என் அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
எதிர் அறைக்குப் புதிதாக ஒருவன் குடி
வந்தான் போலிருக்கிறது.
கம்பிகளின் வழியே அவனைப் பார்த்தேன்.
முதல் பார்வையிலேயே அவனை எனக்குப்
பிடிக்காது போயிற்று.
காரணம் அவன் நிறம்!
அப்படி ஒரு வெள்ளை!
என் காதுபட பலர் அந்த நிறத்தைப்
பாராட்டிப் பேசக் கேட்டேன்.
ஆனால் எனக்கு அந்த நிறத்தைப் பார்த்தால்
இனம் புரியாத வெறுப்பும் எரிச்சலும்தான் வந்தது.
என்ன சோகை பிடித்த மாதிரி நிறம்.
வடக்கிலிருந்து வந்தவனாக இருப்பானோ?
அவன் பெரும்பாலும் என்னைப் பார்த்துக்
கொண்டே இருந்தது எரிச்சலை மேலும் அதிகப் படுத்தியது.
அவனைப் பார்க்கப் பார்க்க வெறுப்பும்
அதிகமாகியது!
சில மாதங்கள் கழிந்தன!
ஒரு நாள் .............
உறங்கிக் கொண்டிருந்த நான் ஏதோ கெட்ட
கனவு கண்டு கண் விழித்தேன்.
திடுக்கிட்டேன்.
எனக்கு மிக அருகில் அவன்;என் முகத்தையே
உற்றுப் பார்த்தபடி.
அவசரமாக எழுந்து நகர்ந்தேன்.
அவன் என்னை பின் தொடர்ந்தான்.
நின்றேன்.
அவனை நேருக்கு நேர் பார்த்து முறைத்தேன்.
அவன் அதை லட்சியம் செய்யாமல் என் மீது
பாய்ந்தான்.
இத்தனை நாள் வெறுப்பும் ஒன்று சேர்ந்து என்
கைகளில் பலமாக வந்த்து.
என் நீண்ட நகங்களால் அவன் முகத்தில் பிராண்டினேன்
வேகமாகத் தள்ளினேன்.
அவன் தள்ளிப் போய் தரையில் தலை பலமாக அடிபட
விழுந்தான்.
எழுந்திருக்கவேயில்லை.
வெளியிலிருந்து கூச்சல்”அய்யய்யோ!கொன்னுட்டா!
அருகில் சென்று முகர்ந்து பார்த்தேன்.
ஆம் !இறந்து விட்டான்!
இனித் தொந்தரவு இல்லை!
.......சத்யா
இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.........
ஏழு வயது சத்யாவைக் கூடுவதற்காகப் போன
மூன்றரை வயது செம்பியன்,அவளால் தாக்கப் பட்டுப் படு காயமடைந்து
மரணமடைந்தான்!செம்பியன் என்பது வெள்ளைப் புலி.சத்யா என்பது வங்கப் புலி.நடந்த இடம்
சென்னை மிருக்காட்சி சாலை.