தொடரும் தோழர்கள்

வெள்ளி, மே 02, 2014

அட்சய திரிதியை....இன்று என்ன செய்யலாம்?

இன்று அட்சய திரிதியை!

இந்நாளில் புராண காலத்தில் என்னவெல்லாம் நடந்தது?

திருமாலின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.

குசேலர் துவாரகை சென்று கிருஷ்ணரைக் கண்டு அவல் அளித்துப் பெருஞ்செல்வம் பெற்றார்.
(இது பற்றிய எனது பழைய கவிதை----
     குசேலர்!
     பெற்றது இருபத்தேழு
     கற்றது எம்.பி.ஏ.மார்க்கெட்டிங்கா?
     விற்றது என்னவோ ஒரு பிடி அவல்தான்-விலையாய்ப்
     பெற்றதோ பெருஞ்செல்வம்!)


குபேரன்,லக்ஷ்மி தேவியைப் பிரார்த்தித்துத் தன் கருவூ லத்தை நிரப்பிக் கொண்டான்.

திரௌபதி அட்சய பாத்திரம் பெற்றாள். 

வியாசர் சொல்ல,விநாயகர் மகாபாரதம் எழுதத் தொடங் கினார். ----------------

இன்று...........

”என்ன சார்,காலையில் ரெண்டு பாக்கெட் பால் வாங்கிட்டு வந்தீங்க போல?”


”ஆமாம் சார்,பாயசம் செய்யத்தான்!”


“வீட்டில ஏதும் விசேஷமா? நிறைய மல்லிப்பூவெல்லாம் வாங்கிட்டு வந்தீங்க?”


”வீட்டில இல்லை சார்,நாட்டிலேயே விசேஷம்தான். இன்னிக்கு அட்சய திரிதியை!”


“ஓகோ!அதுதான் பால் ,பாயசம், மல்லிப்பூவெல்லாமா! இன்னும் ஏதோ பாக்கி இருக்கு போலிருக்கே?”

”அதுக்குத்தான் மனைவியோடு நகைக் கடைக்குப் போகப் போகிறேன்.அவளுக்கு நகை வாங்க.”

”தங்க நகைதானே?”

”இல்லை.பிளாட்டினம் நகை.அதுதான் ரொம்ப நல்ல துன்னு  டி.வி யில் சொன்னாங்க!”

“வெண்மை நல்லது என்றால் வெள்ளி வாங்கலாமே?”

“விலை மதிப்பில்லாத பிளாட்டினம்தான் நல்லதாம்”

“என்ன வாங்கப் போறீங்க?”

“ஒரு சங்கிலியும்,பெண்டண்ட்டும்.அதுதான் ஒரு நடிகையும் வாங்கினாங்களாம்”

சில ஆண்டுகளாக இப்படித்தான் மக்கள் முட்டாளாக்கப் பட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.

பிளாட்டினம் வாங்குவது நல்லது என்றால் ,யாருக்கு நல்லது? இன்று நகை வாங்கினால் மென்மேலும் நகை வந்து சேரும் என்ற ஒரு நம்பிக்கையைச் சில ஆண்டுகளாகக் கிளப்பி விட்டு இலாபம் காண்பவர்களுக்கு நல்லதுதான்!

க்ஷயம் என்ற வட மொழிச் சொல்லுக்கு ,வடமொழி-தமிழ் அகராதியில் பொருள்-அழிவு,நஷ்டம்,வீழ்ச்சி,குறைதல்.

அக்ஷயம் என்பது அதற்கு எதிரான பொருளைத் தரும்.-அதாவது குறையாதது அல்லது வளர்வது.

எனவே இந்த நாளில் செய்யப்படும் எதுவும் வளரும் என்ற நம்பிக்கை!

முன்பெல்லாம்,இந்நாளில் தானம் செய்து வந்தார்கள்; அதிலும் அன்னதானம் செய்வது சிறப்பான பலனைத் தரும் என நம்பி அவ்வாறே செய்தார்கள்.அதனால் கிடைக்கும் புண்ணியம் பல மடங்காகப் பெருகும் என்பதே நம்பிக்கை!

அந்த நம்பிக்கையிலாவது சில பசித்த வயிறுகளுக்கு நல்லது நடந்தது.தானம் செய்தவர் களுக்கும் ஒரு மன நிறைவு இருந்தது.

ஆனால் இன்றோ!

உங்களுக்குப் பாவ புண்ணியங்களில் நம்பிக்கை இல்லாவிடினும்,கொடுக்கின்ற அந்த மகிழ்ச்சிக்காக,சில பசித்த வயிறுகள் நிறையும்,அந்த முகங்கள் மலரும்,அந்த மனங்கள் வாழ்த்தும் என்ற காரணத்துக்காக இந்த ஒரு நாளிலாவது, நகைக் கடையில் வரிசையில் நின்று செலவழிக்கும் பணத்தில் ஒரு அற்பமான பகுதியில்,தானம் செய்து மகிழ்ச்சியைப் பரப்பலாமே!

இந்த தானத்தை நகைக்கடைக்காரர்களே கொஞ்சம் பெரிய அளவில் செய்யலாமே!

