தொடரும் தோழர்கள்

புதன், ஜூலை 17, 2013

திண்டுக்கல்லும் நானும்!



திருப்பதி என்றால் லட்டு.

திருநெல்வேலி என்றால் அல்வா.

மணப்பாரை என்றால் முறுக்கு

இந்த வரிசையில் திண்டுக்கல் என்றால் பூட்டு என்று சொன்னது ஒரு காலம்.

இன்றோ,திண்டுக்கல் என்றால் பதிவர்களின் மனத்தில் வரும்  ஒரே பெயர் தனபாலன்!

ஆனால் இப்பதிவு அவரைப் பற்றியதல்ல!

என் இளமைக்கால திண்டுக்கல் அனுபவங்கள் பற்றியது.

நான் பள்ளியில்,பின் கல்லூரியிலும் படித்த காலத்தில் என் அன்னையின் சித்தப்பா திண்டுக்கல்லில் அரசு வக்கீலாக இருந்தார்.சித்தப்பா,சித்தி இருவருமே  (நானும் என் உடன்பிறப்புகளும் கூட அவர்களை அப்படியே அழைத்து வந்தோம்) எங்களிடம் மிக அன்புடன் இருப்பார்கள்.

பள்ளி கோடை விடுமுறைகளில் அங்கு சென்று விடுவது வழக்கம்.

அப்போதெல்லாம் திண்டுக்கல் வெயில் முழுவதும் என் தலையில்தான்.

காலையில் சாப்பிட்டு விட்டு வெயிலில் நகர்வலம் புறப்பட்டால் மதியம் வீடு வந்து  சேர்வேன் .
அப்போது அங்கு நான்கு திரையரங்கங்கள்தான் இருந்தன.

சக்தி,சென்ட்ரல்,என்.வி.ஜி.பி மற்றும் சோலைஹால்.

சோலைஹாலில் மதியம் ஆங்கிலப்படங்கள் திரையிடுவார்கள்.

நான் சிறுவனாயிருந்தகாலத்தில் என் தாய் மாமா,அவர் என் அக்கா கணவரும் கூட,என்னை ஆங்கிலப்படங்களுக்கு  அழைத்துச் செல்வார்.

முக்கிய படம் தொடங்கும் முன் கார்ட்டூன் படங்கள் திரையிடப்படும்.

அதை நான் மிக விரும்பிப் பார்ப்பேன்.(இப்போது மட்டும் என்ன?!)


அந்த முறை நான் சென்ற போது காலில் கட்டுப் போட்டிருந்தேன்.சில நாட்கள் முன்தான் ஒரு சிறு அறுவை சிகிச்சை.எனவே அதிகம் நடக்க முடியாது.

என் சின்னத்தாத்தா அரசு வக்கீல் ஆதலால்,வீட்டில் பணியாள் உண்டு.

என் மாமா பணியாளிடம் என்னை சைக்கிளின் பின் வைத்துச் சென்று சோலை ஹாலில் விட்டு விடும்படியும் தான் பின்னால் நடந்து வருவதாகவும் சொல்லியிருந்தார்.

பணியாளும் என்ன அழைத்துச் சென்று ஒரு திரையரங்கு வாசலில் இறக்கி விட்டு,அங்கேயே என் மாமாவுக்காகக் காத்திருக்குமாறு சொல்லிச் சென்று விட்டார் .

அவர் சென்ற பின் திரையரங்கின் பெயரைப் பார்த்தேன்.......என்.வி.ஜி.பி....!

அருகிலேயே சோலை ஹாலும் இருக்கும் என எண்ணி சுற்றும் முற்றும் பார்த்தேன்.

வேறு திரையரங்கு எதுவும் இல்லவே இல்லை.

என்ன செய்வதென்று தெரியவில்லை.

மாமா ஒரு வேளை வந்தாலும் வரலாம் எனக் காத்திருந்தேன்....ஒரு மணி நேரத்துக்கும் மேலாக!

யாரும் வரவில்லை.

சரி வீடு திரும்புவோம் எனத் தீர்மானித்து நொண்டி நொண்டி நடந்தே கால் வலியுடன் வீடு திரும்பினேன்.

வீட்டில் சித்தி என்ன நடந்தது என விசாரிக்க,நடந்ததைச் சொன்னேன்.

அது வரை பணியாளும் என்னை என்.வி.ஜி.பியில் விட்டதைச் சொல்லவில்லை .

அவர் எண்ணியிருந்திருக்கிறார்,அங்குதான் போக வேண்டும் என!

மாலை படம் முடிந்து  மாமா திரும்பி வந்து நடந்ததைக் கேட்டு நான் பட்ட கஷ்டத்துக்காக வருத்தப்பட்டாலும்,இதையே ஒரு கேலிக்குரிய செய்தியாக்கிச் சிரிக்க ஆரம்பித்தார்.

அன்று முதல் பல நாட்கள் வரை என்னை “என்.வி.ஜி.பி.லொங்,லொங்”---லொங்கு லொங்கென்று நடந்து வந்ததற்காக—என்றே கேலி செய்ய ஆரம்பித்தனர்.

ஆம்!ஒருவர் துன்பம்;மற்றவர்க்குச் சிரிப்பு!

அதுதானே வாழ்க்கை!

27 கருத்துகள்:

  1. சொன்ன "வாழ்க்கை" உண்மை...

    என்.வி.ஜி.பி. திரையரங்கின் பக்கத்தில் தான் எனது வீடு உள்ளது...

    மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?
      நாகல் நகரில் முன்பு சுப்பையர் சத்திரம் என்று ஒன்று இருந்ததே?
      நன்றி தனபாலன்

      நீக்கு
  2. நான் கூட ‘திண்டுக்கல்லும் நானும்’ என்றதும் வலைப்பதிவர் சந்திப்பின் போது திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுடன் ஏற்பட்ட அறிமுகம் பற்றியோ என நினைத்தேன்.நானும் பொள்ளாச்சியில் பணி புரிந்தபோது அலுவலக வேலையாக திண்டுக்கல் சென்றபோது சென்ட்ரல்,என்.வி.ஜி.பி ஆகிய திரை அரங்குகளில் திரைப்படம் பார்த்ததுண்டு.திண்டுக்கல் வெயிலுக்குப் பிறகு அப்போது கொசுவுக்கும் பெயர் போனது.இப்போது எப்படி எனத் தெரியவில்லை.திண்டுக்கல் அனுபவம் பற்றி சொல்லும்போது வாழ்க்கைத் தத்துவத்தையும் அழகாக சொல்லிவிட்டீர்கள்!பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ஆம்!ஒருவர் துன்பம்;மற்றவர்க்குச் சிரிப்பு!

    அதுதானே வாழ்க்கை!
    >>
    நிஜம்தான் ஐயா! நான் கூட தனபாலன் அண்ணவை சந்திச்சு பதிவா போட்டிருக்கீங்களோன்னு நினைச்சேன்

    பதிலளிநீக்கு
  4. நான் எட்டாம் வகுப்பு படிக்கு பொது சென்றது நான் விஜய் ரசிகாங்க மாறியதும் அங்கு தான் ஏனென்றல் அங்கு தான் நான் போவே உனக்காக படம் பார்த்தேன் திரை அரங்கம் பெயர் கூட நாக-லெட்சுமி என இரண்டு அரங்கங்கள் ஒன்றாக இருக்கும் அங்கு தன முதல் முதலாக 3d படம் கூட பார்த்தேன் மை டியர் குட்டி சாத்தான் ஒரே நாளில் இரண்டு படங்கள் மறக்கவே முடியாது

    பதிலளிநீக்கு
  5. நானும் தனபாலை சந்தித்து இருப்பீர்கள் என்றே உள்ளே வந்தால்.......ஒருவர் வேதனை மற்றவருக்கு சிரிப்பு ஹா ஹா ஹா ஹா இதான் தல வாழ்க்கை.

    வடிவேலு அடி வாங்கும் போது நாம சிரிக்குறோம் இல்லையா.

    பதிலளிநீக்கு
  6. சிறு வயது அனுபத்தை சுவாரசியாமாக பகிர்ந்திருக்கிரீர்கள்

    பதிலளிநீக்கு
  7. அடிபட்ட காலோடு லொங்கு லொங்குன்னு அப்போது நடந்ததை இப்போது நினைத்தாலும் உங்களுக்கு வலிக்கலாம்! அதோடு மற்றவர்கள் அதற்காக சிரித்ததாலும்! :)

    பதிலளிநீக்கு
  8. so true.. இது தனபாலனைப் பற்றிய பதிவு என்று தான் நானும்... சிவாஜி என்றால் இப்போ ரஜினிகாந்த் படம் முதலில் வருவது போல திண்டுக்கல்லுக்கு முதல் அடையாளம் தனபாலன் தான்.
    தியேடர் பெயரை (இனிஷியலை) சொல்லவே மூச்சு வாங்குதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தியேட்டர் பெயெர் மாதிரியே இல்லை அல்லவா?
      நன்றி அப்பாதுரை

      நீக்கு
  9. நொந்த அனுபவத்திலும் ஒரு வாழ்க்கை தத்துவம்! அருமை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. நீங்க சொன்னது உண்மைதான்.திண்டுக்கல் பூட்டு எவ்வளவு பிரசித்தமோ அவ்வளவு பிரசித்தம் தனபாலனும் தான்.இன்று வலைத்தளப் பிரச்சனைகளை தீர்ப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை.என்ன குறை இருந்தாலும் ஜாக்கிரதை போர்டு போல தனியாகப் பதிவிட்டு நம்மை எல்லாம் உஷார் படுத்தி உதவி செய்வதிலும் பரந்த மனது படைத்தவர்.திருவாளர்.திண்டுக்கல்.தனபாலன்

    பதிலளிநீக்கு
  11. நானும் மதுரையில் பணியாற்றியபோது அலுவலக விஷயமாக திண்டுக்கல் சென்று வந்ததுண்டு. எனக்கும் மிகவும் பிடித்த ஊர். சாதாரண ஒரு விஷயத்தை அருமையாக கதைபோல் சொல்லும் உங்களுடைய திறனும் எனக்கு பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்கதை மன்னன் ஜோசப் அவர்களே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. திண்டுக்கல் தனபாலன் அவர்களுடன் நடந்த சந்திப்பு பற்றி எழுதியுள்ளீர்களோ என்று நினைத்தேன்....:)

    லொங் லொங் அனுபவம் அருமை...:))

    பதிலளிநீக்கு