தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூலை 30, 2013

என் அரசியல் அனுபவம்!


இன்று பல பதிவர்கள் அரசியல் பற்றி,அரசியல்வாதிகள் பற்றியெல்லாம் அருமையாக எழுதுகிறார்கள்;விமர்சிக்கிறார்கள்.

உண்மையில் எனக்கு இன்றைய அரசியல் புரிவதில்லை;அதை அலசும் அறிவும் எனக்கில்லை.

ஆனால் நானும் ஒரு காலத்தில் ஒரு அரசியல் கட்சிக்காகப் பிரசாரம் செய்தேன். தொண்டை கிழியக் கத்தினேன்.அந்தக் கட்சியும் வென்றது.

அந்த அனுபவத்தை உங்களுக்குச் சொல்ல வேண்டாமா?

இது நடந்தது 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில்.

அப்போது எனக்கு 7வயது முடிந்து 8ஆம் வயது நடந்துகொண்டிருந்தது.

சாத்தூரில் எங்கள் குடும்பம் வசித்து வந்தது.

அந்த ஆண்டு நடந்த தேர்தலில் சட்டசபைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் திரு.எஸ்.ராமசாமி நாயுடு அவர்களும்,பாராளுமன்றத்துக்குத் திரு. காமராசர் அவர்களும், அபேட்சகர்கள் (அந்நாளில்,சட்டப் பேரவை, நாடாளுமன்றம், வேட்பாளர் என்ற சொல் வழக்குகள் கிடையாது!)

எதிர்க்கட்சி என்று எதுவும் கிடையாது.எதிர்த்து நின்றவர்கள் சுயேட்சை அபேட்சகர்கள்.

என்.ஆர்.கே.கே.ராஜரத்தினம் என்ற தொழிலதிபர்,கூஜா சின்னத்திலும், பா.ராஜாமணி என்பவர் பூ சின்னத்திலும் எதிர்த்துப் போட்டியிட்டனர்.

கான்கிரஸ் கட்சியின் சின்னம்-ரெட்டைக் காளை!

இது எப்படி நடந்ததோ தெரியாது!நாங்கள் வசித்த பகுதியில் இருந்த காங்கிரஸைச்  சேர்ந்த இளைஞர்கள்,என்னைப் பிரசாரத்தில் ஈடுபடுத்தினர்.

விளையாட்டாக ஆரம்பித்தார்களோ என்னவோ,தெரியாது.ஆனால் எனது பிரசாரம் மக்களின் ஆதரவைப் பெறவே என்னையே தினமும் முக்கியப் பிரசாரகனாக ஆக்கி விட்டனர்.

கையில் மெகாஃபோனுடன், தினம் தெருத்தெருவாகச் சென்று.”vote for congress, எஸ்.ஆர்.நாயுடுவுக்கு ஓட்டுப் போடுங்கள்,உங்கள் ஓட்டு ரெட்டைக் காளைக்கே  என்ற
 கோஷங்களுடன்  என் பிரசாரம் சூடு பிடித்தது!

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,ராஜரத்தினத்துக்காக, காங்கிரஸை எதிர்த்து,என் அண்ணன்,என்னை விட 11 வயது மூத்தவர், தேர்தல் பணியில் ஈடுபட்டார்.

சாத்தூரின் எல்லா வீதிகளிலும் நான் அறியப்பட்ட ஒரு முகமானேன்!

ஹெட் மாஸ்டர் பேரனைப் பாரு எப்படிப் பேசுதுஎன்று எல்லோரும் வியந்தனர்!

காங்கிரஸ் வென்றது.

திரு எஸ்..ஆர்.நாயுடு அவர்கள் திறந்த காரில் சாத்தூர் வீதிகளில் வெற்றி ஊர்வலம் புறப்பட்டார். அங்கிருந்த தொண்டர்கள் சிலர் அவரிடம் என்னைப் பற்றிச் சொல்ல அவர் என்னையும் காரில் ஏற்றி விடச் சொன்னார்.

காரில் அவர் அருகில் நான் அமர்த்தி வைக்கப் பட்டேன்! வழியில் போடப்பட்ட மாலைகளில் சிலவற்றை அவர் என் கழுத்தில் அணிவித்தார்!

மக்கள் சில இடங்களில் அவருக்குக் குளிர் பானங்கள் வழங்கும்போது எனக்கும் வழங்கினார்கள்!  திருஷ்டி கழித்தார்கள்!

காரில் போகும் போதே எனக்கு உறக்கம் வர ஆரம்பித்தது!

சில தெருக்களைக் கடந்த பின் அவர் தொண்டர்களை அழைத்து ஏதோ சொல்ல,அவர்கள் என்னைக் காரினின்றும் கீழே இறக்கினார்கள்.சில தொண்டர்கள் என்னை மணி சங்கர் பவன் என்ற ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, இனிப்பு(மைசூர்பாகு),மற்றும் தோசையெல்லாம் வாங்கிக் கொடுத்தனர்.

இரவு வைப்பாற்று மணலில் நடந்த விருந்துக்கு நான் செல்ல இயலவில்லை (சிறுவனாயிற்றே, அந்தநேரம் உறங்கும் நேரம் அல்லவா?!!)

அமர்க்களமான அரசியல் ஆரம்பம் அங்கேயே நின்று விட்டது!



(தொடர்ந்திருந்தால்,இன்று குறைந்த பட்சம் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவாவது ஆகியிருக்க மாட்டேனா?!)

44 கருத்துகள்:

  1. அமர்க்களமான அரசியல் ஆரம்பம் ...!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம், மீண்டும் வந்தேன்.

    // உண்மையில் எனக்கு இன்றைய அரசியல் புரிவதில்லை;அதை அலசும் அறிவும் எனக்கில்லை.//

    தாங்கள் அந்நாளைய காங்கிரஸ் காரர் அல்லவா அதுதான் காரணம்.

    பதிலளிநீக்கு
  3. நல்லவேளை நீங்கள் தப்பித்தீர்கள். இல்லையேல் பிழைக்கத் தெரியாத எம்எல்ஏ என்ற பெயர் வந்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. அரசியல் ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டது!

    பதிலளிநீக்கு
  5. ஐயோ நமது ஜனநாயகம் ஒரு நல்ல அரசியல்வாதியை இழந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  6. அரசியல் தோரணையில் படமும் ...

    பதிலளிநீக்கு
  7. எட்டு வயசிலேயே பெரிய நடிகன்தான்னு சொல்லுங்க!

    பதிலளிநீக்கு
  8. சின்னப் பயலாக இருந்துகொண்டு இவ்வளவு அழகாய் பிரச்சாரம் செய்ததாக
    உங்களைப் பாராட்டியவர்கள் நீங்கள் சம்மதித்திருந்தால் இதுவும் நடந்திருக்கும்
    என்பதில் துளியும் சந்தேகம் இல்லை .மனம் கவர்ந்த கடந்த கால அனுபம் தந்த
    பகிர்வு இதற்க்கு வாழ்த்துக்கள ஐயா .

    பதிலளிநீக்கு

  9. (தொடர்ந்திருந்தால்,இன்று குறைந்த பட்சம் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவாவது ஆகியிருக்க மாட்டேனா?!)

    நிச்சயமாக ஆகியிருப்பீர்கள்.

    ஆனால் வலையுலகம் நல்லதொரு பதிவரை இழந்து ஸ்தம்பித்துப் போயிருக்கும்,. ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஜோக்!
      அப்பவும் பதிவு எழுதியிருப்பேன்!
      நன்றி

      நீக்கு
  10. //தொடர்ந்திருந்தால்,இன்று குறைந்த பட்சம் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவாவது ஆகியிருக்க மாட்டேனா?!//


    அட, நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்களே சார்! சி.எம்மாக்கூட ஆகியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் படித்த கல்லூரியில் படித்தவர்தான் சிறிது காலம் சி.எம்.மாக இருந்தார்!

      நன்றி செங்கோவி

      நீக்கு
  11. மிஸ் பண்ணிட்டேங்களே சார்! சுவையான பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. //தொடர்ந்திருந்தால்,இன்று குறைந்த பட்சம் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவாவது ஆகியிருக்க மாட்டேனா?!)
    //

    ஆகியிருக்கலாம். ஆனால், இன்றைக்கு இருக்கும் நிம்மதி
    இருக்குமா ?படுத்தால் தூக்கம் வருமா ?

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  13. //அழைத்துச் சென்று, இனிப்பு(மைசூர்பாகு),மற்றும் தோசையெல்லாம் வாங்கிக் கொடுத்தனர்.// இப்ப பிரியாணி அப்போ தோசை... கணக்கு சரிதானேஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீனு!சின்னப்பையன்,அதுவும் மரக்கறி உண்பவனுக்குப் பிரியானி வாங்கித் தரமுடியுமா?!

      நன்றி

      நீக்கு
  14. காங்கிரஸ் சின்னம் ஏர்உழவன்.சரிதானே அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஐயா!அப்போது இரட்டைக்காளை சின்னம்தான்.பின் பசுவும் கன்றும் ஆனது! 1977 இல் வென்ற ஜனதாகட்சியின் சின்னம் ஏர் உழவன்!

      நன்றி

      நீக்கு
  15. இதைப் பற்றி முன்பே ஒரு முறை எழுதி இருக்கிறீர்களோ.....

    இன்றைய அரசியல் ஒன்றும் புரிவதில்லை! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வெங்கட்!இப்போது அனுபவங்கள் பற்றி எழுதுவதால் இதையும் தூசிதட்டிப் போட்டு விட்டேன்!
      நன்றி

      நீக்கு
  16. நீங்கள் தொடர்ந்து இருந்தால் எங்களுக்கு ஒரு X-MLA பிளாக்கர் கிடைத்திருப்பார்

    //இரவு வைப்பாற்று மணலில் நடந்த விருந்துக்கு நான் செல்ல இயலவில்லை// அப்படி என்ன சார் விருந்து ... ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் நினைப்பதெல்லாம் அந்தக்காலத்தில் கிடையாது ரூபக்! வெறும் கலந்த சாத வகையறாதான்!
      நன்றி

      நீக்கு
  17. நீங்கள் தொடர்ந்து இருந்தால் எங்களுக்கு ஒரு X-MLA பிளாக்கர் கிடைத்திருப்பார்

    //இரவு வைப்பாற்று மணலில் நடந்த விருந்துக்கு நான் செல்ல இயலவில்லை// அப்படி என்ன சார் விருந்து ... ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  18. பிரதமராவே ஆகி இருக்கலாம் ஐயா!

    பதிலளிநீக்கு
  19. நல்ல வேளை ! தப்பித்தீர்!

    பதிலளிநீக்கு
  20. நல்ல வேலை... தப்பித்தீர்கள் ஐயா!!

    பதிலளிநீக்கு
  21. பெரும்பான்மையான அந்நாள் காங்கிரஸ்காரர்களுக்கு இன்றைய அரசியல் புரிவதில்லை என்பது உண்மை. எல்லாமே ஒரே குட்டையில ஊர்ன மட்டைதானய்யா என்று அன்று காமராசர் கூறியது எவ்வளவு உண்மை!

    பதிலளிநீக்கு
  22. கண்டிப்பாக ஐயா...
    இருந்தும் அந்த சாக்கடைக்குள் போகாமல் தப்பித்து பதிவுலகில் சந்தனமாய் மணக்கிறீர்கள்....

    பதிலளிநீக்கு