தொடரும் தோழர்கள்

வெள்ளி, அக்டோபர் 30, 2015

சிக்கன் பிரியாணி-முடிவு

குறிப்பிட்ட நாள் வந்தது. 5 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டதால் 7 மணிக்கே உபேந்த்ரா கரூர் வந்தாகிவிட்டது. ஏற்றுமதி நிறுவன வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய மூன்று நபர்களை சந்தித்துவிட்டு 10 மணிக்கு கிளை விசிட்டிற்காக கரூர் கிளையில் நுழைந்தார். அந்த மேலாளர் சிறந்த நிர்வாகி. தொழிற்சங்க பிரச்சனை உள்ள அந்தக் கிளையின் பணியாளர்களை தன் வசமாக்கி உபேந்த்ராவை வசீகரித்தார்.

ஒரு காபி கூட ஆஃபர் பண்ண வில்லை. நைச்சியமாக பேசி நல்ல பேரை சம்பாதித்தார். பத்து மணிக்கு நாமக்கல் பயணம். அசோகன்திறமையாக செயல்பட்டு உணவு இடைளைக்கு நாமக்கல் என்று இலக்கை குறியிட்டு வெற்றிகரமாக அடைந்தான்.

நரசிம்மன் புத்திசாலி. நாமக்கல் நுழைவு வாயிலிலேயே மோட்டர் சைக்கிளில் விவசாய அபிவிருத்தி அதிகாரியுடன் காத்திருந்தார். அசோகன்அதை அறிவான். உபேந்த்ரா நரசிம்மனை காரில் ஏற்றிக் கொண்டார். விவசாய அதிகாரியை அந்த ஊரில் உள்ள பெரிய கோழிப் பண்ணைக்கு நரசிம்மன் அனுப்பினார்.

நரசிம்மன், 12 மணிக்கே வீடு செல்லும்  ஆஞ்சநேயர் கோயில் குருக்களை 12.45 வரை காக்க வைத்தார். குருக்கள் ஆஞ்சநேயருக்கு அணிவித்த மாலையை உபேந்த்ராவிற்கு அணிவித்து மரியாதை செய்தார். சற்றும் எதிர்பாராத வகையில் சுந்தருக்கும் ஒரு மாலையை அணிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். நரசிம்மன் தன்னுடைய மைத்துனனிடம் இரவல் வாங்கி வந்த பொலராய்ட் கேமராவில் உபேந்த்ராவை ஆஞ்சநேயருடன் சேர்த்து படம் பிடித்து வெளிவந்த வண்ணப்பதிவை அவரிடம் அளித்தார். உபேந்த்ரா பரவசம் அடைந்தார்.







சனி பகவானிடம் இருந்து தப்பிக்க பக்தர்கள் ஆஞ்சநேயரை நாடுவார்கள். அவரை விட்டு வெளியே வந்தவுடன் அசோகன்வடிவில் சனி நரசிம்மரை கெட்டியாக பிடித்துக் கொண்டது. பண்ணை விசிட்டை விவசாய அதிகாரி திறம்பட முடித்து வைத்தார். பண்ணையின் அளவு,

சுகாதாரம், உபேந்த்ராவை அதிசயிக்க வைத்தது. சரியாக 1½ மணி அன்று குரு வார மானதால் இராகு காலம் ஆரம்பித்தது. சனியுடன் ராகுவும் நரசிம்மனை ஆட்கொண்டார்.

அசோகன்மெதுவாக உபேந்த்ராவை அணுகி சார் வீட்ல தான் சாப்பாடு ஏற்பாடு செய்திருக் கிறார் என்று குழைய, உபேந்த்ரா ஒரு நல்ல சைவ உணவை எதிர்பார்த்து நரசிம்மன் வீட்டை அடைந்தார். நரசிம்மன் நாமகிரியை உபேந்த்ராவிற்கு அறிமுகப்படுத்தினார். அவள் கண்கள் சிவந்திருப்பதை உபேந்த்ரா கவனிக்கத் தவறவில்லை. சுந்தர் முன்பு ஒரு முறை நரசிம்மன் குடும்பத்தை சென்னையில் சந்தித்துள்ளான். அவனைப் பார்த்ததும் நாமகிரியின் கண்கள் ஆறாகின.

உபேந்த்ராவையும் அசோகனையும் நரசிம்மன் தனி அறைக்கு அழைத்துச் சென்றான். விவசாய அதிகாரி சிக்கன் கொண்டு வந்தவுடன் சாப்பிட ஆரம்பிக்கலாமென்று நரசிம்மன் பவ்யமாக உபேந்த்ராவிடம் வேண்டிக் கொண்டான். 


வாட் நான்சென்ஸ்! என்று உபேந்த்ரா அசோகனையும், நரசிம்மனையும் பார்த்து   கர்ஜித்தார்.

சுந்தர் அதற்குள் வேறொரு அறையில் ருசியான வெங்காய சாம்பாரை தரமான வாழைக்காய் வறுவலுடன் ருசித்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது “மனைவியின் சம்மதமின்றி வீட்டில் அசைவ உணவை பரிமாறும் கணவனை விவகாரத்து செய்ய”  சட்டம் ஏதேனும் உண்டா என்று கேட்டுக் கொண்டிருந்தாள் நாமகிரி.

