தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூலை 11, 2016

புளிய மரத்துப் பேய்!



மாலைக்காட்சி படம் முடியும்போது இரவு மணி 9.30 ஆகி விட்டது.

“வாங்க .டிபன் சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்றனர் நண்பர்கள்
பக்கத்திலேயே ஒட்டல்.

தோசை.சப்பாத்தி ஆர்டர் செய்தோம்

சாப்பிடும்போது பேச்சு படத்தைப் பற்றி எழுந்தது.

”எட்டு கிலோமீட்டர் சைக்கிள்ள வந்து பாக்கறத்துக்கு ஒர்த்  இல்ல படம்” என்றேன்.(புரிஞ்சது அவ்வளவுதான்!)

அவ்வளவு பயமா இல்லையே என்றான் மகாராசன்

”இப்ப அப்படித்தான் இருக்கும்.இருட்டில தனியா போகும்போது பயம் தன்னால வரும்.அந்தப் பாட்டு காதில ஒலிச்சிக்கிட்டே இருக்கும்”இது சுப்பிரமணி

“எதுக்கும் கொஞ்சம் சூதானமாப் போங்க.வழில இந்த ரெட்டைப் புளிய மரம் வருதில்ல.அங்கன பேய் இருக்குன்னு பேசிக்கறாங்க.”என்றான் தலைக்கான்.

நான் சிரித்தேன்.”சும்மா பயமுறுத்தாதீங்க.நான் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்”

புறப்பட்டேன்

கம்பத்திலிருந்து உத்தமபாளையம் 8 கிலோமீட்டர்.

சைக்கிளில் வந்திருந்தேன். 

சைக்கிளில் ஏறி உற்சாகமாக மிதிக்க ஆரம்பித்தேன்.

ஊரெல்லை தாண்டி மக்கள் நடமாட்டமில்லாத சாலை ஆரம்பமாயிற்று.

கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்.இருட்டில் ரேடியம் 10.30 காட்டியது.

சாலை நீ...ண்டு கிடந்தது.

விசிலடித்தபடி வேகமாக மிதித்தேன்

இருட்டு என்னைக் கவ்வியது

பலமான காற்று.ஆனால் மழை வரும் அறிகுறிகள் இல்லை

காற்றில் சாலையோரப் புளியமரங்கள் தலை விரித்தாடின.

பாதி தூரம் கடந்தாயிற்று.

இங்குதானே அந்த ரெட்டைப் புளிய மரம் இருக்கும்.

நிஜமாகவே பேய் இருக்குமோ?

அடி நெஞ்சில் லேசான பயம்;விசில் பலமான பாட்டாக மாறிற்று.என்ன கத்தினாலும் யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லையே!

அப்போதுதான் என் பாட்டையும் மீறி என் காதில் அந்தப் பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது....சினிமாவில் வந்த அதே பாட்டு!

அதோ அந்த ரெட்டைப் புளியமாரம்.

பார்த்துக்கொண்டிருக்கும்போதே மரத்தின் கீழ் ஏதோ வெள்ளையாக ஓர் உருவம் தோன்றியது.

பயத்தில் உடல் சில்லிடத் தொடங்கியது.

அந்த மரத்தைத் தாண்டிப் போக வேண்டுமே,எப்படி?

என் வாய் கந்த சஷ்டிக் கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்தது

கண்களை மூடிக் கொண்டு வண்டியை முழு வேகத்தில் மிதித்தேன்.

மரத்தைத் தாண்டியிருப்பேன் என்ற உணர்வு ஏற்பட்டது கண்களைத் திறந்தேன்.
தாண்டி விட்டிருந்தேன்

திரும்பிப் பார்க்கலாமா?

வேண்டாம்;பேயைத் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று சொல்வார்களே

வேகமாக மிதித்தேன்.
வீட்டை அடையும் வரை அதே வேகம்!

வந்து  படுக்கையில் விழுந்தேன்.

இரண்டு நாட்கள் கல்லூரி செல்லவில்லை.

காய்ச்சல்!

என் கேள்வி ...நிஜமாகவே பேய் இருந்து அதைப் பார்த்தேனா,அல்லது பயத்தினால் ஏற்பட்ட பிரமையா?

தெரியவில்லை

அந்தப்படம்.....”பீஸ் ஸால் பாத்”

காதில் ஒலித்த பாடல்..”கஹிம் தீப் ஜலே கஹிம் தில்”

இதோ காணொளி












ஞாயிறு, ஜூலை 10, 2016

விடுமுறை,சிரிமுறை!