இன்றைய விற்பனையில் இரண்டு விழுக்காட்டுக்குக் குறையாமல் அன்ன தானத்திற்கு எனத் தீர்மானித்து கடைக்கு அருகில் ஒரு மண்டபத்தில் அன்ன தானம் செய்யலாமே! கடையில் ஒரு அறிவிப்புப் பலகையில் இதை வரும் வாடிக்கை
யாளர்கள் அனைவரும் காண வைத்தால் ஒரு விளம்பரமும் ஆகுமே!


பொருள் வாங்கிச் செல்பவர்களுக்கு ஒரு கடவுள் படம் போட்ட அட்டையின் பின்புறம், அவர்கள் பில் தொகையின் 2 % தொகையைக்குறிப்பிட்டு,”இது இன்று உங்கள் புண்ணியக் கணக்கு” என்று அச்சிட்டுக் கொடுக்கலாமே!


அப்படியெல்லாம் நடந்தால்----வியாபாரத்துக்கு வியாபாரம்,விளம்பரத்துக்கு விளம்பரம், புண்ணியத்துக்குப் புண்ணியம்!


கொஞ்சமாவது நல்லது நடக்கட்டுமே!

(ஏப்ரல்,24,2012--அட்சய திரிதியை)

 



11 கருத்துகள்:

  1. வியாபாரத்துக்கு வியாபாரம்,விளம்பரத்துக்கு விளம்பரம், புண்ணியத்துக்குப் புண்ணியம்!


    கொஞ்சமாவது நல்லது நடக்கட்டுமே!

    சிறப்பான சிந்தனை..!

    பதிலளிநீக்கு
  2. ஒரு மாகானுக்கே உரிய தன்னடக்கத்துடன் சிந்தித்து எழுதப்பட நற்
    செய்தி இப்படியொரு சிந்தனையாளரைக் கடவுள் எல்லா விதத்திலும்
    மகிழ்விக்க வேண்டும் .நீங்கள் கூறிய விசயத்தைப் படிக்கும் போதே
    தீர்மானித்து விட்டேன் இனி வரும் இந்தப் பொன்னான நாளில் எம்
    ஈழ தேசத்தில் உள்ள பாவப்பட்ட ஜென்மங்களுக்கு என்னால் முடிந்த
    ஒரு தொகையை அனுப்பி இந்நாளில் அன்ன தானம் வழங்க வேண்டும்
    என்று.அருமையான இப் பகிர்வே இந்நாளில் நான் பெற்றுக்கொண்ட
    விலைமதிப்பற்ற உயரிய செல்வம் .வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி
    பகிர்வுக்கும் நற் செய்திக்கும் .

    பதிலளிநீக்கு
  3. முடிவில் நல்ல அட்வைஸ்

    பதிலளிநீக்கு
  4. விளக்கம் நன்று! விளங்குமா பலருக்கும் இன்று அம்மா நலமா!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா.

    நன்றாக கருத்தை சொல்லியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. சில ஆண்டுகளாக இப்படித்தான் மக்கள் முட்டாளாக்கப் பட்டுக் கொண்டி ருக்கிறார்கள்
    நகைக்கடையில் மட்டுமல்ல....இன்று இரண்டு மீட்டர் கோவணம் வாங்கினாலும் தங்க நாணயம் இலவசம் என்று விளம்பரம் செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  7. நல்ல ஆலோசனை ஐயா!, தங்க மோகம் என்று குறையுமோ தெரியவில்லை.விளம்பரங்கள் மோகத்தை அதிகரிக்க செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ளன.

    பதிலளிநீக்கு
  8. நல்ல விளக்கம்... கொஞ்சமாவது நல்லது செய்வோம்...!

    பதிலளிநீக்கு
  9. பொருள் வாங்கிச் செல்பவர்களுக்கு ஒரு கடவுள் படம் போட்ட அட்டையின் பின்புறம், அவர்கள் பில் தொகையின் 2 % தொகையைக்குறிப்பிட்டு,”இது இன்று உங்கள் புண்ணியக் கணக்கு” என்று அச்சிட்டுக் கொடுக்கலாமே!


    அப்படியெல்லாம் நடந்தால்----வியாபாரத்துக்கு வியாபாரம்,விளம்பரத்துக்கு விளம்பரம், புண்ணியத்துக்குப் புண்ணியம்!//
    நல்ல யோசனை.
    குத்தாலத்தில் ஒரு ஜவுளிகடையில் துணிகளின் விலையில் 200 . 50 பைசா என்று வரும். அது போல் வரும் 50 பைசாக்கள் எல்லாம் கோவிலுக்கு காணிக்கை என்றார்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல யோசனையை சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அதை செயல் படுத்துவார்களா என்பதுதான் சந்தேகமே. இப்போது நகைக் கடைக்காரர்கள் மட்டுமல்ல தொலைக்காட்சிப் பெட்டி, குளிர் சாதனப் பெட்டி, கைபேசி விற்போர்கள் கூட அட்சய திரிதியையில் பொருள் வாங்குங்கள். சுபிட்சம் கிட்டும்! என விளம்பரம் செய்கிறார்கள். இதை எங்கு போய் சொல்ல!

    பதிலளிநீக்கு
  11. கொஞ்சமாவது நல்லது நடக்கட்டுமே.... நல்ல எண்ணம். ஆனால் செயல்படுத்த ஒருவரும் முன்வரப் போவதில்லை என்பது தான் சோகம்.

    கவிதை - அருமை.

    பதிலளிநீக்கு