தொடரும் தோழர்கள்

புதன், மே 10, 2017

ப.க.பு.மொ. 2....சிபிச் சக்கரவர்த்தி

உப்பரிகையில் அமர்ந்து ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார் சிபி.

இன்னும் சில தொடுகைகளே பாக்கி;ஓவியம் முழுமையடைந்து விடும்.

அப்போது பயத்துடன் குரல் எழுப்பியவாறே அவர் மடியில் வந்து விழுந்தது ஒரு வெண் புறா.

அதைத் துரத்தி வந்த  பருந்தொன்று மாடத்தின் சுவரில் அமர்ந்தது.

புறாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

சக்கரவர்த்தி சிபி அதைத் தடவிக் கொடுத்தார்.

திங்கள், மே 08, 2017

பழைய கள்,புதிய மொந்தை!-1..அவ்வையும் அதியனும்

”மன்னா!அங்கே பாருங்கள்.”

மந்திரி காட்டிய இடத்தைப் பார்த்தான் அதியமான்.

இருவரும் சில வீரர்களுடன் குதிரையில் சென்று கொண்டிருந்தனர்

“நெல்லி மரம்.இதில் என்ன புதிதாக?”மன்னன் கேட்டான்.

”அதோ உச்சியில் ஒரே ஒரு கனி இருக்கிறது பாருங்கள்.அது அபூர்வக் கனி.அதை உண்பவர் பல்லாண்டு நோயின்றி வாழலாம்.”

மன்னன் வீரர்களை அனுப்பி அதைப் பறித்து வரச் செய்தான்.

பட்டுத் துண்டில் பொதிந்து கவனமாக எடுத்துச் சென்றான்.

மந்திரி யோசித்தார்”யாருக்குத்தான் நீண்ட நாள் வாழ ஆசை இல்லை?”

அரன்மனையை அடைந்தனர்.

தகவல் கிடைத்தது தமிழ் மூதாட்டி அவ்வையார் காத்திருப்பதாக.

வேகமாகச் சென்றான் ;வணங்கினான்.

”தாங்கள் வந்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது அவ்வை அவர்களே.”

சிறிது உரையாடலுக்குப் பின் அதியமான் நெல்லிக்கனியை எடுத்தான்.

அவ்வையிடம் கொடுத்து இதைத் தாங்கள் உண்ண வேண்டும் என்றான்.

அவ்வை யோசித்தார்.சாதாரணக் கனி என்றால் இவ்வளவுக் கவனமாகக் கொண்டு வந்திருக்க மாட்டான்.கனிவகைகள் பலவற்றை அளித்து உண்ணச் சொல்லும் மன்னன் ஒரு சிறு நெல்லிக்கனியைத் தருகிறான் என்றால் அதில் ஏதோ சிறப்பு இருக்க வேண்டும்.

கேட்டாள் மன்னனிடம்.

அவன் மழுப்பினான்.

வற்புறுத்திக் கேட்கையில் மந்திரி சொன்னார் அதன் மகத்துவம்.

வியந்தாள் அவ்வை மன்னனின் மாண்பு கண்டு.

அந்நேரம் இளவரசன்,சிறுவன் அங்கு வந்தான்

”வணக்கம் அவ்வைப்பாட்டியே”

வணங்கிய பின் தந்தையின் அருகில் சென்று நின்றான்.

சிந்தித்தாள் அவ்வை.

“மன்னா.உன் மகன் மிகுந்த அறிவுக்கூர்மையும் ஆற்றலும் உள்ளவன்.உனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்று உன்னிலும் சிறப்பாகச் செயலாற்ற வல்லவன்.அவன் பல்லாண்டு வாழ்ந்து நாடு செழிக்க வேண்டும் இக்கனியை அவன் உண்பதே சாலச் சிறந்தது.”

மந்திரி ஆமோதித்தார்;மன்னனும் ஏற்றுக்கொண்டான்.

கனியை இளவரசன் உண்டான்!




ஞாயிறு, மே 07, 2017

ஹாலிடே,ஜாலிடே!

அவன் காலை கண் விழிக்கும்போதே இரவு நிகழ்வுக்காக வருந்தி,அதற்குக் காரணம் எதுவோ அதன் மீது எல்லையற்ற  கோபம் கொண்டான்.

அதை எடுத்தான்....ஒரு பெட்டி பியர் போத்தல்கள்.

ஒரு காலி சீசாவை எடுத்து,"உன்னால்தான் என் மனைவியுடன் சண்டை ஏற்பட்டது.ஒழிந்து போ" என்று உடைத்தான்

இன்னொரு காலி சீசாவை எடுத்து,உன்னால்தான் என் குழந்தைகளை அடித்தேன். தொலைந்து போ என்று உடைத்தான்.

மூன்றாவது காலி சீசாவை எடுத்து,உன்னால்தான் அலுவலகத்தில் பிரச்சினை என்று உடைத்தான்

நான்காவது சீசாவை எடுத்தான்.அது திறக்கப்படாமல் இருந்தது"உனக்கு இவற்றில் தொடர்பே இல்லை.ஒதுங்கி நில்" என்று தனியே வைத்தான்!

சனி, மே 06, 2017

பாகுபலியும்,கபாலியும்!

சோற்றுக்குப் பஞ்சமில்லை,குரல் எழுப்பிக் கூப்பிடும் மனிதர்

கிடைப்பதைப் பகிர்ந்துண்ணும் வாழ்க்கை சுகமாக.

பார்த்தது ஒரு  நாள் அக்காகம்,ஆடும் மயிலொன்றை

வண்ணத் தோகை விரித்து ஆனந்தமாய் ஆடும் மயில்

ஆசை வந்தது காகத்துக்குத் தானும் ஆட வேண்டும் என  

வெள்ளி, மே 05, 2017

கொழு கொழு கன்னே......

சென்ற இடுகையின் முடிவில் கண்ணனைத் தவிர மற்ற ஆயர்கள் கையில் இருப்பது ஒரு கோலன்றிக் குழல் இல்லை என்று சொல்லியிருந்தேன்.

அது ஒருகதையை நினைவூட்டுகிறது.

குழந்தைகளுக்கான கதை.

படிக்கப் பொறுமை தேவை

கதை முடிவில் கதையின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வேன்

புதன், மே 03, 2017

மாடு மேய்க்கும் கண்ணே........

”நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு” ஆசிரியர்கள் நன்கு படிக்காத மாணவர்களைப் பார்த்து இவ்வாறு சொல்வார்களாம்.

என் சென்ற பதிவின் இறுதியில் சொல்லியிருந்தேன்”ஆசை இருக்கு தாசில் பண்ண,அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க” என்று.

மாடு மேய்ப்பது மட்டும் அவ்வளவு எளிதா என்ன?ஒரு மாடு என்றால் சரி.இரு மாடுகள் என்றாலே இரண்டும் எதிரெதிர் திசையில் போனால் மேய்ப்பது கடினம்தான்.,பல மாடுகள் என்றால்?ஆடுகளாவது,ஒரு ஆடு செல்லும் திசையிலேயே மற்றவை செல்லும்.”சாஞ்சா சாயிற பக்கமே சாயிற செம்மறியாடுகளா” என்று ஒரு படப் பாடல் உண்டு.மூளையற்று ஒருவர் செல்லும் வழியிலேயே சிந்திக்காமல் செல்லும்   மனிதர்களை செம்மறியாட்டுக் கூட்டம் என்று     சொல்வதுண்டு.மாடுகள் அப்படி அல்லவே.

இறைவனே ஓர் ஆயன்தான்.ஆயர்கள் வாழ்ந்த இடமாதலால் அது ஆயர் பாடியாயிற்று.பசுக்களை மேய்த்துப் பாதுகாத்ததால் கண்ணன் கோபாலன் ஆனான்.ஆனால் அவனுக்கு மேய்ப்பது எளிது.குழல் எடுத்துஒரு கீதம் இசைத்தால் பசுக்கள் எங்கிருந்தாலும் ஓடி வந்து சேர்ந்து விடும்.

மாடுகள் ஒரு செல்வம்.மாடு  என்றாலே செல்வம் என்றும் பொருள் படும்.
“கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு
 மாடல்ல மற்றயவை.”
 என்பார்  வள்ளுவர்.

அக்காலத்தில் மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்.எதிரி தேசத்தின் பசுக்களைக் கவர்வார்களாம்.இது “ஆநிரை கவர்தல்” என்று அழைக்கப் பட்டது.   

இங்கு மேய்ப்பவன் பற்றிப் பேசியதால் என் பழைய கவிதை ஒன்று இங்கு பொருந்தும் என எண்ணி அதைக் கீழே தருகிறேன்.


ஆடுகள்!

மந்தை மந்தையாய்

ஒன்றோடொன்று நெருக்கியடித்து

ஒன்று போல் சென்றாலும்

எல்லாம் ஒன்றல்ல!

குறும்புக்கார ஆடுகள்

வேலி தாண்டிச் சென்று

மேயத் துடிப்பவை

முட்டி விரட்டுபவை

முன்கோபம் கொண்டவை

சாதுவாய்ச் செல்பவை

சண்டைக்கு நிற்பவை

ஆடுகள் பலவிதம்

எல்லாவற்றையும்

மேய்ப்பன் அறிவான்

அவை அவன் சொல்வதைக்

கேட்பினும்,கேளாதிருப்பினும்

 அவனை நம்பினும்,நம்பாவிடினும்

அவை பத்திரமாயிருக்கும்

மேய்ப்பன் இருக்கிறான்

ஏனெனில்

காப்ப்பது அவன் தொழில்

ஆடுகள் மட்டுமல்ல

மாடுகளும்தான்

இடையனின் குரலுக்கும்

குழலுக்கும் மயங்குபவை

அவன் பார்வையில்

பயமற்றுத் திரிபவை

காப்பவர்

எவராயினும்
காப்பது அவர்  தொழில்

எனவே ஆடுகளும் மாடுகளும்

பாதுகாப்பாய்,பயமற்று!



