார்க்க வந்திருந்த என் தாயார் மற்றும் சகோதரிக்கு சிறிது சங்கடத்தை எற்படுத்தியது.ஆனால் சிறிது நேரம் சென்று என் முக்கிய காட்சி வந்ததும் சிரித்தவர்கள் எல்லாம் என் நடிப்பை ரசிக்க ஆரம்பித்தனர்.என் தாயின் அருகில் அமர்ந்திருந்த பெண்”இந்தப் பையன் சிவாசி மாதிரியே நடிக்குதே”என்று வியந்து பாராட்டவும் என் தாயார்”என் மகன்தான்” என்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டார்களாம்.இந்த நாடகத்தில் “தூது நீ சொல்லி வாராய்” என்று நிலவைப் பார்த்து நான் பாடும் பாட்டு ஒன்று உண்டு.இது வேண்டாம் என்று முதலில் முடிவு செய்தோம்.ஆனால் அந்தக் காட்சி வருவதற்கு முன்னால் எங்கள் தமிழ் ஆசிரியர் அந்தப்பாட்டையும் சேர்க்கச் சொல்லி விட்டார்.அது காட்சி அமைப்பாளருக்குத் தெரியாது எனவே நான் பாட ஆரம்பித்தவுடன் நிலா காணாமல் போய் விட்டது!! இப்படியாக பள்ளியில் என் நடிப்பின் காரணமாக ஒரு ராஜாவாகவே வலம் வந்தேன்.இதில் என் கணித ஆசிரியருக்குத்தான் வருத்தம்-’நடிப்பு வந்து என் படிப்பைக் கெடுத்துவிட்டது’ என்று... (இன்னும் வரும்)

(பழைய வீட்டிலிருந்து)

வியாழன், மார்ச் 05, 2009

ஒரு வரலாறு

76 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் படிப்பதற்காகச் சென்னை சென்று ,படிப்பைத்தொடர முடியாமல், 14 வயதில் தன்னை விட 14 வயது பெரியவரான ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கு மணமுடித்து வைக்கப்பட்டு, 15 வயதில் முதல் குழந்தைக்கும் 26 வயதில் ஆறாவது குழந்தைக்கும் தாயாகி, 32ஆவது வயதில் கணவனை இழந்து, நிர்க்கதியாகிப் பெற்றோராலும் சரியாக நடத்தப்படாமல் ,குழந்தைகளுடன் தனியாக வாழத் தொடங்கி, எதிர் காலமே ஒரு பெரிய கேள்விக்குறியாகிப்போன ஒரு பெண்ணின் நிலையை யோசித்துப்பாருங்கள்.அந்த நிலையில் குழந்தைகளை வளர்த்து பெரியவர்களாக்கி, அவர்களின் கல்வி, திருமணம் போன்றவற்றைக் குறைவின்றி நிறைவேற்றி அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலை அடைவதற்கு அந்தப்பெண் என்ன பாடு பட்டிருக்க வேண்டும்?

அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் இது.இப்போது,90 வயதிலும்,சமையல் உள்பட வீட்டு வேலைகளைத் தானே செய்து வரும்,மன உறுதி கொண்ட பெண்மணி.சிறிய இன்னல்கள் வந்தாலும் சோர்ந்து போகும் பலருக்கு இந்தக்கதை ஊக்கம் தருவதாக அமையும்.

இக்கதையை அப்பெண்மணியின் அனுமதியின்றியே எழுதத்துவங்குகிறேன்.ஆனால் அவர்கள் ஆசி எனக்கு எப்போதும் உண்டு.அதுவே என் பலம். என் வரம்.என் வெற்றிக்கு ஆதாரம்.
இந்த வரலாறு தேதி வாரியாக வராது.கால இயந்திரம் முன்னும் பின்னும் பயணிக்கும்.
பயணம் ஆரம்பம் .

சனி, பிப்ரவரி 14, 2009

ஆதலினால் காதல் செய்வீர்!

காதல் பற்றி பாரதி
----------------
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்.



நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டிலுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின்றாரே.

வியாழன், பிப்ரவரி 12, 2009

சூப்பர் ஸ்டார்!

நாள்-31-12-2006
இடம்-பார்க் ஷெராட்டன் ஹோட்டல்,சென்னை
நேரம்-இரவு 9.00 மணி.
நான் என் நண்பர்கள் மூன்று பேருடன் இரவு உணவை முடித்துக் கொண்டு புறப்படத்தயாராகிறேன்.

அந்த நேரத்தில் அந்த முன்னணிக் கதாநாயகர் தன் மனைவி மற்றும் நண்பர்களுடன் தல காட்டுகிறார்.

அவரை முன்பே நண்பனின் மகன் திருமணத்தில் சந்தித்து அறிமுகம் உண்டு.

அவரைப் பார்த்ததும் வழமையான குசலம் விசாரிப்புக்குப் பின் நான் திடீரென்று அவ்ரிடம் சொன்னேன்.

”அடுத்த ஆண்டு நீங்கள்தான் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார்”

அவர் முகத்தில் வியப்பு கலந்த ஒரு மகிழ்ச்சி.

அவர் கேட்டார் “எப்படிச் சொல்கிறீர்கள்?”

என் நண்பர்கள் சொன்னார்கள் “ஸார்,ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றவர்”

நான் சொன்னேன்”உங்கள் முகத்தையும்,உங்களை நான் சந்தித்திருக்கும் நேரத்தையும் வைத்துக் கூறினேன்”
அவர் அப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் பற்றிப் பேசினோம்.

பின் அவர்களைப் பேச விட்டு விட்டு நான் டாய்லெட்டுக்குப் போய்விட்டேன்.
முடித்து விட்டு வெளியே வந்து பார்த்தால் அவ்ர் எனக்காகத் தனியாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

“நீங்கள் தொழில் முறை சோதிடரா?” அவர் கேள்வி.

“இல்லை.சோதிடம் எனது பொழுதுபோக்கு.நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே நான் பார்க்கிறேன்.
உங்களைப் பார்த்த அந்த வினாடியில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.சொன்னேன்”.-நான்

அவர் என் தொலை பேசி எண்ணைக் கேட்டு வாங்கித்தன் கை பேசியில் சேமித்துக் கொண்டார்.பின் சொன்னார்”நான் விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.”.

ஆனால் அதன் பின் அவரிடமிருந்து தகவல் ஏதுமில்லை.

அடுத்த ஆண்டு முடிவில், முன்பே சூப்பர் ஸ்டார் நடித்த ஒரு படம் மீண்டும் படமாக்கப் பட்டு, இவர் சூப்பர் ஸ்டார் நடித்த பாத்திரத்தில் நடிக்க,அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

என் சோதிடம் பலித்து விட்டதுதானே?

நானும் ஒரு குரு!(நமிதா ஒரு சிஷ்யை?!)

சமீபத்தில் நவயுக குரு ஒருவரின் ஆன்மீக/உடல்நலப் பயிற்சியின் அறிமுக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.முன்பே பயிற்சி பெற்று, பயிற்றுவிக்கும் தகுதி பெற்ற ஒருவர்தான் பொறுப்பேற்றிருந்தார்.சுமார் 30 பேர் வந்திருந்தார்கள்.அதில் சிலர் முன்பே பயிற்சி பெற்றவர்கள்.நிகழ்ச்சி தொடங்கியதும், அவர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் அனுபவங்களைக் கூறினர்.ஒருவர்,தனக்கு நீரிழிவு நோய் தீவிரமாக இருந்ததாகவும், பயிற்சிக்குப் பின் இரத்தச் சர்க்கரை அளவு சாதாரணமாகி விட்டதாகவும் கூறினார். மற்றொருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருந்துகள் சாப்பிட்டு வந்ததாகவும்,பயிற்சிக்குப் பின் மாத்திரை சாப்பிடும் தேவையில்லாமல் போய் விட்டதாகவும் சொன்னார். இவ்வாறே மேலும் ஒரிருவர் தங்கள் அனுபவங்களை விவரித்தனர்.

இவற்றையெல்லாம் கேட்கும்போது எனக்கு வேறு ஒரு நினைவு வந்தது.கடற்கரை அல்லது வேறு சில மைதானங்களில் நடைபெறும் ஆன்மீக சுகமளிக்கும் அற்புதக்கூட்டங்கள் பற்றிய நினைப்பு.அங்கு “குருடர்கள் பார்க்கிறார்கள்,ஊமைகள் பேசுகிறார்கள்,முடவர்கள் நடக்கிறார்கள்”என்று விளம்பரம் செய்வார்கள்.கூட்டம் நடத்துபவர் பிரார்த்தனை செய்வார். பின் சிலர் சாட்சிகளாக வந்து தாங்கள் அற்புத சுகமடைந்ததைப் பற்றி விவரிப்பார்கள்.அந்த நினைவுதான் எனக்கு வந்தது.

ஏன் மக்கள் இந்த குருக்களைத் தேடி ஓடுகிறார்கள்?இவர்களிடம் என்ன இருக்கிறது?

