தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

நாயுள்ளம்-( நீண்ட சிறுகதை)

காலை நடை    ஜெகந்நாதனுக்கு  மிகவும்  பிடித்த ஒரு வழக்கம்.  சுமார் 30  வருடங்களாக விடாப்பிடியாக அதைக் கடமையாக செய்துவருகிறார்.பெரும் புயல் மழை,  ஊருக்குப்போவது,  அதிசயமாக உடம்பு சரியில்லாமல் போவது  இத்தியாதி  சமயங்களில் தவறவிட்டதுண்டு.  காலையில்  ரத்த ஓட்டத்தை சீராக்கிக்கொண்டு  பின் தன் கோபதாபங்களை பட்டுக்கொள்வார். 

வழக்கப்படி மேகமில்லாத சூரியோதயத்தை சற்று  ரசித்துவிட்டு தன் நடையை ஆரம்பித்தார்.    தனியாக  நடப்பதுதான் நல்லது என்பதை நன்கு அறிந்தபோதிலும் தன் செளகரியப்படி, சிலருடன் சேர்ந்து நடப்பதுண்டு.   நடையில்  தன்  முழு  கவனத்தையும்  செலுத்தி, வீண் வம்புகளில் மாட்டிவிடும் அரட்டைகளில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருக்கவேண்டும் என்ற முயற்சியில் பெரும்பாலும்  தோல்விதான்.   தேவையில்லாத  வாக்குவாதங்களில்   சிக்கி   தன் தரப்பு  வாதங்களை நிலை நாட்டி,  ரத்த  அழுத்தை ஏற்றிக் கொண்ட தருணங்கள் பல.  இப்போது, மற்றவர்களின்  கருத்துக்களை  சமன்  செய்து சீர்  தூக்கிப் பார்க்கும் மேதமையை  தள்ளி  வைத்துவிட்டு, சான்றோனாகத்  திகழ்ந்தார்.  தனக்கு  ஒவ்வாத சகாக்களை  லாவகமாக  ஒதுக்கி  தன்  ஒத்தவர்களிடம் கருத்து பரிமாற்றம் மேற்கொண்டு தன்னைச் சீர்  செய்து  கொண்டார்.

அன்று அவர் மூன்று  பேர்களுடன்  நடந்துகொண்டிருந்தார்.  நடக்கும்  சாலை மரங்கள் நிறைந்த  ஒன்றரை கிலோ மீட்டர் நீளமுள்ள நிழல் சாலை.   மூன்றில் இரண்டு  பங்கு சாலையில் வாகன ஓட்டம்  அதிகம்.  மீதி பகுதியில்  குறுக்கும் நெடுக்குமாக  50  நிமிடங்கள்  தினமும்  நடந்துவந்தார்.   நடையின்  போது நின்று  பேசுவதை அவர்  பெரும்பாலும்  தவிர்த்து  விடுவார். 

அந்த  சாலையின்  முடிவில் இருந்த ஒரு  மருத்துவ  வளாகத்தின்  நுழை வாசலில் செக்யூரிடியைத் தவிர நான்கு  தெரு  நாய்களையும் அந்த  நிறுவனத்தின் பாதுகாப்பு  கான்ட்ராக்டர்  பழக்கி  வைத்திருந்தான்.  தினமும்  காலையில்  வந்து  டீ பொரைகளை போட்டு   நாய்களை பசி ஆற்றுவான்.  ஜெகந்நாதன் இந்த  செய்கையை ஒரிருமுறை வெகுவாக கண்டித்திருக்கிறார். அவன் அதை சட்டை செய்ததாக  தெரியவில்லை.     அவனது  சுய  நலம் அறியாமல் அவனுடைய  தர்ம சிந்தனயை பாராட்டவும் சிலர் உளர்.  சாதாரணமாக   சாலை  ஓரத்தில் கூட்டமாக  படுத்துக் கொண்டிருக்கும் அந்த  நாய்களின் பாதுகாப்பு வட்டத்தில்  நுழையும் மற்ற நாய்கள் ,  நரிக்குறவர்கள், குப்பை பொறுக்குபவர்களை பார்த்து  குலைக்கும், துரத்தும்.   சில சமயங்களில் ஆக்ரோஷம் தலை தூக்கும்.  பொதுவாக தினமும்  நடப்பவர்களை பெரிதாக  ஒன்றும் தொந்தரவு  செய்ததில்லை. 

சில தினங்களுக்கு  முன்பு புதிதாக  குடி  வந்திருக்கும்  ஒரு  பெரியவர்  இரு  குட்டிப் பேரன்களை  தனித்தனியாக  ஒரு  சுற்று கூட்டிவருவார்.  பெரிய  பேரன் எல்.கே.ஜி படிக்கிறான். சுறுசுறுப்புக்கு  ஓர்  உதாரணம்.  அவர்கள்  வீட்டு  வாசலில்  இருக்கும்  ஒரு  தெரு  நாயுடன் விளையாடும்  பழக்கம்  அவனுக்கு  உண்டு.  தாத்தாவும்  பேரனும் ஜெகந்நாதனுக்கு   குட்  மார்னிங்  சொல்லி   எதிர்  திசையில் மருத்துவ வளாகம்  நோக்கி  நடந்தார்கள். 

அச்சமயம்   ஜெகந்நாதனுடன்   டாக்டர் சபேசன்  நடந்து  கொண்டிருந்தார்.  அவர்  மிருகவியலில்  முனைவர் பட்டம் பெற்ற  ஒரு  கெட்டிக்கார  பிஸினஸ்மேன்.    கால் நடை கல்லூரிகளில் உள்ள அரசியலை  புறக்கணித்து   வியாபாரத்தில் இறங்கி  வெள்ளிவிழா வெற்றியை கொண்டாடும்  ஒரு  சாதனையாளர். 

கடைசி  சுற்றுக்காக  திரும்பிய போது  அந்த  எல்.கே.ஜி சிறுவன் ,  மருத்துவ வளாக  நாய்களின் பத்மவியூகத்தில்  நுழைந்து  அவைகளை  சீண்ட ஆரம்பித்தைப் பார்த்து  ஜெகந்நாதன்  துணுக்குறார்.  வெகு  அருகில்  அந்த  நாய்கள் அவனை சுற்றி லேசாக  உருமிக்  கொண்டு  நின்றன.    தாத்தா  செய்வது அறியாது  வெலவெலத்து  நின்றார்.  நல்ல  வேளையாக   காலை  நடை  செய்து  கொண்டிருக்கும் நான்கு  பெண்மணிகளின்  சமயோஜித ஆற்றலினால்   நாய்கள் விலகின. பேரனை தாத்தா   தூக்கி  அணைத்துக்  கொண்டார்.   பேராபத்தில் சிக்க இருந்த  பேரன் மெதுவாக  சகஜ நிலைக்கு மீண்டான்.

சபேசன்   தனக்கே  உரிய  பாணியில் அந்த பையனின்  வால்தனம் அந்த  நாய்களிடம் ஏதோ  அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.அதனுடைய பின்விளைவுதான்  நாய்களின் மெல்லிய உறுமல்  என்று விளக்கமளித்தார்.    அந்த  பையன்  கடி  படாமல் தப்பியதை  நினைத்து ஜெகந்நாதனுக்கு  பெரிய நிம்மதி.  சம்பவம்  நடந்த அந்த   சில  வினாடிகளில்  அவர்  மிகவும் கலவரமடைந்தார்.   அதை  கவனித்த சபேசன்-

ஏன்  ஸார்  நாயைக்  கண்டா பயமா?

பூனயை  விட்டுட்டேங்களே.  சிறு வயதில், நாய்  கடிச்சுடும், பூனை புடிச்சிண்டு போய்டும், என்று  அச்சப்பால்  ஊட்டி  வளர்த்ததால் மனதில்  பயம்  போல்  பதிந்துவிட்டது.  நல்ல வேளையாக பூச்சாண்டி,  ராப்பிச்சைகளிடம்  பயமில்லை.

புன்சிரிப்பில்  நகைச்சுவையை  ரசித்துவிட்டு, சபேசன்

அந்த  சிறு  பயலை நாலு  நாய்களும்  அட்டாக்  பண்ணி  இருந்தா,  ரொம்ப  சீரியஸா   போயிருக்கும்.   தெரு  நாய்கள்  வேற.  ராபீஸ்  ரிஸ்க்  ரொமப  ஜாஸ்தி.

இப்பல்லாம், ராபீஸ்  வராம  தடுக்க உயர் வகை  அன்னிய  நாட்டு மருந்துகள்  தற்போது  சந்தையில்  கிடைப்பதாக  சபேசன் கூறியது,  ஜெகந்நாதனுக்கு  கொஞ்சம்  அதிகமாகவே  நிம்மதி  அளித்த்து.

முறைபடி  சுகாதாரமாக , தரமாக  நாய்களை  வளர்த்தால் அது  குழந்தைகளை  வளர்ப்பது  போல  மகிழ்ச்சி அளிக்கும்.  குழந்தைகளையே  ஒழுங்காக வளர்க்காத  இந்த   நாட்டில நாய்களை  தரமாக பராமரிப்பவர்கள்  வெகு  சிலரே.   நாயானது அன்பு  காட்டுபவர்களுக்கு வட்டியும்  முதலுமா  அன்பை  பொழியும்.   மிருகங்களிலேயே நாய்களுக்குத்தான்  எஜமான  விசுவாசம் அதிகம்.

பிறகு நாய்களின்  குணாதிசயங்களை  விலாவாரியாக விளக்கி  விடை  பெற்றார். 

அன்றைய  காலை  நிகழ்வுகள்  எல்லாம் அசை  போட்டுக்கொண்டே  வீடு திரும்பினார்  ஜெகந்நாதன். 

பொதுவாக காலை  நடை பழக்கம்  உள்ளவர்கள் பெரும்பாலும்  வீடு  திரும்பும்  சமயம்  அதுவே.  கிட்டத்தட்ட   அதே  நேரத்தில்  அவருடைய வீட்டுக்குத்   திரும்பினார்  நடராஜன்.   அவரை  பின்  தொடர்ந்த  ஒரு  தெரு  நாயை  விரட்டி  அடித்துவிட்டு வீட்டிற்குள்  நுழைந்தார்.  

நடராஜன்ஜெகந்நாதனின்  பள்ளி  நண்பர்.  இன்னும்  5  வருடங்களில்  தங்க விழா  கொண்டாட வேண்டிய  நட்பு.   பெருங்குடியில்  ஒரு  தனி வீட்டில்  வசித்து  வந்தார்.    அங்கு  வீட்டிற்கு  ஒரு  நாய்   வளர்க்கப்  படுவது  ஒரு  கண்டிப்பான  தேவை. 

இந்த  தேவை அன்று  தான்  நடராஜன்  வீட்டில்  பூர்த்தியானது. 

(தொடரும்)

டிஸ்கி 1: மிக முக்கியம்.இந்தக்கதை முடிவில் இக்கதை பற்றிய  ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன். காத்திருங்கள். தொடருங்கள்  .

டிஸ்கி 2. .இடம் என்பது ஒரு இடை நிகழ்வான விஷயம்என்று என் "முதலிடமும்,ரசமான பதிவும்" என்ற இடுகையில் சொல்லியிருந்தேன்.இப்போது கிரீடம் கழன்று விட்டது..pressure is off.

22 கருத்துகள்:

  1. முடிவில் 'டிஸ்கி'கள் ஆர்வத்தை கூட்டி விட்டன...
    அடுத்த பதிவு எப்போ சார்...? நன்றி... (TM 2)

    பதிலளிநீக்கு
  2. சிறு வயதில், நாய் கடிச்சுடும், பூனை புடிச்சிண்டு போய்டும், என்று அச்சப்பால் ஊட்டி வளர்த்ததால் மனதில் பயம் போல் பதிந்துவிட்டது.

    சிறப்பான கதை.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. எழுத்துக்கள் ரொம்ப பெரிசா இருக்கு...கொஞ்சம் குறைச்சிகலாம். கதையை சொல்லிட்டே வாக்கிங் போறமாதிரி ஃபீலிங்.

    பதிலளிநீக்கு
  4. ம்ம்ம்ம்ம்ம்ம் காத்திருக்கிறேன் ஐயா அடுத்த பதிவுக்காக

    பதிலளிநீக்கு
  5. தொடரும்! அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  6. நாய்களை நானும் நன்கறிவேன்! நிறைய அனுபவம்! தொடருங்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. கதையின் முடிவுக்குக் காத்திருக்கிறேன் ரகஸ்யத்தை அறிய. விரைவில் வெளியிடுங்கள்.

    கிரீடம் கழன்றதாக நான் நினைக்கவில்லை. சிறிது காலம் தலையை அழுத்தும் பாரத்தை இறக்கி வைத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.என்ன சரிதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுவதன் இடைநிகழ்வாகக் கிரீடம் அவ்வளவே.அதையே நினைத்து எழுத முடியாது.

      கருத்துக்கு நன்றி

      நீக்கு
  8. சுவாரசியமா கொண்டு வந்து நிறுத்தீட்டீங்க.சீக்கிரம் சொல்லுங்க ஐயா.

    பதிலளிநீக்கு
  9. அந்த ஜெகநாதன் நீங்கள் என்று சொல்லப் போகிறீர்களா

    // கிரீடம் கழன்று விட்டது// ஆம் கவனித்தேன்..

    பதிலளிநீக்கு
  10. டிஸ்கி ரெண்டும் புரியவில்லை.
    நாயைக் கட்டுப்படுத்த பெண்மணிகள் என்ன செய்தார்கள்? எனக்கு மட்டும் சொல்லுங்க சார். அடுத்த ட்ரிப் சென்னை வரப்ப பயன்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிஸ்கி 1.கதை பற்றி ஒரு செய்தி கடைசியில்.

      டிஸ்கி 2.த.ம. ரேங்க் பற்றி.

      அடுத்த ட்ரிப் நாம் சந்தித்தால் சொல்கிறேன்!
      நன்றி அப்பாதுரை

      நீக்கு