தொடரும் தோழர்கள்

திங்கள், மார்ச் 04, 2013

என் காதலி- இன்றும் தொடர்கிறாள்

//செவ்வாய், பிப்ரவரி 15, 2011


சென்னைக்காதல்-3.


சென்னையின் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பற்றி இதுவரை நான் எழுதவில்லை.அதுவும் இன்றில்லாத ஓரிடம்தான்.

எத்தனை புத்தகங்கள் அங்கே தேடித்தேடிஎடுத்திருப்பேன்?.அதற்காக எத்தனை மணி நேரம் செலவிட்டிருப்பேன்?எத்தனை விதமான பொருள்களை பேரம் பேசி வாங்கியிருப்பேன்? எத்தனை நாட்கள் சும்மா சுற்றியிருப்பேன்?மறக்க முடியுமா?இன்றைய மால்களின் முன்னோடியான அந்த இடத்தை மறக்க முடியுமா?

சென்னையின் மிகப் பெரிய இழப்பாக நான் நினைக்கும் அந்த இடம்—

”மூர்மார்க்கெட்”

அங்கு ஷாப்பிங் செய்ய வேண்டுமென்றால் உங்களுக்குக் கண்டிப்பாக நன்கு பேரம் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.இல்லயெனில் ஏமாற வேண்டியதுதான்.

எனக்கு பேரம் பேசக் கற்றுத்தந்ததே மூர் மார்க்கெட்தான்.புத்தகம் வாங்க ,எப்பொருள் வேண்டுமாயினும் வாங்க,பொழுதுபோக்காகச் சுற்றி வர என மனிதர்கள் கூடிய இடம்!

இப்படி எத்தனையோ இடங்கள்!எத்தனையோ நினைவுகள்!

இதற்கு மேல் என்ன இருக்கிறது என் காதலியைப் பற்றிச் சொல்ல?

ஆனால் அவள் என்னை மாற்றினாள்!

சென்னை வரும் முன் அப்பாவியாக,நண்பர்கள் தவிரப் புதியவர்களிடம் பேசிப் பழகக் கூச்சப் படுவனாக,வீட்டுப் பெண்களைத்தவிர மற்றப் பெண்களிடம் பேசப் பயப்படும்,அவர்களாகப் பேசினால் கால் நடுங்கும், பதில் சொல்ல நாக் குழறும் ஒருவனாக இருந்த என்னை இரண்டே ஆண்டுகளில் முழுதுமாக மாற்றியது சென்னை.

பேசத் தெரிந்தவனானேன்.

பெண்களிடம் பேசப் பயந்த நிலை மாறியது.இரு சம்பவங்களை விவரிப்பதின் மூலம் இந்த மாற்றத்தைப் புரிய வைக்க முடியும் என நினைக்கிறேன்.

மதராஸ் வந்த புதிதில் பட்டமளிப்பு விழாவில் நேரில் கலந்து கொள்ளத் தீர்மானித்தேன். அன்று காலை வெளியில் சென்று வந்தபோது ஹாஸ்டல் அலுவலகத்தில் அழைத்தார்கள். நான் இல்லாதபோது எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததாகச் சொன்னார்கள்.மதுரை ஃபாத்திமா கல்லூரியில் பணி புரிந்து வந்த என் சித்தி, மாணவிகளுடன் வந்து மாநிலக் கல்லூரி மகளிர் விடுதியில் தங்கியிருப்பதாகவும், என்னைப் பார்க்க விரும்புவதாகவும் சொன்னார்கள்! அன்று மாலை பட்டமளிப்பு விழா முடிந்தபின் அங்கிருந்தே சென்று பார்த்து வரலாம் எனத் தீர்மானித்தேன்.விழா முடிந்ததும், விசாரித்துக்கொண்டு பேருந்தில் ஏறினேன். நடத்துனரிடம் சொன்னேன்’மாநிலக் கல்லூரி மகளிர் விடுதியில் இறங்க வேண்டும்.இடம் வந்ததும் சொல்லுங்கள்” என்று.

இடம் வந்ததும்,நடத்துனர் உரத்த குரலில் சொன்னார்”யாருப்பா,மாநில மகளிர் விடுதி, இறங்கு!”நான் இறங்கும்போது பஸ்ஸில் இருந்த அனைவரும் என்னையே பார்ப்பது போன்ற ஓர் உணர்வு!

