தொடரும் தோழர்கள்

திங்கள், ஜனவரி 19, 2015

மாதொருபாகன்



கிளம்பிய புழுதி அடங்கவில்லை!

அவ்வளவு எளிதில் அடங்கி விடுமா என்ன?

அனைவர் கண்களையும் மறைக்கும் புழுதி.

நடந்து கொண்டிருப்பது ஊர்த்துவ தாண்டவமல்லவா?

உலகநாயகன்,விச்வ காரணன்,விச்வரூபி,விச்வாதிகன்,அழிக்கும் கடவுள் உருத்திரன் ஆடும் நடனம்!

ஏன் இந்தக் கோபம்?

தந்தை நடத்தும் யாகத்துக்குப் போக வேண்டும் என தாட்சயணி கேட்க,அதை இறைவன் மறுக்க இறைவன் சொல்லை மீறித் தாட்சாயணி சென்று அவமானப் பட்டுத் திரும்ப. இறைவன் அவளை  விலக்க,இறைவி சக்தியின் பெருமை உரைக்க,இறைவன் சக்தியின்றிச் சிவம் இயங்கும் என முடிவுரைக்க,வாக்குவாதம் முற்ற, தொடங்கியது ..............

ஊர்த்துவதாண்டவம்.

அகில உலமெல்லாம் நடுங்கும் நடனம்.

திக்குகள் அலைந்தன.அண்டம் அதிர்ந்தது.

சக்தியும் இறைவனுடன் போட்டியிட்டாள்,

நடனம் நின்றது.

இறைவனின் மூன்றாவது கண் திறந்தது.

எரிந்து சாம்பலானாள் சக்தி.

நடனம் மீண்டும் தொடங்கியது.

சோர்வென்பதே அறியாத ஈசன்,சிறிது நேரத்தில் சோர்வடைவதை உணர்ந்தான்.

அவன் மட்டுமல்ல;பிரம்மா,விஷ்ணு,முப்பத்து முக்கோடி தேவர்கள்,மனிதர்கள்,உயிரினங்கள் அனைவரும் சிறிது சிறிதாகச் சோர்வடையத் தொடங்கினர்.

நேரம் செல்லச் செல்ல உடல் சக்தி அவர்களை விட்டு நீங்க ஆரம்பித்தது.

பிரம்மனால் படைக்க முடியவில்லை.

பாற்கடலில் அறிதுயிலில் இருக்கும் மாதவன் அறியாத்துயிலில் ஆழத்தொடங்கினான்.

உருத்திரன் அழிக்கும் தொழில் செய்ய அசக்தனானான்.

இந்நிலை தொடர்ந்தால்?

தேவர்கள் வேண்டினர்.

ஈசன் உடன்பட்டான்

”சக்தி.....”

தன் சக்தி அனைத்தையும் திரட்டி ஈசன் அழைத்தான்.

”சக்தி!எழுந்து வா!”

...................

சக்தி உயிர் பெற்று எழுந்தாள்.

மும்மூர்த்திகளும்,முப்பத்து முக்கோடி தேவரும் மூவுலக உயிர்களும் சக்தி பெற்றனர்.

இறைவன்,இறைவியைத் தன் அருகே  அழைத்தான்.

”சக்தி!நீயின்றி நானில்லை.சக்தியின்றிச் சிவம் இல்லை.என்னில் நீ அடக்கம்.உன்னில் நான் அடக்கம்.கணவன் மனைவி உறவில் மனைவிக்குச் சம உரிமை உண்டு.வாழ்வில் சம பங்கு உண்டு. இதை இந்த உலகுக்கு உணர்த்துவோம் வா!

தன் இடப்புறம்.,இதயம் இருக்கும் இடப்புறம், இறைவியை அழைத்துத் தன் இடதுகையால் சக்தியை இறுக,.தன்னில் அவள் பாதியாகுமாறு அணைத்தான்

சிவனும் சக்தியும் ஒன்றாயினர்!

ஈசன் மாதொரு பாகனானான்.

டிஸ்கி:இதை எந்தப் புராணத்திலும் தேட வேண்டாம்.இது என் கதை.புராண ஆதாரம் எதுவும் கிடையாது.பதிவுக்குத் தலைப்பை வைத்தேன்;அதற்குப் பொருத்தமாக எழுதினேன்.!





14 கருத்துகள்:

  1. என்னமோ நினைத்தேன்...

    அனைவருக்கும் உரிமை உண்டு என்றால் சரி தான்...!

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் ‘கதை’த்திருந்தாலும் தலைப்புக்குப் கதையின் கரு பொருத்தமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்! உங்களுக்கென்று ஏதேனும்ஒரு சுவாரஸ்யமான தலைப்பு கிடைத்துவிடுகிறது பதிவிட!

    பதிலளிநீக்கு
  3. சமயோசிதத்தையும் பதிவையும்
    மிகவும் இரசித்தேன்

    உன்னை என்னால் அழிக்க முடியும்
    எனவே நானே உயர்தவன் எனக் நிரூபித்துவிட்டு
    சம பங்கு அளித்தல் என்பது கூட
    ஒருவகையில் .....

    பதிலளிநீக்கு
  4. உன்னில் நான் என்னில் நீ அடக்கம்,இதை உணரும் தம்பதிக்கு என்றும் வாழ்க்கை இனிமையானதே,இதயத்தின் இடத்தில் மனைவியை வைத்தார் என்று சொன்னீர்களே அது மிகவும் அருமை நன்றி.....

    பதிலளிநீக்கு
  5. சீசனுக்கு ஏற்ற தலைப்பு! அருமையான கதை! கருத்து மிகவும் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. ஆமாம் அய்யா, ஆளாளுக்கு கிளப்பிய புழுதி இன்னும் அடங்கவில்லை. மாதொரு பாகனுக்கு கண்கள் சிவந்தன.
    த.ம.6

    பதிலளிநீக்கு
  7. நான் ஒண்ணும் ஏமாறலையாக்கும்!

    பதிலளிநீக்கு
  8. மாதொரு பாகன்.................ஹி!ஹி!!ஹீ!!!

    பதிலளிநீக்கு
  9. அட்டகாசம் சார். இப்படித்தான் கதைகள் தோன்றி நிலை பெற்று விடுகின்றன.இந்தக் கதைக்கும் அந்த தகுதி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. இக்கதைக்கு ஆதாரம் கேட்க மாட்டார்கள். ஏனென்றால், சக்தி-சிவன் தம்பதியர் எந்த ஜாதியென்று நீங்கள் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டிருந்தால்,...புழுதி கிளம்பும்; எளிதில் அடங்காது. நீங்கள் தமிழ்மணத்தை விட்டே விரட்டப்படுவீர்கள் :-)

    பதிலளிநீக்கு