தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூன் 15, 2017

புரட்சித் தலைவர் சொன்னது சரியா?

ஒரு குட்டிக்கதை.

அக்பர்,பீர்பால் கதை

ஒரு நாள் அக்பர் தன் அவையிலிருந்த அறிஞர்களிடம் கேட்டார் ”உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.உங்கள் பதில் மூன்று சொற்களுக்கு மேல் போகக் கூடாது”

யாரும் பதில் சொல்லவில்லை.

அக்பர் பீர்பாலைப் பார்த்தார்.

பீர்பால் சொன்னார்”நான்கு விரற்கடை”

அக்பருக்குப் புரியவில்லை.

பீர்பால் சொன்னார்”கண்ணால் காண்பதெல்லாம் உண்மை;ஆனால் காதால் கேட்பவை உண்மையாகவும் இருக்கலாம்;பொய்யாகவும் இருக்கலாம். பெரும்பாலும் பொய்யே”

அக்பர் கேட்டார்”அதற்கு. ஏன் நான்கு விரற்கடை என்றீர்”

கண்ணுக்கும் காதுக்கும் இடையே உள்ள தூரம் நான்கு விரற்கடைதான் என்றார் பீர்பால்..

இப்போது கேள்வி,பீர்பால் சொன்னது சரியா என்பதே.

ஒரு சொல் வழக்கு உண்டு

“கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்”

புரட்சித் தலைவர் ஒரு படத்தில் பாடுவார்”கண்ணை நம்பாதே.உன்னை ஏமாற்றும்”

ஒரு நிகழ்வைப் பார்க்கிறோம்.நம் கண்ணெதிரே நடப்பது எப்படிப் பொய்யாக முடியும்?பார்த்தவர் சொல்லும்போது கண்,காது,மூக்கு வைத்துச் சொல்கையில் அது பொய்யாகலாம்.ஆனால் பார்த்த நிகழ்வு எப்படி பொய்யாக இருக்கும்?


நிகழ்வு பொய்யல்ல;கண்  ஏமாற்றவில்லை.ஏமாற்றியது நம் எண்ணம்.

பார்க்கும் காட்சிக்கு பார்ப்பவர் மனதைப் பொறுத்து வெவ்வேறு பொருள் கற்பிக்கிறார்கள்.நிகழ்வு ஒன்றே;ஆனால் அதைப் புரிந்து கொள்வதைப் பொறுத்து அது உண்மையாகவும் பொய்யாகவும் மாறுகிறது.

பல படங்களில்,கதாநாயகன்,கதாநாயகியை எவருடனோ எங்கேயோ பார்த்து விட்டு ஆராயாமல்  சந்தேகப்படுகிறான்.(ஜெமினி கணேசனுக்குத்தான் அது போன்ற சந்தேகம் பல படங்களில் வந்து விடும்.)..

ஒரு நிகழ்வு.சாலையில் செல்லும் ஒரு பெண் தடுமாறி  விழப் போகிறாள்.அருகில் சென்று கொண்டிருந்த இளைஞன் அவளைப் பிடித்துத்தூக்கி விழாமல் காப்பாற்றுகிறான்..அருகில் நடந்து கொண்டிருந்தவருக்கு நிகழ்வு  விகல்பமாகத் தெரியாது.ஆனால் தொலைவில் இருந்து அவன் அவளைப் பிடித்து அணைத்துத்  தூக்குவதைப் பார்க்கும் சிலர்,நடு ரோட்டில் காதலா என்று தலையில் அடித்துக் கொள்ளலாம்...
.
ஒரு மண விலக்கு வழக்கறிஞரிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது அவர் சொன்னார்”நீதி மன்றங்கள் எப்போதுமே பெண்கள் மீது அதிக பரிவுடன் இருக்கின்றன.ஒரு வழக்கில் கணவன் தன் மனைவி, ஒருவனுடன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டதைப் பார்த்ததாகச் சொல்லும்போது நீதிபதி கேட்டார்,அவர்கள் அறைக்குள் என்ன செய்தார்கள் என்பது உனக்கு எப்படித்தெரியும்?!”

இங்கு கண் பார்த்தும் பயனில்லை...


ஒரு செய்தியை உண்மையென உறுதியாகச்  சொல்ல நாம் ”என் கண்ணால பார்த்தேன் என்கிறோம்.

பிரச்சினை பார்வையில் இல்லை.;பார்த்ததைப் புரிந்து கொள்வதில்தான்

எனவே கண்ணை நம்பாதே என்று  எப்படிச் சொல்வது? கண்ணால் காண்பதும் பொய் என்று எப்படிச் சொல்வது.?

நீங்களே சொல்லுங்கள்




























செவ்வாய், ஜூன் 13, 2017

உப்புமா....ஆ ஆ ஆ !




அந்தக்  காலத்துப் பாட்டு ஒன்று..

"உப்புமாவைக் கிண்டிப் பார்ப்போமே
  உல்லாசமாகவே நாம் உப்புமாவை...

  கடுகு மிளகாய்ப் பழம் காயம்      கருவேப்பிலை
  உளுத்தம் பருப்புடனே ஒரு சேர்  நெய்யை விட்டு......உப்புமாவை"


உப்புமா சுவையாக இருக்க வேண்டுமென்றால் சூக்குமம் இதுதான்.."ஒரு சேர் நெய் !"


சேர் என்பது அந்தக்கால அளவை.

8 பலம்= 1 சேர்
5 சேர்=1 வீசை

ஒரு சேர் என்பது இன்றைய 280 கிராமுக்கு இணையானது.

இவ்வளவு நெய்!

ஆனால் ஒன்று நிச்சயம்

உப்புமா சுவையாக இருக்க வேண்டுமென்றால்,கை தாராளமாக இருக்க வேண்டும்...எண்ணை,நெய்யில்!

உப்புமாவில் உள்ளங்கையை வைத்து விட்டு எடுத்துப் பார்த்தால் கையில் நெய் மினுமினுக்க வேண்டும்.

உப்புமா என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது,பலரும் அஞ்சுவது ரவா உப்புமாதான்.

அதிலும் இரண்டு வகை

பம்பாய் ரவை,கோதுமை ரவை என.

இந்த ரவா உப்புமா செய்த பிரச்சினை ஒன்று நினைவுக்கு வருகிறது.

கோவில்பட்டியில் நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.

ஒவ்வொரு ஆண்டும் ஹாக்கி பந்தயம் சிறப்பாக நடை பெறும்.

கலந்து கொள்ளும் அணிகளில் அனைவருக்கும் பிடித்த அணி,தெற்கு ரயில்வே பெரம்பூர்.

ஒரு முறை இறுதிப்போட்டியில் பெரம்பூரும்,லக்ஷ்மி மில்ஸ் அணியும் மோத வேண்டும்.

போட்டியன்று மாலை,பெரம்பூர் அணியினர் ஓட்டலுக்கு சிற்றுண்டி சாப்பிடப் போனார்கள்.

அப்போது அங்கே என் அண்ணாவும் அவர் தோழர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

பெரம்பூர் அணியைப் பார்த்து உற்சாகமான அவர்கள்,உங்களுக்கு வேண்டியதை சாப்பிடுங்கள்,செலவு எங்களது என்று சொல்லி விட்டனர்.

சூடான ரவா உப்புமா மேல் என்ன மோகமோ,அதை வரவழைத்துச் சாப்பிட்டனர்.

உப்புமா நன்றாக இருக்கிறது என்று இன்னும் ஒன்று சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியாகச் சென்றனர்.

மகிழ்ச்சி அதோடு சரி.

அன்றைய ஆட்டத்தில் லக்ஷ்மி மில்ஸ் அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியது.


பெரம்பூர்  அணியில் ஓர் அருமையான ஆட்டக்காரர் இருந்தார்.அவர் பெயர் ...கார்!ஆங்கிலோ இந்தியர்)


ரவா உப்புமா தவிர வேறு பல உப்புமாக்களும் உண்டு.



அரிசி உப்புமா(அம்மா அந்தக் காலத்தில் வெணகலப் பானையில் செய்வார்கள்.தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் புளிக் கொத்ஸு....ஆகா!)

புளி உப்புமா(புளிமா,பச்சைமாப்பொடி உப்புமா என்று பல பெயர்கள் உண்டு)

அவல் உப்புமா

சேமியா உப்புமா

ரொட்டி உப்புமா

ஜவ்வரிசி உப்புமா(சாபுதானா கிச்சடி)

இவை தவிர முன்பு சில முறை சாப்பிட்ட ஓர் உப்புமா...அரைத்த உப்புமா!

இதன் செய்முறை யாருக்காவது தெரியுமா?.......ஸ்ரீராம்?

இன்று உப்புமா புராணத்தின் காரணம்........

வீட்டில் தோசை மாவு இல்லை

சப்பாத்தி செய்தால் சப்ஜி வேறு செய்ய வேண்டும்

வெளியே வாங்கிச் சாப்பிட மனம் இல்லை.