விடுதி காம்பவுண்டுக்குள் நுழைந்தேன்.வாசலிலிருந்து சிறிது தூரம் தள்ளி விடுதிக் கட்டிடம்.கேட்டிலிருந்து நீண்ட நடை பாதை.பாதையின் இரு புறமும் மரம்,செடி. புல்தரை நிறைந்த தோட்டம்!ஆங்காங்கே,கொத்துக் கொத்தாய் பெண்கள்!வித விதமான உடைகள்;அலங்காரங்கள்.ஆனால் நேரில் பார்க்கப் பயம்.கட்டிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.கழுத்தில் டை,கையில் மடித்துப் போட்ட பட்டமளிப்பு கவுன்,சுருட்டிப் பிடித்த பட்டம்,இந்தத் தோற்றத்தில் சென்று கொண்டிருந்த என்னை அப்பெண்கள் எல்லாரும் உற்றுப் பார்க்க ஆரம்பிப்பதாக உணர்ந்தேன்.கால்கள் பின்ன ஆரம்பித்தன. கழுத்திலிருந்து வேர்வை ஊற்றெடுத்து ஓட ஆரம்பித்தது-கழுத்து,முதுகு,கால்கள் என்று..ஒரு வழியாகக் கட்டிடத்தை அடைந்தேன், விசாரித்தேன்.சித்தி வெளியே சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.நான் வந்தவுடன் சொல்லுங்கள் என்று என் பெயரைச் சொன்னேன்.

திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.முன்பை விடப் பார்வைகள் தீவிரமாக இருப்பதாக உணர்ந்தேன்.யாரோ ஒரு பெண் என் பெயரைச் சொல்லி விட்டுச் சிரித்தாள்.கால் நடுக்கம் அதிகமானது!பாதை நீ..…..ண்டது.கடைசியாக கேட்டை அடைந்தேன்.

ஓராண்டுக்குப் பின்!

மூர் மார்க்கெட்!

முக்கியமான புத்தகங்களைத்தேடி வாங்கத் தனியாகச் சென்றேன்.கடையை விட்டு வரும் போது அப்பெண்ணைப் பார்த்தேன்.அழகும்,கம்பீரமும் கலந்த ஒரு தோற்றம். தோற்றத்தில் தன் அழகின் மீது செருக்குக் கொண்ட பெண்ணாகத் தோன்றவில்லை.ஒரு தோழி மட்டும் உடன். அவளுடன் பேச வேண்டும்;அவள் அழகைப் புகழ வேண்டும் எனத்தீர்மானித்தேன்.

இரண்டு மூன்று கடைகளில் சில பரிசுப் பொருள் பற்றி விசாரித்தேன், அவளைப் பார்வையால் பின் தொடர்ந்தவாறே! பின் அவளை நெருங்கினேன்.

“மன்னிக்கவும்.உங்களால் எனக்கு உதவ இயலுமா?” கேட்டேன்.

”சொல்லுங்கள்”

“தவறாக நினைக்காதீர்கள்.ஒரு பரிசுப் பொருள் வாங்க வேண்டும்.தேடித்தேடிப் பார்த்து விட்டேன்.என்ன வாங்குவதென்று தெரியவில்லை.”

”யாருக்கு”

என் முகத்தில் வரவழைத்துக் கொண்ட ஒரு வெட்கம்.தயங்கிச் சொன்னேன்”என் நண்பிக்குப் பிறந்த நாள்.பரிசு அளவில் சிறியதாக இருக்க வேண்டும்;பெண்களுக்குப் பிடித்த பொருளாக இருக்க வேண்டும். எனவேதான் உங்கள் உதவி நாடினேன்.”

அவள் என்னை உற்றுப் பார்த்தாள்.என் முகத்தில் தப்பாக எதுவும் தெரியாத நிலையில் சொன்னாள்”அவளுக்கு ஏதாவது ஃபிலிக்ரி நகைகள் வாங்கிக் கொடுங்களேன். நிச்சயம் பிடிக்கும்—நான் அணிந்திருப்பது மாதிரி.”

“வாவ்!அழகாக இருக்கின்றன.அழகான பொருட்கள், இருக்கும் இடத்தைப் பொறுத்து மேலும் அழகாகின்றன.இங்கு கிடைக்குமா?”

என் பாராட்டை ஒரு தலையசைப்பால் ஏற்றுக் கொண்ட அவள் சொன்னாள்

”இல்லை.மவுண்ட் ரோடில்”கலிங்கா ஃபிலிக்ரியில் கிடைக்கும்”

“நன்றி” அவளை விட்டு விலகத்தயாரானேன்.

