தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 07, 2015

ஒரு புடவையின் கதை!



//ஒரு பெண் கைபேசியில் பேசியவாறு நடக்கிறாள்.

கடைக்குப் போயிருந்தீங்களா?எங்கே....அப்படியா?....புடவையெல்லாம் எடுத்தாச்சா?... எனக்கு ஒரு பட்டுப் புடவையா எடுத்திடுங்க....என்ன? செலவாகுமா? எனக்கு ஒரு பட்டுப்புடவை எடுத்தா பணமெல்லாம் போயிடுமோ?....இதோ பாருங்க.நீங்க எனக்குப் பட்டுப் புடவை எடுக்கலேன்னா நான் திருமணத்துக்கே வர மாட்டேன்.சொல்லிட்டேன்

அந்தப் பெண் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாள்? அம்மாவுடனா? அண்ணி யுடனா? யாருக்குத் திருமணம்? அவர்களின் வசதி எப்படி?இவள் ஏன் இப்படிக் கடுமையாகப் பேசுகிறாள்?

இதுவும் ஒரு சிறுகதையாகலாம்!//

இது எனது வானமே எல்லை என்ற இடுகையிலிருந்து…..

இனி கற்பனை………..

கவிதா கணவன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

கவலை தோய்ந்த முகத்துடன்.

அலுவலகத்திலிருந்து களைப்பாக வந்தான் மனோகர்

அவன் முகம் கழுவி வந்து அமர்ந்தபின் சிற்றுண்டித் தட்டைக் கொடுத்தவாறு சொன்னாள் ”இன்னிக்கு உங்க தங்கச்சிக்குத் தொலைபேசினேன்.ராணியோட திருமத்துக்குப் புடவை வாங்கினதைப் பத்திச் சொன்னேன்.அவ தனக்குப் பட்டுப் புடவைதான் வேணும்னு கண்டிப்பாச் சொல்லிட்டா.வாங்கித் தரலைன்னா,திருமணத்துக்கே வர மாட்டாளாம். ”

மனோகர் பெருமூச்சு விட்டான்”அவ பிடிவாதம் தெரிஞ்சதுதானே.வாங்கிக் கொடுத்துத்தான் ஆவணும்”

“இப்பவே அங்க இங்க கடன் வாங்கிச் சமாளிச்சிட்டு இருக்கோம்.இப்படி ஒண்ணு ஒண்ணா ஏறிட்டே போனா என்ங்க செய்றது” கவிதா.

“எப்படியாவது சமாளிப்போம்.நாளைக்கு அவளையும் கூட்டிட்டுப் போய் பட்டுப் புடவை வாங்கி அவ கிட்டக் கொடுத்திடு”

மறுநாள் நாத்தனார் புவனாவைக் கடைக்கு அழைத்துச் சென்றாள் கவிதா.
அங்கு தேடித் தேடி 7000 உரூபாய்க்கு ஒரு புடவை வாங்கினாள்.

அண்ணிியின் மேல் அதை வைத்துப் பார்த்தாள்

“அண்ணி,இது நல்லாருக்கா?”

“நல்லாருக்கு.உனக்கு எடுப்பா இருக்கும்” என்றாள் கவிதா தன் உணர்ச்சிகளை வெளிக் காட்டாமல்.

வீடு திரும்பியதும் புடவையைத் தன் கணவனிடம் காட்டினாள் புவனா.

”அவங்களுக்கு எதுக்கு புவனா இப்படிச் செலவு வைக்கிறே?உங்கிட்டதான் நிறைய பட்டுப் புடவை இருக்கே” என்றான் அவன்

“சும்மா இருங்க.உங்களுக்கு ஒண்ணும் தெரியாது “ அவன் வாயை அடைத்தாள் புவனா.

திருமணத்துக்கு முதல்நாள்.

மதிய உணவுக்கே வரச் சொல்லியிருந்ததால் புவனா தன் கணவன் குழந்தை யுடன்  போய்ச் சேர்ந்தாள்

அண்ணியுடன் பேசிக் கொண்டிருந்தபோது”அண்ணி.உங்களுக்கு ஒரு பட்டு நூல் புடவை வாங்கினதாச் சொன்னீங்களே,அதைக் காட்டுங்க.” என்றாள்

கவிதா கொணர்ந்து புவனா கையில் கொடுத்தாள்

கையில் வாங்கிய புவனா”நல்லாருக்கு அண்ணி.இதை நானே வச்சுக்கறேன்” என்று சொல்லவும் கவிதா அதிர்ந்தாள்;என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தாள்

புவனா தன் கையில் இருந்த பையில் இருந்து ஒரு புடவையை எடுத்தாள்.

அன்று அவள் அண்ணியுடன் போய்த் தேடி வாங்கிய புடவை.

“அண்ணி இது உங்களுக்கு!”

“என்னம்மா? இது உனக்காக வாங்கின புடவை”

”இல்லை அண்ணி.இதை உங்களுக்குக்காகத்தான் வாங்கினேன்.அன்று தொலைபேசியில் நீங்கள் உங்களுக்கு மலிவான புடவை வாங்கியிருப்பதாகச் சொன்னதுமே தீர்மானித்து விட்டேன். உங்களிடம் இருப்பவை ஓரிரு பழைய பட்டுப்புடவைகள் மட்டுமே.மணமகளின் தாய் பட்டு நூல் அல்லது பழைய பட்டுப் புடவை கட்டிக் கொண்டா நிற்பது.எனவேதான் இப்படித் திட்டம் போட்டேன். எப்படி?”என்று சிரித்தாள் புவனா.

கண்ணீர் பெருக அவளைக் கட்டி அணைத்துக் கொண்டு “நீதாம்மா என் மூத்த பெண்” என்றாள் கவிதா.

அன்றைய மதிய உணவு அனைவருக்கும் மிக ருசியாக இருப்பதாகவே தோன்றியது

31 கருத்துகள்:

  1. இதுதான் ஈரைப் பேனாக்கி பேனைச் சிறுகதையாக்குகிற வித்தை.

    பதிலளிநீக்கு
  2. இந்த மா3 நாத்துனாள் எல்லா வீட்டிலும் இருந்தால் ? நலமே... அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  3. பின்னே..மதிய உணவு ருசியதாகத்தான் இருந்திருக்கும்...அய்யா...

    பதிலளிநீக்கு
  4. ஒரு சிறு நிகழ்வை கருப்பொருளாக கொண்டு அதை விரிவுபடுத்தி கதையாக மாற்ற சிலரால் மட்டுமே முடியும். அந்த சிலரில் நீங்களும் ஒருவர். இப்படி உண்மையில் நடந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணமும் ஏற்பட்டது. கதை மனதை தொட்டது. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதை ரசித்து படித்தேன். என்னுடைய பதிவுகள் காலம் பொன்னானது, முட்டை பிரியாணி இரண்டையும் பார்வையிட வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. இன்று முதல் உங்கள் தளத்தின் உறுப்பினராகி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஐயா,
    நல்ல முடிவு, ஆனால் இப்படி இருந்தால் நல்லாதான் இருக்கும்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. கதைக் கண் கொண்டு பார்த்தால்
    எங்கும் கதை
    எதிலும் கதை
    காணக் கொட்டிக் கிடக்கிறது என்பதை
    நிரூபிக்கின்றது ஐயா தங்களின் பதிவு
    நன்றி
    தம+1

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வானமே எல்லை பதிவு படித்து இப்படி ஓர் கற்பனை நான் செய்து வைத்திருந்தேன்! நேரம் சரியாக அமையாமையால் பதிவெழுத முடியவில்லை! அருமையாக எழுதியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. மனதைத் தொட்டு விட்டது...அருமை...

    பதிலளிநீக்கு