தொடரும் தோழர்கள்

புதன், ஜூன் 26, 2013

பரல்கள்--.நட்பு;பதிவர் சந்திப்பு;லிமெரிக்;மனிதம்



இன்று மனம் உற்சாகமாக இருக்கிறது.எதையாவது எழுத கை பரபரக்கிறது.இது வரை பலமுறை சொல்லிவிட்டேன்;இன்றும் சொல்கிறேன்;இனியும் சொல்வேன்…..இந்தப் பதிவுலகுக்கு வந்ததால் எனக்குக் கிடைத்த,எனக்கு மட்டுமல்ல,பதிவர்கள் அனைவருக்குமே கிடைத்த மிகப் பெரிய பேறு முகம் தெரியாத நட்புகள்;தூரம் அதற்கு ஒரு தடையல்ல; வயதென்பது அங்கு ஒரு பொருட்டல்ல.இந்த 68 வயதுக்காரனுக்கு,இவன் பட்ட மேற்படிப்பு முடித்துப் பணியில் அமர்ந்த காலத்தில் கூடப் பிறந்தே இராத சிலர் பதிவின் மூலமே  நண்பர்கள் ஆகியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் அவர்களில் சிலர் இங்கு வரும்போது தேடி வந்து சந்தித்து உரையாடிச் செல்வது என்னை நெகிழ வைக்கிறது;புதிய உற்சாகத்தை தருகிறது,இன்று அப்படிப்பட்ட ஒரு நாள்; நன்றி நண்பரே!
………………………………………………………………………………

ஒரு நாய் பற்றிய குட்டிக்கதை படித்தேன்.
அதில் கடைசியில் சொன்ன கருத்து என்னைக் கவர்ந்த்து.
அது............
ஒரு நாய் நமக்கு ஒரு குருவாக இருந்து என்ன போதிக்கிறது?!.....
அன்புக்குரியவர்கள் வீட்டுக்கு வரும்போது ஓடிச் சென்று  அவர்களுக்கு வரவேற்பளியுங்கள்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்;வேறு ஒன்றாக பாசாங்கு செய்யாதீர்கள்
நீங்கள் தேடுவது ஆழப்புதைந்து இருந்தாலும் தோண்டி எடுக்காமல் விடாதீர்கள்
அன்புக்குரியவர் கவலை/சோகத்தில் இருக்கும்போது மௌனமாக அருகில் அமர்ந்து,உங்கள் தொடுகையால் ஆறுதல் கூறுங்கள்.
ஆம்!உண்மையாக அன்பு செலுத்துவது எப்படி என்று நாய்க்குத் தெரியும்;நமக்கு?!
.......................................................................
பல ஆண்டுகளுக்கு முன் நா.பா.அவர்களின் “கங்கை இன்னும் வற்றிவிடவில்லை” என்ற சிறுகதை இப்போது நினைவுக்கு வருகிறது.
அதில் ஒரு விபத்தின் காரணமாக ரயில் ஒன்று மணிக்கணக்கில் ஒரு நிலையத்தில் நின்று விடுகிறது.
அனைவருக்கும் பசி.
எதோ ஒரு நிறுவனம் இலவச உணவுப் பொட்டலம்,ஒருவருக்கு ஒன்று,வழங்க,அனைவரும் அடித்துப் பிடித்து வாங்குகிறர்கள்.
ஒரு கிராமவாசி பொட்டலம் வாங்கி வரும்போது  ஒரு கர்ப்பிணிப் பெண் பசியுடன் அவன் கைப் பொட்டலத்தையே பார்த்தவாறு அமர்ந்திருப்பதைப் பார்க்கிறான்.
அதை அவளிடம் கொடுத்துச் செல்கிறேன்.
சிறிது நேரத்தில் உணவு வழங்கும் இடத்தில் ஒரே சப்தம். யாரையோ அனைவரும் அடிக்கிறார்கள்.
அங்கு சென்று பார்த்து வந்தஒருவர் சொல்கிறார்”யாரோ ஒருத்தன் ஒரு பொட்டலம் வாங்கிவிட்டு மீண்டும் வாங்கவந்தானாம்,அடித்து விட்டார்கள்!”
இது போன்ற சிலரிடம் மனிதம் இருக்கும் வரை,அதுவே நம் நாகரிகமாக இருக்கும் வரை கங்கை வற்றாது என முடியும் கதை.
ஆம்!பேரிடர்கள் நேரும் சமயத்தில் இது போன்று மனிதம் வெளிப்படும்.
தன் குதிரைகள்,கடை எல்லாம் இழந்தபோதும் சில பயணிகளைக் காட்டுப்பாதையில் அழைத்துச் சென்று காப்பாற்றிய ஒரு மனிதரைப் பற்றி இன்று படித்தேன்.
நன்றிக்கடனாக அவரைச் சென்னைக்கு அழைத்து வந்து அவருக்கு மறுவாழ்வு தர முயலும் அந்தப் பயணிகளைப் பற்றியும் படித்தேன்.
கங்கை இன்னும் வற்றிவிடவில்லை!
.................................................................

லிமெரிக்(சிந்துகவி!)எழுதி ரொம்ப நாளாச்சு.இதோ ஒரு லிமெரிக்…………

பதிவர் சந்திப்புக்குப் போனாரு சூசை
பலரும் பராட்டுவாங்கன்னு ஆசை
போற வரைக்கும் தெரியலை
அவர் பதிவை யாரும் அறியலை
பாவம் தொங்கிப் போச்சு இப்ப அவர் மீசை

லிமெரிக்கின் நோக்கமே நகைச்சுவைதான் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

புதன், ஜூன் 19, 2013

என் உயிர் நண்பர் கபாலி!



கபாலியை நான் முதல் முதல் சந்தித்தது 1964 ஆம் ஆண்டில்தான்.

முதல் பார்வையிலேயே அவர் என்னை அவர்பால் ஈர்த்து விட்டார்.

அவர் மனைவி கற்பகமும் அவருக்கேறவர்தான்.

சாந்தமான புன்னகை தவழும் முகம்;அருள் பொழியும் கண்கள்.

வாழ்வில் முதல் முறையாக வீட்டை விட்டுத் தனியாக விடுதியில் தங்கிப் படிக்கும் எனக்கு உற்ற துணைவர்களாக,நல்ல நண்பர்களாக அமைந்தனர் அந்தத் தம்பதி.

என் இரண்டாண்டு கால விடுதி வாழ்க்கையில் வாரம் ஒரு முறையாவது அவர்களைச் சந்திக்காமல் இருந்ததில்லை.

முந்தைய சந்திப்புக்குப் பின் இடைப்பட்ட காலத்தில் எனக்கு நடந்த நல்லது கெட்டது எல்லாவற்றையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

அவர்கள் மாறாத புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருப்பர்.

என் பிரச்சினைகளை அவர்கள் முன் கொட்டுவேன்.

அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே மனம் அமைதி பெறும்;பிரச்சினை தீர்க்க வழி கிடைக்கும்.

அவர்கள் வாய்திறந்து பேச வேண்டியதே இல்லை.

அவர்கள் முன் பல இனிய நிகழ்வுகள்;அந்நிகழ்வுகளின் அழிக்க முடியாத நினைவுகள் இன்று வரை.

சில நேரங்களில் என மன அலைபேசியில் கபாலி அழைப்பார். விரைவேன்; பார்ப்பேன் ;மகிழ்வேன்.

அதைத் தொடர்ந்து ஏதாகிலும் பிரச்சினை வரும்;ஆனால் வந்த வேகத்தில் மறையும்!

காலவேகத்தில் முதுமையின் கோடுகள் என் உடலில் விழுந்து விட்டன;

ஆனால் கபாலியும் கற்பகமும் இன்னும் அதே இளமையுடன் இருக்கின்றனர்; என்றும் இருப்பர்!

சென்னையிலேயே இருந்தும் கூட அடிக்கடி அவர்களைச் சென்று பார்க்க முடிவதில்லை,

ஆனால் என் மனத்தில் அவர்கள் இருக்கிறார்கள்,என்னை வழி நடத்துகி றார்கள்.

நண்பனாய்,வழிகாட்டியாய்,நல்லாசிரியனாய்…அனைத்துக்கும் மேல் என் தெய்வமாய் இருக்கிறார்கள்.

கற்பகாம்பாள் உடனுறை கபாலீச்வரா போற்றி!




ஞாயிறு, ஜூன் 16, 2013

தந்தையுமானவள்!



அப்பா என்று நிச்சயம் அழைத்திருப்பேன்!

அள்ளி அணைத்திருப்பார் அவரும் அன்று,

ஆனால் அதெல்லாம் நினைவில் இல்லை

ஐந்து வயதுக்கு முன்  நடந்தவையெல்லாம்

எப்படி என் நினைவில் நிற்கும்?