சிறிது நேரத்தில் நரசிம்மன் வேகமாக உள்ளே வந்து பாஸ் உன்னை அவசரமாக கூப்பிடறார் என்று சொல்ல சுந்தர் கை அலம்பிக் கொண்டு ஒடினான். பாயசம் சாப்பிடுங்க என்று டம்பளரில் கொண்டு வந்த நாமகிரியை பார்த்து “வர்றேன்” என்ற சைகை காண்பித்து விட்டு சுந்தர் மறைந்தான். உபேந்த்ரா தனியாக அறையில் உட்கார்ந்திருந்தார். யூ டூ சுந்தர் என்று சுந்தரை டிராமிட்டாக கேட்டு விட்டு சிரித்தார்.

உங்கள் சம்மதம் அவர்களுக்கு உண்டு என்று நினைத்தேன் என்றான் சுந்தர்.

நான் சுத்த சைவம் அல்ல. ஆனாலும் ஒரு பெண்ணை அழ வைத்து அவளுடைய வீட்டில் பேராசைக் கணவனை திருப்திப்படுத்த சிக்கன் சாப்பிடும் மிருகம் அல்ல என்று உபேந்த்ரா சுந்தரிடம் அமைதியாக சொன்னார்.

நம்ம மதிய உணவை சேலத்தில் சாப்பிடலாம் என்று புறப்பட்டார்

உபேந்த்ரா. நாமகிரியை பார்த்து உன் விருப்பத்திற்கு மாறாக “அசைவம் சாப்பிடும் யாரையும் விருந்தாளியாக உன் வீட்டில் அனுமதிக்காதே” என்று அறிவுறுத்தினார். நாமகிரி கையில் வைத்திருந்த பாயசத்தை உபேந்த்ராவிடம் நீட்ட அதை பருகிவிட்டு ஆல் தி பெஸ்ட் என்று வாழ்த்தி சேலம் புறப்பட்டார் உபேந்த்ரா.

விவசாய அதிகாரி சிக்கன் பார்சலுடன் உள்ளே நுழைந்தார். உபேந்த்ரா அர்த்த புஷ்டியுடன் சுந்தரை பார்த்து சிரித்தார். சேலம் புறப்பட்ட காரில் அசோகன்இல்லை. அவருடைய லக்கேஜ் மட்டும் பயணித்தது.

நரசிம்மனை சுமந்து குச்சியில் கட்டிய சிக்கனை துரத்திய குதிரை இலக்கை நெருங்கிய போது ஒரு சிறு பள்ளத்தில் கால் இடறி தடம் புரள சிக்கன் வானுயர பறந்தது. அதை ஒரு ராக்ஷஸ கழுகு கவ்விக் கொண்டு சென்றது.

--பார்த்தசாரதி..
.......................

டிஸ்கி:
மாத்ரு தேவோ பவ
பித்ரு தேவோ பவ
ஆசார்ய தேவோ பவ
அதிதி தேவோ பவ  (தைத்திரீய உபநிடதம்)

விருந்தோம்பலின் பின் சுயநலம் மறைந்திருந்தால் அது பயனற்றது;(அவர்களுக்கு ஏதோ பயன் விளையுமானாலும்)
அதுமாதிரி நேரங்களில் மோப்பக்குழையும் அனிச்சமான அதிதியும் விருந்தளிப்பவரின்/ சார்ந்தவரின்  சூழ்நிலையை,மனஓட்டத்தைப் புரிந்து கொள்வது சிறப்பானது;அதுவே இங்கு நடந்தது!

டிஸ்கிக்குள் டிஸ்கி:
புராண காலத்தில் காச்யபரின் மனைவி அதிதி என்பவள்.12 ஆதித்தர்களின் தாய்; உபேந்திரனும் அதிதியின் மகன்!

இங்கோ,உபேந்திரனே அதிதி!




26 கருத்துகள்:

  1. “மனைவியின் சம்மதமின்றி வீட்டில் அசைவ உணவை பரிமாறும் கணவனை விவகாரத்து செய்ய” சட்டம் ஏதேனும் உண்டா என்று கேட்டுக் கொண்டிருந்தாள்

    ஹாஹாஹா இதெல்லாம் டூமச் ஐயா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த அளவு மனம் நொந்து போய் விட்டார்!
      நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  2. ஹஹ நான் சொன்ன மாதிரி வடை பாயாசம் தான் ஜெயித்தது.

    பதிலளிநீக்கு
  3. விருந்தோம்பலின் பின் சுயநலம் மறைந்திருந்தால் அது பயனற்றதே. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மனிதர்களை எடை போடத் தெரிந்தவர். மதிக்கத் தெரிந்தவர். சபாஷ்.

    பதிலளிநீக்கு
  5. டிஸ்கி யில் இலக்கியம் சாஸ்திரம் இவற்றை நீங்கள் எழுதிய விஷயத்தோடு தொடர்பு படுத்திய விதம் நன்றாக இருந்தது

    பதிலளிநீக்கு
  6. நேர் வழி இருக்க குறுக்கு வழியை நாடினால் இப்படித்தான் நடக்கும்.உபேந்திரா உண்மையில் பாராட்டப்படவெண்டியவரே! ப்திவை எழுதிய திரு பார்த்தசாரதி அவர்கட்கும்,பகிர்ந்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. பார்த்த சாரதி ,உங்கள் வலைத்தளத்தின் பாதி சாரதி ஆகிவிட்டார் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பார்த்தனுக்குச் சாரதியாயிற்றே!
      நன்றி பகவான்ஜி

      நீக்கு
  8. விருந்தோம்பலின் பின் சுயநலம் மறைந்திருந்தால் அது பயனற்றதே
    அருமை ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  9. உபேந்திரா உயர்ந்து விட்டார்! சிறப்பான விளக்கம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு