தொடரும் தோழர்கள்

சனி, மே 02, 2009

ஒரு வரலாறு-ராஜியும் பாட்டும்(அத்தியாயம் 3(a)

ராஜி பள்ளிக்கூடத்தில் பாடிய பாட்டு பற்றி சொல்லும்போதே அவளது வேறு ஒரு பாட்டு அனுபவம் பற்றியும் சொல்லியாக வேண்டும்.அந்தக்காலத்திலெல்லாம்,திருமணத்தன்றே சாந்தி முகூர்த்தமெல்லாம் கிடையாது.முக்கியமான காரணம் மணமாகும் போது பெரும்பாலும் பெண் வயதுக்கு வந்திருக்க மாட்டாள்.ராஜியைப் பொருத்தவரை,திருமணத்துக்கு முன்பே வயசுக்கு வந்து விட்டாலும்,அவளது சாந்திகல்யாணம் நான்கு மாதம கழித்துத்தான் நடந்தது.ஏப்ரலில் கல்யாணம்;ஆகஸ்டில் சாந்திகல்யாணம்..வயதென்னவோ அந்த ஜூலையில்தான் பதினான்கு முடிந்திருந்தது.எனவே அவள் ஒரு சிறுமிதானே?

நவராத்திரி சமயத்தில் யார் வீட்டிலெல்லாம் கொலு வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் அண்டை அயலில் உள்ள வீட்டுக்காரர்களை கொலுவுக்கு அழைப்பது வழக்கம்.இப்போதும் அந்த வழக்கம் இருக்கிறது என்றாலும்,ஏதாவதொரு குறிப்பிட்ட ஒரு நாளில்தான் அழைக்கிறார்கள்.அன்று தினமும் அழைப்பார்கள்.தினமும் ஏதாவது தின்பண்டமும் உண்டு.விஷயத்துக்கு வருவோம்.

ராஜியின் கணவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர்.
திருவல்லிக் கேணியில் அவரை அறியாதவர்கள் கிடையாது.
(அவர் பிரமாதமாகக் கொலு வைப்பார்.அதைப்பற்றிப் பின்னால் பார்ப்போம்.).எனவே ராஜியையும் பலர் கொலுவுக்கு அழைத்திருந்தனர்.ராஜியும் சாக்குப்போக்கு எதுவும் சொல்லாமல் போய் வந்தாள்.அப்படி அழைத்திருந்த வீடுகளில் ஒன்று ஒரு சங்கீத வித்வானுடையது.அங்கு ராஜி போயிருந்த போது அந்த வித்வானும் வீட்டில் இருந்தார்.அந்த வீட்டு மாமி அவரிடம்”ப்ரொஃபசர்.நாராயணனோட ஆத்துக்காரி” என்று அறிமுகம் செய்து வைத்தாள்.நவராத்திரியின் போது வீட்டுக்கு வரும் பெண்களைப் பாடச் சொல்வது வழக்கம்.அதுவும் ராஜி ப்ரொஃபசர் நாரயணின் பார்யா.எனவே அவர் அவளை ‘ஒரு பாட்டுப் பாடும்மா’ என்றுகேட்டார்.

முன்பே சொன்னது போல் யாராவது பாடச்சொன்னால் ராஜி தயக்கம் ஏதுமின்றி உடனே பாடி விடுவாள்.அவர் சொன்னவுடன் ஒரு பாட்டுப் பாடி விட்டாள்.

அதைப்பற்றி இப்போது நினைத்தாலும்,ராஜி பெருமை கொள்கிறாள்;வெட்கமும் அடைகிறாள்.

அவ்வளவு பெரிய வித்வான் தன்னைப் பாடச்சொல்லித் தான் பாடியதில் பெருமை,

சங்கீதத்தை முறையாகப் பயிலாத தான் அவர் முன் பாடினோமே என்ற வெட்கம்.

அந்த வித்வான் ஜி.என்.பி. என்று அழைக்கப்படும் திரு.ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்கள்!

மறக்க முடியாத நினைவுதானே!

திங்கள், ஏப்ரல் 27, 2009

நானும் இட்லிவடையும்!

எனது முந்தைய ’பச்சோந்தி’ என்ற இடுகையைப் பாருங்கள்.

இட்லிவடையின் இன்றைய ‘உண்ணாவிரதம் முடிந்தது’ என்ற வீடியோவைப் பாருங்கள்.

ஒரு விஷயத்தை வி்ஷுவலாகச் சொன்னால் எப்போதுமே எஃபெக்ட் அதிகம்தான்.

GREAT MEN THINK ALIKE!

வெள்ளி, ஏப்ரல் 24, 2009

பச்சோந்தி

என் வீட்டுத் தோட்டத்தில்
ஒரு பச்சோந்தி.
நீர் பாய்ச்சும்போதொரு நாள்
என்கண்ணில் பட்டதந்தப் பச்சோந்தி
சிறு கல்லெடுத்தெறிந்தேன் அதன் அருகே
வேகமாய் ஓடி மரத்திலேறியது.
எங்கு மறைந்ததென்று தேடினேன்
மரக்கிளையின் நிறமெடுத்துக்
கிளையோடு கிளையாய்க் கிடந்தது.
மீண்டும் ஒரு கல்.
ஓடியது.
எங்கு போயிற்று?
இப்போது இலைகளின் இடையே
இலையோடு இலையாய்
பச்சை நிறத்தில் அந்தப் பச்சோந்தி.
தன்னைக் காத்துக்கொள்ள
எத்தனை நிறம்தான் எடுக்குமந்தப் பச்சோந்தி?
அதன் உண்மை நிறமென்ன?
எனக்குத்தெரியாது.
அப் பச்சோந்திக்காவது தெரியுமா?

புதன், ஏப்ரல் 22, 2009

ஒரு வரலாறு

அத்தியாயம்-3--இன்றும் அன்றும்.
----------------------------
20-04-2009.
திங்கட்கிழமை.
ராஜி அந்த வார முடிவில் வரும் உள்ளூர் செய்திதாளைப் பிரித்தாள்.

இரண்டாவது பக்கத்தில் இருந்த அந்த, மறைவுச்செய்தி அவள் கண்ணில் பட்டது.

“உமா சுந்தரம்,வயது,90,ஏப்ரல் 10ஆம் தேதியன்று இறைவனடி சேர்ந்தார்.கர்னாடக இசையில் தேர்ச்சி பெற்ற அவர் இறுதி வரை குழந்தகளுக்குத் திருப்பாவை,திருவெம்பாவை மற்றும் பக்திப்பாடல்களை கற்பித்து வந்தார்.13 வயதிலேயே இசைக்காகப் பதக்கம் பெற்ற அவர் என்றுமே மேடைக் கச்சேரி செய்ய வேண்டும் என்று விரும்பியதில்லை.”அவரது குடும்பத்தினர் பற்றிய விவரமும்,தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டிருந்தன.

ராஜி அந்தப் புகைப் படத்தை உற்றுப் பார்த்தாள்.”அவளா இவள்?’மனதுக்குள் கேள்வி எழுந்தது.வயதான அப்பெண்மணியின் இடத்தில் தன் பள்ளித் தோழியை இருத்திப் பார்க்க இயலவில்லை.தான் இப்போது எப்படி இருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தாள்.தன் புகைப்படத்தைப் பார்த்தால் தன் இளமைக்காலத்தோழிகள் எவருக்கேனும் யாரென்று தெரியுமா என யோசித்தாள்.சிரிப்பு வந்தது.

மீண்டும் பத்திரிகையைப் பார்த்தாள்.ஒரு முடிவுக்கு வந்தாள்.

“ஹலோ!நமஸ்காரம்.நான் ராஜி பேசறேன்.நேத்திப் பேப்பர்லே உமா சுந்தரம் மறைவுச் செய்தி பார்த்தேன்.நான் 1931-32 ல மைலாப்பூர் நேஷனல் கர்ள்ஸ் ஹைஸ்கூல்ல படிச்சேன்.அப்போ எங்கூட உமான்னு ஒரு பொண்ணு படிச்சா.அப்பொவே ரொம்ப நன்னாப் பாடுவா.இது அந்த உமாவான்னு தெரிஞ்சுக்கலான்னுதான் ஃபோன் பண்ணினேன்.”

மறு முனையிலிருந்து பதில் வந்தது.”நான் உமாவோட தம்பி பேசறேன்.நாங்க மைலாப்பூர்லதான் இருந்தோம்.ஆனா அக்கா எந்த ஸ்கூல்ல படிச்சாங்கறது எனக்கு நினைவில்லை.எங்க அப்பா பேர் ராமாராவ்.ஏதாவது உங்களுக்கு ஞாபகம்வரதா?”

ராஜி யோசித்தாள்.அந்தப் பெண்ணின் தந்தை பெயர் நினைவில் இல்லை.”இல்லை.நினைவுக்கு வரல்லை”

ஃபோன் உரையாடல் முடிந்தது.

ராஜிக்கு அந்த நாள் நினைவுக்கு வந்தது.
அன்று.

விஞ்ஞான ஆசிரியர் அன்று பாடம் எதுவும் நடத்தப் போவதில்லை என்று அறிவித்து விட்டு,வகுப்பில் யாருக்கெல்லாம் பாடத்தெரியுமோ,அவர்களெல்லாம் பாடலாம் என ஒரு அறிவிப்பைச் செய்தார்.

உடனே ராஜியின் அருகில் இருந்தபெண்”சார்,ராஜி நன்னாப் பாடுவா” என்று சொல்ல அவரும் ராஜியைப் பாடும்படி பணித்தார்.ராஜிக்கு எப்போதுமே பலர் முன்னிலையில் பாடுவதில் சங்கோஜம் எதுவும் கிடையாது.ஊரில் இருக்கும்போது கூட,யார் வீட்டுக்காவது போகும்போது அங்குள்ளவர்கள் பாடச்சொன்னால் உடனே பாடி விடுவாள்.இத்தனைக்கும் அவள் முறையாக இசை பயின்றதில்லை.யாரோ சொல்லிக் கொடுத்த ஓரிரு பாட்டுக்கள்தான் தெரியும்.

ராஜி பாடத்தொடங்கினாள்.

பாடும்போது மற்ற மாணவிகளின் முகங்களைப் பார்த்தாள்.
கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த பெண்ணின் முகத்திலே ஒரு எரிச்சல் தெளிவாகத்தெரிந்தது.

ராஜி பாடி முடித்ததும் அந்தப் பெண்,பைரவி ராகத்தில் “தனயுனி ப்ரோவ” என்று கம்பீரமாகப் பாட ஆரம்பித்தாள்.
ராஜி பிரமித்துப் போனாள்.’என்ன பிரமாதமாகப் பாடுகிறாள் இந்தப் பெண்’ என வியந்து போனாள்.
இந்தப் பாட்டுக்கு முன் தான் பாடியதெல்லாம் ஒரு பாட்டா என நாணிப் போனாள்.
தான் பாடும்போது அந்தப் பெண் எரிச்சலடைந்ததன் காரணம் புரிந்து முகம் சிவந்து போனாள்.
ராஜியின் இந்த உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட அருகில் இருந்த தோழி சொன்னாள்”அவ,பாட்டுக் கத்துக்கறான்னா”

அந்தப் பெண்ணின் பெயர் உமா.

இன்று

அந்த உமாதானா இவள்?தன்னுடன் படித்த எத்தனை பேர் இப்போது உயிருடன் இருக்கப் போகிறார்கள்.

ராஜி ஒரு பெருமூச்சுடன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்

புதன், ஏப்ரல் 15, 2009

ஒரு வரலாறு

அத்தியாயம்-2-ராஜியின் மேற்படிப்பு

“ஏண்டி,ராஜி !வெளியூருக்குப் போய் படிக்கப் போறயாமே? எங்களையெல்லாம் விட்டுட்டுப் போகப் போறியாடி?”ராஜியின் தோழி கேட்டாள்.

“ஆமாண்டி,ராதா.இனிமே இந்த ஊரிலே பசங்களோட சேர்ந்து படிக்க வேண்டான்னு அப்பா சொல்லிட்டா.வெளியூர்ல கர்ள்ஸ் ஸ்கூல்ல படிக்கலாம்னு சொல்லிட்டா.”-ராஜி
“எந்த ஊருக்குடீ போகப்போறே.”
“ரெண்டு எடம் சொல்லியிருக்கா.ஒண்ணு கடலூர்;இன்னொண்ணு மெட்ராஸ்”
“நீதான் படிப்பிலே கெட்டிக்காரியாச்சே.போயி பெரிய படிப்பெல்லாம் படிச்சு பெரிய ஆளா வாடி”

இதுதான் அவள் தான் பிறந்து 13 வயது வரை வளர்ந்து , மூன்றாம் படிவம் வரை (8ஆம் வகுப்பு) படித்து முடித்த அந்த சாத்தூர் மண்ணை விட்டுத் தொலை தூரமான மதராசுக்கு வர நேர்ந்த காரணம்.

அவள் மூன்றாம் படிவம் படித்துத் தேறியபோது அவளுக்கு வயது 13.உயர் நிலைப் பள்ளியொன்றில் தலைமை ஆசிரியராக இருந்த அவளது தந்தை தன் பெண்ணுக்கும் உயர் கல்வி அளிக்கவேண்டும் என்று ஆசைப் பட்டார்.படித்து முடித்த வரை ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த ஓரிரு பெண்களில் அவளும் ஒருத்தி.ஆனால் இப்போது பெரியவளாகும் நேரம் வந்து விட்டது.பையன்களுடன் சேர்ந்து படிக்க வைக்க முடியாது. சாத்தூரிலோ,பெண்கள் உயர்நிலைப்பள்ளி கிடையாது.அவளது தந்தைக்குத் தெரிந்து,சென்னை மாகாணத்தில் இரு நல்ல பெண்கள் உயர் நிலைப்பள்ளிகள் இருந்தன.ஒன்று கடலூர் NT என்று அழைக்கப்பட்ட திருப்பாப்புலியூரில்(திருப்பாதிரிப்புலியூர்). மற்றது மதராஸ் மைலாப்பூரில் இருந்த நேஷனல் பெண்கள் உயர்நிலைப் பள்ளி.(இப்போது லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி)

ஒரு நல்ல நாளில் அவள் தன் அம்மா மற்றும் அத்தையுடன் கடலூர் புறப்பட்டாள்.அத்திம்பேர் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில்,ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார்.கடலூரில் பள்ளியில் இடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே ஒரு வீடும் பார்த்து ஏற்பாடு செய்து விட்டார்கள்,அவளும் அவள் அம்மாவும் தங்குவதற்கு.
அவர்கள் கடலூரை அடைந்தனார்.வேறு பள்ளியிலிருந்து வருவதால் அவளுக்கு ஒரு தகுதித்தேர்வு வைத்தனர் அப்பள்ளியில்.எட்டு வரை தமிழ் மீடியத்திலே படித்த அவளால் அந்த ஆங்கில மீடியப் பள்ளியின் தேர்வில் நன்றாக எழுத முடியவில்லை.முடிவு—அவளை மூன்றாம் படிவத்துக்கே எடுத்துக் கொள்ள முடியும் என்று சொல்லி விட்டனர். ஏமாற்றம்தான்.அவள் தந்தைக்குச் செய்தி போயிற்று.அவர் தன் தம்பியிடம் ரூ.200/= பணம் கொடுத்து மெட்ராஸ் சென்று மைலாப்பூர் பள்ளியில் முயற்சி செய்யச் சொன்னார்.அவரும் மெட்ராஸ் சென்றார்.பள்ளியின் முதல்வரை-ஒரு ஆங்கிலேயப் பெண்மணி- பார்த்தார்.பழைய பள்ளியின் T.C யைக் காட்டினார்.எந்தவிதமான மறுப்பும் இன்றி,ராஜியைப் பார்க்காமலே அவளுக்கு நான்காம் படிவத்தில் இடம் தரப் பட்டது.
அவள் சித்தப்பா,பள்ளியில் ஒரு டெர்ம் சம்பளம் கட்டினார். மைலாப்பூர் அப்ரஹாம் முதலித் தெருவிலே,பள்ளிக்கு மிக அருகிலே ஒரு வீடு பிடித்தார்.அவளுக்காக ஒரு சிறிய புத்தக அலமாரி,ஒரு நாற்காலி எல்லாம் வாங்கிப் போட்டார்.எல்லாம் ரூ.200/க்குள்!கடலூருக்குத் தகவல் சென்றது.