தலைப்பில் சொல்லப்பட்ட மாடு மேய்க்கும் கண்ணே என்ற பாடல் ஒரு பிரபல பாடகி எப்போதும் பாடிக் கைதட்டல் அள்ளும் பாடல்.”மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்” என்று  பாடுவார்.யசோதா,கண்ணனைப் பார்த்துச் சொல்வதுபோல்அமைந்தது.

பாடல் வரி”மாடு மேய்க்கக் கண்ணே நீ போக வேண்டாம்” என்று இருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்.

கண்ணனைத் தவிர மற்ற ஆயர்கள் கையில் இருப்பது ஒரு கோலன்றிக் குழல் இல்லை.



                                                  

திங்கள், மே 01, 2017

கரதலாமலகம்

என்ன இது ஏதோ கரடு முரடான தலைப்பு என்று சிலர் யோசிக்கலாம்.

தமிழ்ப் பதிவில் வடமொழியில் ஏன் தலைப்பு எனச் சிலர் எண்ணலாம்.

நான் எப்போதும் சொல்வதுதான் பதில்.

தலைப்பைப் பார்த்ததும் என்ன சொல்லியிருக்கிறார் என எண்ணத் தூண்ட வேண்டும்.

கரதலாமலகம்...கரதல ஆமலகம்.

கரம் உங்களுக்குத் தெரியும்.

சில பேருந்துகளில் பார்த்திருப்பீர்கள் ஒரு அறிவிப்பு “கரம்,சிரம் புறம் நீட்டாதீர் “என்று

ஆமலகம் என்றால் நெல்லிக்காய்.

இந்தியில் ஆம்லா என்று சொல்வார்கள்(அமலா இல்லை!}

இதைத்தான் தமிழிலும் சொல்வோம் உள்ளங்கை நெல்லிக்கனி என்று.


நமக்குத் தெரிந்தது இரண்டு விதமான நெல்லிக்காய்கள்

பெரிய நெல்லி,அரநெல்லி
   
நெல்லிக்கனி என்று சொல்லும்போது க ண்டிப்பாக சில செய்திகள்நினைவுக்கு வரும்

தமிழ்ப்பாட்டி அவ்வையாருக்கு அதியமான் ஈந்த நெல்லிக்கனி.

சாப்பிட்டால் நீண்டகாலம் வாழ வைக்கும்கனியைத் தான் உண்ணாமல் அவ்வைக்குக் கொடுத்தான் அதியமான்
.
நம்மை வியக்க வைத்தான்.

இன்னொமொரு நெல்லிக்கனி
.
இளம் பிரம்மச்சாரி.

ஒளி வீசும் கண்கள்.

பார்த்தாலே பக்தி ஏற்படுத்தும் தோற்றம்.  
                
“பவதி பிக்ஷாந்தேஹி”என்று பிக்ஷைப் பாத்திரம் ஏந்தி வருகிறார்

ஒரு வீட்டு வாசலில் நிற்கின்றார்.

வறியவர்கள் வாழும் வீடு.

ஒரே ஒரு நெல்லிக்கனி,தாங்கள் சாப்பிடுவதற்காக வைத்திருக்கிறார்கள்.

அதைக் கொடுத்து விடுகிறாள் அவ்வீட்டுப் பெண்மணி.

அவர்கள் நிலை அறிந்த அவர் பாடுகிறார் “அங்கம் ஹரே:  .....”

“மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி...”

கனகதாரா  ஸ்தோத்திரம் பிறக்கிறது.

தங்க நெல்லிக்கனிகளாக அவ்வீட்டில் கொட்டுகிறது.

ஆதி சங்கரரின் அற்புதம்.


  • கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில் பொன்மழைஎன்று கவியரசர் கண்ணதாசனும்,பொன்மாரி என்று உளுந்தூர்ப்பேட்டை சண்முகமும் தந்திருக்கின்றனர்.
,

நெல்லிக்காயின் மகத்துவம்,மருத்துவ குணங்கள் பற்றி எல்லாம் நீங்கள் அறியாததா?

எனவே நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.

எழுதி முடிக்கையில் ஒன்று எனக்குக் கரதலாமலகம் ஆகத் தெரிகிறது.

என்னால் முன்பு போல் எழுத இயலாது என்பது!

சொல்வார்கள்”ஆசை இருக்கிறது தாசில் பண்ண,அதிர்ஷ்டம் இருக்கிறது மாடு மேய்க்க”........

டிஸ்கி:இது நேற்றே வெளி வந்திருக்க வேண்டியது.ஏனெனில் நேற்று சங்கர ஜெயந்தி.

என் மதம் தாமதம்!