தொடரும் தோழர்கள்

வெள்ளி, மார்ச் 15, 2013

உலகம் அநீதிமயமானது!


ஒரு சிறிய கிராமம்.கிராமச் சிறுவன் ஒருவன் ஒருநாள் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது ”காப்பாற்றுங்கள்,காப்பாற்றுங்கள்” என அபயக்குரல் கேட்டது. சுற்றிப் பார்த்ததில் ஆற்றின் ஓரத்தில் வலையில் சிக்கித்தவிக்கும் ஒரு முதலையைக் கண்டான். ஆனால் அதைக் காப்பாற்ற அவனுக்குத் தயக்கமாக இருந்தது;காப்பாறியவுடன் தன்னையே அது கடித்து விடும் என்ற பயம்.ஆனால் முதலை கண்ணீர் விட்டுக் கதறியழுது சொன்னது ”என்னைக் காப்பாற்றினால் உனக்குத்தீங்கு செய்வேனா?நிச்சயம் மாட்டேன்.என்னை விடுவி”.

மனமிரங்கிய சிறுவன்,முதலையின் மேலிருந்த வலையை வெட்டத்தொடங்கினான்.அதன் தலை விடுபட்டவுடன்,முதலை அவன் காலைக் கவ்விக் கொண்டது.இப்போது சிறுவன் அழ ஆரம்பித் தான்  ”உன்னை விடுவித்த என்னையே கவ்விக்கொண்டாயே,அயோக்கிய முதலையே!இது நியாயமா?”என்று கேட்டான்.

முதலை ”என்ன செய்ய?இதுவே உலக நியதி!இதுவே வாழ்க்கை” என்றவாறு தன் பிடியை (கடியை!) இறுக்கியது.

சிறுவன் தன் நன்றியில்லாச் செய்கையை முதலை நியாயப்படுத்துகிறதே என வருந்தினான். மரத்தில் இருக்கும் பறவைகளிடம் கேட்டான்”முதலை சொல்வது சரியா?உலகம் இவ்வாறு நியாயமற்றா இயங்குகிறது?உலகியல் வாழ்க்கையில்  இவ்வாறு வாக்குத் தவறி நடப்பதுதான் நடைமுறையா?”

பறவைகள் கூறின”நாங்கள் பத்திரமாக  இருக்க வேண்டும் என்பதற்காக மரத்தின் உச்சியில் கூடு கட்டி அதில் முட்டையிடுகிறோம்.ஆனால் பாம்புகள் வந்து முட்டையை சாப்பிட்டு விடுகின்றன. முதலை சொல்வது சரிதான்.உலகம் அநீதியால் நிறைந்திருக்கிறது”

சிறுவன் நதிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு கழுதையைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டான்.கழுதை சொன்னது”என் இளமையில் எவ்வளவோ சுமைகளை நான் என் எஜமானுக் காகச் சுமந்திருக்கிறேன்;.இப்போது எனக்கு வயதாகி இயலாமற்போய்விட்டது என்பதால் எனக்கு உணவு தர முடியாது என்று என்னை இங்கே அலைய விட்டு விட்டான். உலகம் இப்படித்தான் அநீதி மயமாக இருக்கிறது”

சிறுவனுக்கு ஒப்பவில்லை;அங்கு வந்த ஒரு முயலிடம் கேட்டான்.முயல் சொன்னது”இது வெறும் உளறல்;முதலை சொன்னதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்றது.

இதைக்கேட்டு கோபமடைந்த முதலை வாக்குவாத்தில் இறங்கியது;ஆனால் சிறுவனின் காலை விடாமல் பிடித்துக் கொண்டே பேசியது.