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில்,எளிதாக மன அமைதியும் உடல் நலமும் பெறுவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடும் மனிதனுக்கு,இந்த குருக்கள் ஒரு நல்ல வழியாகத் தெரிகிறார்கள் .இவர்களது தகுதிகள்-

1.பகவத்கீதை,உபநிடதங்கள்,வேதாந்த நூல்கள் பற்றிய அறிவு.

2.பிராணாயாமம்,யோகா பற்றிய அறிவு.அவற்றில் சில புதிய உத்திகள்.

3.பேச்சுத்திறமை.

நான் என்னையே எடை போட்டுப் பார்க்கிறேன்

1.சின்மயா மிஷனில் பகவத்கீதை,வேத பாராயணம்,சில உபநிடதங்கள்,ஆத்ம போதம்,விவேகசூடாமணி போன்றவற்றை சிறிது கற்றிருக்கிறேன்.

2.ஓரளவுக்குப் பேச்சுத்திறமை இருக்கிறது(வங்கிப் பணியில் அது இல்லாமல் இலக்குகளை எட்ட முடியுமா?)

3.மூச்சுப் பயிற்சி சிறிது செய்ததுண்டு.அதில் நல்ல திறமை பெறவேண்டும்.புதிய முறை ஒன்று துவங்க வேண்டும்.

4.கடைசியாக ஒரு உபரித் திறமை-சோதிடம் பற்றிய என் அறிவு.(ஓரளவுக்கு நல்ல சோதிடனாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறேன். சோதிடம் என் தொழில் அல்ல!)

எனவே,சிறிது காலத்துக்குப்பின் நானும் ஒரு குருவாக மாறும் வாய்ப்பு உள்ளது!

(நமிதா ரசிகர்களுக்கு ஒரு வார்த்தை.நமிதா என்னிடம் பயிற்சி பெற்று ஒரு பயிற்சியாளராக மாறி அவரிடம் நீங்கள் பயிற்சி பெறும் காலம் வரலாம்!அந்த பொற்காலத்துக்காகக் காத்திருங்கள்!)

(பழைய வீட்டிலிருந்து-மீள்பதிவு)

வெள்ளி, ஜனவரி 30, 2009

அன்புள்ள அப்பா-இறுதிக் கடிதங்கள்

14-4-1984

அன்புள்ள அப்பா,
19 வருடங்களுக்குப் பின் சக்தியை,டாக்டர்.சக்திவேலைப் பார்த்தேன்.நியூயார்க்குக்கு ஏதோ வேலையாக வந்தவன் நம்மாத்துக்கும் வந்திருந்தான்.விசுவும்,குழந்தைகளும் ரொம்ப சந்தோஷமாக அவனை வரவேற்றனர்.அவர்களுக்கு அவனை ரொம்பப் பிடித்து விட்டது.பேசிக் கொண்டே இருந்தனர்.அவன் எனக்காக புத்தகங்கள்,கேசட்டுகள் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு,இன்னும் என்னென்னவோ வாங்கி வந்தான்.ரொம்ப சந்தோஷமான ஒரு நாள்!

இப்படிக்கு
உங்கள் அன்புள்ள
கல்யாணி.


20-1-1990
அன்புள்ள அப்பா,
என்னுடைய பீரோ லாக்கரில் கிடந்த இந்தக் கடிதங்களை யெல்லாம் இன்று எடுத்துப் படித்தேன்.உங்களுக்கென்று எழுதி அனுப்பாமல் விட்ட கடிதங்கள். ஏன் அனுப்பவில்லை என்று தெரியுமா?சக்தி பற்றி உங்களுக்கு எழுத முடியாது.காரணம் நீங்கள் கோபிப்பீர்கள் என்ற பயமல்ல.உங்களை நான் காயப்படுத்த விரும்பவில்லை.எனக்குத்தெரியும்,சக்தி நல்லவன்,வாழ்க்கையில் முன்னேறக் கூடியவன் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தீர்கள்.ஆனால்,இந்த சமுதாயத்துக்குப் பயந்து,குடும்பத்தின் நல்ல பெயருக்காக,நீங்கள் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.இந்தக் கடிதங்கள் உங்களை மேலும் காயப் படுத்தியிருக்கும்.இன்று,உங்கள் மறைவுக்கு இரண்டு வருடத்துக்குப்பின்,ஒரு சாலை விபத்தில் டாக்டர்.சக்திவேல் அகால மரணம் அடைந்து 6 மாதங்களுக்குப்பின்,இக் கடிதங்களைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது.இந்த அனுப்பப்படாத,தபால் தலை ஒட்டாத கடிதங்கள் மாறியிருக்கக் கூடிய என் வாழ்க்கையின் பிரதிபலிப்பே!

