தொடரும் தோழர்கள்

திங்கள், மே 09, 2011

இது நட்பா,காதலா?

(இது ஒரு பழைய கதை!வித்தியாசமான காதல் கதை.ஆண் பெண் நட்பு காதலாகத்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை உடைக்கும் கதை.நீளம் சிறிது அதிகம்.பொறுமையாகப் படித்துக் கருத்துக் கூறுங்கள்)
---x---x----
தொலைபேசி மணி ஒலித்தது.எடுத்தேன்,”ஹரி ஓம்,ராதாகிருஷ்ணன் பேசுகிறேன்”. மறுமுனையிலிருந்து குரல்”ஹாய்,கிருஷ்!என்ன இது ஹரி ஓம் எல்லாம்?யாரென்று தெரிகிறதா?’

என் கடவுளே!இது அவள்தான்.என் வாழ்க்கையில் என்னைக் கிருஷ் என்று அழைத்திருக்கும் ஒரே நபர்.இத்தனை ஆண்டுகளுக்குப் பின்!மேரி! மேரியேதான்.

”மேரி!என்ன சுகமான அதிர்ச்சி!அன்று போலவே இன்றும் உன் குரல் இனிமையாகவே இருக்கிறது.எங்கே இருக்கிறாய்?எப்படி இருக்கிறாய்? திடீரென்று என்ன தொலை பேசுகிறாய்?”

” மெள்ள, மெள்ள,கிருஷ்!எல்லாக்கேள்விகளுக்கும் இப்போதே பதில் சொல்லி விட்டால் நாளை நேரில் பேசுவதற்கு ஒன்றும் இருக்காது.”

” நேரில்?நீ சென்னை வருகிறாயா?உண்மையாகவா”

“ஆம்.நாளை காலை டில்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வருகிறேன்.காலை 10.30க்கு விமானம் தரையிறங்கும்.விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துச் செல்ல வருவாயா?”

“நிச்சயமாக.மகிழ்ச்சி என்னுடையது.”

“கிருஷ்!நான் இரண்டு நாள் தங்குவதற்கு ஏதாவது நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்து விடு”

“அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.நீ வா”

இருவரும் தற்காலிக விடை பெற்றுக் கொண்டோம்.

தொலைபேசியை வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்தேன்.என் மனம் கடந்த காலத்துக்குச் சென்றது.அந்த நாட்கள்………….

அந்த வங்கியில் அதிகாரியாக நியமனம் பெற்று அன்று எங்கள் பயிற்சி ஆரம்பம். ஓராண்டுப் பயிற்சியில் முதல் இரண்டு மாதங்கள் தலைமை அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள்.பயிற்சி இயக்குனரிடம் என் வருகையை அறிவிக்க, அவர் வகுப்புகள் நடக்க இருக்கும் ‘போர்டு’ அறைக்கு என்னைப் போகச் சொன்னார்.கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.ஏ.சி யின் குளிர் என்னைத் தாக்கியது.வெளியே மழை விடாது கொட்டிக் கொண்டிருக்கும்போது இது வேறா?உள்ளே ஒரு மேசையில் வங்கி பற்றிய துண்டுப் பிரசுரங்களை அடுக்கிக் கொண்டிருந்த பெண் திரும்பி என்னைப் பார்த்தாள். இயல்பான புன்னகையுடன் என்னை நோக்கி வந்தாள்.

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.” நான் மேரி தாமஸ்.” குலுக்குவதற்காகக் கையை நீட்டினாள்.

கையைப் பற்றிக் குலுக்கியவாறே சொன்னேன் ”நான் ராதாகிருஷ்ணன்.” -முதல் முதலாக ஒரு பெண்ணின் கை பற்றிக் குலுக்கும் அனுபவம்.என்ன மென்மையான கரம்!

“நீங்கள் பெங்களூரா?பார்த்த முகமாகத் தெரிகிறது”-அவள் கேட்டாள்.

”இல்லையில்லை.நான் மெட்ராஸைச்சேர்ந்தவன்.இன்று வரை பெங்களூர் சென்றதேயில்லை”-என் பதில்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே மற்றவர்கள் வரத்துவங்கினர்.அறிமுகப் படலம் ஆரம்பமாயிற்று.20 பேரில் எட்டுப் பேர் தமிழர்கள்.

சிறிது நேரம் சென்று பயிற்சி இயக்குனர் வந்து எங்களையெல்லாம் இருக்கையில் அமரச்சொன்னார்.பெரிய மேசையைச்சுற்றி இருபது இருக்கைகள்.இடது புறம் முதல் இருக்கையில் சுகுணா என்ற தமிழ்ப் பெண்.அடுத்து மேரி.அவள் அமர்ந்து என்னைப் பார்த்தாள்.நான் சிறிதே தயங்கும் போது ஆந்திர நண்பர் ஒருவர் அமர்ந்து விட்டார்.மேரியின் உதடுகளில் ஒரு புன்முறுவல்-என் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைப் பார்த்து என நினைத்தேன்.அடுத்த இருக்கையில் நான்.

ஆரம்ப விழா,பின் வகுப்புகள் தொடங்கின.நான் இடையிடையே கேட்ட கேள்விகள் பாராட்டப்பட்டன.ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்த மேரியின் முகத்தில் வியந்து பாராட்டும் ஒரு பாவனை.-அது மேலும் எனக்கு ஊக்கம் அளிப்பதாயிருந்தது.அன்று மாலை வகுப்புகள் முடிந்த பின் மேரி சொன்னாள்”நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திரு க்கிறீர்கள்,மிஸ்டர்.ராதாகிருஷ்ணன்.ஓ! ஒவ்வொரு முறையும் உங்களை முழுப்பெயரில் அழைப்பது கஷ்டமாயிருக்கிறது.”

நான் சொன்னேன்”சுருக்கமாக ராதா என்று அழையுங்களேன் மிஸ்.தாமஸ்.என் நண்பர்கள் என்னை அப்படித்தான் அழைப்பார்கள்”

“எனக்குப்பிடிக்கவில்லை.ஒரு பெண்ணை அழைப்பது போல் இருக்கிறது .உங்களை ‘கிருஷ்’என்று அழைக்கிறேன்.ஆனால் இந்த மிஸ் தாமஸ் எல்லாம் வேண்டாம்.நீங்கள் என்னை வெறும் மேரி என்றுதான் அழைக்க வேண்டும்”

நான் குறும்பாகச்சொன்னேன்”சரி,வெறும் மேரி”.அவள் ’குபீர்’ என்று சிரித்துப் பின் சொன்னாள் “நீங்கள் மிகவும் குறும்புக்காரர்”

” சரி,மேரி,நண்பர்களுக்குள் என்ன மரியாதை?இந்த நீங்கள்,நாங்கள் எல்லாம் வேண்டாமே.”அவள்சிரித்துக் கொண்டே தலையசைத்தாள்.(ஆங்கிலத்தில் நீ,நீங்கள் என்பதற்கு வேறுபாடு இல்லாவிட்டாலும் பேசுகின்ற தொனியில் அதைப் புரிந்து கொள்ளலாம்.)

ஆக,முதல் நாளே நாங்கள் நெருங்கிவிட்டோம்.மறு நாள் முதல்,வகுப்பு தொடங்குமுன்,இடை வேளையில் மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம்.எங்களுக்கு நடுவில் அமர்ந்த நபர் பின்னால் சாய்ந்து உட்கார்ந்தால் முன்னே சென்றும்,அவர் முன்னால் சாய்ந்தால் நாங்கள் பின் சென்றும் பேசிக் கொண்டிருப்போம் .சில மாலைகளில் அருகில் உள்ள ஒரு குன்றின் மீது அமர்ந்தபடி நேரம் போவது தெரியாமல் பேசுவோம். திடீரென்று வரும் மழையில் நனைந்த படித்திரும்புவோம்.

எங்களுக்குப் பேசுவதற்கு எவ்வளவோ இருந்தது-எங்கள் இளமைப் பருவம்,கல்வி,கல்லூரி வாழ்க்கை,குடும்பம் இப்படி.சில சமயம் என் தமிழ் நண்பர்கள் என்னைக் கேலி செய்வார்கள்.நான் அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளுவேன்.ஏதோ சில காரணங்களால் நாங்கள் ஒருவர் பால் மற்றவர் அதிகமாக ஈர்க்கப்பட்டோம்.

