தூய்மை பாரதம்.
இதுவே இன்றைய மந்திரம்.
சுத்தம் சோறு போடும் என்பார்கள்.
சுத்தமாக இருக்கும் இடத்தில்தான் மகாலட்சுமி இருப்பாள்.
லட்சுமியே செல்வம் தருபவள்
அவள்தான் வெள்ளிக்கிழமையின் தேவதை..
வெள்ளியன்று வாசலில் செம்மண்ணிட்டுக் கோலம் போடும் வழக்கம் உள்ளது.
பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்துப் பொலிவுடன் காட்சி தருவர்,
சுத்தம் எவ்வளவு தேவை என்பதைச் சொல்லும் ஒரு குட்ட்.....…டிக்கதை.
ஒரு புது மணத் தம்பதி புதிதாக ஒரு
வீட்டுக்குக் குடி வந்தனர்.
காலை எழுந்து சன்னல் கண்ணாடி வழியே
பார்த்த மனைவி கணவரை அழைத்துச் சொன்னாள்”அதோ பாருங்க!அடுத்தவீட்டுக்காரிக்குத்
துவைக்கவே தெரியாது போல. காயப்போடும் துணியெல்லாம் அழுக்காவே இருக்கு.யாராவது
அவளுக்குச் சொன்னால் பரவாயில்லை”
கணவன் ஒன்றும் சொல்லவில்லை.
இது சில நாட்கள் தொடர்ந்தது.
பின் ஒரு நாள் காலை மனைவி ஆச்சரியத்துடன்
சொன்னாள்”இன்னிக்குத் துணியெல்லாம் பளிச்சுன்னு இருக்கு.யாராவது சொல்லியிருப்பாங்க
போல”
கணவன் அமைதியாகச் சொன்னான்
.................
“இன்று காலை சீக்கிரமே நான் நம்
வீட்டுச் சன்னல் கண்ணாடிகளையெல்லாம் துடைத்தேன்”
இப்படித்தான் இருக்கிறோம் நாம்.
மற்றவர்களைக் குற்றம் சொல்லும் முன் நமது
பார்வையின், நமது எண்ணத்தின் தூய்மையை நாம் சோதித்துக் கொள்ள வேண்டும்.
இதுவே இன்றைய வெள்ளிச் சிந்தனை!