முயல் சொன்னது”நீ பேசுவது எதுவும் புரியவில்லை.காலை விட்டு விட்டு வாயைத்திறந்து பேசு.பையன் தப்ப முயன்றால் உன் வாலால் அடித்து அவனைப் பிடிக்க்கூடிய சாமர்த்திய சாலி அல்லவா நீ”

முதலை தன் கடியை விட்டது.உடனே முயல் கத்தியது”பையாஓடிவிடு” என்று.சிறுவன் தப்பி ஓடினான்.முதலை தன் வாலால் அடிக்க முயன்றது.ஆனால் அதன் வால் இன்னும் வலையில் மாட்டிய படியே இருந்தால் முடியவில்லை.சிறுவன் ஓடி விட்டான்.

தன்னைப் பார்த்து முறைத்த முதலையிடம் முயல் சொன்னது”பார்! இதுதான் வாழ்க்கை;உலக நியதி!”

சிறுவன் கிராமத்தவருடன் வந்து அனைவரும் முதலையை அடித்துக் கொன்றனர்; அவர் களுடன் வந்த வேட்டை நாய் ஒன்று முயலைப் பார்த்தும் துரத்த ஆரம்பித்து.சிறுவன் கத்தினான் ”முயலை ஒன்றும் செய்யாதே:அதுதான் என்னைக் காப்பாற்றியது”ஆனால் சிறுவன் தடுக்குமுன் நாய் முயலைக் கொன்று விட்டது.

சிறுவன் கதறினான்;கண்ணீர் விட்டான்.

சொன்னான்”முதலை சொன்னது உண்மைதான் .உலகம் இப்படித்தான் இருக்கிறது;இதுதான் வாழ்க்கை!”

ஆம் உலக வாழ்க்கையில் பல நேரங்களில் பல செயல்கள் நியாயமற்றவையாகவே தெரிகின்றன.அதைப் புரிந்து கொள்வதுகடினம்.அவற்றை வாழ்க்கையின் பகுதியாக ஏற்றுக்   கொண்டு நம் வாழ்க்கையைப் புத்திசாலித்தனமாக அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்!

(படித்தேன்;பிடித்தது;பகிர்ந்தேன்)

25 கருத்துகள்:

  1. இதுதான் வாழ்க்கை...Mostly it is survival of the fittest...

    There is no place in history for the 'also rans'...but there is plenty of space in this world for them...

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. திருத்தி விட்டேன்;சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  3. கதை அருமை...

    (இதனால் தான் "நான் ஏமாற மாட்டேன்... நீ முதலைக்கண்ணீர் வடிக்காதே..." என்று சொல்கிறார்களோ...?)

    பதிலளிநீக்கு
  4. அருமையான நீதிக்கதை! ஏற்கனவே வேறுவடிவில் படித்திருக்கிறேன்! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. இது தான் வாழ்க்கை நல்ல கதை ஐயா.

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்குப் பிடித்தது எங்களுக்கும் பிடிக்கிறது. நல்ல கதையை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. நல்ல நீதிக்கதை.

    படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது!

    பதிலளிநீக்கு
  8. One of the best posts, in my opinion. Wish you share more, like this.

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் சொல்வதும் உண்மைதான்

    பதிலளிநீக்கு
  10. நியாயமற்றவர்கள்
    நியாயமில்லாதவர் மத்தியிலே
    நியாயத்தைக் கடைப்பிடிக்காதவரிடம்
    நியாயத்தைப் பற்றிப் பேசுவதே
    நித்தம் நாம் பார்க்கும்
    நகைச் சுவை காட்சி ஆகும்.

    இவ்வுலகிலே
    எத்தர்கள் ஏராளம்
    எண்ணி ஓரிரண்டு
    மத்தவர்களும் இருக்கிறார்கள்.
    அவர்களை நாம்
    பித்தன் என்கிறோம்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  11. உலக நியதி அருமை...வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. //உலக வாழ்க்கையில் பல நேரங்களில் பல செயல்கள் நியாயமற்றவையாகவே தெரிகின்றன.அதைப் புரிந்து கொள்வதுகடினம்.அவற்றை வாழ்க்கையின் பகுதியாக ஏற்றுக் கொண்டு நம் வாழ்க்கையைப் புத்திசாலித்தனமாக அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்!//

    சிறப்பான நீதி.

    மிக அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு