தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூன் 22, 2012

ஒரு வரலாறு(தொடர்)-சென்னையில் ராஜியின் பள்ளி நாட்கள்


இதைப் படித்து விட்டீர்களா? 
மேலே.............


இன்று—

ராஜிக்குத் தள்ளாமை அதிகமாகி விட்டாலும் கூட இப்போதும் காலை 5.30க்கு எழுந்து விடுகிறாள்.குளியலில் ஒரு மாற்றம். முன்பெல்லாம் முதலில் குளித்து விட்டுச் சமையல் வேலை களைத்  தொடங்கி விடுவாள்.இப்போது அவள் பையன் முதலில் குளித்துவிட்டு ராஜிக்குக் குளிக்க வென்னீர் போட்டுக் குளியலறையில் உட்கார்ந்து குளிப்பதற்காக நாற்காலியும் போட்டபின் குளிக்கப் போகிறாள்.குளித்து வந்த பின் ஸ்லோகங்களைச் சொல்லியபடி அமர்ந்திருக்கிறாள்.அந்த நேரத்தில் காலனியிலிருந்து பள்ளி செல்லும் பெண்களை பார்க்கும் போது ,அவர்களின் சீருடைகளை,அவர்கள் பேசிக்கொண்டு செல்வதையெல்லாம் காணும்போது அவள் மனம் தன் சென்னைப் பள்ளி நாட்களை நினைத்துப் பார்க்கிறது!

********
அன்று!

“டீ என்ன டீ”
அந்தப்பெண்ணின் கோபம் நிறைந்த சீறலில் ராஜி நடுங்கிப் போனாள்.
அந்த நடுக்கத்துடனே அப்பெண்ணை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தாள்.
”வான்னா,போன்னா- இப்படித்தான் சொல்லணும். அநாகரிகமா  ’டீ’ன்னெல்லாம்
சொல்லக்  கூடாது” .

இது ராஜிக்குப் புதிதாய் இருந்தது.
அவள் முன்பு இருந்த சிற்றூரில் அவர்கள் ஒருவருக்கொருவர் வாடீ போடீ
என்றழைத்துதான் பழக்கம்.

இது புதுமையாகத்தோன்றியது.புதிய மக்கள்.அவர்களின் பழக்க வழக்கங்கள். இனி இங்கு எல்லாமே புதுமையாகத்தான் இருக்கும்,இந்தச்சூழலில் தான் எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற கவலையும் எழுந்தது.

அக்காலத்தில் இன்று போல் சீருடை எல்லாம் கிடையாது. சூரிதார் வகையறா எல்லாம் கிடையாது.இவள் வகுப்பில்,ஓரிரு பெண்கள் தவிர எல்லாரும் புடவைதான்.ராஜியிடம் நல்ல புடவைகள் கிடையாது.இருந்த ஒன்பது கஜம் புடவையையே ஒரு மாதிரிச் சுற்றி அணிந்து கொள்வாள்.மற்ற பெண்கள் நல்ல நல்ல புடவைகள், நகைகள் அணிந்து வருவதைப் பார்த்து அவள் நாணிப் போவாள். அதிலும் சில பெண்கள் பட்டுப் புடவையும் வைரத்தோடும், மூக்குத்தியுமாக வருவார்கள். வகுப்பில் ஓரிரு மாணவிகளே அவளிடம் நெருங்கிப்பழகி னார்கள்.அவள் படித்த நான்காம் படிவத்தில் ஒரே ஒரு பிரிவுதான்.மொத்தம் 36 மாணவிகள் .5ஆம் படிவத்தில் 12 பேர்;6ஆம் படிவத்தில் 8 பேர்தான்.

அக்காலத்திலும் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள்.அவள் வகுப்பில் 26 வயது நிறைந்த ஒரு மாணவி இருந்தாள்.மணமானவள்;இரண்டு குழந்தைகள் வேறு. பையன் ஆறாம் வகுப்புப் படித்து வந்தான்.அவள் கணவனுக்குச்  சொற்பச் சம்பளம். அவள் படித்து ஏதாவது வேலை பார்த்தால் நல்லது என்ற எண்ணத்தில் அவள் கணவனே அவளைப் படிக்க வைத்துக்கொண்டிருந்தான்.

ஆறாம் படிவத்தில் படித்து வந்த ஒரு பெண் கணவனை இழந்தவள்.அவளது எதிர்காலத்தை மனதில் கொண்டு அவள் பெற்றோர் அவளைப் படிக்க வைத்தனர்.(பின்னொரு காலத்தில் கல்லூரிப் பேராசிரியரான தன் கணவனின் கல்லூரிப் புகைப்படம் ஒன்றில் மாணவர்கள் வரிசையில் அவளை பார்த்த ராஜி மிகவும் ஆச்சரியப் பட்டுப் போனாள்)


அவள் வகுப்பில் இரு சகோதரிகள் படித்து வந்தனர். அவர்களில் ஒருத்தி ராஜிக்கு நெருங்கிய தோழியாக இருந்தாள். சகோதரிகள் பள்ளியில் பேசிக்கொண்டு அவள் பார்த்த தேயில்லை.ஒரு நாள் ராஜி அவர்கள் வீட்டுக்குப் போயிருந்த போது அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்து ஆச்சரியப் பட்டுப் போனாள்.தோழியிடம் கேட்டாள் ”ஏன்னா,நீங்க ரெண்டு பேரும் பேசுவீங்களா? வகுப்பில பேசவே மாட்டீங்களே,அதான் கேட்டேன்”
அந்தத்தோழி கேட்டாள்”என்னன்னா இப்படிக் கேக்குறே? அக்கா,தங்கை எங்காவது பேசிக்காம இருப்பாங்களா? அங்கே பேச வெட்கமாக இருக்கும்,அதுதான்”

அந்த அளவுக்கு ராஜி அப்பாவியாய்,ஏதுமறியாதவளாய் இருந்தாள்


இன்னொரு பெண்.பெயர் நீலா.அவள் அப்பாவுக்கு அந்தக் காலத்திலேயே 2000 ரூபாய் சம்பளமாம்.அவர்கள் மயிலாப்பூரில் வசித்து வந்த வீட்டு வாடகையே 100 ரூபாய் என்று அறிந்த போது ராஜி ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள்.ராஜியின் வீட்டு வாடகை 14 ரூபாய்தான்!


அவள் அப்பா ஒவ்வொரு மாதமும் அவள் பெயரில் வீட்டு விலாசத்துக்குத்தான் பணக்கட்டளை மூலம் பணம் அனுப்புவார்.ஆனால் தபால்காரர் வரும் நேரத்தில் ராஜி பள்ளியில் இருப்பதால் அவர் பள்ளிக்கே வந்து பணத்தைக் கொடுத்து விடுவார்!

படிப்பைப் பொறுத்தவரை சமஸ்கிருதம்,ஆங்கிலம் இரண்டிலும் ராஜி வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று விடுவாள்.ஆனால் கணிதம்---சுமார்தான்!சமஸ்கிருதத்தில் வீட்டுப்பாடம் நிறைய இருக்கும் வேறெதையும் படிக்க நேரமே இருக்காது. வீட்டுப் பாடம் எல்லாம் முடித்துக் களைப்படைந்து புத்தகத்தைக் கையில் எடுத்தால் கண்கள் செருகும். புத்தகம் நழுவிக் கீழே விழும்!
*****
இன்று!

கையிலிருந்த ஜயமங்கள ஸ்தோத்திரம் புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது.ராஜி நிகழ்காலத்துக்கு வந்தாள்.விட்ட இடத்தி லிருந்து  படிக்க ஆரம்பித்தாள்”குண்டலீக்ருத குண்டலீச்வர குண்டலம் வ்ருஷ வாஹனம்…..”


15 கருத்துகள்:

  1. ராஜியின் அந்தநாள் ஞாபகம்! படிக்க படிக்க சுவாரஸ்யம். அந்தக் கால சமூக நிலைமையில் இருந்த எளிமையை இன்று காணமுடியாது

    பதிலளிநீக்கு
  2. ராஜியின் பள்ளி நாட்களில் என்னையும் இணைத்துக் கொண்டேன்..

    பதிலளிநீக்கு
  3. மாறி மாறி வரும் காட்சிக்ள் கண்முன்னே அப்படியே நிற்கின்றன!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  4. ராஜியின் பள்ளிக்கூட மலரும் நினைவுகள் அருமை .

    பதிலளிநீக்கு
  5. மலரும் நினைவுகள் என்றும் சுகமே தல...!

    பதிலளிநீக்கு
  6. மைலாப்பூரில் ரூபாய் 14 க்கும் 100 க்கும் வீடு வாடகைக்கு கிடைத்ததா? அந்த நாள் திரும்ப வருமா?
    தொடர் அருமையாய் போய்க்கொண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. தொடர் பழைய நினைவுகளோடு இனிமையாய் போகிறது. தொடரட்டும்.....

    பதிலளிநீக்கு
  8. நாங்களும் ராஜியுடன் அந்தக் காலத்துக்குப் போய்த்
    திரும்பினோம்.சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. அருமை வரலாறு போல் உள்ளதே...

    பதிலளிநீக்கு