தொடரும் தோழர்கள்

வியாழன், நவம்பர் 08, 2012

நாயுள்ளம் --2

இக்கதையின்முதல் பகுதி நாயுள்ளம் என்ற தலைப்பில் மூன்று பகுதிகளாகவெளி வந்தது. முடிந்தால் அதை முதலில் படித்து விடுங்களேன்.

பம்மலில்  வெங்கியின் வீட்டில் டாமிக்கு  ஒன்றுமே பிடிக்கவில்லை.    பாஷ்யம் அய்யங்காரின் வீடு இரண்டு  கிரௌண்ட் மனையில் ஆயிரத்து  ஐநூறு  சதுர அடிக்கு  மேல் காலியாக  விட்டுக் கட்டப் பட்ட வீடு.

டாமியை  மத்தியான வேளையில் (12-3 மணிவரை) மொட்டை  மாடியில்  உள்ள ஒரு  நிழல் பகுதியில் தூங்க விடுவார்கள்.  மாலை  3  மணிக்கு வாசலில்  போர்டிகோவில் மழை  மறைவு பகுதியில் காவலுக்காக கட்டிப்போடுவார்கள்..  பெருக்கித்  துடைத்து  சுகாதாரமாக   காற்றோட்டத்துடன்  இருந்தாலும்  நடராஜன்  வீட்டு  சுகம்  டாமிக்கு  பம்மலில்  கிடைக்கவில்லை. 

டாமியை  காலையில்  வெங்கியோ அல்லது அவர் தந்தையோ வெளியே கூட்டிச்சென்று காலை கடனை முடிக்கச்செய்து போர்டிகோவில் கட்டி  விடுவார்கள். சில  சமயங்களில் காலி  இடத்தில்  நன்றாக இளைக்க ஓட விடுவார்கள்.   வெங்கியின்  பாட்டி தான்  சாப்பாடு வைப்பாள்.  வெங்கி  ஒருவனால்தான் டாமி விரும்பும்  அளவிற்கு  அன்பு செலுத்த முடிந்தது.   வெங்கி மாலையில்  சீக்கிரமே வீடு  திரும்பினால் டாமிக்கு  மாலை  நடை உண்டு. சோக்கர்  பெல்ட்  போடாமல்  தன்னிச்சையாக,  மிடுக்காக வெங்கியுடன்  நடை போடும்.   (சோக்கர் பெல்டை  கோபத்தில்  கடித்து பொடித்து விட்டது  டாமி.)  வேலைக்காரியின்  10  வயது பையன்  ராமு டாமியின்  ரசிகன்.  பக்கத்தில்  சில  சாமான்கள் வாங்கப்  போகும்போது டாமி  கூடப் போகும்.  ராமுவில்  வருணைக் கண்டது   டாமி. 

ராஜா என்ற 80 சதவிகிதம்  வெள்ளையும் 20  சதவிகிதம் ஆங்காங்கே தெளித்து விடப் பட்ட கருப்பையும்  நிறமாகக்  கொண்ட   நட்புமிக்க நாய்,  ராமுவின்  தெருவில்  சுற்றும்  ராஜா,  ராமுவுடன்  டாமியை  வந்து  பார்த்து  வெங்கி வீட்டாருக்கு தெரியாமல் டாமியின்  நட்பை வென்றது. 

“ஏன்  ஜாலியாக  இல்லாமல்  வருத்தமாகவே இருக்கே”

“வேறென்ன பண்றது.  வளமாக வளர்ந்து  இங்கே வந்து மாட்டிக்கிட்டேன். முன்னே  இருந்த  வீட்டு  மனுஷங்களை  மறக்கவே  முடியல.”

“ஏன்  மனுஷங்க மாதிரி  இருக்கே.  நாய்  மாதிரி இருக்கப்  பழகு.    கிடைச்சா  கஞ்சித்தண்ணி  கிடைக்காட்டா  குழாய்த்தண்ணி.  பைரவனை  நம்பு.  வயத்துக்கு  சோறு  எப்படியாவது  கிடைக்கும். நீ  ஜம்முனு  கொழு  கொழுன்னு கமல்  அஜீத்  கணக்கா   ஷோக்கா இருக்கே.   அதனால் தான்  உன்  படம் போட்டு  கதையெல்லாம்  கம்ப்யூட்டரில்  வந்திருக்கு.”

“என்  கதையே   கந்தலா இருக்கு.  இதிலே  என்னைப் பத்தி  கதை  வேறயா”.

“நீ  எங்கே  பிறந்த  தெரியுமா.”

“சொல்லேன்”

“பெங்களூரு.  ரயில்  ஏறி  சென்னை  வந்தே.  காவிரி பிரச்சனை வந்தா உனக்கு  ஆபத்துதான்.”

“ஏன்”

“கர்நாடகத்தில் இருந்து  வந்தவங்க எல்லாரையும்  உதைப்பாங்க.”