இப்படிக்கு

கல்யாணி விஸ்வநாதன்.

அன்புள்ள அப்பா-கடிதம்-4

14-8-1978

அன்புள்ள அப்பா,
கலிஃபோர்னியாவிலிருந்து இன்றுதான் திரும்பினோம்.அங்கே எடுத்த ஃபோட்டோக்கள் மற்றும் படக் கார்டுகள் அனுப்பியிருக்கிறேன்.எல்லோரும் பார்த்த பின்,என் மாமனார் வீட்டில் கொடுத்து விடவும்.இந்த டூர் ஒரு மிக நல்ல மாற்றமாக இருந்தது.ஆனால் நான் என் பாட்டு க்ளாஸை விட்டு விட்டுப் போனது கஷ்டமாகத்தான் இருந்தது.இன்று திரும்பி வந்து சாயந்திரமே வகுப்பை ஆரம்பித்து விட்டேன்.சில ஃபோட்டோக்கள் சக்திக்கும் அனுப்பியிருக்கிறேன்.
கொஞ்ச காலம் முன் சக்தி சில கேசட்டுகளும், இசைத்தட்டுகளும் அனுப்பியிருந்தான்.கேட்கக் கேட்க திகட்டவில்லை.ஆகாஷ்வாணி கேட்பது போல் உணர்ந்தேன்.என் மாணவிகளுக்கெல்லாம் போட்டுக் காட்டினேன்.திருச்சியிலிருந்து வந்த ஒரு தமிழ்ப்பெண் அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னட,மராத்தி,பெங்காலி மாணவிகளுக்கு சம்ஸ்கிருத,தெலுங்குக் கீர்த்தனைகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்!!
அப்பா!இந்த சங்கீதம் என்னை மீண்டும் பிறக்க வைத்திருக்கிறது.புது உற்சாகம் அளித்திருக்கிறது.இதற்கு நான் சக்திக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.அவன் தூண்டுதல் இல்லையென்றால் இது நடந்திருக்காது.அவனைக் கல்யாணம் செய்துகொண்டிருந்தால் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்காமலிருக்க முடியவில்லை.உங்களை, .அம்மாவை, நம் குடும்பத்தின் உறவை இழந்திருப்பேன்.இப்போது என்ன வாழ்கிறது?நீங்கள் எல்லோரும் இந்தியாவில் இருக்க,நான் விசுவுடன் அமெரிக்காவில் வாழும் இந்த வாழ்க்கையில் என்ன அடைந்து விட்டேன்?எனக்கே பதில் தெரியவில்லை.பதில் என்றாவது கிடைக்கும் என்றும் தோன்றவில்லை.

அப்பா நான் மறுபடியும் சொல்கிறேன்.விசு மிக நல்லவர். எந்தக் குறையும் இல்லை.நீங்கள் எதிர்பார்த்திருந்த மாப்பிள்ளை.அமெரிக்காவில் பெரிய படிப்புப் படித்தவர், நல்லவேலையில் இருப்பவர்.நிறைய சம்பாதிப்பவர்,கடமை தவறாத கணவர்,தந்தை.இதற்கு மேல் வேறு என்ன எதிர்பார்ப்பது?அதெல்லாம் நான் முன்பே தொலைத்துவிட்ட ஒரு கனவு.-வெகு நாட்களுக்கு முன் திருச்சியில்,வேறு ஒருவரை நினைத்திருந்தபோது.

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள
கல்யாணி.
-----------------------------
(கடிதம் தொடரும்)

வியாழன், ஜனவரி 29, 2009

அன்புள்ள அப்பா-கடிதம்-3

3-6-1974.

அன்புள்ள அப்பா,

நாங்கள் சௌக்கியமாக வந்து சேர்ந்தோம்.இரண்டு மாதங்கள் இந்தியாவில் கழித்துவிட்டு இங்கு வந்தவுடன்,இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது சிரமமாகத்தான் இருக்கிறது.கௌதமும் ரஞ்சனாவும் வடை பாயசத்தோடு வாழை இலையில் சாப்பாடு கேட்கிறார்கள்,இந்த ஊரில்!அமெரிக்காவுக்குத் திரும்பி வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர் விசுதான்.


நான் இந்தியாவில் சில புத்தகங்களை விட்டுவிட்டேன்.அவை என் மாமியாராத்தில்தான் இருக்கவேண்டும்.அவை கிடைத்தால் பத்திரமாக வைத்திருங்கள்,நான் அடுத்த முறை வரும் வரை.அவை எனக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை;ஏனென்றால்,அவை சக்தி எனக்களித்த பரிசு.அப்பா,சக்தியின் விலாசத்தை நான் சாரதா மாமியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.அப்பா,உங்களுக்குத் தெரியுமா,சக்தி இப்போது மெட்ராஸில் ஒரு பிரசித்தமான இதய நோய் நிபுணர்;எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது.நான் அவனுக்குக் கடிதம் எழுதினேன்.அதில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.அவன் பெண்களுக்கு என்ன பெயர் தெரியுமா அப்பா?-கல்யாணி,ராகமாலிகா.அவன் என்னுடன் ஃபோனில் பேசினான்.அவன் இன்னும் மாமிசம் சாப்பிடுவதில்லை;நான் கிடைக்கவில்லை என்பதனால் அவன் தன் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.அவன் இன்னும் பாடுகிறாயா என்று கேட்டபோதுதான் எனக்கே நினைவு வந்தது,நான் ஒரு காலத்தில் பாடிக்கொண்டிருந்தேன் என்பது.ஆனால் நான் திருச்சியையும்,என் சிறந்த ரசிகனான சக்தியையும் பிரிந்து வந்தபின் அதை மறந்தே போனேன்.

அவன் ஃபோன் வந்தபின் நான் பாட முயன்றேன் ‘குறையொன்றும் இல்லை’ என்று.ஆனால் குறை இருந்தது.நீண்டநாள் பாடாததனால் மட்டுமல்ல;என் கண்களில் நீர் நிறைந்து தொண்டை அடைத்துக் கொண்டதாலும்தான்.ஒருநாள் விசு,குழந்தைகளின் முன் பாடினேன்.கௌதம் ரசித்துக் கேட்டான்;ஆனால் அப்பாவும் பெண்ணும் பாட்டு முடியும் வரை பொறுமையின்றித் தவித்தார்கள்.

அப்பா,அடுத்தமுறை யாராவது இந்தியா வந்து திரும்பும்போது மறக்காமல் ஒரு சுருதிப் பெட்டி அனுப்பவும்.நான் மீண்டும் பாட ஆரம்பிக்கப் போகிறேன்.

இப்படிக்கு

உங்கள் அன்புள்ள
கல்யாணி.

புதன், ஜனவரி 28, 2009

அன்புள்ள அப்பா-கடிதம்-2

அன்புள்ள அப்பா, 20-10-1968

நாங்கள் சௌக்கியம்
கௌதம் பேச ஆரம்பித்துவிட்டான்.அவன் ’தோசை’ என்று சொல்வதுபோல் எனக்குக் கேட்டது.ஆனால்,விசு அது வெறும் உளறல்தான் என்கிறார்.

உங்கள் முந்திய கடிதத்திலிருந்து பக்கத்தாத்து ராஜிக்குக் கல்யாணம் நடந்து ஜாம்ஷெட்பூரில் இருக்கிறாள் என அறிந்து கொண்டேன்.சந்தோஷம்.சாரதா மாமியிடம் கேட்டு அவள் விலாசத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.அவளுடன் தொடர்பு கொள்கிறேன்.

ராஜி கணவருடன் மெட்ராசில் சந்தோஷமாக இருப்பாள் என நம்புகிறேன்.சென்ற மாதம் அவளுடன் ஃபோனில் பேச ரொம்ப சந்தோஷமாக இருந்தது.சீனுவைப் பரிட்சைக்கு நன்றாகப் படிக்கச் சொல்லுங்கள்.சக்திக்குக் கல்யாணம் ஆகி விட்டதாக ராஜி சொன்னாள். அவனுக்கு என் வாழ்த்துக்களை மானசீகமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனென்றால் ராஜி என் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டாள்.என் காரணமாக நீங்கள் உங்கள் நீண்ட நாள் நண்பரான,சங்கரவேலுடன்(சக்தியின் அப்பா) உங்கள் நட்பைத்துண்டித்து விட்டீர்கள் என்று எனக்குத்தெரியும்.சக்தி அவன் அம்மா விருப்பப்படி மாமா மகளை கல்யாணம் செய்துகொண்டதாக அறிகிறேன்.


ஆவணி அவிட்டம் வழக்கம் போல் சிறப்பாக நடந்ததா? விசுவின் அம்மா ஒரு கட்டுப் பூணல் கொடுத்திருந்தார்கள், ஆவணி அவிட்டத்துக்காக.ஆனால் அன்று அவர் பாஸ்டனில் இருந்தார்.இங்கே இருந்திருந்தாலும் பூணலை உபயோகித்திருக்க மாட்டார்.சென்ற மூன்று வருடங்களில் அவர் பூணல் அணிந்து நான் பார்த்ததே இல்லை.கௌதம் இப்போது அந்த நூல் சுருளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.அது வெறும் நூல்தான்,வேறென்ன சொல்ல.அதன் முக்கியத்துவம் அவனுக்கு என்றாவது தெரியுமா என்பது சந்தேகமே.விசு அவன் ஆங்கிலத்தை மட்டுமே கேட்கும்படி செய்து வருகிறார்.அதுவே அவனுக்கு நல்லது செய்யும் என்கிறார்.ஆனல் நான் தனியாக இருக்கும்போது பொன்னியின் செல்வனையும்,பாரதியார் கவிதைகளையும் படித்துக் காட்டுகிறேன்.அந்த கவிதைப் புத்தகம்,சக்தி எனக்கு பரிசளித்தது.அவன் கையெழுத்து அதன் முதல் பக்கத்தில் இருக்கிறது.அப்புத்தகத்தைப் பார்த்த விசு ஒரு முறை சக்தி பற்றி என்னிடம் கேட்டார்.பயப்படாதீர்கள்,அப்பா.விசு ரொம்ப நல்லவர்.அதை சாதாரணமாக எடுத்துகொண்டார்.பின் அவர் அவரது அமெரிக்க நண்பி பற்றிக்கூறினார்.அவருடன் பணி புரிந்த அவளுடன் மூன்று மாதம் சேர்ந்து வாழ்ந்தது பற்றியும் சொன்னார்.அவள் ஒரு நாள் வந்திருந்தாள்.நல்லவள்தான்.


அம்மாவை ஒரு வருஷத்துக்குப் போதுமான சாம்பார் பொடி அனுப்பச் சொல்லுங்கள்.என் ஃபிரண்ட் சுதா அடுத்த வாரம் மெட்ராஸ் வருகிறாள்,சீனுவை சென்னைக்கு அனுப்பி அவளிடம் பொடியைக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள
கல்யாணி

(இன்னும் வரும்)

அன்புள்ள அப்பா!

(நேற்று என் உறவினர் ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார்-திண்டிவனத்தில் ஒரு பள்ளியில் நடந்த ஒரு சிறுகதை,கடிதம் எழுதும் போட்டியில் பரிசு பெற்ற ஒரு கதையை இணைத்திருந்தார்.சுஜாதா பாணியில் எழுதப்பட்ட அக் கதையின் தமிழாக்கம் கீழே;படியுங்கள்,ரசியுங்கள்)

அன்புள்ள அப்பா, 27-01-1965

நீங்கள்,அம்மா,ராஜி,சீனு எல்லாரும் சௌக்கியமென்று நம்புகிறேன்.இங்கே,நியூயார்க்கில்,குளிர் நடுக்குகிறது;ஆனால் அவர் சொல்கிறார்,நான் கடுங்குளிரிலிருந்து தப்பி விட்டேன் என்று.

கொட்டுகின்ற பனியை பார்க்காமல் போய் விட்டேனே என்று வருந்துகிறேன்.அதே சமயம் திருச்சியை விட்டு வந்ததும் வருத்தமாகத்தான் இருக்கிறது.திருச்சி மற்றும் அதனுடன் இணைந்த மற்றவை-நீங்கள்,அம்மா,ராஜி, சீனு,பக்கத்தாத்து ரமா,உச்சிப்பிள்ளையார் கோயில், விகடன், ஃபில்டர் காஃபி,ஹோலி க்ராஸ் கல்லூரி,ஃபிசிக்ஸ் துறை, அனைத்துக்கும் மேலாய் சக்தி-இந்த நினைவாகவே இருக்கிறேன்.

