தொடரும் தோழர்கள்

புதன், மார்ச் 25, 2015

கொலம்பஸ்.கொலம்பஸ்,விட்டாச்சு லீவு!



//அக்கரையில் தாயாய் என்னைப்பெற்றவள்!
இக்கரையில் என்னைத் தாயாய்ப் பெற்றவள்!
தலைமுறைப் புரிதல்களுக்கிடையில்
தடுமாறுகின்றன உறவுகள்!
கரைகளை இணைக்கும்
கவின்மிகுபாலமாய் இடையில் நான்!

நேற்று பாலமாயிருந்தவள்தான்
இன்று அக்கரையேகியுள்ளாள்
ஏனோ அதை மறந்துபோனாள்!
இன்று இக்கரையானவளே
நாளை பாலமாகுவாள்
பாவம் அதை அவள் அறியாள்!

இற்றுப்போகா வரம்பெற்றுவந்த பாலங்களால்
இறுக்கமாகும் இடைவெளிகள் யாவும்
இன்னும் பல தலைமுறைகள் கடந்தும்!//


இன்று முகநூலில் நான் படித்து ரசித்த திருமதி கீதா மதிவாணன் அவர்களின் கவிதை.
இரு தலைமுறைகளின் இடைவெளி நிரப்ப இடையில் உள்ள தலைமுறை பாலமாவதைப் பற்றி எழுதியிருக்கிறார்.


உன்மைதான்.

ஏன் இந்தநிலை?

தாத்தா பாட்டி,சித்தி,சித்தப்பா,மாமா,மாமி என்ற உறவுகளின் நெருக்கம் குறைந்து போகக் காரணம் என்ன?

இரண்டு தலைமுறைகளுக்கு நடுவே ஒரு தலைமுறை பாலமாக வேண்டி நேர்ந்தது ஏன்?

பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கி விட்டது/தொடங்க இருக்கிறது.இரண்டு மாதங்கள் விடுமுறையில் சிறுவர்கள் என்ன செய்கிறார்கள்?அடுத்த வகுப்புக்குத் தயார் செய்கிறார்கள்;
அந்த கிளாஸ்,இந்தக் கிளாஸ் என்று போய் வருகிறார்கள்.கோடை முகாம்களுக்குச் செல்கி
றார்கள்.சிலர் குடும்பமாக-இங்கு குடும்பம் என்பது அப்பா, அம்மா,குழந்தைகள் மட்டுமே_
அதிக பட்சம் ஒருவாரம் ஏதாவது சுற்றுலா சென்று வருகிறார்கள்.திரும்பியபின் பெரியவர்கள் செலவுக்கணக்கைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறார்கள்;சிறுவர்கள் நண்பர்களிடம் பெருமை அடித்துக் கொள்கிறார்கள்.அவ்வளவே

நான் உறவுகளுக்குப் பாலம் தேவைப்படாத ஒரு காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
என் பள்ளி நாட்களில்,நாங்கள் சாத்தூர்,கோவில்பட்டி,சிவகாசி ஆகிய ஊர்களில் இருந்த காலத்தில்,பள்ளி விடுமுறை என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.லீவுக்குப் போவது என்பது ஒரு  இனிய சடங்காகவே இருந்தது.உசிலம்பட்டியில்(பின்னர் திண்டுக்கல்-ஆம்,வலைச்சித்தர் ஊர்தான்)  என் சின்னத்தாத்தா அம்மாவின் சித்தப்பா அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்.அவரும் சின்னப்பாட்டியும் எங்கள் மீது மிகவும் பிரியமாக இருப்பார்கள்.எங்களுக்கும் அவர்களை மிகவும் பிடிக்கும்.

அது போலவே வத்திராயிருப்பில் என் அம்மாவின் சித்திகள் இருவர்.இளம் வயதிலேயே கைம் பெண்ணானவர்கள் இருந்தனர்.அவர்களும் எங்கள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். இந்த இரண்டு ஊர்களில் ஒன்றுக்கு லீவுக்குப் போவது என்பது எழுதப்படாத ஒரு சட்டம்! கோடை விடுமுறையில் பயணம் நிச்சயம்.சில சமயம் மற்ற கால் பரிட்சை,அரைப் பரிட்சை விடுமுறைகளிலும் போவதுண்டு.

லீவு விடும் முன்பே செல்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விடும்.அந்த ஊர்களில் பொழுது போக்கிய விதம். சாப்பிட்ட நொறுக்குத் தீனிகள். வித்தியாசமான அனுபவங்கள் எல்லாமே இன்று வரை நினைவில் நிற்கின்றன.எங்கள் வீட்டில் அந்தநாள் நினைவுகளைப் பகிர்ந்து ரசிப்பது இன்றும் தொடர்கிறது.

இன்றைய சிறுவர்களுக்கு அத்தகைய சுகம் மறுக்கப்பட்டு விட்டதாகவே எண்ணுகிறேன். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எனில் இங்கு வரும்போது அவர்களுக்கு அனுசரித்துப் போவது என்பது மிகக் கடினமானதாக இருக்கிறது

உறவுகள் தொலைபேசி வாயிலாகவும் ஸ்கைப் வாயிலாகவுமே தொடர்பில் உள்ளன; இடைவெளி இருப்பது சகஜம்தானே?

என் லீவுக்குப் போன அனுபவங்களைச் சொல்லாமல் விட்டால் எப்படி?

தொடர்வேன்!

5 கருத்துகள்:

  1. அப்போதெல்லாம் கோடை விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். தாத்தா, பாட்டி, மாமா, சித்தி என்று ஊர்களுக்கு படையெடுத்துவிடுவோம்! இப்போது அதெல்லாம் குறைந்து போனது மட்டுமல்ல மறைந்தும் போனது வேதனையான விஷயம்!

    பதிலளிநீக்கு
  2. தங்களின் விடுமுறை அனுபவங்களை அறிய காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. ஆம் சார்,, நாங்களும் சின்ன வயதில் விடுமுறைக்கு சித்தி வீடு, பெரியம்மா வீடு என்று செல்லும் வழக்கமும் அவர்களும் எங்கள் வீட்டுக்கு வரும் வழக்கமும் உண்டு. இப்பொழுது மிகவும்குறைந்து விட்டது உண்மை.
    உங்கள் அனுபவங்களை படிக்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் சொல்லியிருப்பது போல நாங்களும் லீவுக்கு பாட்டி, தாத்தா ஊருக்குத்தான் செல்வோம். நாங்கள் சென்றது நாகப்பட்டினமும், பெரும்பண்ணையூரும்! நாகப்பட்டினம் பாட்டிக்கு மொருமொரு தோசைப் பாட்டி என்று பெயர் வைத்திருந்தோம்!

    வத்ராப்பில் நான் 89 இல் பணிபுரிந்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  5. புலவர் ஐயாவோடு உங்களையும் விரைவில் வருகையை இங்கே எதிர்ப்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு