தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூன் 02, 2015

மயான மனிதர்கள்



”அப்பா என்ன குளிர்.எலும்பையும் ஊடுருவிக்கொண்டு உள்ளே போகிறதே”.
யூசுபுக்குக் குளிர் தாங்க முடியவில்லை.ஜமீலாவைப் பார்த்தான்.அவளும் குளிரில் நடுங்கிக் கொண்டுதான் இருந்தாள்.அவள் மட்டும் என்ன தெய்வப் பிறவியா,குளிர் தாக்காமல் இருக்க.படுப்பதற்கு படுக்கையில்லை.போர்த்திக்கொள்ள ஒரு துணியில்லை.சற்று தூரத்தில் எரியும் நெருப்பின் ஒளி தவிர வேறு வெளிச்சம் இல்லாத காரிருள்.அந்த நெருப்பின் அருகில் சென்று குளிர்காயலாம்தான் .

ஆனால் பயமாக இருக்கிறது,எரியும் பிணத்தின் அருகே போய் எப்படி அமர்வது,அதுவும் ஒரு பெண்ணுடன்,ஏற்கனவே இந்த இருட்டும்,மரங்களும் விளையாடும் நிழல்களும் அச்சமூட் டுகின்றன.இந்த 75 வயதில் இப்படி ஒரு அவல நிலையா என மனம் அழுதது.தனக்கு மட்டுமா? 65 வயது ஜமீலாவுக்கும்தானே.?அங்கு வந்து இரண்டு நாட்களாகி விட்டன. சரியான உணவில்லை. நல்ல தண்ணீர் கூடக் கிடைக்கவில்லை.இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும் இந்த வயோதிகர்களால்? 

ஜமிலாவின் மகள் சமீபத்தில்  இறந்தபோது,ஆதரவற்ற ஜமீலாவுக்கு யூசுப்தான் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி ஆதரவாக இருந்தான்.அவள் உடைந்து கதறுகையில் அவளை லேசாக அணைத்து தேற்றினான்.அங்குதான் ஆரம்பமானது பிரச்சனையே,

அவர்களை அந்நிலையில் பார்த்த சிலர்.நிகழ்ச்சிக்குக் கண் காது மூக்கு எல்லாம் வைத்து, யூசுபுக்கும் ஜமீலாவுக்கும் தகாத உறவு இருப்பதாகவும் அதை எதிர்த்த அவள் மகளை அவர்கள் கொன்று விட்டதாகவும் கதை பரப்பி,  வதந்தி பஞ்சாயத்துக்கும் கொண்டு போகப்பட்டது.

அன்று….யூசுப் தன் குடிசையில் அமர்ந்திருந்தபோது ஒரு ஆள் வந்து அவனைப் பஞ்சாயத்தில் அழைப்பதாகக் கூறினான்.யூசுப் போகும்போது பஞ்சாயத்துக் கூடியிருந்தது.கிராமத்தவர் அனைவரும் கூடியிருந்தனர்.ஜமீலாவும் நின்றிருந்தாள்.பஞ்சாயத்து தன் தீர்ப்பைக் கூறியது…. யூசுப்பும் ஜமீலாவும் பஞ்சாயத்து முன் மணக்க வேண்டும்.அதன் பின் அவர்கள் கிராமத் திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.மயானத்தில்தான் வாழ வேண்டும்.ஊருக்குள் வரக் கூடாது.

அவர்கள் சுடுகாட்டுக்கு விரட்டப்பட்டனர்.

இப்போது இங்கே தவித்துக் கொண்டிருக்கிறார்கள்

எத்தனை நாள் இப்படி வாழ முடியும்.?

அவர்கள்முடிவு சாவைத் தவிர வேறில்லை.

இப்படியே பசி தாகம்,குளிர் இவற்றால் வாடி மெலிந்து ஒரு நாள் சாகலாம்.

அல்லது அதோ எரியும் நெருப்பில் விழுந்து மாய்த்துக் கொள்ளலாம்.......
சாவுக்கே பயமில்லை என்றானபின் பிணத்துக்கென்ன பயம்?! 

என்ன செய்யப் போகிறார்கள்?



(இன்றைய  டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியின் அடிப்படையில் புனையப்பட்டது)


16 கருத்துகள்:

  1. புதுமையான விடயமாக இருக்கிறதே....
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  2. புனையப் பட்ட கதை
    பின்னி எடுக்கிறது! வாசகர் மனங்களை!
    "சாவுக்கே பயமில்லை என்றானபின் பிணத்துக்கென்ன பயம்?"
    பிணத்துக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால்
    எங்களுக்கு?????
    த ம 3
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  3. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு
    என்பார்கள்
    அருமை ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  4. 15 வயதுச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இரு இளைஞர்களுக்கு அபராதத்துடன் 5 முறை ஷூவால் அடி வாங்க தண்டனை விதிக்கப் பட்டதாம். இது இன்று படித்த ஒரு செய்தி! இதுபோன்ற பஞ்சாயத்துகளே அர்த்தமில்லாமல்தான் இருக்கும் போல!

    பதிலளிநீக்கு
  5. வேதனை நிகழ்வு.

    வேறென்ன சொல்ல!

    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  6. வடக்கே நடக்கும் பஞ்சாயத்துகளும் அதன் தீர்ப்புகளும் பல சமயங்களில் கோபம் வரவைப்பவை......

    வேதனை தரும் நிகழ்வும் புனைவும்....

    பதிலளிநீக்கு
  7. சாவுக்கே பயமில்லை என்றானபின் போராடத்தான் வேண்டும் அதுதான் கடைசி வழி..த.ம+10

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா

    வேதனையான விடயம் ...பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. இந்த நிகழ்வு மிகவும் கசந்தாலும் நன்றாகவே ’நிகழ்ச்சிக்குக் கண் காது மூக்கு எல்லாம் வைத்து’ எழுதியுள்ளீர்கள்.

    //சாவுக்கே பயமில்லை என்றானபின் பிணத்துக்கென்ன பயம்?! //

    இருப்பினும் வயதானவர்கள் அதுவும் புதுமண தம்பதி ..... பாவம் அவர்கள்.

    //அவள் உடைந்து கதறுகையில் அவளை லேசாக அணைத்து தேற்றினான்.அங்குதான் ஆரம்பமானது பிரச்சனையே,//

    அடடா, யாரையும் எந்த சூழ்நிலையிலும், எவ்வளவு அழுதாலும், லேசாக அணைத்து தேற்றக்கூடாது என்பதை இதன் மூலம் அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் எழுத்தின் நடை அழகாக செய்தியை உணர்வுடன் சொல்கிறது.

    God Bless You

    பதிலளிநீக்கு
  11. என்ன செய்யப் போகிறார்கள்?
    நல்ல கேள்வி
    கணத்தில் வரும் முடிவு தான்...

    பதிலளிநீக்கு
  12. இந்த கட்டப் பஞ்சாயத்துகளை ஒழிக்க ஒரு சட்டம் வந்தால் நல்லாருக்கும்

    பதிலளிநீக்கு
  13. நெஞ்சம் கனக்கிறது அய்யா!
    த ம 12

    பதிலளிநீக்கு
  14. நானும் அந்த செய்தியைப் படித்தேன்.ஈவு இரக்கமற்ற சமுதாயத்தில் வேறெதை எதிர்பார்க்க முடியும்.

    பதிலளிநீக்கு