தொடரும் தோழர்கள்

ஈகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, நவம்பர் 25, 2011

ஈத்துவக்கும் இன்பம்-(தொடர்ச்சி)

தொடர்கிறது--

கேள்வி.4-யாருக்குக் கொடுப்பது?

பல நேரங்களில் நாம் நம்மிடம் கேட்கும் நபர் பெறத்  தகுதியானவர் அல்ல என்ற ஒரு தவறான  அபிப்பிராயத்தை நாமே உருவாக்கிக் கொண்டு கொடுப்பதைத் தவிர்க்கிறோம்.அது தவறான அணுகு முறையாகும்.எனவே கொடுக்கும்போது   இது போன்ற முன் முடிவுகள் எடுக்காமல் கொடுக்க வேண்டும்.

கேள்வி.5-எப்படிக் கொடுக்க வேண்டும்?

யாருக்குக் கொடுக்கிறோமோ அவர் சிறுமைப்படும் விதத்தில் கொடுக்கக் கூடாது.கொடுப்பதில் அளவற்ற பெருமை காட்டி வாங்குபவரைச் சிறுமைப் படுத்தக் கூடாது.

கொடுக்கும்போது கூடப் பெறுபவர் கைதாழ்ந்தும் தன் கை உயர்ந்தும் இருக்கலாகாது என்னும் எண்ணத்தில் ,கர்ணன் கொடுக்க வேண்டிய பொருளைத் தன் கையில் வைத்து நீட்டப் பெறுபர் அதை எடுத்துக் கொள்வராம். சொல்வார்கள்”வலது கை கொடுப்பது,இடது கைக்குத் தெரியக்கூடாதுஎன்று. தான் கொடுப்பதை விளம்பரப்படுத்திப் பெருமை தேடாமல் பிறர் அறியாமல் கொடுப்பதே சிறந்தது.

கேள்வி.6- கொடுத்தவர் மன நிலை எப்படி இருக்க வேண்டும்?

இப்படிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்ததே என மகிழலாம்.ஆனால் நான் கொடுத்தேன் என்ற கர்வம் இருக்கலாகாது.கொடுத்து விட்டோமே என்ற வருத்தமும் இருக்கலாகாது.

ஆனால் ஏகலைவன் வருத்தம் வேறு விதமானது

ஏகலைவன் தனது வலது கைக் கட்டை விரலை துரோணருக்குக் குரு தக்ஷிணையாகக் கொடுத்த கதை நம் எல்லோருக்கும் தெரியும்.ஆனால்       அதற்குப் பின் நடந்த ஒரு நிகழ்ச்சி அறியப்படாத ஒன்று.

ஏகலைவன் இறக்கும் நேரத்தில் அவனிடம் கேட்கப்பட்டது,அவன் தனது கட்டை விரலை வெட்டிக் கொடுத்ததற்காக எப்போதாவது வருந்திய துண்டா என்று.அவன் சொன்னான்”ஆம் .ஒரே ஒரு முறை வருந்தினேன். குருக்ஷேத்ரப் போரில், அஸ்வத்தாமன் இறந்தான் என்ற பொய்ச் செய்தியால், மனமுடைந்து,போரிடுவதை நிறுத்தியிருந்த ஆச்சாரியாரை பாண்டவர்கள் கொல்வித்தபோது வருந்தினேன்,என் வலது கைக் கட்டைவிரல் இல்லையே என்று.இருந்திருந்தால்,என் குருநாதரை யார் கொன்றிருக்க முடியும்?”

இந்த வருத்தம் முன்பே கொடுத்துவிட்டதால் ,மேலும் கொடுக்க இயலாமல் போய்விட்டதே என்னும் வருத்தம்.ஆக்க பூர்வமான வருத்தம்

கேள்வி.7-என் மக்களுக்கு நான் எவ்வளவு விட்டுச் செல்ல வேண்டும்?

வாரென் பஃபெட் அழகாகச் சொன்னார்”அவர்களுக்கு ஏதாவது செய்வதற்குத்தேவையானதை விட்டுச் செல்லுங்கள்.எதுவுமே செய்யாமல் இருப்பதற்குத் தேவையானதை அல்ல!”

ஆம்!அவர்களிடமிருந்து உழைப்பென்னும் உன்னதமான பொருளைப் பறித்து விடக்கூடாது.