”ஒரு நிமிடம் ”அவள் அழைத்தாள்.முகத்தில் லேசான குறும்போ!

”அவளுக்குப் பிடித்ததா என்று என்னிடம் சொல்லுங்கள்.பெரும்பாலும் விடுமுறை நாட்களில் இங்கு இருப்பேன்!”

நான் திகைத்தேன். அவள் அகன்றாள்!

இந்தத் தைரியத்தை,மாற்றத்தை என்னில் ஏற்படுத்திய சென்னையைக் காதலிக்காமல் இருக்க முடியுமா?

சென்னைக்காதல் (பதிவு) முடிந்தது!

(இப் பதிவுத்தொடரை எழுதக் காரணமான அமீரகப் பதிவர் நண்பர் கக்கு-மாணிக்கம் அவர்களுக்கு நன்றி)//
...................
டிஸ்கி:
இத்துடன் முடித்துக் கொண்டேன்.இன்னும் எழுதியிருக்கலாம்.இப்போதும் கூட எழுதலாம்.

நணபர் கக்கு பற்றிக் குறிப்பிடக் காரணம்- என்னை சென்னைக் காதலன் என்று அவர் ஒரு பின்னூட்டத்தில் அழைத்திருந்தார்!



21 கருத்துகள்:

  1. பேரத்தில் மட்டுமல்ல... எந்த விசயம் தெரியாவிட்டாலும் பேச தெரிய வேண்டும்... இல்லை என்றால் சென்னை 'போடா வெண்ணெய்' என்று கூறும்...

    பதிலளிநீக்கு
  2. எந்த வருடம் என்பதை குறிப்பிட்டால் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவா!நான் எம்,எஸ்சி படித்த ஆண்டு-1964-66!எத்தனையோ மறக்க முடியாத அனுபவங்கள்.
      நன்றி சிவா

      நீக்கு
  3. “ மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் “ என்ற பாடலில் ( படம்: அனுபவி ராஜா அனுபவி ) “ ஊரு கெட்டுப் போனதற்கு மூரு மாருகெட்டு அடையாளம். நாடு கெட்டுப் போனதற்கு மெட்ராசு நாகரிகம் அடையாளம் “ – என்று வரிகள் வரும். எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். மூர் மார்க்கெட் வியாபாரிகள் கவிஞரைக் கண்டித்து அறிக்கை விட்டார்கள்.

    உங்கள் மலரும் நினைவுகள் மீண்டும் மீண்டும் மலரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன்மையில் மூர் மார்க்கெட்டில் கிடைத்த புத்தகங்கள் வேறெங்கும் கிடைக்காது!
      நன்றி

      நீக்கு
  4. இதுபோல இன்னும் பல தொடர்கள் உங்களிடம் எதிர் பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  5. //பெரும்பாலும் விடுமுறை நாட்களில் இங்கு இருப்பேன்!//
    அதற்குப்பிறகு அந்த பெண்ணை சந்தித்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துருவித்துருவிக் கேக்குறீங்களே1பதில் சொன்னால் ............?!
      நன்றி சார்

      நீக்கு
  6. சென்னைக்கு வந்தால் அந்த காலத்திலேயே இவ்வளவு தைரியம் வருமா?
    உண்மையில் சென்னை வந்து தான் எனக்கும் ஓரளவு தைரியம் வந்தது... அதும் உங்கள் அளவுக்கு வரவில்லை இன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பேசக்கற்றுக் கொண்டதே மெட்ராஸ்(சென்னை அல்ல) வந்த பின்தான்!
      நன்றி சமீரா!

      நீக்கு
  7. நல்ல அனுபவம் தான்! சுவை படச் சொல்லிய உங்களுக்கு ஒரு பூங்கொத்து!

    பதிலளிநீக்கு
  8. //இந்தத் தைரியத்தை,மாற்றத்தை என்னில் ஏற்படுத்திய சென்னையைக் காதலிக்காமல் இருக்க முடியுமா? //

    மிகவும் சுவாரசியமான பதிவு.

    பதிலளிநீக்கு
  9. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

    பதிலளிநீக்கு
  10. அழகான பகிர்வு. சென்னை உங்களை ரொம்பவே மாற்றி விட்டது போல....:)

    பதிலளிநீக்கு
  11. Moore Market - though it is non existant today, and was demolished some years back, still we remember it even today. We have so many malls in and around chennai with so many infrastructure but still moore market is the real mall of those days without any basic infrastructure. THIS IS ITS SPECIALITY.

    பதிலளிநீக்கு