ஒரு கிராமத்தில் ஒரு சாமியார் இருந்தார்.அவர் இந்தச் சாமியைப்போல பித்தனாக இல்லாமல் பெரிய ஞானியாக
இருந்தார்.பல ஊர்களிலிருந்தும் மக்கள் தங்கள் பிரச்சனைகளோடு வந்தனர்;அவர் அதற்கான தீர்வை எடுத்துரைத்தார்.
ஒரு நாள் ஒரு பெண் வந்தாள்.அவள் மாமியார் எப்போதும் சண்டை பிடித்துக் கொண்டே
இருப்பதாகவும்,அது தனக்கு எரிச்சலையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றது
என்று சொன்னாள்.சாமியார் அவளிடம் ஒரு சிறிய சீசாவில் தண்ணீர்
கொடுத்துச் சொன்னார்”இது மந்திரத்தண்ணீர்.எப்போது சண்டை தொடங்கினாலும்,இதில் கொஞ்சம் உன் வாயில்
ஊற்றிக்கொண்டு,விழுங்காமல் உன் மாமியார் சத்தம் போட்டு முடியும்
வரை இரு.பின்னர் விழுங்கி விடு.”
அதைப் பெற்றுக் கொண்டு அவள் போய்விட்டாள்.
சிலநாட்கள் சென்றன.அந்தப் பெண் மீண்டும் வந்தாள்.சாமியாரிடம் சொன்னாள் ”சாமி!அந்தத்தண்ணீரின்
மகிமையே மகிமை.நீங்கள் சொன்ன படியே செய்தேன். இப்போது என் மாமியாருடனனான சண்டை வெகுவாகக் குறைந்து விட்டது” சாமியார் சிரித்துக்கொண்டார்.சண்டையைக் குறைத்தது தண்ணீர்தான்;ஆனால் மகிமையால் அல்ல.அவள் வாயைத்திறக்க முடியாமல் அது
செய்ததனால்!சிறிது பொறுமை பெரிய பலன்களைக் கொடுக்கும்.
இது தெரிந்திருந்தாலும் நம்மால் பொறுமை காக்க
முடிவதில்லை.எந்த நிகழ்வுக்கும் உடன்
எதிர்ச் செயலாற்றி விடுகிறோம் .
உங்கள் எல்லோருக்கும் சகாதேவனைத் தெரியும்.நடிகர் ஈ.ஆர்.சகாதேவன்
அல்ல; பாண்டவர்களில் கடைசியான சகாதேவன்.அவன் சோதிட சாத்திர விற்பன்னன்.நடக்க இருப்பதை
முன்கூட்டியே அறியும் வல்லமை பெற்றவன்.அவன் நடக்கப்போகும் நிகழ்வுகளை எடுத்துரைத்திருந்தால்,பாஞ்சாலி
ஐவருக்கும் மனைவியாக இருக்க நேர்ந்திராது.சூதாட்டம் இல்லை.துகிலுரிதல்
இல்லை.வனவாசம் இல்லை.பாரதப் போர் இல்லை.ஆனால் அவன் சொல்லவில்லை.ஏன் ?அவனாகவே முன்வந்து
ஏதாவது வருவதுரைத்தால் அவன் தலை சிதறும் என்பது விதி.அது போல்
நமக்கும் சாபம் ஏதாவது இருந்தால் பொறுமை காப்போமோ என்னவோ.?
சாபம் ஏதுமின்றியே பொறுமையாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.பல நேரங்களில்
மந்திரத் தண்ணீர் இல்லாமலே வாயை மூடிக் கொண்டிருக்கப் பழகுங்கள்.வள்ளுவர் சொல்கிறார்
”யாகாவா ராயினும் நாகாக்க
காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.”
எனவே யோசித்துப் பேசுங்கள்
கோபம் வரும்போது பேச்சைத் தள்ளிப் போடுங்கள்.
நலமோடு வாழுங்கள்
(ஸ்வாமி பித்தானந்தவின் உரையிலிருந்து)