தொடரும் தோழர்கள்

வெள்ளி, மார்ச் 22, 2013

சூரிய புத்திரி...நிறைவுப்பகுதி



அம்மா சித்தப்பிரமை,பில்லிசூனியம் என்று தீர்மானித்து விட்டாள்.அவள் பழங்காலத்து மனுஷி, அவளுடைய அறிவின் விஸ்தீரணத்தில் அப்படித்தான் நினைக்கத்தோன்றும். 

என்னால் அப்படி நம்ப முடியவில்லை.ஏதாவது நரம்புகள் சம்பந்தப்பட்ட நோயா,அல்லது மனோ வியாதிதானா.... ஒரே குழப்பமாக இருந்தது.இவள் இப்படி விசித்திரமாக நடந்து கொண்டு நான் பார்த்ததே யில்லை.ஒருவேளை அப்பாவின் துர்மரணம் இவளைப் பாதித்திருக்குமோ?...அதுவும் ஐந்து வருடம் கழித்தா..எதற்கும் இவளை ஒரு மனநல வைத்தியரிடம் காண்பிக்கலாமா என்று எண்ணியும்,அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன்.நானே என் தங்கையைப் பைத்தியம் என்று பிரகடனப் படுத்துவது போல் ஆகி விடுமே!

ஒரு நாள் நள்ளிரவில் தூக்கத்தில் ஏதோ உளறிக் கொண்டிருந்தாள் ரோகிணி.அவளை உலுக்கி னேன். தூக்கக்கலக்கத்துடன் எழுந்து உட்கார்ந்து கொண்டு என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

“எனக்குக் கல்யாணமாயி.குழந்தை பிறந்தா என்ன பேர் வைப்பேன் தெரியுமாடா? ஆண் குழந்தையா இருந்தா பாஸ்கரன் இல்லே ரவி.பொண்ணா இருந்தாஅருணா..எல்லாமே சூரியனோட பேரு.”

”சரி,தூங்கு..நாளைக்கு எக்ஸாம் இருக்கு.காத்தாலே சீக்கிரம் ஏந்து படிக்கணும்னயே...”

“ஆமாமா..சோலார் எனர்ஜி பத்திப் படிக்கணும்”  என்று தூங்க ஆரம்பித்தாள்.

இவளுக்குப் போயும் போயும் சூரியனிடம் இப்படியொரு பிரேமை வரக் காரணம் என்ன என்பது பெரும் புதிராகவே இருந்தது.மணிக்கணக்காக மாடியில் நின்றாலும்,மற்ற சமயங் களில்  சாதாரணமாகத்தான் பேசுகிறாள்.பட்டப் படிப்பு முடிந்தவுடன் ஓரிரு வருடங்களில் வரன் தேட வேண்டும்.அப்போது இந்த சூரியமோகம் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாதே  என்று எனக்கு இப்போதே தவிப்பாக இருந்தது .

அடிக்கடி இவள் வெயிலில் நின்று கொண்டு சூரியனைப்பார்ப்பதால் கண்கள் நிச்சயம் பாதிக்கப்படுமென்று அஞ்சினேன்.நான் பயந்தபடியே ரோகிணிக்குக் கண்களில்பாதிப்பு ஏற்பட்டு இப்போது பார்வையற்று இருக்கிறாள்.ஆனால் காரணம் சூரியனல்ல.தீபாவளியான நேற்று அவள்  வெடித்த ஒரு சர வெடிதான் காரணம்.வெடியின் தீப்பொறிகள் தெறித்து அவள் கண்களில் விழுந்தன.கண்களை மூடவும் முடியாமல் திறக்கவும் முடியாமல்  மண்ணில் விழுந்து புரண்டு அவள் பட்ட அவஸ்தை  துயரத்தின் உச்சம்.எனக்கு உடனடி சிகிச்சை என்னவென்று தெரியாத நிலையில் சிறுபிள்ளைத்தனமாக அவள் கண்களில் ஊதினேன்.பின் குளிர்ந்த நீரால் அலம்பி விட்டேன்.

தீபாவளி விடுமுறையாதலால் எந்தக் கண் டாக்டர் கிளினிக்கும் திறந்திருக்கவில்லை.ஒரு சாதாரண ஆஸ்பத்திரியில் கத்துக்குட்டி வைத்தியரிடம் ஏதோ முதலுதவி பண்ணிக்கொண்டு. இன்று இந்த டாக்டர் சுப்ரமோனியின் எதிரே நானும் என் தங்கை ரோகிணியும்....