ஒரு நாள் அவள் கேட்டாள்”யாரையாவது காதலித்திருக்கிறாயா,கிருஷ்?”

அப்போதுதான் நான் அவளிடம் என் ரயில் காதல் பற்றிச் சொன்னேன். கேட்டுவிட்டு அவள் சொன்னாள்”அந்தப் பெண் உன்னை மிகவும் பாதித்திருக்கிறாள் என்று உணர்கிறேன்.ஏன் கிருஷ் அவளைத் தேடுவதற்கான எந்த முயற்சியும் நீ எடுக்கவில்லை?திருச்சியில் அவளைத் தேடிப் பார்த்திருக்கலாமில்லையா?”
நான் சொன்னேன்”பயம்,மேரி.என் நடுத்தர வர்க்கத் தற்காப்பு மனப்பாங்கு. வாழ்க்கை பற்றிய பயம்.”

அவள் முகத்தில் லேசாகக் கோபம் தோன்றியது.”இந்த விஷயத்தில் உன் நடத்தை எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது”.

நிலைமையைச் சரியாக்க நான் வினவினேன்”நீ எப்படி மேரி?ஏதாவது காதல்?’”

சிறிது இறுக்கம் தளர்ந்தவளாய் அவள் பதிலளித்தாள்.”இல்லை.இன்றுவரை என் கற்பனை ராஜகுமாரனை நான் சந்திக்கவில்லை.”

நான் அவளைக் கூர்ந்து பார்த்தேன்.அந்தப் பளிங்கு முகத்தில் பொய்மை இல்லை;கள்ளம் இல்லை.

நடுவில் ஒரு நாள் எங்களுடன் பயிற்சியில் இருந்த கிறிஸ்தவ நண்பர் ஒருவருக்குத் திருமணம்.அருகில் இருந்த ஓர் ஊர் மாதா கோவிலில் மாலை திருமணம்;பின் ஓட்டலில் வரவேற்பு.மேரிக்கு வேறு அலுவல் இருந்த காரணத்தால் வர இயலவில்லை.எனக்கு ஏமாற்றந்தான்.நாங்கள் ஆண்கள் மட்டும் சென்றோம்.அந்தக் கலாசாரமே புதிதாக இருந்தது.திருமணம் முடிந்த பின் மணப்பெண்ணின் கையில் எல்லோரும் முத்தமிட்டோம்!பின் வரவேற்பில் ஆண் பெண் எல்லோரும் கட்டிப் பிடித்து ஆடினார்கள்.நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.பல வித பானங்கள்,சைவ-அசைவ விருந்து(பஃபே) என்று எல்லாமே எனக்குப் புதிதான அனுபவங்கள்.

மறுநாள் மேரி கேட்டாள்”எப்படி இருந்தது கிருஷ், திருமணம்?”

“எனக்கு ஒரு கலாசார அதிர்ச்சி.எல்லாமே ஒரு புதிய அனுபவம்”-நான் .

” நடனம் இருந்ததா? நீ நடனமாடினாயா”

நான் சிரித்தேன்.”நானா?நடனமா?நடக்கவே முடியாது.நடனத்தைப் பொருத்தவரை நான் ஒரு பூஜ்யம்.”

” நான் கற்றுத்தரட்டுமா?”ஆர்வமாய்க் கேட்டாள்

“அய்யய்யோ!ஆளை விடு.என்னால் முடியாது”.அவள் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றத்தின் சாயல் பரவி மறைந்ததோ?நான் அவளை ஏமாற்றி விட்டேனோ?தெரியவில்லை.

பயிற்சிக்காலம் முடிந்து புறப்படும் நாள் வந்தது.எல்லோரும் மற்றவர்களிடம் விடை பெற்றுக் கொண்டோம்.நானும் மேரியும் ஒன்றும் பேசாமலே அலுவலக வாசல் வரை நடந்து வந்தோம்.அங்கு நின்றோம்.நான் மேரியின் கைகளைப்பற்றிக்கொண்டு சொன்னேன்”இந்தப் பயிற்சிக் காலத்தை இனிமையாக்கியது உன் தூய நட்புதான் மேரி.அந்த நினைவுகளுடனே பிரிகிறேன்.தொடர்பில் இருப்போம்.மீண்டும் சந்திப்போம்”ஒரு மெலிதான சோகம் என்னுள் பரவியிருந்தது.மேரியின் அழகிய கண்கள் கலங்கியிருந்தன.”சென்று வருகிறேன்,கிருஷ்.இறைவன் நமக்குத் துணையிருக்கட்டும்.”

பிரிந்தோம்.எங்கள் கடிதப் போக்குவரத்து தொடர்ந்து நடந்தது.எங்கள் அலுவலக வேலையின் பளு,எங்கள் இன்ப நிகழ்வுகள் ,சோகங்கள் எல்லவற்றையும் கடிதங்களில் பகிர்ந்து கொண்டோம்.

ஒரு நாள் அந்தக் கடிதம் வந்தது-விமானப்படையில் பணி புரிந்து வந்த அவள் அண்ணன் ஒரு ‘மிக்’விமான விபத்தில் இறந்த செய்தியைத்தாங்கி.அவள் மிகவும் உடைந்து போயிருந்தாள்.அவள் அண்ணனை மிகவும் நேசித்தவள்.அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக ஒரு கடிதம் எழுத நீண்ட நேரம் யோசித்தேன்.பல எண்ணங்கள் என்னுள் அலை மோதின.
கடைசியில் எழுதினேன்”அன்பு மேரி.இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்புதான்.உன் அண்ணன் இடத்தில் நான் இருக்கிறேன்.உன் வாழ்நாள் முழுதும் உனக்கு ஒரு அண்ணனாக நான் இருப்பேன்.”

அவளிடமிருந்து பதில் வரவில்லை.மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன். அதற்கும் பதில் இல்லை.அவள் பணி புரிந்த வங்கிக் கிளைக்கு தொலை பேசினேன். அவளை அழைப்பதாக யாரோ சொன்னார்கள்.பல நிமிடக் காத்திருப்புக்குப் பின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவளுடன் தொடர்பு கொள்ள நான் செய்த முயற்சிகள் அனத்தும் பலனற்றுப் போயின.பெங்களுர் சென்று அவளைப் பார்க்க முடியாமல் என்னுள் ஏதோ ஒரு உணர்வு.(குற்ற உணர்ச்சி?)

எங்கள் தொடர்பு அற்றுப் போயிற்று .

சில மாதங்களுக்குப்பின் ஒரு பயிற்சிக்காகத் தலைமை அலுவலகம் சென்ற போது பெங்களூரிலிருந்து வந்த சில நண்பர்கள்,மேரி பணியிலிருந்து விலகி வேறு பணிக்காக டில்லி சென்று விட்டதாகத் தெரிவித்தனர். அவ்வப்போது மேரியின் நினைவு வரும்.ஒரு பெண்ணால் நல்லதொரு நட்பை இவ்வாறு திடீரென்று வெட்ட முடியுமா என்று யோசிக்கும் அதே நேரத்தில் நான்தான் அந்நட்பை/உறவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனோ என்ற எண்ணமும் வரும்.

அந்த மேரிதான் நாளை வருகிறாள்.இத்தனை நாட்களுக்குப்பின் சென்னைக்கு வரும் வாய்ப்பு வந்ததும் என் நினைவு அவளுக்கு வந்திருக்கிறது. சென்னை மண்டல அலுவலகத்திலிருந்து என் விலாசத்தை,தொலைபேசி எண்ணை அறிந்து கொண்டிருப்பாள்.
அன்றிரவு எனக்குச் சரியான உறக்கமில்லை.இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மேரியைச் சந்திக்கப் போகிறேன்.எப்படியிருப்பாள்?எப்படிப் பழகுவாள்?இப்படிப் பல எண்ணங்கள் என் நெஞ்சில் அலை மோதி உறக்கம் வராமல் செய்தன.

(தொடரும்)

33 கருத்துகள்:

  1. அழகான அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்குறீர்கள் தல...

    பதிலளிநீக்கு
  2. மேரி மேடத்தை சந்தித்து விட்டு உடனே பதில் பதிவு போடுங்க...

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் எழுதிய கடிதத்துக்கு அவங்க ஏன் பதில் போடலைன்னு நான் கேட்டதா கேளுங்க தல.....

    பதிலளிநீக்கு
  4. நண்பரே!நிச்சயம் இது காதல் காவியம் தான்.யாருக்கு என்பதுதான் கேள்வி.
    ‘கிரிஷ்’மேரியை சந்தித்த நிகழ்வை படிக்க ஆர்வமாய் உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  5. உணர்வுகளை அழகாய்ச் சொல்லிப் போய் இருக்கிங்க! மேரியுடன் நடந்த சந்திப்பு எப்படி இருந்தது என்று படிக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. ஆஹா, அருமையான நடை. அனைவரையும் கவரும் உங்கள் பாணியில் அருமையாக சொல்லியிருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அழகான அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்குறீர்கள் தல...//
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  8. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //மேரி மேடத்தை சந்தித்து விட்டு உடனே பதில் பதிவு போடுங்க...//
    ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்!

    பதிலளிநீக்கு
  9. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // நீங்கள் எழுதிய கடிதத்துக்கு அவங்க ஏன் பதில் போடலைன்னு நான் கேட்டதா கேளுங்க தல.....//
    க்ரிஷ் கேட்டான்;பதில் நாளை,மனோ!

    பதிலளிநீக்கு
  10. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //வந்தேன்...
    தொடரட்டும்...//
    நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  11. வே.நடனசபாபதி கூறியது...

    //நண்பரே!நிச்சயம் இது காதல் காவியம் தான்.யாருக்கு என்பதுதான் கேள்வி.
    ‘கிரிஷ்’மேரியை சந்தித்த நிகழ்வை படிக்க ஆர்வமாய் உள்ளேன்.//
    நாளையே தொடரும்!

    பதிலளிநீக்கு
  12. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //உணர்வுகளை அழகாய்ச் சொல்லிப் போய் இருக்கிங்க! மேரியுடன் நடந்த சந்திப்பு எப்படி இருந்தது என்று படிக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.//
    ஒரு நாள் காத்திருந்தால் போதும்!
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  13. FOOD கூறியது...

    // ஆஹா, அருமையான நடை. அனைவரையும் கவரும் உங்கள் பாணியில் அருமையாக சொல்லியிருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்கள்.//
    மீண்டும் நாளை!
    நன்றி சங்கரலிங்கம்!

    பதிலளிநீக்கு
  14. சாவியின் விசிறிவாழை நாவல் படித்ததுண்டா "கொழந்தே"

    கொழந்தே சொல்லிய விதத்தை கவனித்தால் மேரியிடம் மெல்லிய காதல் கிரிஷ் மேல் இருந்துள்ளதை உணரமுடிகிறது. இதெல்லாம் அந்த வயசில் புரிவது கஷ்டமே . மேலும் இதுதான் நடுத்தர வர்க்க ஆண் பெண்களின் தடுமாற்றம்.அயல் மதம் வேறு பெரும் தடை அந்த காலத்தில். (1962 இல் தானே ?) எனக்கு கொஞ்சம் கொழுப்பு ஜாஸ்தி கொழந்தே !

    சரி. மேரி சென்னை வருவது உண்மையா அல்லது அதுவும் கதைதானா கொழந்தே?

    பதிலளிநீக்கு
  15. நட்புக்கும் காதலுக்கும் ஒரு இழையலவுதான் வேறுபாடு. காதல் இல்லாத நட்பும் , நட்பு இல்லாத காதலும் கிடையாது.

    சரி எனக்கு நக்கல் போதவில்லை.:))

    "பார்த்த ஞாபகம் இல்லையோ" அப்டீன்னு பாட்டுபாடினா நீங்க என்ன பண்ணுவீங்க சென்னை காதலரே?

    பதிலளிநீக்கு
  16. //அழகான அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்குறீர்கள் தல...//



    MANO நாஞ்சில் மனோ கூறியது...



    யோவ்வ் மனோ குண்டு........நான் எங்க போனாலும் முன்ன முன்ன போயி பின்னூட்டம் போட்டு வருது. இன்னா கண்ணு அரபிகாரன் ஹோட்டலுக்கு லீவு வுட்டுகினானா?

    பதிலளிநீக்கு
  17. ஒரு காதல் படம் பார்த்தமாதிரியே இருக்கு..