“காவிரி  நீர்  வரலாம்.  மத்தவங்க வரக்கூடாதோ”

“உங்க ஊர்காரங்களும்  அப்படித்தான்.”

“எனக்கு  எந்த ஊர்னு இப்பதான் தெரியும்.  அதைவிடு என் கதைக்கு  வா.”

“பார்க்லே  யார் மீதோ  பாயப்  போனயாமே”
ஆமாம். அந்த  ஆளப் பாத்தா தமாஷா  இருந்தது. சிவப்பு  நிறத்தில டிரஸ்  பண்ணிகிட்டு பயப்படற  லுக்கு  விட்டான்.   விட்டேன்  ஒரு  பாய்ச்சல். “

“நடராஜன்  ஸாருக்கு  எவ்வளவு பேஜார்  ஆயிருக்கும்.   அதுதான்  சோக்கர்  பெல்ட்  போட்டு  கிரிப்பிலே வச்சிக்கிட்டார்.  ஏன்  அந்த அம்மாவை  சாப்பிடாம  சிரமப்படுத்தினே?”

“ராகி  தோசை  தினமும்  சாப்பிடறது  போர்”

“ரோஸ்  மில்க்  கொடுத்தாங்களே”

“தினமும்  எதிர் பார்க்க முடியுமா அந்த  பெடிக்ரியிலே  டேஸ்டே  இல்லை.  ஆவின்  பால்  நல்லாதான்  இருந்தது.”

“உனக்கு  எவ்வளவு  திமிறு.  நாங்கல்லாம்  சாப்பாட்டுக்கே எவ்வளவு  கஷ்டப்  படுறோம்  என்று  தெரியுமா.”

“நானும்  ஒழுங்காத்தான்  இருந்தேன்.  ரொமப  ராங்க் எல்லாம்  பண்ணல.”

“பின்ன ஏன்  கலாட்டா  பண்ணாதபோது  வெளியே வந்துட்டே.”

“அது  ஒரு  பெரிய  கதை.   ராத்திரியிலே  அங்க ஆள் நடமாட்டம்  ஜாஸ்தி.  தொண்டையே  வரண்டு போற அளவுக்கு  குரைக்க வேண்டியதாக  இருந்தது.  நான் அளவுக்கு  அதிகமா குரைக்கிறேன்னு  பேரை  கெடுத்துக்கிட்டேன்.”

“அப்பறம்”

“சில சமயம்  அவசரமா வந்தால்  ஒண்ணுக்கு  ரெண்டுக்கு  போயிடுவேன்.  கேட்கணுமா கோபம்  வர்றத்துக்கு.”

“அதுதான்  நாயை  குளிப்பாட்டி  நடு  வீட்டுலே விட்டாச்சுன்னா என்று  பெரியவங்க  சொல்லுவாங்களே.  கடைசியா ஒண்ணே  ஒண்ணு  கேட்டுட்டு  போயிடறேன்”

“என்ன?”

“அது  எப்படி  வெங்கியோட ஒட்டிகின”

டாமி  சிரித்தது. 

“நீ  தமாஷா  பேசற ராஜா.  ஒரு  மாசம்  கழிச்சு மனச விட்டு  சிரிக்க  வச்சுட்டே.”

“இப்படித்தான் சிரிச்சிகிட்டு,  குரைச்சிகிட்டு  ஜாலியா இருக்கனும்.”

“நான்  மாடிப்  படியிலே இருந்தேனா,  கீழ்  வீட்டு  டிவி  மேல் வீட்டு டிவி சத்தம்  ரெண்டும்  சேந்து நல்லா  கேக்கும்.  ஒரு நாள் மாடிப்படி  மாது  என்ற வசனம்  அடிக்கடிக்  கேட்டது.”

“மாதுன்னா பொம்பளை  ஆச்சே”

“இந்த  மாது  ஆம்பிள. மாதவனைத்தான் மாதுன்னு சொல்றாங்க”

“யாரு ஒரகடமா   அல்லது   ஜாய்  அலுக்காஸா”

“இல்லப்பா,  சிரிப்பு  காட்டுவாரே.  அவர் தான்  இதுல  மாது.  அவரை ஒரு  லூசுக்கு  கல்யாணம்  கட்ட  திட்டம்  போடுவாங்க.   நாயர்னு  ஒத்தர்  வருவார்.  அவரும்  மாதுவும்  ப்ளான் பண்ணி  அந்த லூசையே தான்  லவ்  பண்ணிட்டா எப்புடின்னு மாது கேட்க,  நாயர்   செய்யு  அப்படின்னுட்டான்.   அதே ஐடியாவைத்தான்  நான்  வெங்கி  மீது  அப்ளை  பண்ணேன்.”

“படா  ஷோக்கா  இருக்கே .   யாரு மச்சி  இதெல்லாம் சொல்லிக்  கொடுத்தாங்க.”

“வாழ்க்கையிலே  எதிர்  நீச்சல் போடணும்னா இதெல்லாம்  பண்ணணும்.”

“நீச்சலே  தெரியாது.  இதுல எதிர் நீச்சல்  வேறயா.  இன்னும்  உன்னோட  ஐந்து நிமிஷம்  இருக்கலாம். இது  தான்  லாஸ்ட்  ஆஃப் தி   லாஸ்ட்.  நீ  ஏன் நடராஜன்  குடும்பத்தை  விட்டு  பிரிஞ்சே தெரியுமா.

“தெரிஞ்சா சொல்லேன்.  நீதான்  என்  கதையை  விரல்  நுனிலே வச்சிருக்கயே.”

“அஷ்டமத்தில்  சனியாம்  உனக்கு.”

“என்ன  பண்ணலாம்.”

“நான்  இப்ப  பக்கத்திலே  ஆஞ்சனேயர்  கோயிலுக்குத்தான்   போறேன்.  அவரை  கும்பிட்டுக் கிட்டா  நிவர்த்தின்னு  அர்ச்சகர்  சொல்றதை  கேட்டுருக்கேன்.   பிரசாதத்திலே  மீந்து  போனா பொங்கல்  புளியோதரையை இந்த பைரவனுக்குத்தான்  படைப்பா.  நல்ல  ஐயா.  இன்னோன்னு.  அந்த  கோயிலிலே  நவகிரஹமும் இருக்கு.  உனக்காக  மூனு தபா  சுத்தி  வேண்டிக்கறேன்.  என்ன  வேண்டுதல் உனக்கு?”

“நடராஜ  ஐயா திருமப வந்து  இட்டுக்கினு  போனா  அதுவே  போதும்.   அவருக்கு  தொண்டு  செய்து  கண்னை  மூடிடுவேன்.”

“கண்ணை  மூடுறதுன்னா நீ என்னென்னு  நினைச்சுகிட்டு  இருக்கே.   என்  நண்பன் பாபு கவனக்குறைவா  சாலையைத் தாண்டி கார்ல அடிபட்டு  ரத்தம்   எல்லாம்  வந்து கண்ணு  சொருகிடுத்து.”

“நான்  தூங்கறதுன்னு   நெனைச்சேன்.”

“சினிமா ஒலிச்சித்திரம் கேட்டு அர்த்தம்  தெரியாம பெனாத்தாதே.  அழுகையா  வருது”

“மன்னிச்சிக்கோ  மச்சி”

“நாளைக்கு  எங்க  ஏரியா நாய்  சங்க கூட்டம்.    சங்கீதா  ஹோட்டல்  சந்திலே  10 மணிக்கு  ஆரம்பம்.   லஞ்சோட  முடிஞ்சுடும்.”

“சாப்பாடு  சங்கீதாவில்  தானே”

“அப்படித்தான்னு வச்சிக்கோயேன்.  நாளைக்கி  வெங்கி இருப்பான். நாள  கழிச்சி  இதே நேரத்திலே  நிறைய  பேசலாம்.   கறி   கொண்டுவந்தா  சாப்பிடுவயா?”

“அய்யய்யோ.  நான்  நடராஜன்  ஐயா  நினைக்கிறபடி   சைவமாகத்தான்  இருப்பேன்”

“சும்மா டேஸ்ட்டுக்குத்தானே”

“என்  மனச்சாட்சிப்படிதான்  நடப்பேன்.” 

“வாழ்க்கையிலே  எல்லாத்தையும் ரசிக்கனும்.  இன்னும்  நிறைய  இருக்கு . அப்பாவி  டாமியே” என்று கேட்டில்  கிரில்  ஒடிந்து  போன இடுக்கு  வழியாக நுழைந்து  நடை  போட்ட்து  ராஜா.

டாமி  சிவனே என்று சிதம்பர  நாதனை  நினைத்து படுத்துக் கொண்டது.   

‘என்னை  போய்  கமல், அஜீத்  என்று  ராஜா வர்ணிக்கிறது.   ராஜா  தான்  பத்மஸ்ரீ  விவேக்.  பொது  அறிவு  ஜாஸ்தி’   தன்னை  பலான நாயாக ஆக்கிவிடுமோ  என்று  பயந்தது.

நாளை மறு நாள்  பலானது  என்றால்  சரியான அர்த்தம் என்ன என்று  ராஜாவைக்  கேட்கணும்  என்று  நினைத்துக்  கொண்டே  வெங்கியின்  பாட்டி  கொண்டுவரும்  தயிர் சாதத்திற்காக  காத்துக்  கொண்டிருந்தது.

(இன்னும் வரும்)


    

6 கருத்துகள்:

  1. நாயின் நட்புரொம்ப சுவார்சியமாத் தான் போகுது

    பதிலளிநீக்கு
  2. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. துசு தட்டப்பட்ட பதிவு
    தொடருங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  4. “ஏன் மனுஷங்க மாதிரி இருக்கே. நாய் மாதிரி இருக்கப் பழகு.

    நல்ல உள்ளம் நாயுள்ளம் ...!

    பதிலளிநீக்கு