இக்கடிதத்தில் சக்தி பற்றி எழுதியது உங்களுக்குப் பிடிக்காதுதான்.கவலைப் படாதீர்கள் அப்பா.நீங்கள் என் நன்மைக்காகவே என்னை விசுவுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தீர்கள் என்பது எனக்குத்தெரியும்.நான் சக்தி பற்றி உங்களிடம் சொன்ன அன்று,நீங்கள் கோபத்தில் கத்தியதும்,அம்மா தன் கண்ணீரை மடிசார் தலைப்பினால் மௌனமாகத் துடைத்துக் கொண்டதும் இன்னும் என் நினைவில் நிற்கின்றன.அதன் பின் பொறுமையாக நான் ஏன் சக்தியை மணக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை விவரித்தீர்கள்.20 என்பது வாழ்க்கை பற்றித் தீர்மானிக்க மிகவும் சிறிய வயது என்பதையும் ,குடும்பத்துக்கும், ராஜிக்கும் இதனால் பாதிப்பு எற்படுவதையும், அக்ரஹாரத்தில் நமக்கு ஏற்படும் தலைகுனிவையும்,ஒரு மாமிசம் சாப்பிடும் ஆண், வெங்காயம் கூடச் சாப்பிடாத ஒரு பெண்ணுக்கு சரியான துணையாக முடியாது என்பதையும் இன்னும் எத்தனையோ காரணங்களயும் எடுத்துரைத்தீர்கள்.சக்தி ஒரு சமணமுனிவராக மாறினாலும் கூட உங்களால் வேறு பல காரணங்கள் சொல்லியிருக்க முடியும்.ஆனால் இதற்கு எதிராக,விசு,பூணல் அணிந்தவர், நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை,அமெரிக்காவில் கம்ப்யூடர் துறையில் உயர்ந்த வேலையில் இருப்பவர்,இப்படி எத்தனையோ காரணங்கள் உங்களுக்கு இருந்தன ,விசுவைத் தேர்ந்தெடுப்பதற்கு..அப்பா,நான் குறை கூறவில்லை,விசுவும் ரொம்ப நல்லவர்தான்.

அம்மாவிடம் சொல்லுங்கள்,அம்மா சொன்னபடி நான் கொழுக்கட்டை செய்யவில்லையென்று,ஏனென்றால் இங்கே தேங்காய் விலை அதிகம்,அவருக்கு கொழுக்கட்டை பிடிக்காதாம்.

ஆனால் சங்கராந்தி அன்று,அவர் விருப்பப்படி வெளியில் போய் சாப்பிட்டோம்.ஒரு கடல் உணவு விடுதிக்குச் சென்றோம்.சாட்டர்ஜி குடும்பத்தையும் அவர் அழைத்திருந்தார்.அவர்கள் பேசிய அமெரிக்க ஆங்கிலம் எனக்குச் சரியாகப் புரியவில்லை.மெனு கார்டில் தலையைப் புதைத்துக் கொண்டேன்.மற்றவர்கள் என்னவெல்லாமோ ஆர்டர் செய்தனர்.நான் ஒரு சாண்ட்விச்சும் ஜூசும் கொண்டு வரச் சொன்னேன்.அன்றுதான் அப்பா நான் தெரிந்து கொண்டேன்,அவருக்கு மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும், மீனும் மிகவும் பிடிக்கும் என்று.

உங்களுக்குத் தெரியுமா அப்பா,எனக்காக சக்தி அசைவம் சாப்பிடுவதையே விட்டு விட்டாரென்று.அதுவும் நான் எதுவும் சொல்லாமல், அவராகவே.ஆனால் சக்தி நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை இல்லையே,அவரால் சுப்பிரமணிய ஐயரின் பெண்ணான கல்யாணியை எப்படி கல்யாணம் செய்துகொள்ள முடியும்?

அவ்வப்போது,எங்கள் நலம் பற்றி எழுதுகிறேன். என்னால் சீனுவின் பூணலுக்கு வர முடியாது என நினைக்கிறேன். எனக்குப் பட்டுப் புடவை வாங்க வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லுங்கள்.இங்கே அதையெல்லாம் கட்டிக் கொள்ள முடியாது.கோமாளித்தனமாக இருக்கும்.

இப்படிக்கு,

உங்கள் அன்புள்ள

கல்யாணி


(இன்னும் வரும்)

வெள்ளி, ஜனவரி 16, 2009

கன்னிமை ஏலம் தொடர்கிறது!

முந்தைய இடுகையில் சொல்லப்பட்ட ஏலத்தில் மேலும் சில தகவல்கள்-

அதிக விலை கொடுக்க முன்வந்தவரின் நிபந்தனை--ஏலத்தில் அடைந்த வெற்றியின் விளைவாக நடக்கப்போகும் ‘அந்த’ முக்கிய நிகழ்ச்சி முழுவதும் வீடியோ படமாக எடுக்கப்பட வேண்டும்!! (அதை பின்னால் விலைக்கு விற்றுக் காசு பார்த்து விடுவாரோ மனிதன்?அல்லது அது அவரது பார்வைக்கு மட்டும்தானா?)

