தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜூலை 28, 2013

ஹாலிடே ஜாலிடே!..சென்னையில் நான் வாங்கிய முதல் பல்ப்!



முன்பே சொல்லியிருக்கிறேன் என் சென்னைக் காதல் 1964 இல் தொடங்கியது என்று.

விவேகானந்தா கல்லூரி விடுதியில் குடி புகுந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன.

விளக்கு விசையைப் போட்டதும்,பல்ப் உயிரை விட்டு விட்டது.

வார்டனிடம் சொன்னேன்.

பல்பெல்லாம் நாங்களேதான் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டார்.

உடனே லஸ் சென்று,மின் சாதனக் கடையைத் தேடி ஒரு பிலிப்ஸ் 
ஆர்ஜெண்டா பல்ப் வாங்கி வந்து மாட்டினேன்.

அதுதான்  சென்னையில் நான் வாங்கிய முதல் பல்ப்!.... 

இது எப்படி இருக்கு?!..ஹி ஹி ஹி!

கோபித்துக் கொள்ளாதீர்கள்,

இதோ நீங்கள் எதிர்பார்த்த செய்தி…….

கிட்டத்தட்ட அதே காலம்தான்.

சென்னை தாம்பரத்தில் புதிதாக மணமாகி வந்த என் அக்கா கணவருடன் வசித்து வந்தாள்

ஒரு விடுமுறை நாளன்று அங்கு செல்ல விரும்பிப் புறப்பட்டேன்.

மயிலையில்;இருந்து தி நகர் சென்று மாம்பலம் ஸ்டேசனில் மின்சார ரயில் பிடித்துச் செல்ல வேண்டும் எனத் தெரிந்து கொண்டேன்.

தி.நகருக்கு 12 ஆம் நம்பர் பஸ்ஸில் செல்ல வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன்..

விடுதியிலிருந்து கென்னடி தெரு வழியாக லஸ் சர்ச் சாலை வந்து நிறுத்தத்தை அடையும்போதே ஒரு 12 ஆம் எண் பஸ் வருவதைப் பார்த்தேன்.

உடனே பஸ் கிடைத்தது என்ற மகிழ்வுடன் ஏறி நடத்துனரிடம்”ஒரு தி.நகர்” என்றேன்.

அவர் என்னைப் பார்க்காமலே சொன்னார்”அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்கிக்க”

நான் விழித்தேன் ஏனென்று தெரியாமல்.

அருகில் இருந்த ஒருவர் சொன்னார்”சார்!இது தி நகர் போகாது.மைலாப்பூர் போகுது.லஸ்ஸில் இறங்கிச் சாலையைக் கடந்து எதிர் ஸ்டாப்பில் நில்லுங்கள்.தி நகர் பஸ் வரும்!”

அவமானமாகப் போய் விட்டது.

லஸ்ஸில் இறங்கிக் கொண்டேன்.

இது பல்ப்!

ஆனால் சென்னையில் நடத்துனரின் அந்த அலட்சியம்,என்ன காரணம் என்றே சொல்லாமல் இறங்கு என மரியாதையின்றிச் சொன்ன விதம் வியப்பளித்தது. ஏனெனில் ,அது வரை நான் இருந்த தென் மாவட்டங்களில் அப்படிப் பழக்கம் கிடையாது.

இதுதான் சென்னை!

(ஆயினும் சென்னையைக் காதலிக்காமல் இருக்க முடியவில்லை!)

30 கருத்துகள்:

  1. நல்லவேளை அந்த பஸ் கண்டக்டர் “ மெட்ராஸ் பாஷையில் ” ரெண்டு வார்த்தை சொல்லாமல் போனாரே என்று நினைதுக் கொள்ளுங்கள். (சந்திரபாபு, சோ நடித்த பழைய படங்களில் மெட்ராஸ் பாஷையைக் கேட்டது. இப்போது யாரும் அப்படி சொல்வதில்லை. எழுதுவதில்லை. சென்னையின் பித்தனாகிய நீங்கள் அந்த பாஷையப் பற்றி ஒரு ரவுண்டு கட்டுங்கள்)

    பதிலளிநீக்கு

  2. // ஆனால் சென்னையில் நடத்துனரின் அந்தஅலட்சியம்,என்ன காரணம் என்றே சொல்லாமல் இறங்கு என மரியாதையின்றிச் சொன்ன விதம் வியப்பளித்தது.//

    சென்னைக்கே உரித்தான தனிக் குணம் ஆயிற்றே அது!

    அவமானப்பட்டும் சென்னையை காதலிக்கிறேன் என்கிறீர்கள்.காதலித்தால் சில சமயம் அவமானத்தை எதிர் கொள்ளவேண்டும் உங்களுக்கு தெரியாதா என்ன?

    பதிலளிநீக்கு
  3. எங்க ஊரு பக்கம் வா அய்யா போ அய்யா என்று பேசினால் மரியாதை. நீ வா போ என்று பேசினால் மரியாதைக் குறைவு. சென்னைக்கு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்றில் வந்து சேர்ந்ததும் மற்றவர்களிடம் பேசும்பொழுது, அய்யா என்று வந்தாலே - 'யாரைப் பார்த்து இப்பிடி வாய்யா போய்யா என்று மரியாதை இல்லாமல் பேசுகிறாய்?' என்று சண்டைக்கு வந்தார்கள்! பயந்து கொண்டே, நீ வா போ என்று பேசினேன். 'இப்படித்தான் மரியாதையாகப் பேச வேண்டும்' என்று மகிழ்வோடு பேசினார்கள். கிட்டத்தட்ட ஓராண்டு ரொம்பக் கஷ்டப்பட்டேன். அப்புறம் எல்லோரையுமே நீங்க வாங்க போங்க என்று பேசி, ஒரு வழியாக செட்டில் ஆனேன்!

    பதிலளிநீக்கு
  4. பல்ப் பதிவு சுவாரஸ்யம்
    அதுவும் முதலில் வாங்கிய பல்பைச்
    சொன்னவிதம் அருமை

    பதிலளிநீக்கு
  5. எல்லாவற்றையும் கற்றுக் கொ(கெ)டுத்தும் விடலாம்...!

    பதிலளிநீக்கு
  6. இறங்கு -ன்னு மட்டும் சொன்னங்கள அதுக்கு சந்தேசப்படனும் நீ்ங்க... இப்ப கண்டமேனிக்கு வார்த்தைகள் வருகிறது...



    பல்பு Vs பல்பு...ரைட்டு...

    பதிலளிநீக்கு
  7. சோக்கா சொன்னீங்க சொக்கரே.

    பதிலளிநீக்கு
  8. ரெண்டு பல்பும் சூப்பர்தான்! சென்னை கண்டக்டர் அதோடு விட்டாரே! அது உங்க அதிர்ஷ்டம்தான்! எனக்கும் இதே போல முதல் முதல் சென்னை வந்த போது ஏற்பட்டதுண்டு!

    பதிலளிநீக்கு
  9. சென்னையில் வாங்கிய முதல் பல்ப்!..பிரகாசம் ..!

    பதிலளிநீக்கு
  10. செம பல்பு.....

    சென்னை நடத்துனர்களின் மரியாதை உலகறிந்தது..... என்னா மருவாதை! :)

    பதிலளிநீக்கு
  11. இன்று அதே மயிலாப்பூர் குளத்திற்கு எதிர்புறம் (ராயப்பேட்டை வழியில்) தங்கள் வயதையொத்த தம்பதியர் பேரூந்தில் ஏறிக் கொண்டு மந்தவெளி போக பயணச்சீட்டு கேட்கிறார்கள். பேரூந்தில் இருந்த அனைவரும் வழிச் சொன்னார்கள்

    காலம் காலமா உள்ள பிரச்சினை

    பதிலளிநீக்கு
  12. பல்ப்பு அனுபவம் அருமை...
    நடத்துனர்கள் தென்மாவட்டங்களில் சற்று மென்னையாக நடந்து கொள்வார்கள்.... ஆனால் சென்னையில் எப்பவுமே இப்படித்தான்... நல்லவர்களும் இருக்கிறார்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  13. ஹா..ஹா..ரெண்டு பல்புமே சூப்பர் சார்.

    பதிலளிநீக்கு
  14. “உடனே லஸ் சென்று,மின் சாதனக் கடையைத் தேடி ஒரு பிலிப்ஸ்
    ஆர்ஜெண்டா பல்ப் வாங்கி வந்து மாட்டினேன்.

    அதுதான் சென்னையில் நான் வாங்கிய முதல் பல்ப்!....“

    சூப்பர்!!!!

    இது தான் எங்களுக்கு நீங்கள் கொடுத்த சூப்பர் “பல்பு“ங்க.

    பதிலளிநீக்கு
  15. சென்னை பித்தர் ஐயா! அந்த கண்டக்டரின் சொந்த ஊரை கேட்டுப் பாருங்கள் சென்னையாக இருக்காது.ஹஹஹா

    பதிலளிநீக்கு
  16. உங்களுடைய அனுபவத்திற்கு நேர்மாறான அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன். பள்ளி படிப்பை முடித்தகையோடு வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று வரலாம் என்று குடும்பத்தோடு சென்றிருந்தோம். அங்கு ஒரு கடையில் 'என்னய்யா வேணும்' என்று என்னுடைய தந்தையை கேட்டபோது என்னுடைய அண்ணாவுக்கு சுர்ர்ரென்று கோபம் வந்துவிட்டது. உடனே மரியாதையா பேசுய்யா என்றார். ஏனெனில் சென்னையில்தான் வயது பேதமில்லாமல் போய்யா, வாய்யா என்பார்கள். கடைக்காரர் நான் ஏதும் தவறாக கூறவில்லையே 'என்ன ஐயா' என்றுதானே கேட்டேன் என்று விளக்கியபோதுதான் எங்களுக்கு புரிந்தது. தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் அப்படித்தான். தூத்துக்குடியில் அனைவருமே 'அண்ணே' அல்லது 'அண்ணாச்சிதான்' இவர் அவரை அண்ணே என்பார். அவர் இவரை அண்ணே என்பார். தம்பியே இல்லாத ஊர் அது. கடைக்காரர் 'அண்ணா' என்றால் அவருடைய மனைவி 'அக்கா!'. முதன் முதலில் அந்த ஊருக்கு சென்றபோது எனக்கு வேடிக்கையாக இருக்கும்.எனக்கு ஏனோ அந்த பழக்கம் எனக்கு வரவேயில்லை. சென்னையில் இன்றும் தென் மாவட்டங்களில் இருந்து வந்து குடியேறியவர்கள் அதே பாணியில்தான் பிறரை அழைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  17. காலம் மாறினாலும் மாறாத சென்னையின் அழியாச் சின்னங்களாக இருப்பது நடத்துனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள்...

    நான் சென்னையில் இருக்கும் இந்த ஆறு ஆண்டுகளிலேயே நிறைய மொதல் அனுபவங்கள் உண்டு .... இப்ப எதோ 'நம்ம ஆட்டோ' என்ற ஒரு நிறுவனம், புதிய முயற்சி செய்றதா கேள்வி பட்டேன், ஆட்டோ ஓட்டுனர்களின் அனுகுமுறை மாறுதான்னு பார்ப்போம்

    பதிலளிநீக்கு