தாயின்றிப் போய்ப் பிள்ளையைத்

தந்தை  அன்போடு பேணிவளர்த்தால்

தாயுமானவன் என்றே தந்தையை அழைப்பர்!


தந்தையின்றிப் போய் தாயே வளர்த்தால்?

தந்தையின் கண்டிப்பும் தாயின் அரவணைப்பும்

தட்டாமல் தந்து  போற்றி வளர்த்து

தன் கஷ்டம் எல்லாம் நாங்கள் உணராமல்

தாய்க்குத் தாயாகி,தந்தையும் தானாகி

தளராத உறுதியுடன் எங்களை வழி நடத்தி

தகைமையுடன் எம்மை வளர்த்திட்ட தாயே!

நீயே தந்தையுமானவள்!

தந்தையர் தினத்தில் வணங்குகின்றேன்!



சனி, ஜூன் 15, 2013

அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்?!



ஒரு இளைஞன்,தன் கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் பெறுவதற்காக் காத்திருந்தான்.

ஒரு அழகிய விலை உயர்ந்த மகிழ்வுந்தைக் கடையில் கண்டு அது வேண்டும் என ஆசைப் பட்டான்.பண வசதியுள்ள தன் தந்தையிடம் தனக்கு அது பட்டம் பெறும் தினப் பரிசாக வேண்டும் எனத் தெரிவித்தான்.

தந்தை புன்னகைத்தவாறு தலையசைத்தார்.

பட்டம் பெற்றான்.

அன்று அவன் தந்தை அவனைத் தன் அறைக்கு அழைத்து அவனைப் பாராட்டி விட்டு அவன் கையில் ஒரு பரிசுப் பொட்டலத்தைக் கொடுத்துச் சொன்னார்”இது உனக்கு மிக உதவியாக இருக்கும்”.

அவன் அதை ஆர்வத்துடன் பிரித்தான்.உள்ளே ஒரு அழகிய பகவத்கீதைப் புத்தகம் இருந்தது.

அவனுக்கு அளவற்ற கோபம் வந்தது.

புத்தகத்தை மேசை மீது போட்டான்.

தந்தையை கண்டவாறு இகழ்ந்தான்.

வீட்டை விட்டு வெளியேறினான்.

ஆண்டுகள் ஓடின.

அவன் நல்ல வேலை,பணம்,வீடு குடும்பம் எல்லாம் பெற்றான்.

ஒரு நாள் அவன் தந்தை இறந்ததாகச் செய்தி வந்தது .

அவன் தன் ஊருக்குச் சென்றான்.

தந்தையின் அறைக்குச் சென்றபோது அந்த பகவத்கீதை கண்ணில் பட்டது.

அதை எடுத்துப் பிரித்தான்.அது திறந்த பக்கத்தில் ஓர் உறை ஒட்டப்பட்டிருந்தது.

அதன் மேல் என் அன்பு மகனுக்கு என எழுதப்பட்டிருந்தது.

அந்த உறையைப் பிரித்தான் .உள்ளே ஒரு மகிழ்வுந்து சாவியும், முழுத்தொகயும் செலுத்தி யதற்கான சீட்டும் இருந்தன.

அவன் கண்ணீர் விட்டான்.
………………………………..
ஆம்! நாம் பல நேரங்களில் நம் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்வதில்லை!

அன்பு மட்டுமல்ல;அவர்களின் உணர்வுகள் எதையுமே சரியாகப் புரிந்து கொள்ளாமல், அவர்க ளைக் காயப்படுத்தி விடுகிறோம்.

எத்தனையோ பெற்றோர் தங்கள் வறுமை நிலையிலும் குழந்தைகளுக்கு வேண்டியவற்றை இயன்ற அளவு செய்து கொடுக்கிறார்கள்,தங்கள் தேவைகளைச் சுருக்கிக் கொண்டு!

ஆனால் நாமோ பெரியவர்களான பின் அவற்றை மறந்து அவர்களை அலட்சியப் படுத்து கிறோம்.

முதியோர் வேண்டுவது மிகப்பெரிய வசதிகளை அல்ல.

அவர்கள் முக்கியத் தேவை அன்பு மட்டுமே.

அது கிடைத்தால் நீங்கள் குடிக்கும் கூழோ கஞ்சியோ குடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக 
உங்களுடன் காலம் கழிப்பார்கள்.

இந்த உலக முதியோர் கொடுமை பற்றிய விழிப்புணர்வு நாளில் ,எல்லா மகன்/மகள்களுக்கும் 
அந்த விழிப்புணர்வு வரட்டும்!
.......................................................