தொடரும் தோழர்கள்

விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 08, 2015

வினை விதைத்தவனும்,தினை விதைத்தவனும்!i



ஒரு மன்னன் இருந்தான்

அவனுக்கு வாரிசு இல்லை.

வயதான காலத்தில்  தனக்குப் பின் நாட்டை ஆளத் தகுதியான ஒருவனைத் தேர்ந்தெடுக்க விரும்பினான்

அந்நாட்டிலிருந்த சிறுவர்கள் அனைவரையும் அழைத்து வரச் செய்தான்

அவர்களிடம் சொன்னான்”எனக்கு வயதாகி விட்டது.உங்களில் ஒருவனை நான் அடுத்த மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்போகிறேன்.”

சிறுவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்

மன்னன் தொடர்ந்தான்”நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தரப்போகிறேன்.அது மிக விசேடமானது.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,அதை ஒரு தொட்டியில் ஊன்றித் தினம் தண்ணீர் ஊற்றிக் கவனமாக வளர்த்து ஓராண்டுக்குப் பிறகு நீங்கள் வளர்த்த செடியுடன் வரவேண்டும் .நான் அதைப் பார்த்து முடிவெடுப்பேன்.”

எல்லாச் சிறுவர்களும் ஆளுக்கு ஒரு விதையுடன் திரும்பினர்

அவர்களில் ராமுவும் ஒருவன்

அவன் ஆர்வத்துடன் அந்த விதையைத் தொட்டி மண்ணில் ஊன்றித் தினம் தண்ணீர் ஊற்றி வரலானான் .பத்துநாட்களுக்குப் பின் பல சிறுவர்கள் அவர்கள் செடி முளைக்கத் தொடங்கி விட்டதைப் பற்றி பெருமை பேசினர்.ஆனால் ராமுவின் தொட்டியில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை.நாட்கள் மாதங்கள் ஆயின.மற்றச் சிறுவர்கள் ஆகா ஓகோ என்றெல்லாம் சொல்கையில் ராமுவின் தொட்டியில் எதுவும் முளைக்கவில்ல.

ஓராண்டு சென்றது.எல்லாச்சிறுவர்களும் தத்தம் தொட்டியை,அழகிய செடியுடன் கூடிய தொட்டியை எடுத்துச் செல்ல,ராமு மட்டும் காலித்தொட்டியை எடுத்துச் சென்றான். அவனுக்குப்  போக மனமில்லைதான்,ஆனால் மன்னன் கட்டளையை மீற முடியாது. தன்முயற்சி பலனற்றுப் போனது தெரிந்து மன்னன் கோபித்தாலும் உண்மையைத் தெரிவிப்பது கடமை என எண்ணினான்.

அனைவரும் அரண்மனையில் குழுமியிருக்க.மன்னன் பார்வையிட்டவாறு வந்தான்..அவன் பார்வை ராமுவின் தொட்டி மீது விழுந்தது.ராமுவை அழைத்தான்.ராமு பயந்து கொண்டே சென்று மன்னனிடன் நடந்ததைச் சொன்னான்.

மன்னன் அறிவித்தான்”இதோ இந்தச் சிறுவன்தான் இந்நாட்டு அடுத்த மன்னன்.உங்கள் அனைவருக்கும் ஓராண்டுக்கு முன் ஒரு விதையைக் கொடுத்தேன்.அது முளைக்க முடியாத வேக வைத்த விதை.இவனைத்தவிர அனைவரும் என்னை திருப்திப்படுத்த பொய்யான தொட்டிகளைக் கொண்டு வந்தீர்கள்.ஆனால் இச்சிறுவன் மட்டுமே உண்மையைச் சொல்ல முன் வந்தான்.நேர்மை இருக்கிறது இவனிடம்.எனவே இவனே எதிர்கால மன்னன்."

ஆம்.எதை விதைக்கிறோமோ அதுதான் முளைக்கும்

நேர்மையை விதையுங்கள்.நம்பிக்கையை அறுவடை செய்யுங்கள்

கடின உழைப்பை விதையுங்கள்;வெற்றியை அறுவடை செய்யுங்கள்

நல்லதை விதையுங்கள்;நல்லது கிடைக்கும்

தீயதை விதையுங்கள்;தீயதே கிடைக்கும்

இன்றைக்கு விதைப்பதின் பயன் ஒருநாள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!


(எங்கோ படித்த கதை)