வேறு வழி.........

ரவா உப்புமா!

















ஞாயிறு, ஜூன் 11, 2017

ஹாலிடே,ஹோலிடே!

வழக்கமான ஹாலிடே ஜாலிடே இன்று     ஹாலிடே, ஹோலி(holy)டே  ஆகி விட்டது.

சிரித்தும் மகிழலாம்.,தெய்வீகத்தை நினைத்தும் மகிழலாம்!

அவர்கள் இறைவன் சன்னிதியில் அமர்ந்திருந்தனர்.

எதிரே நின்ற கோலத்தில் பெருமாள்.திருப்பதி பாலாஜி.

அவர்கள் 35 பேர்.அவர்கள் ஒவ்வொருவருடனும் ஒரு துணை.

அவர்கள் ஓர் அற்புதமான இறை அனுபவத்தில்,இதுவரை கிடைத்திராத  தெய்வீக அனுபவத்தில் திளைத்திருந்தனர்.

சனி, ஜூன் 10, 2017

ஒ.கி.க.ம...முடிச்சாச்சு!

ஒருவனுக்கு வயது 35.

இப்போதுதான் திருமணம்.

ஆனால் பெண் வீட்டில் வயதைக் குறைத்துச் சொல்லியிருப்பான் போலும்.

அந்நிலையில் அப்பெண்ணுக்கு எதிரில் யாராவது அவனுக்கு 35 என்று சொன்னால் கோபம் வருமா,வராதா?!

வரும்.,வருகிறது...

கதாநாயகனுக்கு.

ஒருகாட்சியில் இது காட்டப்படுகிறது.

 மீண்டும் ஒரு காட்சி.

முக்கியமான பேச்சு நடை பெறுகிறது.

கொலைப் பழியை லாரி ஓட்டுனர் ஏற்றுக்கொள்வது பற்றி..

அப்போது அந்த ஓட்டுனர்,35 வயசுல கல்யாணம் முடிச்ச உனக்கு என்று சொல்ல,நாயகனுக்குக் கோபம் வெடித்து வந்து அடிக்கப் போகிறான்.

தலைக்கு மேல்  தொங்கும் கத்தி பெரிதாகத் தெரியவில்லை.,மனைவி  முன் இப்படி வயதைச் சொல்லி விட்டானே என்றே கோபம்!

மனித குணம்    இயல்பாக!

படத்தில் வரும் யாருமே செயற்கையாயில்லை.

இயல்பான நடிப்பு.

எனக்கு ஒரு எண்ணம்.

அனைவரையும் போலிஸ் லாரியில் ஏற்றி அழைத்துச் செல்கையில் பலிக்குக் கொண்டு வந்த ஆட்டை அவிழ்த்து விட அது ஓடுகிறது...

அவர்கள் பிடித்து வந்த ஆடுவிடுதலை ஆகிறது

அவர்கள்போலீஸால் பிடித்துச் செல்லப் படுகின்றனர்

அவர்கள் கருணை மனு என்ன ஆகும்?!

என்னஒரு முரண் நகை.

இங்கேயே படத்தை முடித்திருக்கலாம் என்பதே என் எண்ணம்.

ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பின் என்று,அவர்கள் விடுதலை இத்யாதிகளைக் காட்டுவது ஒரு சமரசமாகத் தோன்றுகிறது.

நல்ல படம்.

புதன், ஜூன் 07, 2017

ஒரு கிடாயின் கருணை மனு..-1

முதலிரவு

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் கணவன்.

ஆனால்,மனைவியோ வந்து படுத்துவுடன் தூங்கி விடுகிறாள்.

பெருத்த ஏமாற்றம் கணவனுக்கு.

மறுநாள்..

சனி, ஜூன் 03, 2017

சல்மான் கானைத் தாக்கிய நக்மா!

என்னங்க!ஒண்ணு சொல்றேன் செய்றீங்களா?

என்ன சொல்லு.

இந்தத் தாடிய எடுத்திடுங்க.

ஏன்?

இடைஞ்சலா இருக்குதுங்க! அது மட்டுமில்லாம பாக்கவும் நல்லா இல்ல.வயசான மாதிரி இருக்கு.

வியாழன், ஜூன் 01, 2017

கடுகு!

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் என்று சிலர் பாடுவது கேட்கிறது.

இதே வேலையாப் போச்சு என்று சலித்துக் கொள்வது மனக் கண்ணில் தெரிகிறது.

ஆனாலும் ஏமாறத்தான் போகிறீர்கள்.