ஒரு குருவிடம் சில சீடர்கள் பயின்று வந்தனர்.

குரு மிகவும் கண்டிப்பானவர்.

கொடுத்த பணியைச் சரியாகச் செய்யாவிட்டால்,பல தண்டனைகள் கொடுப்பார்.

சீடர்கள் நொந்து போயிருந்தனர்

ஒரு நாள் சொர்க்கம்,நரகம் பற்றிக் குரு பேசிக் கொண்டிருந்தார்.

நரகத்தில் பாவிகளை எண்ணைச் சட்டியில் முக்கி எடுப்பார்கள் என்று சொன்னார்.

முடிவில் சீடர்கள் கேட்டனர்,குரு எங்கு போவார் என்று.

குரு சொன்னார்”நானும் பாவங்கள் செய்திருக்கிறேன்;எனவே நரகத்துக்குத்தான் போவேன்” என்று.

சீடர்கள் சொன்னார்கள் நாங்களும் உங்களுடன் நரகம் வருவோம் என்று

குரு அவர்கள் அன்பில் நெகிழ்ந்து போய் அவர்களிடம் அதைச் சொன்னார்.

அவர்கள் சொன்னார்கள்”அப்படி இல்லை குருவே!நாங்கள் உங்களை எண்ணைச் சட்டியில் முக்கி எடுப்பதைக் காண ஆசைப் படுகிறோம்”

டிஸ்கி:நான் எழுதும் ஜோக்குகள் எல்லாம் பகிர்வுகளே அன்றி படைப்புகள் அல்ல!!?

சனி, ஜூலை 09, 2016

பத்ரா



“ரவி!வாழ்க்கையே ரொம்பப் போரடிக்கிறதுடா.ஒரு திரில்லே இல்லை.தினம் காலேஜ்,ரூம்,டீன் இப்படி எதுவுமே சுவாரஸ்யமில்லை.” என்றான் ரகு.

“ நாம் மருத்துவ மாணவர்கள்.படிக்கும்போது அப்படித்தான் இருக்கும்.படிப்பு முடிந்து டாக்டர் ஆகிச் சம்பாதிக்கும்போது திரில் தானா வரும்.” இது ரவி 

“இருந்தாலும் ஏதாவது பண்ணணும்டா” என்று ரகு சொல்லும்போதே அந்த நாய் அவன் அருகில் வந்து வாலை ஆட்டியபடி நின்றது.

அது ஒரு தெரு நாய்.தெருமுனை டீக்கடையில் டீ குடிக்கும்போது அதற்கு பிஸ்கட் வாங்கிப்போடுவான் ரகு.

ரகுவின் முகம் பிரகாசமானது.”ஐடியா!” என்று உரக்கச் சொன்னான்.நாயைக் கையில் தூக்கினான்.ரவியையும் உடன் வரச் சொல்லி மாடியேறினான். போகும்போதே தன் திட்டத்தையும் கூறினான்அவன் மொட்டை மாடியிலிருந்து நாயைக் கீழே போடும்போது ரவி அதை வீடியோ எடுக்க வேண்டும்.

மொட்டை மாடியை அடைந்தனர்.சுற்றுப்புறச்சுவரின் அருகில் சென்று நாயைத் தூக்கியவாறு நின்றான் ரகு”டேய்,சரியான கோணத்தைப் பார்த்துக்கோ.நான் நாயைக் கீழே போடுவதை அழகாகப் படம் பிடிக்க வேண்டும்”

ரவி காமிராவை சரியான கோணத்தில் வைக்க முயற்சி செய்தான்”முழுவதும்  வரவில்லையே” என்றான்.

ரகு இரு என்று சொல்லி யோசித்தான்.பின் சொன்னான்”நான் சுவற்றின் மீது ஏறி நின்று நாயை வீசுகிறேன் .பிரமாதமாக இருக்கும்.பார்ப்பவர்களும் ரசிப்பாங்க.நான் சுவர் மீது ஏறிய பின் நாயைக் கொடு”

நாய் கை மாறியது

ரகு சுவற்றின் மீதேறி நின்று  கொண்டான்

“கொடு”

ரவி நாயைக் கொடுத்தான்.அந்தநேரத்தில் ஆபத்தை உணர்ந்த நாய், ரகு பிடிக்கும்போது துள்ளியது.அதில் நில குலைந்த ரகு தலை குப்புறக் கீழே விழுந்தான்.

தப்பி ஓடிக் கீழே இறங்கிய நாய்  ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த ரகுவைச் சுற்றிச் சுற்றி வந்துச் சோகமாக ஊளையிட்டது














ர்