தற்போது ஒரு மிருகக் காட்சி சாலையின் காப்பாளர் ஒருவர்,அப்பெண்ணின் கன்னிமைக்கு விலையாக ஒரு உயிருள்ள புலியைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்!(புலி ஆணா,பெண்ணா என்று தெரியவில்லை! ஆங்கிலத்தில் ‘டைகர்’ என்று சொல்லியிருப்பதால் ஆண் புலியாகத்தான் இருக்க வேண்டும்).அந்தப் பெண் புலியை வைத்துக் கொண்டு என்ன செய்வாள்? சாலையில் நடந்து செல்லும்போது உடன் நாயை அழைத்துச் செல்வது போல் புலியைச் சங்கிலியில் பிணைத்து அழைத்துச் செல்வாளோ?(lady with a tiger?)

இதுவே தமிழில் புலியென்று சொல்லியிருந்தால்,வேறு ஒரு ஐயம் வந்திருக்கும்.ஒரு படத்தில் செந்தில் புலி வருது என்று சொல்ல,உடனே கவுண்டமணி துப்பாக்கியை எடுத்துக் கொண்டு புறப்படக் கடைசியில் ஒருவர் புளி விற்றுக்கொண்டு வருவார்.
அது போல இவர் புலி தருவதாகச் சொன்னாரா அல்லது ‘புளி’ தருவதாகச் சொன்னாரா எனச் சந்தேகம் வந்திருக்கும்!!

வியாழன், ஜனவரி 15, 2009

ஏலம்!ஏலம்!என் கன்னிமை ஏலம்!

அமெரிக்காவில்,கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருத்தி,தன் மேற்படிப்புச் செலவுக்காக ஆன்லைனில் தன் கன்னிமையை ஏலம் விட்டிருக்கிறாள்.(ஆதாரம்-டைம்ஸ் ஆஃப் இந்தியா 14-01-09) ஒரே ஒரு இரவு அவளுடன் இருந்து அவளைக் கன்னி கழிப்பதற்கு இது வரை அளிக்கப்படத் தயாராக இருக்கும் அதிக பட்சத் தொகை--25 லட்சம் டாலர்கள்!!.மிக மதிப்பு வாய்ந்த கன்னிமை தான்.யாருக்காவது அவள் கன்னிமை பற்றிச் சந்தேகம் இருக்குமானால்,அதற்காக மருத்துவச் சோதனைக்குத் தயார் என்றும் அந்தப் பெண் சொல்லியிருக்கிறாள்.அந்தப் பெண் மேலும் சொன்னதாவது,அவளது மூத்த சகோதரியும் தனது படிப்புச் செலவுக்காக மூன்று வாரங்கள் பாலியல் தொழில் செய்தாள் என்பது!.

இந்தப் பெண்ணுக்கு கிடைக்கும் தொகையைப் பார்த்து மேலும் பலர் இது் போன்ற ஏலத்தில் ஈடுபடக் கூடும் (ஆண்களும்?!)தேவையைப் பூர்த்தி செய்யும் பொருள்கள் அதிகமாகக் கிடைக்கும் போது அவற்றின் விலை குறையும்!சில காலம் சென்று வாங்க ஆளில்லாத நிலை ஏற்படும்!
இண்டெர்னெட் யுகத்தில் இதெல்லாம் சகஜமப்பா!

கன்னிமைக்கான மருத்துவ சோதனை பற்றி ஒரு சந்தேகம்.
ஹைமன் என்று சொல்லப்படும் சவ்வு கிழிந்திருந்தால் கன்னி இல்லை என்று கருதப்படுகிறது.

இந்த சவ்வு உடலுறவு இல்லாத வேறு காரணங்களாலும் கி்ழிய வாய்ப்பிருக்கிறது.அது போல உடலுறவின் காரணமாக இச்சவ்வு கிழிந்தாலும் அறுவை சிகிச்சை மூலம் புதிய சவ்வு பொருத்த முடியும் என்றும் சொல்லப் படுகிறது. எனவே ஒரு பெண் கன்னி்யா இல்லையா என்பதை அவளாலும்,அவள் கன்னியில்லாத பட்சத்தில் அவளைக் கன்னி கழித்தவனாலும் ,கடவுளாலும் மட்டுமே சொல்ல முடியும்.எனவே இந்தக் கன்னிமை என்பதற்கு அதிகமான முக்கியத்துவம் அளிப்பதுதான் இந்த ஏலத்தில் அளிக்கப் பட்டிருக்கும் அதிகமான தொகைக்குக் காரணம்.ஒரு பெண் கன்னியா இல்லையா என்று கவலைப் படுபவர்கள் ஆணின் கன்னிமை பற்றிக் கவலைப் படுவதே இல்லை.

“கற்பு நிலையென்று சொல்லவந்தார் ,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”(பாரதி)