தொடரும் தோழர்கள்

சனி, ஜூன் 20, 2015

முழி பிதுங்க வைத்த மொழி!



தமிழ் மொழி ஒன்றுதான்.ஆனால் அதைப் பேசும் விதம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாறி விடுகிறது.

நான் குமரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பணி புரிந்த நேரம்.

அவ்வூரில் நல்ல உணவகம் கிடையாது .

எனவே இரவு உணவுக்காக அருகில் இருந்த பெரிய ஊருக்குத் தினம் செல்வேன்

ஒரு நாள் அப்படிச் சென்றபோது நான் இருந்த கிராமத்தவர் ஒருவர் என்னைப் பார்த்தார்.
சார் இங்க என்ன....... என்றார்

சாப்பிட வந்தேன் என்றேன்

திவசம் வருமோ என்றார்.

எனக்குப் புரியவில்லை.ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே!

என் அப்பாவின் திவசம் மே மாதம் வரும் 

எனவே நான் சொன்னேன்”மே மாசம் வரும்”

இப்போது ’ஙே’ என்று விழிப்பது அவர் முறை!(ராஜேந்திர குமார்,பாலகணேஷ் மன்னிக்க!)

(திவசம்=தினம்)

அலுவலகம் கீழே,என் இருப்பிடம் மேலே.

புதிதாகத் திறக்கப்பட்ட அலுவலகம்.

ஒரு கிணறு வெட்டி நீர் இறைக்க வசதி செய்யப்பட்டது.அங்கிருந்து மேலே எடுத்துச் செல்ல ஓர் ஆள் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று.குழாய்க்குப் பழக்கப்பட்டுப் போனதால் அது கடினமாக இருந்தது.

நான் கட்டிடச் சொந்தக்காரரிடம் கேட்டேன்.ஒரு மோட்டார் போட்டுக் குழாய் வைத்துக் கொடுங்கள் என

அவர் கேட்டார்”சக்கரம் வேண்டாம்?”

எனக்குப் புரியவில்லை.

அதற்காக விட்டு விடுவோமா’

நான் சொன்னேன்

”சக்கரம், கிக்கரம் எல்லாம் மோட்டார்லயே இருக்கும்’

இப்போது அவர் ’ஙே’!

(சக்கரம்=பணம்)

என் அம்மா  வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் வாங்க வேண்டிய சாமான்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.அப்போது அந்தப் பெண் சொன்னாள் “மலைக்கறிி வேங்கணும்”

அம்மாவுக்குப் புரியவில்லை.அப்போது அம்மா குமட்டி அடுப்புக் கூட உபயோகித்து வந்தார்கள்.எனவே அவள் அடுப்புக் கரி பற்றிச் சொல்கிறாள் என்று எண்ணிச் சொன்னார்கள் ”ஆமாம்.மூட்டை என்ன விலை?”

இப்போது அந்தப் பெண்  ’ஙே’--மூட்டை மூட்டையாகக் காய்கறி வாங்குபர்களைப் பார்த்திருக்க மாட்டாள் இல்லையா?!

(மலைக்கறி-காய்கறி)

17 கருத்துகள்:

  1. ஐயா , அது மலைக்கறி அல்ல மரக்கறி . மரத்தில் விலையும் காய் கனிகளை அவ்வாறு சொல்வது . இங்கு கறி எனும் பதம் அசைவத்துக்கு மட்டுமல்ல காய் கனிகளை கொண்டு செய்யும் சைவ பதார்த்ததுக்கும் கறி எனும் வார்த்தை பயன்படுத்தப்படும்.

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் இப்போது மாற்றி விட்டார்களா...? ஙே...!

    பதிலளிநீக்கு
  3. ரசித்துச் சிரித்தேன்.

    நல்ல அனுபவங்கள். இதுவரை slang மற்றும் பேசும் உச்சரிப்பு பற்றி மட்டும்தான் (திருநெல்வேலி, கோவை, சென்னை) கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் பகிர்ந்து கொண்ட பதிவில் குறிப்பிட்டிருந்த சொற்கள் முற்றிலுமாக கேள்விப்படாதவை.

    சிரித்து முடிக்க வெகு நேரமாயிற்று.

    God Bless You

    பதிலளிநீக்கு
  4. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. தமிழ்...எப்படிஎல்லாம் மாறி மாறி வருகிறது...நாங்களும் ஙே...! சுவாரஸ்யம்.
    தம +1

    பதிலளிநீக்கு
  6. மலையாளமும், தமிழும் இப்படித்தான்
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  7. மலையாளம் கலந்த தமிழ். குமரித்தமிழ் பேசும் போது திட்டுவது போல் இருக்கும். ஆனாலும் பாசமான மொழி. 'மடி' என்றால் 'சோம்பல்'. இன்னிக்கு ஒரே மடியா இருக்கு என்று சாதரணமாக பேசுவார்கள். அதாவது சோம்பலாக இருக்கு என்று அர்த்தம். இப்படி நாம் கேள்விபடாத வார்த்தைகள் அங்கு அதிகம் நேரம் இருந்தால் இந்த பதிவை படித்துப் பாருங்கள்.

    http://senthilmsp.blogspot.com/2015/03/blog-post_27.html

    பதிலளிநீக்கு
  8. அறியாத வார்த்தைகள் ஐயா
    அறிந்து கொண்டேன் நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  9. கேரளாவில் 7 ஆண்டுகள் பணிபுரிந்த நானும் இதுபோன்ற அனுபவங்களை புதிதாக அங்கு சென்றபோது அனுபவவித்து பின் சிரித்திருக்கிறேன். பதிவை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  10. நம் பண்பாட்டின் பெருமையில் இதுவும் அடங்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  11. இத்தகைய அனுபவம் எனக்கும் உண்டு!

    பதிலளிநீக்கு
  12. தாங்கள் தப்பித்துக் கொண்டீர்கள் சண்டையிடாமல் அய்யா...

    பதிலளிநீக்கு
  13. பலர் நினைப்பது போல மலையாளம் கலந்த தமிழ் குமரித்தமிழ் என்பது தவறான எண்ணம், குமரித் தமிழில் இருந்து தான் தென் மலையாள வழக்குகள் தோன்றின. பண்டையத் தமிழ் சொற்கள் குமரித்தமிழில் உள்ளன. சில சொற்கள் வடகேரளத்தில் இருந்து வந்த மலையாள மொழித் தாக்கத்தினால் உண்டாகின என்றாலும் குமரித்தமிழ் தனித்துவமானது. அண்மையக் காலங்களில் வட்டார வழக்குகள் அழிந்து வருவதால் குமரித்தமிழும் மாறிவிட்டதை கவனிக்கலாம்.

    அப்புறம் யாரோ மலைக்கறி என்பது தான் குமரி வழக்கு, யாரோ ஒருவர் சொன்னது போல அது மரக்கறி அல்ல. தமிழகத்தின் பிற பகுதிகளில் அது காய்கறி என வழங்கப்படுகின்றது, கேரளத்தில் பச்சைக்கறி எனவும் வழங்கப்படுகின்றது. குமரி மற்றும் திருநெல்வேலியின் சில பகுதிகளில் மட்டும் தான் அது மலைக்கறி எனப்படுகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான விளக்கம்....நாங்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.....நன்றி!

      நீக்கு
  14. வித்தியாசமான பேசும் மொழிகளை அறிந்தேன்! சுவாரஸ்யம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  15. ஹ்ஹாஹ் இது எங்கள் பகுதி தமிழ்....எங்களில் கீதா நாகர்கோவிலைச் சேர்ந்தவர்...துளசி கேரளத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து கல்வி பயின்றவர் என்பதால்....நாகர்கோவில் உட்பட....

    மலையாள மொழியில் அதிகமான நல்ல தமிழ் சொற்கள் உண்டு....

    அதே போன்று இலங்கைத் தமிழும் கேரள மொழியும் அக்சென்ட் கொஞ்சம் ஒத்துப் போகும். கலாச்சாரம், உணவு உட்பட....பல ஒற்றுமைகள் உண்டு....

    பதிலளிநீக்கு