    பதிலளிநீக்கு
  18. கக்கு - மாணிக்கம் கூறியது..
    //எனக்கு கொஞ்சம் கொழுப்பு ஜாஸ்தி கொழந்தே ! //
    கொஞ்சமா?!!
    கதைக்காக நான் தேர்ந்தெடுத்த வருடம் 1969.
    //மேரி சென்னை வருவது உண்மையா அல்லது அதுவும் கதைதானா கொழந்தே?//
    எந்தக் கதைக்கும் ஆதாரம் சிறிது நிஜம்.அதற்கு மேல் புனைவு! எதுவுமே முழுவதும் நிஜமல்ல! முழுவதும் புனைவல்ல!
    நன்றி கக்கு!

    பதிலளிநீக்கு
  19. எளிமையான வார்த்தைகளோடு நகர்கிறது. சரியான இடத்தில் தான் நிறுத்தி இருக்கிறீர்கள். ஆவலை தூண்டும் விதம் உங்களுக்கு கை வந்து விட்டது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. அடுத்த பதிவுக்காக ஆவல் !

    பதிலளிநீக்கு
  21. தான் காதலித்தவன் 'நான் உனக்கு அண்ணன்' என்று சொல்வதைவிட பெரிய இன்சல்ட் எதுவும் இல்லை. அப்புறம் எப்படி பதில் வரும்?

    பதிலளிநீக்கு
  22. அருமையாக கதை எழுதுறீங்க. :-)

    பதிலளிநீக்கு
  23. அனேகருக்கு ஏற்படும் அனுபவம்தான்.

    நல்ல எழுத்து

    தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  24. கக்கு - மாணிக்கம் சொன்னது…

    //நட்புக்கும் காதலுக்கும் ஒரு இழையலவுதான் வேறுபாடு. காதல் இல்லாத நட்பும் , நட்பு இல்லாத காதலும் கிடையாது.//
    ஆகா!அருமை!
    //"பார்த்த ஞாபகம் இல்லையோ" அப்டீன்னு பாட்டுபாடினா நீங்க என்ன பண்ணுவீங்க சென்னை காதலரே?//
    நல்லாப் பாடினீங்கன்னா, ரசித்துக் கேட்பேன்! இல்லாவிட்டால்..?!

    பதிலளிநீக்கு
  25. கக்கு - மாணிக்கம் கூறியது...

    //யோவ்வ் மனோ குண்டு........நான் எங்க போனாலும் முன்ன முன்ன போயி பின்னூட்டம் போட்டு வருது. இன்னா கண்ணு அரபிகாரன் ஹோட்டலுக்கு லீவு வுட்டுகினானா?//
    அவர் மகுடம் சூடிய மகிழ்ச்சியில் இருக்கிறார்.அவரை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க?!

    பதிலளிநீக்கு
  26. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //ஒரு காதல் படம் பார்த்தமாதிரியே இருக்கு..//
    படம் சுவாரஸ்யமா இருக்கில்ல?
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  27. பாரத்... பாரதி... கூறியது...

    //எளிமையான வார்த்தைகளோடு நகர்கிறது. சரியான இடத்தில் தான் நிறுத்தி இருக்கிறீர்கள். ஆவலை தூண்டும் விதம் உங்களுக்கு கை வந்து விட்டது என்று நினைக்கிறேன்.//
    பதிவுலக அனுபவம்தான்!
    நன்றி பாரதி!

    பதிலளிநீக்கு
  28. ஹேமா கூறியது...

    //அடுத்த பதிவுக்காக ஆவல் !//
    இதோ,இன்றே!
    நன்றி ஹேமா!

    பதிலளிநீக்கு
  29. S கூறியது...

    //தான் காதலித்தவன் 'நான் உனக்கு அண்ணன்' என்று சொல்வதைவிட பெரிய இன்சல்ட் எதுவும் இல்லை. அப்புறம் எப்படி பதில் வரும்?//
    மேரி என்ன சொல்லப் போகிறாள்?
    நன்றி S!

    பதிலளிநீக்கு
  30. Chitra கூறியது...

    //அருமையாக கதை எழுதுறீங்க. :-)//
    நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  31. எண்ணங்கள் 13189034291840215795 கூறியது...

    //அனேகருக்கு ஏற்படும் அனுபவம்தான்.

    நல்ல எழுத்து

    தொடருங்கள்..//
    இன்றே தொடர்கிறது!படியுங்கள்.
    நன்றி சாந்தி!

    பதிலளிநீக்கு