தொடரும் தோழர்கள்

செவ்வாய், நவம்பர் 16, 2010

குட்டிக் கவுஜகள்!

புயல் அறிவிப்பால்
கடலுக்குப் போகவில்லை..
தண்ணீர்-
கடலில் மட்டுமல்ல
கஞ்சிக் கலயத்திலும்தான்.

-*-*-*-*-*-*-*-*-*-*-
நாய் விற்ற காசு குலைக்காது
ஆனால்
அக்காசில் வாங்கிய செருப்பு
கடித்தது!

-*-*-*-*-*-*-*-*-*-*-

திங்கள், நவம்பர் 15, 2010

காதல்-திருக்குறள் கதை-பகுதி-2

அந்த நாளுக்குப்பின் குமாருக்கு உலகமே வெறுமையாய்த் தோன்ற ஆரம்பித்தது. ”எங்கெங்கு காணினும்” அவளே தெரிந்தாள்.நோயால் பீடிக்கப் பட்டவன் போல் ஆனான்.எதிலுமே பிடிப்பில்லாத ஒரு நிலையில் இருந்தான்.

ஒரு வாரத்துக்குப் பின்-
ஞாயிறன்று தவிர்க்க முடியாத ஒரு திருமணத்துக்குப் போக நேர்ந்தது.வேண்டா வெறுப்பாகத்தான் சென்றான்.மண்டபத்தில் நுழைந்து,தெரிந்த சிலரிடம் பேசியவன்,மேடைப்பக்கம் நகர்ந்தான்.சென்று கொண்டிருந்தவன் திடீரென்று நின்றான்.அவள்! அவளேதான்!ஒரு வாரமாக அவனைப் பிடித்திருந்த நோய் நீங்கியது போல் உணர்ந்தான்.உள்ளத்தின் வெறுமை நீங்கி மகிச்சி பொங்கியது.

“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து,”

(நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன;ஆனால் அணிகலன்கள் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.)

அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.அவன் பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது. அவளுடன் பேசிக்கொண்டிருந்த இருவர் அகன்று விடத் தனியாக விடப்பட்ட அவள் திரும்பினாள்.அவள் பார்வை அவன் மீது விழுந்த அதே நேரத்தில் அவன் அவளை நெருங்கி விட்டான்.

”ஹலோ!”
”ஹாய்!”
” நான் குமார்-அஷ்வின் குமார்.சி.டி.எஸ் ஸில் வேலை பார்க்கிறேன்”
“காயத்ரி-டி.சி.எஸ்.
”அன்று நகர் மையத்தில் பார்த்தபின் இவ்வளவு விரைவில் உங்களை மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை”
அவள் லேசாகச் சிரித்தாள்.அவள் அழகிய கண்களும் சிரித்தன.
சிரிக்கும்போது அவள் அழகு கூடுகிறது என்று எண்ணினான்.(என்ன அழகு,என்ன அழகு!)

“முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு”

(மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி;முத்தே பல்;இயற்கை மணமே மணம்;வேலே மை உண்ட கண்.)

“பெண் வீட்டார் எனக்குத் தூரத்துச் சொந்தம்”-அவன்.
“பிள்ளை வீட்டார் எனக்குத் தூரத்து சொந்தம்”-அவள்

அவன் சிரித்தவாறு சொன்னான்”தூரத்து உறவினர்கள் வீட்டுத் திருமணத்துக்கு வந்த நாம் பக்கத்தில் வந்து விட்டோம்”.

அதன் பின் பேசினார்கள்,பேசினார்கள்,பேசினார்கள்--.சேர்ந்தே மேடைக்குச் சென்று பரிசுகளைக் கொடுத்தார்கள்;சேர்ந்தே சாப்பிடப் போனார்கள்.உறவினர்களிடம் விடை பெற்றார்கள். மண்டபத்தின் வாசல் வரை சேர்ந்தே வந்தார்கள்.

