தொடரும் தோழர்கள்

வியாழன், ஏப்ரல் 19, 2012

போலி கவுரவம்!

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை?

நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

கணவனும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதை யுடன் சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தனர்.

"யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.

''கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். 

இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.

"புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.

"கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர். 

இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர்.

நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கவுரவமுமே முக்கியக் காரணம்.

போலி கவுரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே  ஏற்பட்டு விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.


"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.
இந்த போலி கவுரவம் படித்தவர்களையும் வாட்டி எடுக்கும் சக்தி கொண்டது.

"சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டி விட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது'' என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கவுரவத்தின் அறியாப் பருவம். 

"இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார். என் கவுரவம் என்னாவது?'' என்று ஒரு டீச்சரே தலைமை யாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கவுரவத்தின் விபரீத வளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கவுரவத்திற்கும் என்ன சம்பந்தம்?

நாம் கவுரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கவுரவம்.

பாழாய்ப்போன டூவீலர் என்ஜின் திடீரென எக்குத்தப்பாகி பெட்ரோலைக் குடித்து விடுகிறது. வண்டி பாதி வழியில் நின்று விடுகிறது. மனைவி ஒரு பக்கம், மற்றவர் ஒரு பக்கம், அவ்வளவுதான். போயே விட்டது நாம் கட்டிக்காத்த கவுரவம்! அருகில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குக்கு வண்டி யைத்  தள்ளிச் சென்றால் உடலுக்கு கவுரவம்தான். ஆனால் உள்ளத்துக்கும், உடன்வரும் செல்லத்துக்கும் அது கவுரவக் குறைச்சல் ஆயிற்றே. "என்ன ஆச்சு?'' என்று ஏதோ வண்டியில் குண்டு வெடித்த மாதிரி சிலர் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்தால், அது போலி கவுரவம். வண்டி பிரச்சினைக் கும்,  வாழ்க்கை கவுரவத்திற்கும் என்ன தொடர்பு? - யோசித்துப் பாருங்கள்.
 
இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கவுரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. 

'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படு கின்றனர். 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப் படுத்தினால்தான் நாளை  அவர்கள் வெல்ல முடியும். 'ஊக்குவிப்பார் யாரும் இல்லை யெனினும், குறை சொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.


தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பஃபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள். நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. 'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.

உடைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் கல் சிலையாவதில்லை; உருக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் தங்கம் நகையாவதில்லை, பிசையப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் மண் பானையாவதில்லை ; அடித்து, துவைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் துணி சுத்தமாவதில்லை; நம் குறைகள் நம்மிடமிருந்து நீங்க, நமக்கு வேண்டியவர்கள் நம்மை கையாளும் போதுதான் நம் அறிவு முழுமையாகிறது. இதை யார் பார்த்தால் என்ன? எங்கு பார்த்தால் என்ன? நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒரு விஷயம் நிஜ கவுரவமா அல்லது போலி கவுரவமா என்பதுதான் கேள்வி.

போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். 


(படித்தேன்; பிடித்தது;உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன்!  )

நன்றி: அலாவுதீன்,தமிழ் தாயகம்

38 கருத்துகள்:

  1. மிக அருமையான பகிர்வு. படித்ததும் உங்களுக்குப் பிடித்து, பதிவிட்டது போல எனக்கும் பிடித்துள்ளது.

    //பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம் //

    மிகச்சரியான முடிவு.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்லதோர் பகிர்வு சார். அடுத்தவர்களுக்காக பார்த்தால் ஒன்றுமே நடக்காது.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கருத்துக்கள் அடங்கிய பதிவு
    பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ஒரு வீட்ல பொண்டாட்டி, ஐந்து ரூபாய்க்கு ஸ்வீட் வாங்கி வர சொல்றா
    இவரு வாங்க போன நேரமா பாத்து நல்லா தெரிஞ்ச ஒருத்தரு ஸ்வீட் வாங்க வந்திருப்பாரு
    கண்டவுடனயே பேசுவாங்க
    என்ன வாங்க வந்தீங்கன்னு அவரு கேப்பாரு
    இவரு ஸ்வீட்தான் என்பாரு
    அவரு நூறு ரூபாய்க்கு ஸ்வீட் தாப்பான்னு வாங்குவாரு
    நீங்களும் வாங்குங்களேன் பேசிக்கிட்டே போலாம் என்பாரு
    அவரு முன்னாடி ஐந்து ரூபாய்க்கு வாங்க வெட்கப்பட்டு இவரும் கையில இருந்த ஐம்பது ரூபாய்க்கே ஸ்வீட் வாங்குவாரு
    ராத்திருக்கு சாப்பாட்டுக்கு கொண்டாட்டம்தான்

    போலி கௌரவத்தை பணம் கொடுத்து வாங்கி ஏமாந்துட்டாறு

    பதிலளிநீக்கு
  5. அருமையான பகிர்வு...நன்றி பித்தரே பகிர்ந்ததற்கு...

    பதிலளிநீக்கு
  6. மிகவும் சக்தி வாய்ந்த ஒரு விஷயத்தை படித்து அது பிடித்துப்போய் பதிவிட்டதற்கு முதலில் ஓராயிரம் நன்றிகள்.
    இந்த விஷயத்தை முதலில் நம் அடுத்த சந்ததியருக்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
    இந்த ஒரு விஷயத்திற்காக (மற்றவர் முன் அவமானம்) எத்தனையோ மாணவச்செல்வங்கள் தம் பெற்றோர்களையும், உறவினர்களையும் நண்பர்களையும் தவிக்கவிட்டு தற்கொலைகளை முடிவாக்கிக்கொள்கின்றனர்.
    இந்த கட்டுரையை என்னால் முடிந்தளவுக்கு மற்றவர்களிடம் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. //போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம்.
    //

    மிக சரியாக சொன்னிர்கள்

    பதிலளிநீக்கு
  8. நல்ல பகிர்வு

    நாட்டு நடப்புகளை அழகாக சொல்லிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  9. நல்ல பகிர்வைத் தான் பகிர்ந்திருக்கிறீர்கள் ஐயா..நன்றி..

    பதிலளிநீக்கு
  10. போலி கவுரவத்தை அகற்ற ஆன்மீக நாட்டம் அதிகரிக்கவேண்டும்....

    பதிலளிநீக்கு
  11. நல்ல விஷயம் பகிர்ந்திருக்கிறீர்கள். போலி கவுரவம் என்றுமே ஆபத்தானதுதான். பஃபே பார்ட்டியில் நான் எனக்காகச் சாப்பிடும் நபராகத்தான் நடந்து கொண்டிருக்கிறேன் இதுவரை. அதனால் இந்தப் பதிவு எனக்கு மகிழ்வு தந்தது. ‘ஸ்பூனை பலர் பயன்படுத்தலாம். ஆனால் என் கையை நான் மட்டுமே பயன்படுத்த முடியும்’ என்ற சாஸ்திரியின் நினைவும் வருகிறது. ந்ன்றி!

    பதிலளிநீக்கு
  12. உருவாக்கப்படும் பாத்திரங்கள்
    பட்டறையில் தான் மெருகூட்டப் படுகின்றன..
    அதுபோல..
    சமுதாயம் தான் நமக்கு நிறைய பாடங்கள்
    கற்றுத்தரும்..
    அங்கே நமக்கு கூட்டத்தில் அறிவுரை கிடைத்தால்
    நேர்மறையாக எடுத்துக் கொள்ளவேண்டுமென
    அழகாக சொன்னீர்கள்..

    பதிலளிநீக்கு
  13. மிக நல்ல விஷயம். நீங்கள் படித்ததை எங்களுடன் பகிர்ந்தது பிடித்தது!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்! சமுதாயத்தில் இன்று விரவி இருக்கும் போலி கவுரவம் என்ற போலி வாழ்க்கை பற்றி உள்ளத்தில் உணர்த்திய கட்டுரை. தங்களுக்கும் தாங்கள் நன்றி சொன்ன அலாவுதீன் ( தமிழ் தாயகம்) அவ்ர்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  15. பிடித்ததைப் படித்தேன்! படித்ததும் பிடித்தது!


    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  16. //பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.//

    வங்கியில் பணியாற்றிபோது நடைபெற்ற எல்லா விருந்திலும் எல்லோரும் ஸ்பூன்கள் வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டபோது, நான் மட்டும் என் கையால் உணவருந்தியது தங்கள் பதிவைப் படித்தபோது நினைவுக்கு வந்தது.
    வரட்டுக் கவுரவத்திற்காக நமது தனித்தன்மையை இழக்க வேண்டியதில்லை என்பதை உணர்த்தும் அருமையான தகவலை பதிவிட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். //அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ஐயா.

    பதிலளிநீக்கு
  18. அருமையான தகவலை பதிவிட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. போலி கவுரவம் வாழ்க்கையைப் பாதிக்கும் என்று நன்கு உணர்த்தியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு