தொடரும் தோழர்கள்

புதன், மார்ச் 07, 2012

பகவத்கீதையின் பத்தொன்பதாவது அத்தியாயம்!

பார்த்தன்:கிருஷ்ணா!எனக்கு வரும்  நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை எனது உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும்,மதிப்பு வாய்ந்த பெரியவர்களுக்கும் மேலனுப்பும் இழிந்த ,மன்னிக்க முடியாத செயலை நான் எவ்வாறு செய்வேன்?

கிருஷ்ணன்:அர்ஜுனா!இந்த நொடியில் அவர்கள் யாரும் நண்பர்களோ, விரோதிகளோ, உறவினர்களோ,அந்நியர்களோ ,சிறியவர்களோ, பெரியவர்களோ  நல்லவர்களோ, கெட்டவர்களோ அல்ல. நீ உன்னுடைய வலை அறத்தை உடைக்க முடியாது.உடனே மின்னஞ்சல்களை மேலனுப்பு. இதுவே உனது கர்மாவாகும்.தர்மமுமாகும்.

பார்த்தன்:மதுசூதனா!என் மனச்சாட்சிக்கு விரோதமான ஒரு செயலைச் செய்யச் சொல்லி என்னை வற்புறுத்தாதே.

கிருஷ்ணன்:குந்தி புத்திரனே! நீ மாய வலையில் சிக்கித் தவிக்கிறாய்.இந்தப் பொருள் சார்ந்த உலகில்,நீ உனக்கும்,உன் தர்மத்துக்கும்,உன் எலிக்குஞ்சுக்கும் தவிர வேறு எதற்கும் கட்டுப்பட்டவனல்ல.மின்னஞ்சல்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்றன.நீ இறந்த பின்னும் இருக்கும்.எனவே மாயை யிலிருந்து விடுபட்டு உன் தர்மத்தைச் செய்!

பார்த்தன்:கண்ணா!மின்னஞ்சலுக்கும் மாயைக்கும் என்ன சம்பந்தம் என விளக்கு.

கிருஷ்ணன்:அர்ஜுனா!மின்னஞ்சல் என்பது நிலம்,நீர்,நெருப்பு,காற்று ,ஆகாயம் இவற்றோடு  ஆறாவது பூதம்!இது கணினியின் வன்தட்டை நிறைக்கிறது. பிரயாணம் செய்து கொண்டே இருக்கிறது.உனது மூளையைச் செலவிடா மலேயே  ஏதோ பெரிய செயல் செய்தது போன்ற ஒரு திருதிப்யை உனக்கு அளிக்கிறது.ஆத்மா இறப்பின்றி ஒரு சரீரத்திலிருந்து மற்ற சரீரம் செல்வது போல்,மின்னஞ்சலும் ஒரு கணினியிலிருந்து, மற்றொரு கணினிக்கு அழிவின்றிச் சென்று கொண்டிருக்கிறது.

பார்த்தன்:கேசவா!மின்னஞ்சலின் உண்மையான தத்துவம் என்ன?

கிருஷ்ணன்:அதை ஆயுதம் வெட்டுவதில்லை,நெருப்பு எரிப்பதில்லை,நீர் நனைப்பதில்லை,காற்று உலர்த்துவதில்லை.நீ செலுத்தும் அம்பு உன்னிடம் திரும்பி வராது.ஆனால் நீ அனுப்பும் மின்னஞ்சல் ,பல மாதங்கள் கழித்தும் கூட உன்னிடம் திரும்பி வந்து மீண்டும் உன்னால்  அதே மனிதர்களுக்கு மேலனுப்பப்படும்.

பார்த்தன்:முராரி!என் கண்ணைத்திறந்தாய்இது வரை மின்னஞ்சல்கள் எல்லாவற்றையும் படித்து நொந்து போயிருந்தேன்.இனி அவற்றை என் நண்பர்கள், உறவினர்கள், பெரியவர்.சிறியவர் அனைவருக்கும் படிக்காமலே மேலனுப்பி அவர்களை ”போதும் , போதும்” என்று மண்டியிடச் செய்வேன்! இந்தக் குருக்ஷேத்திரத்தில் வெற்றி பெறுவேன்.

கிருஷ்ணன்:கிரீடி!வெற்றி,தோல்வியை நிர்ணயிப்பது நீயல்ல.உன் கடமையைச் செய்.மின்னஞ்சல்களையெல்லாம் எல்லோருக்கும் மேலனுப்பி அவர்களைக் கொல்!நீஉன் கர்மாவை நிறைவேற்றியவனாவாய்!

ஓம் தத் ஸத்-பிரம்ம வித்யை,யோக சாஸ்திரம்,உபநிஷத் எனப்படும் பகவத்கீதையாகிய ஸ்ரீகிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்குமிடையே நிகழ்ந்த உரையாடலில் “மின்னஞ்சல் மேலனுப்பும் யோகம்” எனப் பெயர் படைத்த பத்தொன்பதாவது அத்தியாயம் நிறைவுற்றது.

டிஸ்கி:நான் என் தர்மத்தின் படி என் கர்மாவை வேறு விதமாக நிறைவேற்றி விட்டேன்!தனித்தனியாக மேலனுப்பாமல்,மொத்தமாக அனைவரும் படிக்க வலைப்பூவில் வெளியிட்டு விட்டேன்! 



33 கருத்துகள்:

  1. கொன்னுட்ட வாத்யாரே!
    இதான்பா ஸெம மெர்சலான பதிவு!

    பதிலளிநீக்கு
  2. புதிய கீதை... வித்தியாசமான கோணத்துல சிந்திச்சு அசத்திட்டீங்க. இந்த கீதையப் படிச்சதுல எனக்கு வந்தது போதை!

    பதிலளிநீக்கு
  3. மின்னஞ்சல்களினால் ரெம்ப நொந்து போயிருக்கிங்கன்னு மட்டும் தெரியுது..:))

    இருந்தாலும் அருமையான நகச்சுவைப் பதிவு!

    //.நீ செலுத்தும் அம்பு உன்னிடம் திரும்பி வராது.ஆனால் நீ அனுப்பும் மின்னஞ்சல் ,பல மாதங்கள் கழித்தும் கூட உன்னிடம் திரும்பி வந்து மீண்டும் உன்னால் அதே மனிதர்களுக்கு மேலனுப்பப்படும்.//

    :)))))))))))

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமாக இருந்தது ஐயா...

    பதிலளிநீக்கு
  5. தங்களின் கீதா உபதேசம் மிக அருமை.

    நகைச்சுவையாக கற்பனையாக இருப்பினும், சிந்தித்துப்பார்த்தால் அவற்றில் கூட நிறைய உண்மைகளும் உள்ளன. பாராட்டுக்கள். ;)

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் சொல்ல நினைத்ததையெல்லாம் பகவான் கிருஷ்ணன் சொல்வதுபோல் சொல்லி, நண்பர் கணேஷ் சொன்னது போல் ஒரு புதிய ‘கீதை’யை படைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. பதிவாக வெளியிட்டதும் சரிதான்.ஹாஹா

    பதிலளிநீக்கு
  8. கீதையில் ஏற்ற வேண்டிய
    அருமையான அத்தியாயம்..

    சிந்தனைச் சிற்பி ஐயா நீங்கள்...

    பதிலளிநீக்கு
  9. அருமையான நகைச்சுவை பதிவு...

    பதிலளிநீக்கு
  10. அருமை! பெருமை! எளிமை!

    இனிமை!திறமை! இத்தனையும்
    உமக்கே உரிமை!
    அசத்தல் கீதை அரியநல் பாதை!
    வாழ்த்து!பாராட்டு! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. புதிய கீதை தந்த நவீன கிருஷ்ணா வாழிய நீர் பல்லாண்டு!

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்! சில சமயம், காலையிலோ அல்லது மாலையிலோ மின்னஞ்சல்களை வகைப் படுத்தவே நேரம் சரியாகப் போய் விடுகிறது. அன்பினாலே உண்டாகும் இந்த வலை. பாச வலை. இருக்கும் வரை இதனைச் செய்வோம்!

    பதிலளிநீக்கு
  13. உனது மூளையைச் செலவிடா மலேயே ஏதோ பெரிய செயல் செய்தது போன்ற ஒரு திருதிப்யை உனக்கு அளிக்கிறது.

    கிருஷ்ணபரமாத்மாவாய் ஞானம் பெற் செய்த உபதேசங்கள் அனைத்தும் அருமை..

    பதிலளிநீக்கு
  14. வித்தியாசமாக இருக்கின்றது தங்களின் கீதைப் போதனை.இப்படியும் இருக்கலாம் என ஜோசிக்க வைக்கின்றது.

    பதிலளிநீக்கு
  15. காலத்துக்கு ஏற்ற கீதாஉபதேசம் அருமை.

    பதிலளிநீக்கு