தொடரும் தோழர்கள்

வெள்ளி, மார்ச் 15, 2013

உலகம் அநீதிமயமானது!


ஒரு சிறிய கிராமம்.கிராமச் சிறுவன் ஒருவன் ஒருநாள் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது ”காப்பாற்றுங்கள்,காப்பாற்றுங்கள்” என அபயக்குரல் கேட்டது. சுற்றிப் பார்த்ததில் ஆற்றின் ஓரத்தில் வலையில் சிக்கித்தவிக்கும் ஒரு முதலையைக் கண்டான். ஆனால் அதைக் காப்பாற்ற அவனுக்குத் தயக்கமாக இருந்தது;காப்பாறியவுடன் தன்னையே அது கடித்து விடும் என்ற பயம்.ஆனால் முதலை கண்ணீர் விட்டுக் கதறியழுது சொன்னது ”என்னைக் காப்பாற்றினால் உனக்குத்தீங்கு செய்வேனா?நிச்சயம் மாட்டேன்.என்னை விடுவி”.

மனமிரங்கிய சிறுவன்,முதலையின் மேலிருந்த வலையை வெட்டத்தொடங்கினான்.அதன் தலை விடுபட்டவுடன்,முதலை அவன் காலைக் கவ்விக் கொண்டது.இப்போது சிறுவன் அழ ஆரம்பித் தான்  ”உன்னை விடுவித்த என்னையே கவ்விக்கொண்டாயே,அயோக்கிய முதலையே!இது நியாயமா?”என்று கேட்டான்.

முதலை ”என்ன செய்ய?இதுவே உலக நியதி!இதுவே வாழ்க்கை” என்றவாறு தன் பிடியை (கடியை!) இறுக்கியது.

சிறுவன் தன் நன்றியில்லாச் செய்கையை முதலை நியாயப்படுத்துகிறதே என வருந்தினான். மரத்தில் இருக்கும் பறவைகளிடம் கேட்டான்”முதலை சொல்வது சரியா?உலகம் இவ்வாறு நியாயமற்றா இயங்குகிறது?உலகியல் வாழ்க்கையில்  இவ்வாறு வாக்குத் தவறி நடப்பதுதான் நடைமுறையா?”

பறவைகள் கூறின”நாங்கள் பத்திரமாக  இருக்க வேண்டும் என்பதற்காக மரத்தின் உச்சியில் கூடு கட்டி அதில் முட்டையிடுகிறோம்.ஆனால் பாம்புகள் வந்து முட்டையை சாப்பிட்டு விடுகின்றன. முதலை சொல்வது சரிதான்.உலகம் அநீதியால் நிறைந்திருக்கிறது”

சிறுவன் நதிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு கழுதையைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டான்.கழுதை சொன்னது”என் இளமையில் எவ்வளவோ சுமைகளை நான் என் எஜமானுக் காகச் சுமந்திருக்கிறேன்;.இப்போது எனக்கு வயதாகி இயலாமற்போய்விட்டது என்பதால் எனக்கு உணவு தர முடியாது என்று என்னை இங்கே அலைய விட்டு விட்டான். உலகம் இப்படித்தான் அநீதி மயமாக இருக்கிறது”

சிறுவனுக்கு ஒப்பவில்லை;அங்கு வந்த ஒரு முயலிடம் கேட்டான்.முயல் சொன்னது”இது வெறும் உளறல்;முதலை சொன்னதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்றது.

இதைக்கேட்டு கோபமடைந்த முதலை வாக்குவாத்தில் இறங்கியது;ஆனால் சிறுவனின் காலை விடாமல் பிடித்துக் கொண்டே பேசியது.

முயல் சொன்னது”நீ பேசுவது எதுவும் புரியவில்லை.காலை விட்டு விட்டு வாயைத்திறந்து பேசு.பையன் தப்ப முயன்றால் உன் வாலால் அடித்து அவனைப் பிடிக்க்கூடிய சாமர்த்திய சாலி அல்லவா நீ”

முதலை தன் கடியை விட்டது.உடனே முயல் கத்தியது”பையாஓடிவிடு” என்று.சிறுவன் தப்பி ஓடினான்.முதலை தன் வாலால் அடிக்க முயன்றது.ஆனால் அதன் வால் இன்னும் வலையில் மாட்டிய படியே இருந்தால் முடியவில்லை.சிறுவன் ஓடி விட்டான்.

தன்னைப் பார்த்து முறைத்த முதலையிடம் முயல் சொன்னது”பார்! இதுதான் வாழ்க்கை;உலக நியதி!”

சிறுவன் கிராமத்தவருடன் வந்து அனைவரும் முதலையை அடித்துக் கொன்றனர்; அவர் களுடன் வந்த வேட்டை நாய் ஒன்று முயலைப் பார்த்தும் துரத்த ஆரம்பித்து.சிறுவன் கத்தினான் ”முயலை ஒன்றும் செய்யாதே:அதுதான் என்னைக் காப்பாற்றியது”ஆனால் சிறுவன் தடுக்குமுன் நாய் முயலைக் கொன்று விட்டது.

சிறுவன் கதறினான்;கண்ணீர் விட்டான்.

சொன்னான்”முதலை சொன்னது உண்மைதான் .உலகம் இப்படித்தான் இருக்கிறது;இதுதான் வாழ்க்கை!”

ஆம் உலக வாழ்க்கையில் பல நேரங்களில் பல செயல்கள் நியாயமற்றவையாகவே தெரிகின்றன.அதைப் புரிந்து கொள்வதுகடினம்.அவற்றை வாழ்க்கையின் பகுதியாக ஏற்றுக்   கொண்டு நம் வாழ்க்கையைப் புத்திசாலித்தனமாக அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்!

(படித்தேன்;பிடித்தது;பகிர்ந்தேன்)

வியாழன், மார்ச் 14, 2013

ஒன்பதுல குருவும் காரடையார் நோன்பும்!



ஒன்பதுல குரு எப்படி என நண்பர் கேட்டார்.

நன்றாகத்தான் இருக்கிறது என்றேன்.

லக்னத்துக்கு ஒன்பதில் குரு இருந்தால்,பொதுப்பலன்கள் இவைதாம்-சட்ட அறிவு,தத்துவ ஞானம் சிறப்பாக இருக்கும்.ஒன்பதில் இருக்கும் குருவை சுபக்கிரகங்கள் பார்த்தால் அநேக நிலம் வீடு வாங்கும் யோகம் இருக்கும்.உடன்பிறப்புகளிடம் அன்புடன் இருப்பார்.செல்வமும் புகழும் சேரும்.சந்திரனும் செவ்வாயும் குருவை வசீகரிக்குமானால்,ராணுவ உயர் அதிகாரி யாகலாம். சூரியனும் சுக்கிரனும் குருவோடு இணையுமானால்,நன்னடத்தை இல்லாமல் இருப்பார்.

இதாங்க ஒன்பதுல குரு!
………………………………………
இன்று காரடையார் நோன்பு எனும் பண்டிகை.

இது பற்றி ஏற்கனவே வை.கோ அவர்களும் இராஜராஜேஸ்வரி அவர்களும் எழுதி விட்டார் கள்.எனக்கு இப் பண்டிகையில் மிகப் பிடித்த விஷயம் இன்று செய்யப்படும் வெல்ல அடையும் உப்பு அடையும்தான்.வெண்ணையுடன் சேர்த்து அடை சாப்பிடும் சுகமே தனி!

நோன்புக்கான நேரம் எது?மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில்,மாசி மாதத்திலேயே செய்ய வேண்டும்.
 இன்று மாலை 3.25 முதல் 3.45 வரை என்று சிலர் சொல்கிறார்கள்

 4.30 முதல் 4.55க்குள் என்று சிலர் கூறுகிறார்கள்.

ஏன் இந்த நேர வேறுபாடு.?

பஞ்சாங்கங்களே காரணம்.

திருக்கணிதம்,வாக்கியம் என்று இரண்டு வகைகள் உள்ளன.

வாக்கியப்பஞ்சாங்கப்படி(பாம்புப் பஞ்சாங்கம் )பங்குனி பிறக்கும் நேரம் இன்றுசூரிய உதயத்தி லிருந்து 24.20 நாழிகைகளுக்கு.(மீன ரவி 24.20 என்று போட்டிருக்கும்)

ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்;இரண்டரை நாழிகைகள் ஒரு மணி..

அப்படியென்றால். சூரிய உதயத்திலிருந்து 9மணி44 நிமிடத்துக்கு மாதம் பிறக்கிறது..

சூரிய உதயம் ஆறு மணிக்கு எனக் கொண்டால் மாலை 3.44 க்கு மாதம் பிறக்கிறது

எனவே மாதம் பிறக்கும் முன் கடைசி 15 அல்லது இருபது நிமிடங்கள் எனக் கொண்டால் 3.24 முதல் 3.44 வரை நோன்பு நேரம்!

ஆனால் திருக்கணிதப் பஞ்சாங்கத்தில் (மடம்) பங்குனி பிறக்கும் நேரமாகப் போட்டிருப்பது 26.21  நாழிகைகள்.அதாவது  2நாழிகை வித்தியாசம்;48 நிமிடங்கள்.எனவே நோன்பு நேரமும் மாறி விடுகிறது.

சரியான சூரிய உதய நேரத்தை எடுத்துக் கொண்டால் நேரம் இன்னும் 15 நிமிடங்கள் மாறிவிடும்.

அவரவர் எப்போதும்  அனுசரிக்கும் பஞ்சாங்கப்படி செய்து கொள்ளாலாம்!குடும்பப் புரோகிதர் சொல்வதைச் செய்யுங்கள்!

எத்தனை மணிக்கு செய்தாலும்,எனக்கு வர வேண்டிய இடங்களிலிருந்து அடை வந்தால் சரி(வெண்ணையுடன்)!

புதன், மார்ச் 13, 2013

சென்னையில் ஒரு காதலன் ---தொடர்கிறான்

 சில கவிதைகளில் ஒரு நிறைவேறாத காதல் சொன்னேன்!
அக்காதலர்கள் சில ஆண்டுகள் கழித்துச் சந்தித்தால்................
அதைத்தான் சொல்கிறது இக்கதை.
கவிதையோடு இணைத்துப் படியுங்கள்.
அக்காதல் புரியும்;அந்த வலி புரியும்.
இதோ............ 

வெள்ளி, ஜூலை 13, 2012
 மீண்டும் ஒரு காதல் கதை!

தில்லி விமான நிலையம்.

பாதுகாப்புச் சோதனை முடிந்து,உள்ளே சென்று,விமானத்தில் ஏறக் காத்திருக்கும் கூட்டத்தில் ஒருவனாக நான்.

ஒரு இருக்கையில் அமர்ந்து,கையில் செய்தித்தாளை பிரித்து வைத்தபடி அமர்ந்திருக்கிறேன்.

பார்வை என்னவோ அங்கிருக்கும் மனிதர்களையும்,உள்ளே வந்து கொண்டிருப்பவர்களையும் மேய்ந்துகொண்டிருக்கிறது.

அப்போதுதான் அவர்கள் வந்தார்கள்.

ஆண் ,பெண்,ஒரு சிறுவன்,ஒரு சிறுமி.

அவனுக்கு 40 வயதும் அப்பெண்ணுக்கு 35க்குள்ளும் இருக்கலாம். சிறுவன் வயது  பத்துப் பன்னிரண்டும் சிறுமிக்கு அதை விடக் குறைவாகவும்  இருக்கும்.

அந்த ஆணை நானறிவேன்.செயலகத்தில்  நிதித்துறைத் துணைச் செயலாளராகப் பணி புரியும் ராகவன் ஐ..எஸ்.அந்தப்பெண் வேறு பக்கம் பார்த்துக்கொண்டே வந்தவள், கணவன் ஏதோ சொல்வதைக் கேட்டுத் திரும்பினாள்.அவள் முகத்தை, ஆண்டுகள் பலவான பின்னும் என் மனதை விட்டு  நீங்காத  அந்த முகத்தைப் பார்த்தேன்

கடவுளே!பதினாறு ஆண்டுகளுக்குப் பின்….!

என் அருகில்  இருக்கைகள் காலியாக இருந்தபடியால் அவர்கள் என்னை நோக்கி வர ஆரம்பித்தனர்.நான் என் முகத்தைச் செய்தித்தாளில் புதைத்துக்  கொண்டேன்.என்ன செய்யப்போகிறேன்?

அருகில் அவர்கள் வருவதை உணர முடிந்தது.காற்றில் மிதந்து வந்த வாசனைத் திரவியத்தின் மணத்துடன்,எனக்குப் பழக்கமான அவள் மணம்.இன்னும் மாறாத ,குறையாத அதே மணம்.

நீங்க உக்காருங்க.என் தோழி கல்யாணி அங்கே இருக்கா.நான் பாத்துட்டு வரேன் என்று அவள் கணவன்,குழந்தைகளிடம் கூறும் குரல் கேட்டது.அவள் மணம் மெல்ல விலகியது.

நான் செய்தித்தாளிலிருந்து என் முகத்தை வெளிக்காட்டினேன்.என் அருகில் அவனும்,அப்பால் அவன் குழந்தைகளும் அமர்ந்திருந்தனர்.

ஹலோ!நான் ராதாகிருஷ்ணன் .ஏபிசி வங்கி மேலாளர்.”கையை நீட்டினேன்.

நீட்டிய கையைப் பிடித்துக் குலுக்கியவாறே அவன் சொன்னான் ராகவன்.துணைச் செயலாளர்.நிதித்துறை

தெரியும் .உங்களை இரு முறை வேலை நிமித்தம் சந்தித்திருக்கிறேன்.” நான் சொன்னேன்.

பொதுவாக ஏதோ பேசிக் கொண்டிருந்தோம்.

அவள் திரும்பி வந்துகொண்டிருந்தாள்.

வரும்போதே என்னைப் பார்த்து விட்டாள்.அந்த முகத்தில் தோன்றிய உணர்சிகளை என்ன வென்றே சொல்ல முடியாது.

வியப்புபயம்,சோகம்,அன்பு,அதிர்ச்சி இவற்றின் கலவை. அவள் அருகில் வந்ததும் அவன் சொன்னான்.

மைதிலி!சார் ராதாகிருஷ்ணன்;வங்கி மேலாளர்.மெட்ராஸ்தான் போகிறார். சார்! இவங்க என் மனைவி,மைதிலிஇருவரும் கை கூப்புகிறோம்

என் இதயம்மைதிலி,மைதிலிஎன்று இடும் ஓலம் அவன் காதுகளுக்குக் கேட்டு விடுமோ எனப் பயம் எனக்கு!

அவள் பார்வை!என் கண்களின் வழியாகப் புகுந்து இதயத்துக்குள்ளும் ஊடுருவும் பார்வை.அவள் அமர்கிறாள்

நான் கேட்கிறேன்எத்தனை நாள் மெட்ராசில்?”

அவன் சொல்கிறான்இரண்டு நாள்தான்.அதன் பின் ஸ்ரீரங்கம் போகிறோம்.அங்கு என் பெற்றோர் இருக்கிறார்கள்.நீங்கள்?”

நான் மெட்ராசில் ஒரு வாரம்.பின் மதுரை ஒரு வாரம்.மீண்டும் தில்லி.ஒரு வாரம் போதாதுதான் .நண்பர்களையெல்லாம் சந்திப்பதற்கு.’நான்

எனக்கு இரண்டுநாள் கொஞ்சம் பணி சார்ந்த வேலையிருக்கிறது மெட்ராசில். மைதிலிக்குத்தான் நேரமே போதாது.!மெட்ராசில் இவள் பொழுது போக்கும் விதமே அலாதி.கபாலி கோவில், தண்ணித்துறை ஆஞ்சனேயர் கோவில், சாந்திவிஹார், சாந்தோம், இப்படி..நாளை காலையே கபாலீச்வரர் கோவில் போய் விடுவாள் என் மாமனார் ஒரு வீர வைஷ்ணவர்.ஆனால் இவள் இப்படி!”சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

நான் அவளைப் பார்க்கிறேன்.கண்களில் கண்ணீர் கசிவது போலத் தோன்றியது . என்னவோ சொல்ல வருவது போல் தோன்றியது

வேண்டாம் மைதிலி.அழுது விடாதே.நாம் பிரியும்போது என் மார்பில் முகம் புதைத்து அழுதாயே,அப்போது உன் கண்ணீர்க் கரையும், மைக்கரையும் பட்ட சட்டையை ஒரு பொக்கிஷமாகப் போற்றி வைத்திருக்கிறேன்.இத்தனை நாட்களாக என்னை நீ நினைவில் வைத்திருப்பாயா என்ற சந்தேகத்தில் இருந்தேன்.இன்று தெரிந்து கொண்டேன்.நாம் சந்தித்த இடங்களைக் கூட நீ இன்னும் மறக்கவில்லை என்று.நாளை காலை கபாலி கோவில் போக எண்ணியிருந்தேன்.ஆனால் மாட்டேன்.இருவருக்கும் ஒரு தர்ம சங்கடமான நிலை உருவாக வேண்டாம். நீ என்னை மறக்கவில்லை.இது போது எனக்குஎன் மனத்தின் பேச்சு.

விமானத்தில் ஏற அழைப்பு வருகிறது .புறப்படுகிறோம்.அவளைப் பார்க்கிறேன். அவளும் என்னை.கண்களின் வழியே காலத்தை கடந்து ,கடந்த காலத்துக்குப் பயணிக்கிறேன்.

அதில்தானே இத்தனை நாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! 



செவ்வாய், மார்ச் 12, 2013

இராமச்சந்திரன் மீது கொலை வழக்கு!



வழக்கு எண் 218/13”

நீதிமன்ற எழுத்தரின் குரல் ஒலித்தது.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இராமச்சந்திரனின் வக்கறிஞர் எழுந்தார்.

மை லார்ட்!என் கட்சிக்காரின் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறோம்.அவரை ஜாமீனில் விடும்படித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

அரசு வழிக்கறிஞர் எழுந்தார்குற்றவாளி…”

” மறுத்துரைக்கிறேன்,மை லார்ட்! அவர் குற்றவாளி அல்ல ;குற்றம் சாட்டப்பட்டவர்”வாதியின் வக்கீல்.

”திருத்திக் கொள்கிறேன்!குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்ட வர் ,கோவில் திருவிழாவில் மூன்று பெண்களை இரக்கமின்றிக் கொன்றவர்!அவரை வெளியில் விட்டால் மேலும் கொலை கள் செய்யக்கூடும்!எனவே ஜாமீன் மனுவை எதிர்க்கிறேன்;ஜாமீன் வழங்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்” அரசு வழக்கறிஞர் சொன்னார்.

வாதியின் வழக்கறிஞர் சொன்னார்”என் கட்சிக்காரர் உடல் நலமின்றி இருக்கிறார். மேலும் உடல் நலம் பாதிக்கப்படும்.அரசு மருத்துவ மனையில் அவருக்கான  வசதிகள் இல்லை. ஜாமீனில் விட்டால் அவருக்கான விசேட சிகிச்சை அளிக்க முடியும்.இத்தனை ஆண்டுகளாக இறைவனின் பணியில் ஓயாது உழைத்தவர்.மக்களை மகிழ்வித்தவர்.உடல் நலமின்மை காரணமாகவே இது நடந்து விட்டது.நீதி மன்றம் இதைக் கருணையுடன் அணுக வேண்டும்”

”சமீபத்தில் திருவிழா நடக்க இருக்கிறது.இவர் அங்கு செல்வார்.மீண்டும் அசம்பாவிதம் நடக்கும். எனவே ஜாமீனில் விடக்கூடாது—அரசு வழக்கறிஞர்

மற்றவர் சொன்னார்”நாங்கள் உறுதியளிக்கிறோம்.அவருக்குச் சிகிச்சை அளிப்பதே எங்கள் நோக்கம்;அவர் திருவிழாவுக்கோ,வேறு எங்கும் வெளியிலோ போக மாட்டார்.கவனமாகப் பார்த்துக் கொள்வோம்”

நீதிபதி தீர்ப்புச் சொன்னார்”வாதியின் தரப்பில் 30 லட்சம் ரூபாய்க்கான பிணைப் பத்திரமும், இரண்டு தனி நபர் ஜாமீனும் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையில் ஜாமீன் வழங்கப் படுகிறது”

45 வயது நிரம்பிய  உயரமான.திடகாத்திரமான ,வலிமை வாய்ந்த  இராமச்சந்திரன் ஜாமீனில் விடப்ட்டார்.

யார் இந்த ராமச்சந்திரன்?

தெச்சிக்கோட்டுக்காவு இராமசந்திரனின் உயரம் 3.17 மீட்டர்(10 அடிக்கு மேல்!) .  

இந்தியாவிலேயே மிக உயரமானவர்.பீஹாரிலிருந்து கேரளா அழைத்து வரப்பட்டுத் தெச்சிக் கோட்டுக்காவுக் கோவில் பணியில் சேர்க்கப்பட்டவர்!

ஜனவரி27 ஆம்தேதி கோவில் திருவிழா நேரத்தில் மன நலம் குன்றி திருவிழாக் கூட்டத்தில் ஓடி மூன்று பெண்களின் சாவுக்குக் காரணமானார்அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

அவருக்குத்தான் ஜாமீன் வழங்கப்பட்டது

அப்படி என்ன சிறப்பு இந்த வழக்கில்?

இருக்கிறது……!

இராமச்சந்திரன் ஒரு……….
…………………..
…………………..
யானை!

 (செய்தி:இந்தியாவின் நேரங்கள்-12-3-2013)