தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜனவரி 06, 2015

எச்சச்ச எச்சச்ச,கச்சச்ச கச்சச்ச!



முத்து படத்தில் ஒரு காட்சி.

மீனா நாடகத்தில் நடிக்கும்போது ரஜனி தும்மல் போடுவார்.

மீனா அவரைக் கண்டிப்பார்.

உடனே ரஜனி சொல்வார்”தும்மலு,இருமலு,விக்கலு கொட்டாயி.............. இதெல்லாம் கேட்டு வராது,தானாதான் வரும்,,,,,,,,,எச்சச்ச எச்சச்ச கச்சச்ச கச்சச்ச”

ஆம் தும்மல் தானாகத்தான் வருகிறது.

முக்கியமாகத் தும்மல் வருவதற்கு ஒவ்வாமை காரணம்.

மூக்கில் ஏதோ உறுத்தல்,ஒவ்வாத நெடி என்று பல காரணங்களால் தும்மல் ஏற்படுகிறது

அது மூளையின் கட்டளையால் ஏற்படும் ஒரு பாதுகாப்புச் செயல்.

ஆனால் இந்தத் தும்மல் சிலரால் ஒரு சகுனமாகக்கூடக் கருதப்படுகிறது

ஒற்றைத் தும்மல் கெட்ட சகுனம் என்றும் ரெட்டைத் தும்மல்  நல்ல சகுனம் என்றும் சொல்வார்கள்.

மன்மதலீலை படத்தில் ஒய்ஜிபியின் சின்னவீடான ஒரு சமையற்காரி தும்மல் மூலமாகவே தன் அபிப்பிராயத்தைச் சொல்வார்.அந்தப் பாத்திரத்தின் தும்மல் மட்டுமே கேட்கும்.பாத்திரம் கண்ணில் தெரியாது

நேற்று மாலை சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சிறுவன் தும்ம,அவன் அம்மா “நூறு” என்று வாழ்த்தினார்கள். 

ஏன் இவ்வாறு சொல்கிறார்கள் ?

தும்மல் என்பது ஒரு வியாதியின் அறிகுறியாகக் கொள்ளப்படக் கூடும்.

எனவே தும்மிய உடன் நோய்நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காக வாழ்த்துகிறார்கள் என்பதே இதன் உட்பொருள். 

இத்தும்மல் வள்ளுவரால் வேறு விதமாக எடுத்தாளப் படுகிறது!

தலைவன் தும்முகிறான்.உடனே தலைவிநூறாண்டுஎன்று வாழ்த்துகிறாள்.ஆனால் உடனே யாரை நினைத்து நீங்கள் தும்மினீர்கள் என அழுகிறாள். 

பிறிதொரு சமயம் அவர்கள் தனித்திருக்கும் வேளையில் தலைவனுக்குத் தும்மல் வருகிறது;உடனே பழைய நினவு வருகிறது;நாம் தும்மினால் அதைக் கொண்டு அவள் ஊடுவாள் என்பதால் தும்மலை அடக்க முயல்கிறான்;தலைவி அதைக் கவனித்து வேறொருத்தி உம்மை நினைப்பதை என்னிடத்து மறைப்பதற்காக தும்மலை அடக்கினீர்களா என்று அழுகிறாள்.

வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று   1317

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று    1318

அழுகை எத்துணை எளிதாக வருகிறது பாருங்கள்?!

தும்மினால் வாழ்த்தும் வழக்கம் மேலை நாடுகளிலும் உள்ளது.
தும்மினால் “உனக்கு வாழ்த்து” என்று சொல்வார்கள்

இப்பழக்கம் எப்போது தொடங்கியது?

கி.பி.590 இல் போப் கிரகரி-1 அவர்கள் ஒரு கட்டளை பிறப்பித்தார்கள்,யாராவது தும்மினால் உடனே ”உனக்கு ஆசீர்வாதம்” என வாழ்த்த வேண்டும் என்று—காரணம் அவர்களுக்குப் பிளேக் நோய் இருக்கலாம் என்ற சந்தேகமே.இதுவே தொடர்ந்து பின்பற்றப் பட்டது.