இதோ ராஜி மெட்ராஸ் புறப்படப் போகிறாள்.

(தொடரும்)

செவ்வாய், ஏப்ரல் 14, 2009

ஒரு வரலாறு

(எனது 5-3-09 தேதியிட இடுகையின் தொடர்ச்சி)
(இது ஒரு உண்மை சரிதம்.ஆயினும்,சில முக்கியமான மனிதர்களின் பெயரும்,சில இடங்களின் பெயரும் மாற்றப்பட்டிருக்கின்றன.)

அத்தியாயம்-1
-------------
பயணம் ஆரம்பம் என்று சொன்னேனல்லவா.ஒரு பயணத்திலேயே தொடங்குகிறேன் இந்த வரலாற்றை.

அந்தத் தொடர் வண்டி புகையைக் கக்கிக்கொண்டு மதராஸ் எழும்பூர் நிலையத்தை விட்டுப் புறப்பட்டது.ஆம்.அப்போது மதராஸ்தான்.அப்போது புகை விட்டுக்கொண்டுதான் ரயில் செல்லும்.டீசல் எஞ்சின் எல்லாம் கிடையாது.சன்னல் பக்கம் அமர்ந்திருந்தால் கண்களில் கரி விழுவது நிச்சயம்.பயணம் முடிந்து இறங்கும்போது சட்டை கருப்பாக இருப்பது உறுதி. ஆனால் இப்போது போல் கூட்டமெல்லாம் கிடையாது.இரண்டு மாதங்களுக்கு முன் பதிவு செய்தாலும் காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் நிலை கிடையாது.ஆம்;அது 1950 ஆம் ஆண்டு,ஜூன் மாதம்.இப்போது எல்லோரும் எங்காவது போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள்.அநேகர் தேவையே இல்லாது பயணித்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் பல நேரம் எழுகிறது. இன்றைய மக்கள்தொகைப் பெருக்கமும் ஒரு காரணம் அல்லவா?சரி விஷயத்துக்கு வருகிறேன்.

அந்த ரயிலில் பயணம் தொடங்கிய பலரில்,ஒரு குடும்பம். சமீபத்தில் அக்குடும்பத்தலைவர் இறந்து விட்டிருந்தார். கணவனை இழந்த,31 வயதே நிறைந்த,32 நடக்கும் பெண்;அவளது குழந்தைகள்-முதல் பையன்,ராமசாமி(வயது 16),அடுத்த பெண்,ரமணி(13),அடுத்தபெண்,ரமா(11),அடுத்தபெண்,மகா(7),
கடைக்குட்டி சுந்தர்(5).அந்தக் கடைசிப் பையனைத்தவிர,மற்ற அனைவரும் அந்த இழப்பின் தாக்கத்தில் இருந்தனர். அப்பயணத்தை மகிழ்ச்சியாக எதிர்நோக்கியவன் அந்த சிறுவன் ஒருவன்தான்.மற்ற அனவருக்கும் அந்தப்பயணம் ஒரு தெளிவில்லாத எதிர்காலத்தின் தொடக்கமாகவே தோன்றியது.ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள்.

அந்தத்தாய்;இந்த ஐந்து குழந்தைகளையும் எப்படி வளர்த்துப் பெரியவர்களாகி,அவர்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போகிறோம் என்பதே புரியாத தாய்.அவர்களை பார்க்கும்போதெல்லாம் அடி வயிற்றில் பந்து சுருளும் தாய்.பயம். எதிர்காலம் பற்றிய பயம்.முழுக்க முழுக்க வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய்,கணவன் ,மாமியார்,குழந்தைகளைத் தவிர வேறெதையும் கருத்தில் கொள்ளாது இத்தனை ஆண்டுகளைக் கழித்து விட்ட தாய்.இப்படி,நிர்க்கதியாக விட்டு விட்டுப் போய் விட்டாரே என்று எண்ணும்போதே,அழுது அழுது வறண்ட கண்களில் மீண்டும் கண்ணீர் சுரக்கிறது.மற்றவர் பார்க்காவண்ணம் கண்களைத்துடைத்துக் கொள்கிறாள்.அப்படியே கண்களை மூடியபடி இருக்கையில் சாய்கிறாள்.அவள் மனம் மெட்ராசுக்கு அவள் வந்த காரணத்தை,அந்த ஆரம்ப நாட்களைப் பற்றி நினைக்கிறது.

சனி, மார்ச் 07, 2009

என் நாடக அனுபவங்கள்-பகுதி-2

பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிக்கு வந்த பின் நாடகம் மட்டுமல்ல,வேறு எந்தக் கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.மீண்டும் மேடை ஏற பல ஆண்டுகள் ஆகி விட்டது.வங்கிப் பணியில் இருக்கும்போது வங்கி ஊழியர் சங்க விழாவில் ஒரு நாடகத்தில் என்னை நடிக்கும்படிக் கேட்டுக்கொண்டனர்.ஆச்சரியமாக மீண்டும் அந்த நாடகத்தில் இரு வேடங்களில் (!) நடிக்க வேண்டியதாயிற்று-ஒரு ‘தொண தொணப்பு‘க் கிழவனார்,மற்றும் காவல் துறை ஆய்வாளர்.நாடகம் தொடங்குமுன் ஆய்வாளர் வேடத்தில் நாடகம் நடந்த சபா அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்தவர்களை சிறிது மிரட்ட அவர்கள் நிஜமாகவே பயந்தது ஒரு சுவையான அனுபவம்.வழக்கம்போல் இந்த நாடகத்திலும் என் நடிப்பு பாராட்டப்பட்டது.(டம் டம் டம்).

மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி.சில ஆண்டுகளுக்குப் பின் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது,என் நண்பர் ஒருவர் மூலமாக.தொடரின் பெயர் “சந்திரலேகா”.அத்தொடரில் என்னுடன் பிரபலமான பலர் நடித்தனர்.(பெயர்களைத் தவிர்த்து விட்டேன்).கதாநாயகனின் அலுவலக முதலாளியாக ஒரு பாத்திரம் ஏற்றேன்.கதாநாயகியாக நடித்தவர் அப்போது கல்லூரியில் படித்து வந்தார்.கத்திப் பேசாத மிகையில்லாத நடிப்பு அவருடையது.இப்போது பெரும்பாலும் பேட்டி காண்பவராகவே இருக்கிறார்.முதல் நாள் படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ் தோட்டத்தில்.முதல் நாளே சிறிது உருக்கமான காட்சி.படப்பிடிப்பு முடிந்ததும் கதாநாயக நடிகர் “முதல் நாள் என்று சொல்கிறீர்கள்;ஆனால் மிக அனுபவமான நடிகர் போல நடிக்கிறீர்களே” என்று பாராட்டினார்.மகிழ்வுந்தில் என்னைத் திரும்ப அழைத்து வந்த ஒருவர் “நான் மானிட்டரில் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு இயல்பான ‘கெத்து’இருக்கிறது உங்களிடம் “என்று பாராட்டினார்.

பின் ஸ்ரீதேவி வீடு,ஏ.வி.எம்.ஸ்டுடியோ என்று நான்கைந்து நாள் படப்பிடிப்பு நடைபெற்றது.இயக்குனர் முதல் டச்-அப் பையன் வரை எல்லோரும் என்நடிப்பைப் பாராட்டினர்.

ஆனால் திடீரென்று படப்பிடிப்பு நின்று போனது.எந்தத் தொலைக்காட்சிக்காக தொடர் தயாரிக்கப்பட்டதோ அந்த சானல் மூடப்பட்டது.அத்தொடர் வெளி வரவில்லை.

மீண்டும் ஒரு முறை ‘காமிரா’ என்னுடனான விரோதத்தை உறுதி செய்து விட்டது!!!(என் பதிவு “நானும் காமிராவும்” பார்க்கவும்).
(பழைய வீட்டிலிருந்து)
முன்பு தவிர்த்த செய்திகள் கீழே(தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன?)

உடன் நடித்தவர்கள்--நிழல்கள் ரவி,பிரியதர்ஷினி,சபிதா ஆனந்த்,மலேசியா வாசுதேவன்,பி.ஆர்.வரலட்சுமி,மஹாநதி சங்கர்.இயக்குனர்-தினகரன்.சானல்,ஜே.ஜே.