தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2015

மீசையும் பாம்புச் சட்டையும்!



நட்பு என்பது என்ன?

எப்போதும் ஒன்றாய்த் திரிவது?

ஒருவர் இன்பமும் ,துன்பமும் தனதாய் மற்றவர் உணர்வது?

தேவையாகும்போது கேளாமலே உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைவது?

வெறும் மகிழ்ச்சியான பேச்சோடு நிற்காமல்,செய்யும் தவற்றையும் சுட்டிக்காட்டி வழி நடத்துவது?

இவையெல்லாம்தான்

ஆனால் இன்னமும் உண்டு.

உரிமை எடுத்துக் கொண்டு சீண்டிப் பார்ப்பது.

அந்நேரங்களிலும் கோபமடையாமல் அதில் உள்ள நகைச்சுவையை ரசித்துச் சிரிப்பது.

கேளுங்கள் ஒருவரின் கதையை.

இவர் சென்னைக் கல்லூரி ஒன்றில் பட்ட மேற்படிப்பில் சேர்ந்தார்.

விடுதி வாழ்க்கை.

முதல் ஆண்டு மாணவர்களுக்குத் தனி அறை கிடையாது.

பழைய விடுதி என்றழைக்கப்பட்ட கட்டிடத்தில் ஒரு பெரிய அறை .அதில் இவருடன் இன்னும் மூன்று பேர்.  ஒருவர் மட்டும் பொருளாதார மாணவர்.

அவர் பெயர் கருப்பையா.

அவருக்கு ஒரு பழக்கம்.எப்போதும் மீசையைத் தடவிக் கொண்டே இருப்பார்.

நம்மவருக்கு ஒரு ஆசை.இவர் மீசை இல்லை என்றால் என்ன செய்வார் பார்க்கலாம் என்று.

ஓரிரவு

கருப்பையா மீசையுடன் படுத்து உறங்கச் சென்றார்

காலை எழுந்தார் .

மீசையைத்தடவிப் பார்த்தால் ஒரு பக்கம் மட்டுமே மீசை இருந்தது.

கண்ணாடியை எடுத்துப் பார்த்தார்.

ஒரு பக்க மீசையுடனான முகத்தை!

எதுவும் பேசவில்லை.

சவர அலகை எடுத்தார்

மீதி மீசையையும் மழித்தார்.

நம்மவருக்கு உறுத்தியது.

“கருப்பையா,என்ன ஒன்றுமே கேட்கவில்லை?”

“ஏன் கேட்க வேண்டும்?உம்மைத் தவிர யாரையா இதையெல்லாம் செய்வார்கள்?” என்று சிரித்தவாறே சொன்னார்.

அது நட்பு!

இதே மாணவர்.

இரண்டாம் ஆண்டு.

தனியறை.

அதே மாடியிலேயே முதல்அறையில் இருந்தார் ஒரு மிகவும் சாதுவான மாணவர்,

பெயர் சீனிவாசமூர்த்தி

ஒரு நாள்.நம்மவர் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகையில் ஒரு பாம்புச் சட்டையைக் கண்டார்.

மின்னல் போல் ஓர் எண்ணம்.

அதை எடுத்தார்.

அறை நோக்கி நடந்தார்‘ 

சீனிவாசமூர்த்தியின் அறை பூட்டியிருந்தது.

சாளரம் வழியாக அப்பாம்புச் சட்டையை உள்ளே போய் விட்டுப் போய் விட்டார்.

சீ.மூர்த்தி வந்து கதைவைத் திறந்தார்

பாம்புச் சட்டையைப் பார்த்தார்.

அஞ்சிப் பின் வாங்கினார்.

கூட்டம் கூடியது.

விடுதி வேலைக்காரர் வந்து அதை எடுத்துப் பார்த்து விட்டு  “ஈரமாக இருக்கிறது;இப்போதுதான் கழட்டியிருக்க வேண்டும்” என்று கூறி விட்டு அறையெல்லாம் தேடி விட்டுப் பின்,பொதுக் குளியலறைகள்  பக்கமும் போய்ப் பார்த்தார்.

சீ.மூர்த்தி அறைக்குள் போகவே மறுத்து விட்டார்.

காப்பாளரிடம் சென்று கூறி வேறு ஏற்பாடு செய்ய வேண்டப்போவதாகச் சொன்னார்.

நம்மவருக்குக் கொஞ்சம் நடுக்கம்!

அவரைத் தன் அழைக்கு  அழைத்துச் சென்று,தனியாக நடந்ததைக் கூறி வருத்தப்பட்டார்.

சீ.மூர்த்தி எதுவும் சொல்லாமல் தன் அறைக்குப்போய் விட்டார்.

மறுநாள் காலை.

நம்மவர் அறைக்கதவு தட்டப்பட்டது

திறந்தார்

சீ.மூர்த்தி!

சிரித்த முகத்துடன்.”ஆனாலும் உமக்குக் குசும்பு அதிகம்.எதில் விளையாடுவது என்றில்லையா” என்று கேட்டார்

இன்று வரை நட்பு தொடர்கிறது!

காரணம் புரிந்து கொள்ளுதல்.நம்மவர் குறும்புக்காரர் என்றாலும் நண்பர்கட்காக எதையும் செய்யக்கூடியவர் என்பது அவர்களுக்குத் தெரியும். 


அது நட்பு! 

இணையக் கோப்பெருஞ் சோழர்களுக்கு இப்பிசிராந்தையின்,இனிய நட்பு நாள் வாழ்த்துகள்!




26 கருத்துகள்:

  1. இதுவல்லவோ நட்பு...

    அந்த குசும்புக்காரர் யார் என்பது புரிகிறது...! (ஹிஹி)

    பதிலளிநீக்கு
  2. எவ்வளவு பொறுமை . வேறு யாராக இருந்தாலும் நட்பு முறிந்திருக்கும்.
    நட்புக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. புரிந்து கொள்ளல்
    நட்பின் மேன்மை
    நன்றிஐயா

    பதிலளிநீக்கு
  4. ஆஹ இதுதுவல்லவோ நட்பு அருமை அருமை ! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  5. ஆம்,

    எதையும் தாங்கும் நட்பு.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. நட்புக்கு இலக்கணம் புரிந்துகொள்ளலே!

    பதிலளிநீக்கு
  7. நட்பின் சிறப்பை அழகாக உணர்த்தி விட்டீர்கள்! அருமை!

    பதிலளிநீக்கு
  8. நினைவுகள்.. உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  9. ஊரில் இல்லாததால் வலைப்பக்கம் வரவில்லை. நண்பர்கள் நாளன்று பழைய நினைவுகளை கொண்டுவந்து நட்பின் சிறப்பை பகிர்ந்தமைக்கு நன்றி. நாள் கடந்தாலும் நண்பர் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு