தொடரும் தோழர்கள்

திங்கள், மே 02, 2011

குழைக்கின்ற கவரியின்றிக் கொற்ற வெண் குடையுமின்றி!

எனது 11-04-2011 தேதியிட்ட ”நாசமாய்ப் போகட்டும்” என்ற பதிவில்,கைம்பெண் என்ற காரணத்தால் ஒரு தாய்க்கு அவள் மகனின் திருமணத்தைக் காணும் உரிமையில்லாமல் போன அவலம் பற்றி எழுதியிருந்தேன்.

அதைத் தொடர்ந்த ஒரு சிந்தனையின் விளைவான ஒரு பதிவு.

சிறிது இலக்கியம் சார்ந்த ஒரு பதிவு!



கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல், ஒரு வினாவை என்னுள் எழுப்பியது.

அந்தக் காலத்தில்.மகாராணிகளுக்குத் தங்கள் மகனின் பட்டாபிஷேகத்தைப் பார்க்கும் உரிமை மறுக்கப் பட்டதா?கவனிக்கவும்,இங்கு அவள் சுமங்கலிதான்.

இந்த ஐயத்தை எழுப்பிய பாடல் இதோ----

“குழைக்கின்ற கவரியின்றிக் கொற்ற வெண் குடையுமின்றி
இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின்னிரங்கியேக
மழைக் குன்றமனையான் மௌலி கவித்தனன் வருமென்றென்று
தழைக்கின்ற உள்ளத்தன்னாள் முன்னொரு தமியன் சென்றான்!”

இராமன்,தந்தையின் முடிவுகளைக் கைகேயி மூலம் கேட்டு,விவரத்தைக் கோசலையிடம் சொல்லி,அவர்கள் ஆசி பெற்றுக் கானகம் போக எண்ணிக் கோசலையின் அந்தப் புரத்துக்கு வருகிறான்.

அவன் பட்டம் சூட்டிய பின் வந்திருந்தால்,அவனுக்கு முன் கவரி வீசி ஒருவர், பின்னிருந்து வெண் கொற்றக் குடையை ஏந்தி ஒருவர் எனப் பரிவாரம் சூழ வந்திருப்பான்.ஆனால் இப்போதோ!கவரிவீசும் ஆளுக்குப் பதிலாக,விதி முன்னே அழைத்துச் செல்கிறது. வெண்கொற்றக் குடைக்குப் பதிலாக அறம் பின்னால் அழுதுகொண்டே செல்கிறது. பரிவாரங்கள் ஏதும் இன்றித் தனி மனிதனாக அந்த மேக மலை போன்ற இராமன்,அரச மகுடத்துடன் அவன் வருவான் என்று காத்திருக்கும் கோசலை முன் செல்கிறான்.

இந்தப் பாடல் என்ன உணர்த்துகிறது?பட்டம் சூடி அரசனாக இராமன் தன்னைக் காண வருவான் எனக் கோசலை தன் அந்தப்புரத்தில் காத்திருந்தாள்.அதாவது பட்டாபிஷேகத்தைக் காண அவள் செல்லவில்லை,செல்ல அவளுக்கு உரிமையில்லை என்பதுதானே!?

இது வெறும் கவி நயத்துக்காகக் கம்பன் எழுதியதா?அல்லது உண்மையிலேயே, இராணிக்குத் தன் மகனின் பட்டாபிஷேகத்தைப் பார்க்கும் உரிமை மறுக்கப் பட்டதா—இராணியாயிருப்பினும் அவள் பெண் என்ற காரணத்தால்?

வரலாற்று அறிஞர்களால் ,அக்கால நடை முறை என்ன என்பதைக் கூற இயலும்!

தமிழ் அறிஞர்களால் இது சம்பந்தமாக இலக்கிய மேற்கோள்களுடன் விளக்கம் தர முடியும்!

பணிவன்புடன் வேண்டி,எதிர் பார்த்துக் காத்திருக்கிறேன்!

26 கருத்துகள்:

  1. படாபிஷேக விழா பேச்சளவில் தானே இருந்தது?
    ந்டைபெற்றிருந்தால் நிச்சயம் மூன்று பட்டமகிஷிகளும் தசரதனுடன் பங்கேற்றிருப்பார்கள் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு. என்ன நடந்திருக்கும் என்பது புரியவில்லை. உங்களுடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன், தமிழறிஞர்களின் பதிலுக்கு....

    பதிலளிநீக்கு
  3. @இராஜராஜேஸ்வரி

    மகுடம் சூடி வருவான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள் என்று ஏன் சொன்னான் கம்பன்?for dramatic efect?
    நன்றி!

    பதிலளிநீக்கு
  4. உன்மையிலே சரியான ஆய்வுதான்...

    ராமனின் பட்டாபிஷேகம் அவருடைய தாய் கலந்துக் கொள்ளாதது வியப்பைத்தான் ஏற்படுத்துகிறது.

    தனக்கு பட்டம் இல்லை என்றபோதும் கலங்காத ராமனே நம் கண்முன் நிற்கிறார்..

    ராமாயணம் முழுக்கப்படிந்தாய்தால் தான் இதற்கான சரியான விளக்கம் கிடைக்கும்..

    பதிலளிநீக்கு
  5. புதிய கோணத்தில் சிந்திச்சு இருக்கீங்க தல....

    பதிலளிநீக்கு
  6. பழைய சினிமா எல்லாம் பார்க்கும் போது, பெண்கள் [மகாராணிகள்] அரியணையில் இருப்பதை பார்த்துருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. உண்மையிலேயே நியாயமான சந்தேகம்தான். தெளிவு பெற்றபின் எல்லோருக்கும் சொல்லுங்க....

    பதிலளிநீக்கு
  8. பட்டாபிஷேகத்தில் தாய் கலந்துகொண்டாலும், அங்கு வைத்து மகனை உச்சிமோந்து பரவசப்பட முடியுமா?..எனவே பட்டாபிஷேகத்தைப் பார்த்தாலும், அதன்பின்னர் மகன் அதே மகுடத்துடன் தன்னை அந்தப்புரத்தில் சந்திக்கவேண்டும் என தாய் எதிர்பார்த்ததாகவே நான் நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் கேள்விக்கு விடை கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  10. தங்கள் கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை...தமிழ் ஆர்வலர்கள் விளக்கம் தர வரவேற்கப் படுகின்றார்கள்...

    பதிலளிநீக்கு
  11. இராமாயணத்தில் பெண்ணுரிமை ஏது? பெண்ணை வர்ணித்து அல்லவா கம்பன் எழுதியுள்ளான். அண்ணாவின் கம்பரசம் படித்தவன் என்பதால்........

    இராமன் எந்த பெண்ணை மதித்தான். கூனி முதல் சீதை வரை

    பதிலளிநீக்கு
  12. பட்டாபிஷேகம் நடைபெறவில்லை...பேச்சளவில் இருக்கும்போதே கானகம் செல்லும் நிலை ஏற்படுகிறது! ஆசீர்வாதம் வாங்க வருகிறான்.இல்லாவிட்டால் இராமன் கௌசலையின் அந்தப் புரத்துக்கு மகுடம் சூட்டப்பட்ட நிலையிலேயே வந்திருப்பான் தனிப்பட்ட முறையில் அவளைச் சந்தித்து ஆசி பெற!
    - இப்படியும் இருக்கலாம்...! :-)

    பதிலளிநீக்கு
  13. @வேல்முருகன் அருணாசலம்
    நன்றி !

    பதிலளிநீக்கு
  14. அந்த காலத்தில் மகாராணிகளை பட்டாபிஷேகத்தில் பங்கேற்க நிச்சயம் அனுமதித்து இருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். மகனின் முடிசூடும் விழாவில் தாய் பங்கேற்பது அவசியம். ஏனெனில் எந்த அரண்மனை விசேடங்களிலும் அரசர், ராணியோடு பங்கேற்பதுதான் நடந்து வந்திருக்கிறது. இராமன் முடிசூட்டிக்கொண்டு பட்டத்து இளவரசனாகத்தான் தனது இருப்பிடம்(அந்தப்புரம்) வருவான் என எண்ணியிருந்தபோது, அப்படி வராமல் தனி மனிதனாக வந்தது அவளுக்கு ஏமாற்றமே என்பதைத்தான், கவியரசர் கம்பர் கவிநாயத்தோடு சொல்கிறார் என நினைக்கிறேன். இருப்பினும் இது பற்றி தமிழ் அறிஞர்களிடம் கேட்பதே மேல்.

    பதிலளிநீக்கு
  15. வே.நடனசபாபதி சொன்னது…
    இதுவே என் எண்ணமும்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  16. அலுவலக பணி காரணம் சிறிது காலம் தங்கள் பதிவுகளை படிக்க இயலவில்லை . இதோ வந்து விட்டேன் ... சிந்தனையை தூண்டும் ஆய்வு . கைகேயி தசரதனால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு மனைவி . அவரின் உயிரை ஒரு தருணம் காத்த காரணமாக இருக்கலாம் . கைகேயியின் மீது அதிக மோகம் கொண்டவன் தசரதன் . ஒரு வேளை ராமனின் பட்டாபிஷேக விழாவிற்கு தன்னுடன் கைகேயி இருந்தால் போதும் என்று எண்ணி இருக்கலாம் . ஒரு வேளை ஒவ்வொரு விழாவிற்கு ஒவ்வொரு மனைவியை அருகில் வைத்து கொள்ளும் வழக்கம் அவரிடம் இருந்ததோ என்னவோ . இதனை அறிந்த கோசலை ராமனின் வரவிற்காக தன் இருப்பிடத்தில் காத்து இருந்தாளோ ? ஏதோ என் சிற்றவிற்கு எட்டியதை கூறிவிட்டேன் . வாசுதேவன்

    பதிலளிநீக்கு