தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜனவரி 10, 2016

மரணமும் மகிழ்ச்சி தருமோ!

ஒரு மனிதன் வக்கீலின் அலுவலகத்துக்குப் போன் செய்தான்

அவன் சொத்து வழக்கு ஆண்டுக்கணக்காக இழுத்துக் கொண்டிருந்தது

வக்கீலுக்குப் பணம் கொடுத்து நொந்து போயிருந்தான்

அலுவலக வரவேற்புப் பெண் பேசினாள்.

”நான்  குமார்.வக்கீல் ராமனிடம் பேச வேண்டும் ”என்றான் அவன்

அவர் போன வாரம் இறந்து விட்டார் என்றாள்

தொடர்பைத் துண்டித்தான்

மீண்டும் மறுநாளும் போன் செய்து நான் குமார்.வக்கீல் ராமனிடம் பேச வேண்டும் என்றான்

நேற்றே சொன்னேனே அவர் போன வாரம் இறந்து விட்டார் என்று என்றாள்

மறுநாளும் போன் செய்தான்”வக்கீல் ராமனிடம் பேச வேண்டும்”


கோபமான பதில்”எத்தனை முறை சொல்வது;அவர் இறந்து விட்டார் என்று”

அவன் சொன்னான்”எத்தனை முறை கேட்டாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது!”

(இது ஒரு மெருகூட்டப்பட்ட ஆங்கில நகைச்சுவை)

சனி, ஜனவரி 09, 2016

ஓடிப் போனவள்!



ஓடிப் போனவளே நான் ஒன்னைத்

தேடித் தேடி அலுத்துப்போனேன்!

பாக்காத நேரத்தில் பாவி மக 

பரிதவிக்க விட்டுப் போனாயே!

என்ன கொறை வச்சேன் ஒனக்கு

என்னை ஏன் விட்டுப் போனேடி?

சோசியமும் பாத்தாச்சு,ஆத்தா

அருள் வாக்கும் கேட்டாச்சு

எதுவுமே பலிக்கலியே இன்னும் நீ

இருக்கும் எடமும் தெரியலியே

வேலைக்கும் போகலியே 

வீட்டில் எல்லாம் குவிஞ்சிடுச்சே

சுணக்கம் இல்லாம வா,துணியெல்லாம் 

சுமக்க   வேறென்ன செய்வேன்?!


(ஒரு கிராமத்து சலவைத் தொழிலாளி காணாமல் போன கழுதையை எண்ணிப் புலம்புகிறார்)

வியாழன், ஜனவரி 07, 2016

விருந்துச் சாப்பாடு!



தொலை பேசி மணி ஒலித்தது
எடுத்தேன்

நண்பர் ஏடிஎஸ்

சார்!நாளைக்கு என் நண்பர் ஒருவருக்கு அறுபது நிறைவு விழாவுக்கு முன்னதான ஏகாதச ருத்ர ஜபம்;நம்ம குழுவிலிருந்து பதினோருபேர்.நீங்க கட்டாயமா நாளைக் காலை 7 மணிக்கு ராஜா கல்யாண மண்டபத்துக்கு வந்து விடுங்கள்

சரி
------------------                    
ராமனாத அய்யர் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விட்டார்.

அவருக்கு வயது 79 ஆகி விட்டது.வறுமையில் மெலிந்த சரீரம்.ஒட்டி உலர்ந்த வயிறு
என்னன்னா.அதுக்குள்ளே எழுந்திருந்துட்டேள்?” மனைவி சாவித்ரியின் கேள்வி.

நேத்து வெளில போறச்சே பாத்தேன்,ராஜா கல்யாண மண்டபத்தில ஒரு ருத்ர ஜபம்.போய் ரித்விக்குகளோட சேர்ந்து ஜபிச்சுட்டு ஏதாவது சம்பாவனை கெடச்சா வாங்கிண்டு நல்ல சாப்பாடா சாப்பிட்டுட்டு வந்துடலாமேன்னுதான்

சாவித்ரிக்கு கண்களில் நீர் கசிந்தது.