அட்டே தும்மல் வருவது போல் தோன்றுகிறதே;

எல்லாவற்றிலும் மோசமான தும்மல் இதுதான்

சளித்தும்மல்!(சனித்தும்மல்?!)


11 கருத்துகள்:


  1. தும்மலைப்பற்றி எழுத ஆரம்பித்து, காமத்துப் பாலில் வள்ளுவர் சொல்லும் தும்மல் பற்றியும் அழகாக சொன்னீர்கள். அதோடு

    ‘‘ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
    நீடுவாழ் கென்பாக் கறிந்து.’
    (எண் 1312) குறளையும் சொல்லி விளக்கியிருக்கலாம்.

    தும்மல் மற்றவர்க்கும் தொற்றிக்கொள்ளும் என்பார்கள். உங்கள் பதிவைப் படித்ததும் எனக்கும் 'குறள் தும்மல்' வந்துவிட்டது!

    பதிலளிநீக்கு
  2. தும்மல் ---தீர்க்க ஆயுசு என்று வாழ்த்துவர். கொண்ட ஆயுசு ,கோட்டஆயுசு என்பர். மலைபோல் வாழ வேண்டும் . நீண்ட காலம் வாழவேண்டும். இன்று மலையும் தூலாக்கப்படுகிறது. ஒரு ஆராய்ச்சிப்படி தும்மும் பொது கண் இமைக்கும் நேரம் இதயத்துடிப்பு நிற்கிறதாம். அதனாலேயே இந்த வாழ்த்தாம். காமத்துப் பால் விளக்கம் அருமை. தும்மும் போது கமல் படத்தில் குட்டைப் பாவாடை பறக்கும். தமாசு.

    பதிலளிநீக்கு
  3. தும்மலுக்கு இத்தனை விளக்கமா? அறிந்து கொண்டேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. நான் தும்மினால் அம்மா தும்மலுக்குப் பின்னால் அம்மா என்றோ அப்பா என்றோ அல்லது கடவுள் பெயரையோ சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்....

    பதிலளிநீக்கு
  5. இன்று எனக்கு சளித்தும்மல்...
    நல்ல பகிர்வு ஐயா..

    பதிலளிநீக்கு
  6. "ஹச்.....!"

    விக்கல் வந்தால்தானே யாரோ நினைக்கிறார்கள் என்று அர்த்தம்?

    //நேற்று மாலை சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சிறுவன் தும்ம,அவன் அம்மா “நூறு” என்று வாழ்த்தினார்கள். //

    யாரையாவது குரங்கு என்று திட்டினால் என் அம்மா பால் அன்னம் பால் அன்னம் என்பார்கள். அதற்கும் இதேபோல ஏதோ காரணம் சொல்வார்கள்!

    பதிலளிநீக்கு
  7. ஆஹா ...ஒரு தும்மலுக்க இவ்வளவு விசயம் அடங்கியுள்ளாதா !!!!
    கலக்கீட்டீங்க தாத்தா ஆனாலும் இப்ப உங்களைப் பிடித்து ஆட்டிப்
    படைக்கும் இத்தும்மல் விலகி தீர்க்காயுசுடன் வாழ்க வாழ்க என்று
    நாங்கள் வாழ்த்துகிறோம் .பகிர்வு அருமை !மிக்க நன்றி தாத்தா
    பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  8. இன்றைய வலைச்சரத்தில் உங்களின் வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  9. தும்மலின் மூலம் மனைவி படுத்தும் பாட்டை அருமையாக சொல்லிவிட்டீர்கள்.......

    பதிலளிநீக்கு
  10. இதெல்லாம் சரி தாத்தா....
    அந்த தலைப்பு “எச்சச்ச எச்சச்ச கச்சச்ச எச்சச்ச“ வுக்கும் பொருள் சொல்லுங்கள். ப்லீஸ்.

    பதிலளிநீக்கு