”மறுபடியும் எப்போது சந்திக்கலாம்?”அவன் கேட்டான்.
“ஏன் சந்திக்க வேண்டும்?’அவள் குறும்பாகக் கேட்டாள்.உடனே அவன் முகம் வாடியதைக் கண்டு சிரித்தவாறே சொன்னாள்”வரும் ஞாயிறன்று ஆர்ட் காலரியில் ஒரு ஓவியக் கண்காட்சி இருக்கிறது.காலை 10 மணிக்கு அங்கு இருப்பேன்."

அவன் சொன்னான்”அன்று அங்கு வருபவர்களுக்கு பிரச்சினைதான்-உயிரில்லாத ஓவியங்களை பார்ப்பதா அல்லது உயிருள்ள ஒவியத்தை ரசிப்பதா என்று”

அவள் அவன் தோளில் செல்லமாகத் தட்டி விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டாள்.

அவன் அவள் தட்டிய இடத்தைத் தடவிக் கொண்டே இருந்தான்.அவள் போவதை பார்த்துக் கொண்டே நின்றான்.
” என்ன மென்மையான தொடுகை!ஒரு பூவால் தட்டியதைப் போல் ஒரு தொடுகை!எவ்வளவு மென்மையானவளாக இருக்கின்றாள் இவள்!”எண்ணினான்.

“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்”
(அனிச்சப்பூவே!நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்!நீ வாழ்க!யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லிய தன்மை உடையவள்.)

ஒரு பெருமூச்சு விட்டான்.அடுத்த ஞாயிறுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.

காத்திருப்பதும் ஒரு சுகம்தானே?

(உங்களுக்கும்தான்!)

வெள்ளி, நவம்பர் 12, 2010

காதல்-திருக்குறள் கதை

குமார் மென் பொருள் துறையில் பணி புரியும் ஓர் இளைஞன். சென்னையில் பிரம்மச்சாரி வாழ்க்கை.உடற்பயிற்சி யெல்லாம் செய்து உடலை முறுக்காக வைத்துக் கொண்டிருப்பவன்.கவர்ச்சியானவன்.ஒரு விடுமுறை நாளில் மிகவும் போர் அடிக்கவே ’நகர் மைய’த்துக்குச் சென்று சிறிது வேடிக்கை பார்த்து வரலாம் எனப் புறப்பட்டான். அங்கு நல்ல கூட்டம்,வேடிக்கை பார்க்க வந்தவர்,ஏதாவது வாங்க வந்தவர்,திரைப்படம் பார்க்க வந்தவர் என்று.அங்கு இருக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டே வந்தவனின் பார்வை ஓரிடத்தில் நின்றது.அங்கே ஒரு பெண்கள் கூட்டம்.
அக்கூட்டத்தில் ஒரு பெண் தனித்துத் தெரிந்தாள்.அவள் அழகைப் பார்த்து அவன் பிரமித்து நின்றான்.

“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு”
(தெய்வப் பெண்ணோ!மயிலோ!கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ?என் நெஞ்சம் மயங்குகின்றதே)

அவள் அழகைப் பார்த்துப் பார்த்து ரசித்தான்.தலை முதல் கால் வரை பார்த்தான்.பின் மீண்டும் காலிலிருந்து தலை வரை மெள்ள அவன் பார்வை நகர்ந்தது.நடுவில் நின்றது,பார்த்தான்;பிரமித்தான்!

“கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
(மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் ஆடை,மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது)

அவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தபோது,அவளின் பார்வை அவன் பக்கம் திரும்பியது.அவள்கண்களை நேருக்கு நேர் பார்த்த அவன் ஒரு மின்னல் தாக்கியது போல் உணர்ந்தான்.

“நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து.”
(நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானேதாக்கி வருத்தும் அணங்கு,ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது)

இருவர் கண்களும் சில நொடிகள் கலந்து நின்றன.பின் அவள் தன் பார்வையைத்திருப்பிக் கொண்டாள்.குமாரும் அவளையே வெறித்துப் பார்த்தபடி நிற்பது கூடாது என்று சற்றே வேறு பக்கம் திரும்பினான்.மீண்டும் பார்வையை அவள் பக்கம் திருப்பினான்.அது வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவள்,தன் பார்வையைத் விலக்கினாள்.தலை கவிழ்ந்தாள்.

“யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”
(யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்;நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத்தனக்குள் மகிழ்வாள்).
இந்தப் பார்வை விளையாட்டு சிறிது நேரம் தொடர்ந்தது.அவன் அவளுடன் பேச விழைந்து,அவளை நோக்கி நடக்க முற்பட்டபோது,அவள் தன் தோழிகளுடன் அங்கிருந்து,புறப்பட்டு விட்டாள்.அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.சிறிது தூரம் சென்ற பின் அவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.மெல்லச் சிரித்தாள்.
பின் அவன் இதயத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

(இடைவேளை!)

திங்கள், நவம்பர் 08, 2010

வாங்க பழகலாம்--ரௌத்திரம்

ரௌத்திரம் பழகென்றான் பாரதி
உண்மைதான்
பழகத்தான் வேண்டும்
பழக்கமில்லாத எதுவும் பழகத்தான் வேண்டும்
சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
கை பழகப் பழகத்தான் சித்திரம் வரும்
நா பழகப் பழகத்தான் செந்தமிழ் வரும்
மனம் பழகப் பழகத்தான் ரௌத்திரம் வரும்
நாமெல்லாம் பழகி விட்டோம்-
ரௌத்திரமல்ல!
சகிப்புத்தன்மை-ஆம்
புரையோடிப் போய் விட்ட சமூக அவலங்களை நாம்
பழகி விட்டோம் சகித்துக்கொள்ள!
சூழ் நிலையின் கைதிகளாய் வாழ்ந்து
பழகி விட்டோம் சகித்துக் கொள்ள!
நரி இடம் போனால் என்ன,
வலம் போனால் நமெக்கென்ன
நம்மைத்தாக்காதவரை என்னும் மனப்பாங்கால்
பழகி விட்டோம் சகித்துக் கொள்ள!
எல்லோரும் காந்தியா என்ன?
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னமும் காட்டுவதற்கு!
நமது நேர்மையில் குறையில்லாத போது
ஒரு கன்னத்தில் அடித்தால்
திருப்பி ஒரு கன்னத்திலேனும்
அடிக்கும் துணிவு வர,
ரௌத்திரம் பழகு!
எளியோரை வலியோர் வாட்டினால்
வலியோரை வாட்ட வராது இன்று தெய்வம்!
எளியோர்க்குத் துணை போக
உடல் வலிமை பெற வேண்டும்
பெற்றாலும் வேண்டும் மன வலிமை
அவ்வலிமை பெற வேண்டி
ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!

வாங்க பழகலாம்!!

சனி, நவம்பர் 06, 2010

உதயசூரியனும்,இரட்டை இலையும்!

அம்மா அழைத்தார்
”உடனே வா தோட்டத்துக்கு” என்று
சிறிது தாமதித்தேன்
”வந்து பார்” என்று மீண்டும் அழைப்பு.
கை வேலையெல்லாம் காக்கப் போட்டு விரைந்தேன்.
தோட்டம் சென்றேன்.
ஆஹா! என்ன காட்சி!.
கம்பளம் விரித்தது போல்
தரையெங்கும் இலை மூடல்.
தரையெங்கும் கொட்டிக் கிடந்தது இலை!
நிமிர்ந்து பார்த்தேன்
மொட்டையாய் இலயுதிர்த்து நின்றது மரம்!
ஆயினும் சில நாட்களில்
மீண்டும் இலைகள் துளிர்க்கும்
இதுவன்றோ இயற்கை நியதி?
இருள் பிரிந்தும் பிரியா அக்காலையில்
மீண்டும் மரத்தைப் பார்த்தேன்.
அதோ ஒரிரு இலைகள் அசைகிறதோ?
அவை விழக்காத்திருக்கும் இலைகளா?
அன்றி விழுந்த பின் முளைக்கும் துளிர்களா?
உதித்தான் சூரியன்
மெள்ளப் பரவியது வெளிச்சம்
உதய சூரியனின் ஒளியிலே
பளிச்சென்று தெரிந்தது அந்தத்
துளிர்த்து வந்த இரட்டை இலை!