டாக்டர் என் தங்கையைப் பரிதாபமாகப் பார்த்தார்.மனதுக்குள் என்ன நினைத்தாரோ...!
“ஒரு சின்ன சர்ஜரின்னு கூட சொல்ல மாட்டேன் ..ப்ரொஸிஜர் பண்ணி குணப்படுத்திடலாம்.. ஆனா அதுக்கப்புறம் நீ எங்களோட ஒத்துழைக்கணும்மா...”என்றார்.

“என்ன டாக்டர் ”என்றாள் கண்களில் பஞ்சை ஒத்திய படியே.

‘இனிமே நீ சூரியனைப் பாக்கவே கூடாது”

சட்டென்று ரோகிணியின் முகம் மாறியது..கைநரம்புகள் புடைப்பது தெரிந்த்து.என் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்”சூரியனைப்பாக்காமல் என்னால் இருக்கவே முடியாது” என்றாள் ஒவ்வொரு வார்த்தையிலும் தீர்மானத்துடன்.”ஐ லவ் ஹிம்..ஐ அட்மைர் ஹிம். .சீக்கிரமா நான் என் சூரியனைப் பார்க்க வழி பண்ணுங்க டாக்டர்” என்றாள் குழந்தைத்தனத்துடன்.

“நோ ரோகிணி..உன் கண்ணு ரெண்டும் ரொம்பவே அஃபெக்ட் ஆயிருக்கு.நீ ஒத்துழைக் கலைன்னா  இந்த ட்ரீட்மெண்ட் பண்றதே வேஸ்ட்..உனக்குப் பார்வையா சூரியனா எது முக்கியம்னு முடிவு பண்ணிக்கோ”

ரோகிணி என் கைகளைப் பிடித்தவாறு சொன்னாள்”பார்வை முக்கியம் டாக்டர்...சூரியனைப் பாக்கறதுக்கு...”

டாக்டரின் முகத்தில் சலிப்புத் தெரிந்தது.என்னைப் பார்த்து நம்பிக்கையில்லாமல் புன்னகைத்தார்..

‘என்னடி இது..இதுல கூடவா பிடிவாதம்கண்ணுதாம்மா முக்கியம்.சூரியன் சூரியன்னு பைத்தியம் மாதிரி உளறாதே””

“இல்லே.நான் சாகற வரைக்கும் சூரியனைப் பாத்துண்டேதான் இருப்பேன்.நான் சூரிய ரசிகை,பக்தை ..ஏன் நீ சொன்ன மாதிரிபைத்தியம்னே வெச்சுக்கோயேன்...”

எனக்கு அவமானமாகவும் எரிச்சலாகவும் இருந்தது.எந்த டாக்டரிடம் என்ன வைத்தியம் பார்த்தாலும்,பார்வை சரியானவுடன் மீண்டும் சூரியனை நாடிப் போவாள்.அளுடைய பார்வையின்மைக்குச் சிகிச்சை செய்வது வீண் என்று உள் மனது சொல்லிற்று...

இவள் இப்படியே கிடக்கட்டும்..

என் தங்கை பைத்தியம் என்பதை விடப் பார்வையற்றவள் என்ற உண்மை அவ்வளவாகக் கசக்கவில்லை.....

6 கருத்துகள்:

  1. சூரியக் காதல் வித்தியாசமான கதை. முடிவை இப்படி எதிர்பார்க்கவில்லை. கண் தெரியாது என்பதை ஊகிக்க முடியவில்லை.
    //ரோகிணி என் கைகளைப் பிடித்தவாறு சொன்னாள்”பார்வை முக்கியம் டாக்டர்...சூரியனைப் பாக்கறதுக்கு...”// கண்கலங்கி போச்சு ஐயா! ஒரு தேர்ந்த எழுத்தாளரின் கதையா ஜொலிக்குது..தரமான கதை.அற்புதமான நடை.

    பதிலளிநீக்கு
  2. இப்படி பிடிவாதம் பிடித்தால் என்ன செய்வது...? முடிவு வருத்தப்பட வைத்தது...

    பதிலளிநீக்கு
  3. //என் தங்கை பைத்தியம் என்பதை விடப் பார்வையற்றவள் என்ற உண்மை அவ்வளவாகக் கசக்கவில்லை.....//

    யதார்த்தமான அறிவிக்கை.

    பதிலளிநீக்கு
  4. திகில் கதையாக இருக்கும்னு நினைச்சனே !

    பதிலளிநீக்கு
  5. என் தங்கை பைத்தியம் என்பதை விடப் பார்வையற்றவள் என்ற உண்மை அவ்வளவாகக் கசக்கவில்லை.....

    முடிவு கசக்கிறது ...

    பதிலளிநீக்கு
  6. கலங்க வைத்த முடிவு! அருமையான படைப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு