தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜனவரி 02, 2015

பிசாசு



இணையத்தில் பரவலாகப் பிசாசு பற்றிப் பேசப்பட்டு வருகிறது.
பிசாசு பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம்,அபிப்பிராயம் இருக்கிறது
பிசாசு பார்த்தேன் என்று சொல்வதே ஒரு சுவாரஸ்யம்தான்.
பார்த்ததை விட அது பற்றிப் பகிர்வது இன்னும் சுவாரஸ்யம்!
இப்போது என் பிசாசு அனுபவம்’

முதல் அனுபவத்தின்போது நான் ”ஒண்ணாப்போ” ”மூணாப்போ” படித்துக் கொண்டிருந்தேன்.
என்ன ரெண்டாப்பு என்ன ஆச்சு என்று யோசிக்கிறீர்களா?
ஒன்றாவதில் இருந்து இரட்டை உயர்வு பெற்று மூன்றுக்குச் சென்று விட்டேன்.
அதற்காக நான் ஒண்ணாப்பில் பட்ட கஷ்டம் தனிப் பதிவாகவே எழுதலாம்!
இப்போது பிசாசுக்கு வருவோம்.

இடம் சாத்தூர்
ஒருநாள் நள்ளிரவில் எனக்கு இயற்கை உபாதை ஏற்பட அம்மா என்னை வீதியின் ஓரத்தில் அமரச் செய்தார்கள்
வீட்டுக்குள்ளே கக்கூசெல்லாம் கிடையாதுங்க!
பகல் நேரத்தில் போவதற்கு பின்புறம் ஒரு மண் கக்கூஸ் இருக்கும்.இரவில் அங்கு செல்வது பாதுகாப்பானது அல்ல.
எனவே வீதி.
அமர்ந்து வேலையைப் பார்த்துக் கொண்டே தெருவைப் பார்த்தேன்.

தெருக் கோடியில் யாரோ ஒரு பெண் தலை விரித்து ஆடிக் கொண்டிருந்தாள்
எனக்குப் பயம் ஏதும் ஏற்படவில்லை.ஆச்சரியம்தான்,இந்த நேரத்தில் ஏன் ஆடிக் கொண்டி ருக்கிறாள் என்று
அம்மாவிடம் சொன்னேன்”அம்மா! அங்க பாரேன்.தெருக் கோடில யாரோ தலை விரிச்சிண்டு ஆடிண்டிருக்கா”
அம்மா நான் சொன்ன திக்கில் பார்த்தார்கள்.
“என்னடா ஒளறரே!ஒத்தரையும் காணும்.எதையாவது பேத்தாம சீக்கிரம் எழுந்திரு.தண்னியை ஊத்தறேன்”
” இல்லம்மா,அதோ ஆடிண்டிருக்காளே”
அம்மா அவசரமாக என்னை எழுப்பித் தண்ணீர் ஊற்றி விட்டு உள்ளே அழைத்துச் சென்று விபூதி இட்டுப் படுக்க வைத்தாள்.

மறுநாள்....
எனக்குக் காய்ச்சல் வரும் என்று எதிர் பார்த்தீர்களா?
அதுதான் இல்லை.பள்ளி செல்லும்போது அந்த இடத்துக்கு சென்று நின்று பார்த்து விட்டே போனேன்,.ஒன்றும் தெரியவில்லை.

அப்படின்ன அது பிசாசுதானே!

பிசாசுடனான என் இரண்டாம் அனுபவம் எட்டோ ஒன்பதோ படிக்கும் போது கோவில்பட்டியில் ஏற்பட்டது.

இரவு ஏழு மணி இருக்கும்.

கடைக்குப் போய் ஏதோ வாங்கிவரச் சொன்னார்கள்.போய் வாங்கி வரும்வழியில் தனிமையான ஒரு சாலை.அங்கு ஒரு கிணறு,அதை ஒட்டி குளிக்கத் துணி தோய்க்க இடம்.சாலையிலிருந்து பார்த்தால் இவற்றை மறைக்கும் படியான வெண்சுவர்.
அந்த இடத்துக்கு சிறிதூரம் இருக்கும் போது எனக்கு முன் ஒரு  ஆள் சென்று கொண்டிருந்தான். வெள்ளை வேட்டி சட்டை தலையில் ஒரு வெள்ளை மூட்டை.அவன் அந்தச் சுவரின் பின் சென்று விட்டான்.நான் ஏன் அவனைப் பின் தொடர்ந்தேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. போனேன்.அங்கு எங்கும் அவனில்லை.என் உடலே சில்லிட்டது போல் ஓர் உணர்வு.தலை தெறிக்க வீடு நோக்கி ஓடினேன்.யாரிடமும் எதுவும் சொல்லவில்லை

மறு நாள்.....

பயங்கரக்காய்ச்சல்;சரியாக ஒரு வாரம் ஆயிற்று.
பின்னர் அறிந்தேன்.அக்கிணற்றில் குதித்து முன்பு யாரோ தற்கொலை செய்து கொண்டதாக!
மூன்றாவது.....

மிக சமீபத்திய நிகழ்வு.
இரவு
பாத்ரூம் செல்ல எழுந்தேன்.அருகில் இருந்த கைபேசியில் மணி பார்த்தேன்;12.30
மின்தடை ஏற்பட்டிருந்தது.இன்வெர்டரிலும் பிரச்சினை.
தட்டித் தடவி இருட்டில் போய் விட்டுத் திரும்பும்போதுமின்சாரம் வந்து விட்டது. பாத்ரூமிலிருந்து வெளியே வந்து திரும்பும்போது அந்த பயங்கர உருவம்  இரவு விளக்கின் ஒளியில்கண்ணில் பட்டது;அலறாமல் சமாளித்துக்  கண்களை மூடிக் கொண்டேன். பின்னர் கண்களைத் திறந்தால்.....
.............
..................
.....................

என் எதிரில் முகம் பார்க்கும் கண்ணாடி........!.

25 கருத்துகள்:

  1. ஹஹஹா உண்மையான பிசாசு எப்படி இருக்கும் என்பதை கிளைமாக்சில் சொல்லி விட்டீர்கள். பிசாசை பார்க்க வேண்டும் என்றால் கண்ணாடியைப் பாருங்கள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். அசத்தல்

    பதிலளிநீக்கு
  2. முடிவில் அரண்டு போய் விட்டேன்...! ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  3. ஐயா தங்களது பதிவுக்கு வர என்னைப்போன்ற அப்பாவிகளுக்கு பயமாக இருக்கும் போலயே,,,,,

    பயத்துடன்
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  4. ‘’வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
    விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க - உன்தன்
    வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க’’

    என்று கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அரசிளங்குமரி என்ற படத்திற்கு எழுதிய பாடல், தாங்கள் பிசாசை பார்த்த(!) நிகழ்வை படித்ததும் நினைவுக்கு வருகிறது. பிசாசு என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்று இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் அது இல்லை என்றே நினைக்கிறேன். எது எப்படியோ? உங்களுக்கும் ஒரு திரைப்பட தலைப்பு கிடைத்துவிடுகிறது பதிவிட! பதிவின் இறுதியை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. பேய் அனுபவம் அருமை
    குறிப்பாகக் கடைசிப் பேய்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. What about the first 2 ghosts I hope they r not figments of ur fertile imagination. Vasudevan

    பதிலளிநீக்கு
  7. பிசாசு ஆடுவதைப் பாரக்கிறோமே தவிர ஆட்டத்திற்கு பக்கமேள இசையைக் கேட்க முடிவதில்லை கவனித்திருக்கிறீர்களா?

    பிசாசு என்பது பெண்பால் என்று படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
  8. முழுக்கக் கதையையும் முடியாட்டியும் கிளைமாக்ஸ் சூப்பர்:)

    பதிலளிநீக்கு
  9. எதிரில் கண்ணாடி! :)

    ரசித்தேன் சென்னை பித்தன் ஐயா.

    பதிலளிநீக்கு