கடைசியாக கபீர் அவர்களின்  அழகிய கூற்றுடன் முடிக்கிறேன்.

“உங்கள் வீடு செல்வத்தால் நிறையும்போதும்,நீங்கள் பயணிக்கும் படகு தண்ணீரால் நிறையும்போதும்,இரண்டு கைகளாலும் அள்ளி எடுங்கள். இறையுங்கள்.அதுவே நன்மை பயக்கும்”

டிஸ்கி:-இதை எழுதி முடித்ததும் ஒரு குறள் நினைவுக்கு வந்தது.யாராவது இதையும் சொல்வார்களோ? :))  

”சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
 சொல்லிய வண்ணம் செயல்”                          !!

இயன்ற அளவு செய்யலாமே!

வியாழன், நவம்பர் 24, 2011

ஈத்துவக்கும் இன்பம்!


”ஊருணி நீர்நிறைந் தற்றே  உலகவாம்
பேரறி வாளன் திரு.”   ---   (திருக்குறள்)

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளனின் செல்வம்  ஊரார் நீர் உண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது .  (முனைவர்.மு.வ.)

ஆம்.அக்குளத்து நீர் பலரின் தாகம் தீர்க்கப் பயன்படுகிறது.அதில் நீர் இருக்குமளவும் அக் குளம் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

 கொடுப்பது சிறந்தது.கொடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.ஆனால் இதிலும் பல கேள்விகள் எழுகின்றன.

அவை.......

கேள்வி.1)எப்போது கொடுக்க வேண்டும்?

மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி. யாசகம் கேட்டு வந்த ஒருவனை தர்மபுத்திரன் மறு நாள் வருமாறு சொல்கிறான்.அதைக் கேட்டு பீமன் மகிழ்ந்தானாம் தன் அண்ணன் மரணத்தை வென்று விட்டான் என!ஏனென்றால் நாளை உயிருடன்   இருப்போம் என்ற நம்பிக்கையில் அல்லவா அவன் நாளை வரச் சொன்னான்! தருமனுக்கும் புரிந்தது.

எனவே நாளைக்காகக் காத்திருக்க வேண்டாம்.இன்றே,இப்போதே நல்ல நேரம்தான், கொடுப்பதற்கு.

கேள்வி.2)எவ்வளவு கொடுக்க வேண்டும்?
  
ராணா பிரதாப்,போரில் தோற்று அனைத்தையும் இழந்து நம்பிக்கையற்று இருந்த நேரத்தில் ,அவரது அமைச்சர் ஒருவர் தன் செல்வம் முழுவதையும்  ராணாவிடம் அளிக்க,அதை வைத்து ராணா படை திரட்டி,மீண்டும் போர் தொடுத்து வென்றாராம்.

எனவே பதில்”இயன்ற   அளவு கொடுங்கள்”

கேள்வி.3)என்ன கொடுப்பது?

பணம் மட்டுமல்ல.உங்களால் இயன்றது ,கொடுப்பது,ஒரு பூவாக இருக்கலாம்; புன்னகையாக இருக்கலாம்.

என்ன,எவ்வளவு கொடுக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல;எப்படிக் கொடுக்கிறீர்கள் என்பது முக்கியம்!

எதைக் கொடுத்தாலும் அது முழு மனதுடன் கொடுக்கப்பட வேண்டும்.

திருமூலர் அழகாகச் சொல்வார்---

"யாவர்க்கு மாம்இறை வற்கொரு  பச்சிலை
 யாவர்க்கு மாம்பசு வுக்கொரு  வாயுறை
 யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
 யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே"


நான் திருப்பூரில் வங்கி மேலாளராக இருந்தபோது ஒரு வாடிக்கையாளர் சொன்னதை நான் மறக்க மாட்டேன்.அவர் கேட்ட கடனை நான் கொடுக்க வில்லை.ஆனால் அவர் சொன்னார்”நீங்கள் கடன் கொடுக்க வில்லை   என்று  எனக்கு வருத்தமேயில்லை.இயலாது என்பதையும் நீங்கள் சிரித்த முகத்துடன் சொன்னீர்கள்”.



(மேலும் சில கேள்விகளும் பதில்களும் நாளை)