தொடரும் தோழர்கள்

வெள்ளி, மார்ச் 01, 2013

என் காதல்!

சென்னை  பித்தனான நான் என் காதல் பற்றி எழுதிய பதிவுகள்,மலரும் நினைவுகள்.

ஆம் நான் காதலித்தேன்- சென்னையென்னும் அழகியை!
அக்காதல் பற்றி நான் எழுதிய பதிவுகளை இங்கு மீள் பதிவாகப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இதோ சென்னைக்காதல்

//வெள்ளி, பிப்ரவரி 04, 2011

சென்னைக் காதல்!

சென்னையின் மீதான என் காதல் எப்போது ஆரம்பமானது?

நான் பிறந்தது இந்த தரும மிகு சென்னையில்தான்.-மதராஸ்- திருவல்லிக்கேணியில்..ஆனால் குடும்பத்தலைவரான என் தந்தையின் மறைவுக்குப் பின் ஐந்து வயதே நிறைந்த நான் புலம் பெயர வேண்டியதாயிற்று!தென் தமிழ்நாடு எங்களை வரவேற்றது.எனவே அந்த வயதுக்குள் என் சென்னைக் காதல் சாத்தியமில்லை!

பின் என் பள்ளி வாழ்க்கை தொடங்கியது .சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி என்று பல இடங்களில் தொடர்ந்தது.பள்ளி கோடை விடுமுறையில் ஒரு முறை என்னை சென்னையில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பவதாக என் அண்ணா சொல்லியிருந்தார்;நானும் சென்னையில் போய் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோம் என்ற கனவுகளிலும், கற்பனைகளிலும் மூழ்கியிருந்தேன்.ஆனால் என்ன காரணத்தாலோ அது நடக்கவில்லை.சில நாட்கள் மிக வருத்தத்தில் இருந்தேன்.எனவே காதல் தள்ளிப் போய் விட்டது(நான் என்ன காதல் கோட்டை அஜித்தா,பார்க்காமலே காதலிக்க!)

பின் கல்லூரி வாழ்க்கை.வங்கி ஊழியரான என் அண்ணா செல்லும் ஊர்களில்லாம் என் கல்வி தொடர்ந்தது போல்,புகுமுக வகுப்பும் பட்டப் படிப்பும் உத்தமபாளையத்தில் தொடர்ந்தன. சென்னை வெறும் கனவாகவே இருந்தது.கணிதத்தில் பட்டம் பெற்ற பின்,பட்ட மேற் படிப்புக்காக விண்ணப்பம் அனுப்பும் நேரம் வந்தது .அப்போதெல்லாம், விண்ணப்பம் பல்கலைக் கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.அதில் முன்னுரிமை அளித்து மூன்று கல்லூரிகளின் பெயர் குறிப்பிட வேண்டும்.இங்கேதான் விழுந்தது காதலின் வித்து!முதலில் குறிப்பிட்ட கல்லூரி,சென்னை விவேகானந்தா கல்லூரி..அவர்களும் என்னை ஏற்றுக் கொண்டார்கள்!சில நாட்களுக்கு முன்தான் என் அக்காவுக்குத் திருமணம் முடிந்து, கணவனுடன் சென்னை சென்றிருந்தாள்.நானும் அவளைப் பின் தொடர்ந்தேன்.ரயிலில் செல்லும்போதே ஜுரம் வந்து விட்டது(காதல் ஜுரம்!) சென்னை சென்று அடைந்தேன்!

முதல் நாள் என் அக்காவுடனும்,என் அத்திம்பேருடனும்,சினிமா பார்க்கப் புறப்பட்டேன்-கேஸினோவில்.அதன்பின்,மவுண்ட் ரோடு மதுபன் ஹோட்டலில் போண்டா சாம்பார், காபி,கடைசியில் மெரினா கடற்கரை.

சென்னையின் திரையரங்கும்,ஸ்பூனால் வெட்டியெடுத்துச் சாப்பிட்ட சாம்பாரில் மிதக்கும் மைசூர் போண்டாக்களும் , பிரம்மாண்டமான மெரினா கடற்கரையும்,ஆர்ப்பரித்து அலைக்கரங்கள் நீட்டும் வங்கா விரிகுடாவும்,என்னை சென்னையின் பால் ஈர்த்தன.

காதல் தொடங்கியது!

மதராஸில்,முதலில் அன்று பார்த்த திரைப்படத்தின் பெயரில் ஒரு வேடிக்கையான பொருத்தம்,அல்லது முரண்நகை இருக்கிறது!

அந்தப் படம்---”காதலிக்க நேரமில்லை”!//.
..........................
இந்த வரிசையில் நான் எழுதிய மற்றப்பதிவுகள் அணிவகுத்து வரும்!

21 கருத்துகள்:

  1. நீங்கள் 'தல' தான் சார்...

    ஹா... ஹா... நல்ல பொருத்தம்... (முடிவில்)

    பதிலளிநீக்கு
  2. தல ரிட்டர்ன்ஸ்!!

    பதிலளிநீக்கு
  3. கல்கி அவர்களின் நாவல்களை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. அதுபோலத்தான், சென்னையில் மேல் உள்ள உங்கள் காதல் கதையை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. மீள் பதிவுகளைத் தொடருங்கள்.படிக்கக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவு விட்டு நீங்காத நினைவுகள் அல்லவா?!
      நன்றி ஐயா

      நீக்கு
  4. அனுபவப் புதுமை தங்களிடம் கண்டேன்....

    பதிலளிநீக்கு
  5. Vivekananda College chennai - in which year - masala dosa of viveka canteen is Very very tasty I studied there for an year in 1976. Happy to follw you to know about the chennai of yester years.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1964-66 பட்ட மேற்படிப்பு;ஹாஸ்டல் வாசம்!சென்னையைப்(மெட்ராஸை) பற்றி எவ்வளவோ சொல்லலாம்!
      நன்றி மோஹன்;உங்கள் தொலைபேசி அழைப்பை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை!

      நீக்கு
  6. சென்னைக்காதல் அருமை. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. மீள்பதிவின் மூலம் உங்கள் பதிவை மீண்டும் படிக்க ஆரம்பித்துவிட்டேன்...

    அது என்ன அஜீதா என்று ஒரு கேள்வி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”காதல் கோட்டை ”அஜீத்தா என்பதுதானே கேள்வி?!
      நன்றி சீனு

      நீக்கு
  8. சுவாரசியமான காதல் கதை.

    நாங்கள் படித்து ரசிக்க மீள் பதிவாக கொடுப்பத்தற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. காதல் பதிவுகளின் காதலன் ஆகிவிட்டேன்! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. சென்னையின் மீதுள்ள காதலை பற்றி சுவைப்பட சொல்றீங்க சார். தொடரட்டும்...

    பதிலளிநீக்கு