முன்பெல்லாம் மூர்த்தி சாஸ்த்ரிகள் இவரை பிராமணார்த்தம் போன்றவற்றுக்கு அழைத்துச் செல்வார். சாவித்ரிக்கு அங்கு சமையல் வேலையும் கிடைக்கும்.சாஸ்த்ரிகள் பையனோடு தில்லிக்குப் போன பின் அது நின்று போய் விட்டது. சாவித்ரியாலும் தள்ளாமையினால் அதிகம் சமையல் வேலைக்குப் போக முடிவதில்லை.வயிறாரச் சாப்பிடுவது என்பது அரிதாகிப் போனது

அய்யர் ஸ்நானம் முடித்து விட்டு வந்து,கூடத்தின் மூலையிலிருந்த சிறிய தகரப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து நீர்க்காவி ஏறிய ஒன்பது முழம் வேஷ்டி,அங்கவஸ்திரத்தை எடுத்தார். அவரிடம் இருந்த ஒரே ஒரு சுமாரான வேஷ்டி அதுதான். எடுத்துப் பிரித்தார்

ஏன்னா! கிழிஞ்சிருக்கு போலிருக்கே?”

ஒரு ஓரமாத்தான் இருக்கு.மடிப்பில மறைஞ்சிடும்

பஞ்சகச்சமாகக் கட்டிக் கொண்டார்.விபூதியைக் குழைத்துப் பூசிக் கொண்டார், அங்க வஸ்திரத்தை மேலே போட்டுக் கொண்டார்.சாமி கும்பிட்டார்.கையில் மஞ்சப் பையை எடுத்துக் கொண்டார்

போயிட்டு வரேண்டி

சரின்னா 

ஈஸ்வராஎன்று சொல்லியவாறே புறப்பட்டார்
-----------                
நான் மண்டபத்தை அடைந்தபோது மணி 6.45.ஏடிஎஸ்ஸும் ஓரிரு நன்பர்களும் ஏற்கனவே ஆஜர்.

காபி சாப்பிடுங்கோ

குடித்து விட்டு ஹாலில் சென்று அமர்ந்தோம்

அனைவரும் வந்து சேரந்தனர்

7 மனிக்குப் பாராயணம் ஆரம்பமாயிற்று

முதலில் மஹா நியாஸம்.


வேத ஒலி அங்கு நிறைந்தது

அரை மணி போயிருக்கும்.

அந்த வயதான அந்தணர் உள்ளே வந்தார்

எங்கள் குழுவோடு சேர்ந்து கடைசியில் அமர்ந்தார்.

எனக்கு அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

எங்களோடு சேர்ந்து அவரும் ஜபிக்க ஆரம்பித்தார்

ஒன்பது மணிக்கு மஹாநியாஸம் முடிந்தது.

அந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து ”வாங்கோ.டிஃபன் சாப்பிடப்போகலாம் ”என்று அழைத்தார்

வழக்கமாகக் கஞ்சிதான் குடிப்போம்;ஆனால் அன்று அவர்கள் ஏற்பாடு செய்யவில்லை போலும்

சாப்பாட்டுக் கூடம் நோக்கிப் புறப்பட்டோம்

அந்தப் பெரியவரும்தான்.

எங்களோடு அமர்ந்து கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்.

முடிந்ததும்,அமைப்பாளரிடம்ரொம்ப நன்னாருந்ததுஎன்று சான்றிதழ் வழங்கினார்.

மணி 9.45

ருத்ர ஜபம் ஆரம்பமாயிற்று.

எங்களோடு சேர்ந்து அவரும்.

ஜபம் முடிந்து அபிஷேகங்கள் ஆனபின் சாப்பாடு.

மீண்டும் உணவுக்கூடம்

எங்களோடு அவரும்,பந்தியில் எனக்கு அருகில்

எல்லாம் பரிமாறப்பட்டதும், மஞ்சப்பையிலிருந்து,ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து, இலையிலிருந்த ஜாங்கிரி ,வடை இரண்டையும் அதில் போட்டார்ஆத்துக்காரிக்குப் பிடிக்கும்என்று என்னிடம் விளக்கம்

நான் இனிப்பு,வடை எல்லாம் சாப்பிடுவதில்லை” என்று கூறி என் இலையில் போடப் பட்டவற்றை அவரிடம் கொடுத்தேன்.

மகிழ்ச்சியுடன் பையில் போட்டுக் கொண்டார்,

சாப்பிடத் தொடங்கினோம்.

அவர் சாப்பிடுவதைப் பார்த்தே என் வயிறு நிரம்பியது

திரும்ப விசேடம் நடக்கும்  கூடத்துக்கு வந்தோம்

அடுத்தது சம்பாவனை

நாங்கள் அமர்ந்தவுடன் எங்களுடன் அவரும் அமர்ந்து கொண்டார்.

விழா நாயகர் அவரிடம்மாமா! நீங்க  கொஞ்சம் தள்ளி உக்காருங்கோஎன்றார்.

அவர் முகத்தைப் பார்த்த எனக்கு மனம் வலித்தது

எனது தட்சிணையை அவருக்குக் கொடுத்து விடலாம் எனத் தீர்மானித்தேன்

எங்கள் அனைவருக்கும் வேஷ்டி,அங்கவஸ்திரம்;உடன்  கவரில் 300 ரூபாய்.

முடிந்தது

கடைசியில் அவருக்கும் நூறு ரூபாய் கொடுக்கப்பட்டது;அவர் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி!

புறப்பட்டோம்

வெளியே செல்லப் புறப்பட்டவரிடம் சொன்னேன்”மாமா!வெளில போய்க் கொஞ்சம் காத்திண்டிருங்கோ;வந்துடறேன்”

விடை பெற்றுக் கிளம்பினோம்.

முதலில் சாப்பாடுக்கூடம் சென்று “நாலு ஜாங்கிரி ,வடை ஒரு பையில போட்டுக் குடுங்க!ஆத்துல குழந்தைகளுக்கு” என்று வெட்கத்தை விட்டுக் கேட்டு வாங்கிக் கொண்டேன்.

வெளியே அவர் காத்திருந்தார்

அவரிடம் வேஷ்டி,அங்கவஸ்திரம் ,ரூபாய்க் கவர் ஆகியவற்றைக் கொடுத்தேன்;அவர் தயங்கினார்

“வாங்கிக்குங்கோ!உங்களுக்குத்தான் இது அவசியம் தேவை”

வாங்கிக் கொண்டார்

“அப்புறம் இந்தாங்கோ,வடை,ஜாங்கிரி.மாமிக்குக் குடுத்து நீங்கள் சாப்பிடுங்கோ”

அவர் கண்கள் பனித்தன”க்ஷேமமா, ஸ்ரேயஸா,தீர்க்காயுசா இருங்கோ” வாழ்த்தினார்

வேறென்ன வேண்டும்?




புதன், ஜனவரி 06, 2016

கட்டிக்கோ,கட்டிக்கோ!



வேஷித என்னும் வடமொழிச் சொல்லுக்குப் பொருள்,சுற்றப்பட்ட, சூழப்பட்ட என்பது; ஆங்கிலத்தில் encircled,wrapped என்று சொல்கிறது அகராதி.வேஷ்டி என்பதன் மூலச் சொல் இதுதான்.சுற்றிக் கட்டிக் கொள்வதால் இவ்வுடை வேஷ்டி ஆயிற்று,ஷ என்பது வடமொழி எழுத்து.எனவே தமிழில் இதுவே வேட்டி ஆயிற்று.

வேட்டியில் நான்கு முழம்,எட்டு முழம்,ஒன்பது முழம். பத்து முழம் எல்லாம் உண்டு. நான்கு முழம் வேட்டியை ஒற்றைச் சுற்று வேட்டி என்றும் எட்டு முழத்தை இரட்டைச் சுற்று வேட்டி என்றும் சொல்வதுண்டு.ஒன்பது முழம் வேட்டி,அங்கவஸ்திரத்துடன் சேர்ந்து வரும் ஒன்பதைந்து என்று சொல்வார்கள்.அது போலவே பத்தாறும்.இவை பஞ்சகச்சம்,மூலைகச்சம் கட்டப் பயன்படும்.வட இந்தியாவில் வேட்டி என்பது கச்சம் வைத்துக்கட்டுவது மட்டுமே.நம்போல் சாதாரணமாகக் கட்டினால் அதை லுங்கி என்று சொல்லி விடுவார்கள்.

நான் முதல் முதலாக எப்போது வேட்டி கட்டினேன்?

எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்வு எழுதிய பின் கோடை விடுமுறை.சிவகாசியில் எங்கள் பள்ளி மைதானத்தில் கண்காட்சி நடை பெற்றது .இரு நண்பர்கள் சுற்றுவதற்கு என்னை அழைக்க வந்தனர். அரை டிரவுசரில் புறப்பட்ட என்னத் தடுத்து,இப்படி வராதே எங்களை மாதிரி வேட்டி கட்டி வா என்று சொல்லவே,அண்ணாவின் வேட்டி ஒன்றை எடுத்து ஒரு மாதிரிக் கட்டிக் கொண்டு சென்றேன்!அதுவே முதல் வேட்டி அனுபவம்.(அந்தக்கண்காட்சியில் நான் நடித்த நாடகம் பற்றி அறிய இங்கே செல்லவும்)

கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்கும்போது நாலு முழ வேட்டிதான் அனிந்து செல்வேன். பட்டப் படிப்பு ஆரம்பித்த பின்தான் முழு கால் சராய்(லோ-ஹிப்!). சென்னையில் பட்ட மேற்படிப்பு படிக்கும்போது,மாலை வேளைகளில் தழையத் தழைய வேட்டி கட்டி,முழுக்கை சட்டையை முக்கால் கையாக மடித்து அணிந்து அலட்சியத் துடன் ஸ்டைலாக  நடந்து மயிலையைச் சுற்றச் செல்வது ஒரு சுகம்! மயிலை மயில்கள் நடமாடும் மாலை!

வேட்டி கட்ட நடக்கத்தெரியாமல் தடுக்கிக் கொள்பவர்கள்,மடித்துக் கட்டிக் கொண்டு நடக்கலாம்;அல்லது ஒரு மூலையை இடது கையால் லேசாகப் பிடித்த படி நடக்கலாம்.


வேட்டிகட்டத் தெரியாதவர்களுக்காக,இப்போது ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டிகள் வந்து விட்டன!அதில் பாக்கெட் வேறு!


நான் திருமண முகூர்த்தங்களுக்கு வேட்டி அணிந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன்.சில நேரங்களில் அங்க வஸ்திரமும் உண்டு.பெண்களுக்குப் புடவை எவ்வளவு அழகோ ,அவ்வளவு அழகு ஆண்களுக்கு வேட்டி!

முன்பெல்லாம் வேதபாராயணத்துக்குச் செல்லும்போது என் குழு நணபர்கள் சாதாரணமாக வேட்டி கட்டி வந்து,அங்கு வந்து பஞ்சகச்சமாக மாற்றிக் கொள்வர்;நான் வீட்டிலிருந்தே பஞ்சகச்சம் கட்டிச் சென்று விடுவேன்.ஒரு முறை ஜெயகாந்தன் சொன்னார்,பஞ்சகச்சம் அணிந்து நடப்பது,பேண்ட் அணிவது போல் வசதியாக இருக்கிறது என்று;அது உண்மைதான்



இன்று நான் வெளியில் செல்லும்போதும் வேட்டியே அணிந்து இந்த சர்வதேச வேட்டி தினத்தைக் கொண்டாடி விட்டேன்! 

ஒரு லிமெரிக்
வாட்ட சாட்ட வாலிபன்தான் வாசு
அவன் காதலிச்பொண்ணு பேரு சுகாசு
 பாக்கப் போகும்போது கிழிஞ்சது அவன் வேட்டி
 அப்படியேபோனான் அவன் அதை மடிச்சுக் கட்டி
அவ சொன்னா அவன் கிட்ட  ”நீ ஒரு லூசு!”


கடைசியில் ஒரு நகைச்சுவை
பாட்டி:70 எம் எம் எப்படிடா இருக்கும்;நான் பாத்ததே இல்லை.
பேரன்:தாத்தாவோட வேட்டியை அவுத்துப் பாத்தா எப்படியிருக்கும்?
பாட்டி:சீசீ!அசிங்கமா பேசாதடா
பேரன்:ஐயோ பாட்டி!தாத்தாவோட வேட்டி எவ்வளவு பெரிசு ?அவுத்து விரிச்சுப்பாத்தா எவ்வளவு இருக்குமோ அவ்வளவு பெரிசு 70 எம் எம்!
(எஸ்.வி.சேகரா,க்ரேஸி மோகனா நினைவில்லை)