புதன், நவம்பர் 03, 2010

ஊழிக்கூத்து

பிரம்மாண்டப் பிரபஞ்ச மௌனத்தின் பேரொலி
அண்ட பேரண்ட ஆதாரப் பெருஞ்சூட்டின் நடுக்கும் குளிர்
விரிந்து நிற்கும் மயானப் பிண வாடையின் சுகந்தம்
எல்லையற்ற ஆகாசக் கும்மிருட்டின் கூசும் ஒளி
நடக்கட்டும் நாடகம்
அடிக்கட்டும் தாரை தப்பட்டை
வெடிக்கட்டும் தரை பிளந்து
துடிக்கட்டும் பிறவா உயிர்
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!


ஒற்றைக் குருசைக் கையில் ஏந்திவா!
நெற்றி நிறையத் திருநீரு பூசி வா!
திருக் கபால மேட்டிலே திருமண் இட்டு வா!
தொப்பி அணிந்து திசை நோக்கித் தொழுது வா!
மனித நேயம் தொலை!
மதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!


நாடகமே உலகம்
நாமெல்லாம் நடிகர்கள்
எழுதியவன் யார்?
இயக்குபவன் யார்?
யாருக்கும் விடை தெரியாக் கேள்விகள்
நாடகமே கொஞ்ச நேரம்
வேடம் கலைத்த பின் போகுமிடம் ஒன்றன்றோ
பிரிவினையின் உஷ்ணத்தில்
குளிர் காய எண்ணும் குறுமதியாளர்கள்
இல்லாமல் போகட்டும்.
தொடங்கட்டும் ஊழிக் கூத்து!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!

ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

மஞ்சள் துண்டு எங்கே?!!

நேற்று முதல் இதே கேள்விதான் ஓடிக்கொண்டிருக்கிறது மனதில்—எங்கே மஞ்சள் துண்டு?
இதற்கான விடையை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.
தங்கை கேட்டாள்”என்னண்ணா ஒரே யோசனை?’
“மஞ்சள் துண்டு எங்கே போச்சுன்னே தெரியலை”.
“போண்ணா,உனக்கு வேற வேலையில்லை”
தங்கை போய் விட்டாள்.
”அம்மா!”-அழைத்தேன்.
என்னடா என்றபடி அம்மா வந்தாள்.
“எங்கேம்மா மஞ்சள் துண்டு?
”உன் கிட்ட ஏதுடா மஞ்சள் துண்டு?”
“அதாம்மா,இங்கே வச்சிருந்தேனே ஒரு துண்டு மஞ்சள்.-கருக்கி முகர்ந்து பார்ப்பதற்காக,அதுதான்”

“அதுவா,நேற்று வெள்ளிக் கிழமை இல்லையா.அடுத்த வீட்டு ராஜி வந்திருந்தாள்.வெற்றிலை பாக்கோடு கொடுக்க உள்ள வேறே குண்டு மஞ்சளே இல்லை.அதுதான் இங்கே இருந்ததை எடுத்துண்டேன்.வெளியில் போகும்போது மறக்காம 50 கிராம் குண்டு மஞ்சள் வாங்கிண்டு வந்துடு.”

இதுதான் மஞ்சள் துண்டு –துண்டு மஞ்சள்-காணாமல் போன சம்பவம்.