தொடரும் தோழர்கள்

வியாழன், மார்ச் 31, 2011

வலைப்பூக் கவுஜ!

நான் நினைத்துப் பார்க்கிறேன் இப்போது

என் நினைவில் நின்றவை எவையெல்லாம் என்று!

பொன்மாலைப் பொழுது தனில் பூத்த றோஜாக்கள் போல்

என்னருகில் நீயிருந்த இனிய பொழுதுகள்!

உன் பாதம் பட்ட இடமெல்லாம்,கவிதைப் பூமலர

மென்மையாய் நீ நடந்த உன் கவிதை வீதி!

உன்னை நான் முதல் முதலாய் சந்தித்து

என்னை உன்னிடத்தில் இழந்த அந்த நல்லநேரம்!

என்னைப் பார்க்கையில் ரோஜாப் பூந்தோட்டம் போல்

என்றும் மலர்ந்திடும் உன் அழகு முகம்!

நன்னாளில் கோயிலுக்கு வேடந்தாங்கல் பறவைகள் போல்

உன் தோழியர் புடை சூழ நீ வரும் தருணங்கள்!

என் மன வானில் குறிஞ்சிப் பூக்கள் போல்

என்றும் குடியிருக்கும் உன் இனிய நினைவுகள்!

உணவு உலகமா?இல்லை உன் உணர்வே உலகம்!

உன் மனமென்னும் கடலில் வலைவீசி

அன்பென்னும் மீன் பிடிக்கும் வலைஞன் நான்

என்ன பிதற்றல் இவையெல்லாம் என்றால்

ஒன்றுமில்லை கொஞ்சம் வெட்டிப்பேச்சு!

நன்றாக இருக்கிறதா?இது just for laugh!

என்ன செய்ய நாஞ்சில் மனோ?எங்கும் ஃபிட் ஆகவில்லை!

செவ்வாய், மார்ச் 29, 2011

காக்கும் இட்லி!(வடையில்லை)

மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு.

“நெய்யப்பம் தின்னால்,ரெண்டுண்டு காரியம்” என்று.

அதாவது வயிறும் நிறையும், கையில் இருக்கும் நெய்யைத் தலையிலும் தடவிக் கொள்ளலாம் என்ற பொருள்!

இது போலத் தமிழர்களின் பிரசித்தமான உணவான இட்லிக்கு ஒரு புதிய உபயோகம் தெரிய வந்துள்ளது.

இட்லியால் வயிறு நிறையும் என்பதுடன்,இது’ ரெண்டுண்டு காரியம்’ என்பது போல் மற்றொரு உபயோகம்.

இட்லி உங்கள் பணத்தைக் காக்கும்!


இது எப்படியிருக்கு!

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு!

தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி விரைகிறது அந்த ரயில்.

ஒருபெண்மணி,தன் மகளுடன் பிரயாணம் செய்கிறார்.

அவர் கையில் இண்டெர்னெட் மூலம் பதிவு செய்த ’இ டிக்கட்’ வைத்திருக்கிறார்.

பரிசோதகர் வருகிறார்.

பெண்மணி டிக்கெட்டையும்,தன் ஓட்டுனர் உரிமத்தையும்(அடையாளச் சான்று) எடுத்து
நீட்டுகிறார்.

பரிசோதகர் வாங்கிப் பார்க்கிறார்.

அந்தப் பெண்மணியின் துரதிர்ஷ்டம்—அது உரிமத்தின் வண்ண நகல்,அசல் அல்ல என்பது தெரிகிறது!

பரிசோதகர்,1600 ரூபாய் அபராதம் என்று கூறி ,மீதிப் பரிசோதனை முடித்த பின் வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறிச் செல்கிறார்!

என்ன செய்வார் இவர்?

கைப்பையில் இருக்கும் வங்கிப் பாஸ் புத்தகம் நினைவுக்கு வருகிறது!
எடுக்கிறார்!

ஆனால் அதில் புகைப்படம் இல்லை!

பையைத்துழாவுகிறார்!

புகைப்படம் ஒன்று கிடைக்கிறது!பரிசோதகர் வரும் முன் இதைப் பாஸ் புத்தகத்தில் ஒட்ட வேண்டுமே!

தான் உண்பதற்காகக்கொண்டு வந்த இட்லிப் பொட்டலத்தைப் பிரிக்கிறார்;ஒரு விள்ளல் எடுக்கிறார்.புகைப்படத்தில் தடவுகிறார்.புத்தகத்தில் ஒட்டுகிறார் ”இறைவா,நன்றாக ஒட்ட வேண்டுமே “ என்று வேண்டிக் கொண்டே!

அடையாளச் சான்று தயார்!

பரிசோதகர் வருகிறார்!பார்க்கிறார்! எமாற்றத்துடன் அகல்கிறார்.

சாதாரண இட்லி 1600 ரூபாயைக் காப்பாற்றி விட்டது!

நீதி:-ரயில் பயணத்தின் போது அவசியம் இட்லி எடுத்துச் செல்ல வேண்டும்!

(இந்தியாவின் நேரங்களில்(28-03-2011) வெளி வந்த செய்தி!)

திங்கள், மார்ச் 28, 2011

உலகம் அழியப்போகிறது!

உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதாவது இருக்கின்றதா?

இதை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அது முடியாமற் போனவை ஏதாவது உண்டா?

முக்கியமான சில செயல்களைச் செய்யாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறீர்களா?

வாழ்க்கையில் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் எதுவும் செய்யாமல் இருக்கிறீர்களா?

எல்லாவற்றையும் உடனே செய்து முடித்து விடுங்கள்!இனிக் கால தாமதம் வேண்டாம்! ஏனெனில் உங்கள் வசம் இருக்கும் காலம் மிகக் குறைவு!

ஆம்! இந்த உலகம் அழியப்போகிறது!

வரும் மே மாதம்,21ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு உலகம் அழியப் போகிறது!

உலகில் உள்ளவர்களில் 2 விழுக்காடு மக்கள்,அந்த நேரத்தில் சொர்க்கம் சென்றடைவர்!மற்றவர்,மறு உலகம் சேர்வர்!

இது நான் சொல்லவில்லை;ஓக்லேண்ட்,கலிஃபோர்னியாவில் இருக்கும்,89 வயதான ஹரால்ட் கேம்பிங்க் என்ற மதபோதகர் கூறுகிறார்.

ஒரு பொறியாளராக இருந்து,போதகராக மாறிய இவர்,இவரைத்தொடர்பவர்களின் நன்கொடையினால் தொடங்கிய 66 வானொலி நிலையங்கள் மூலமாகப் பிரசாரம் செய்து வருகிறார்.அந்தப் பிரசாரத்தில் அவர் கூறியதே இது!யு.எஸ்.ஸில் 2000 விளம்பர அட்டைகள் மூலமும் இது விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது!

சிலஆறுதல்கள்—

உலககோப்பை கிரிக்கெட் முடிந்து விடும்!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவு தெரிந்து புதிய ஆட்சி மலர்ந்து விடும்!

இப்போதைக்கு இவைதானே நம் முக்கிய கவலைகள்!

வெள்ளி, மார்ச் 25, 2011

தமிழுக்கும் அமுதென்று பேர்!

கவிதையில் ஒலி நயம் இருத்தல் அவசியம்

ஒரு கவிதையைப் படிக்கும்போதே அந்தப்பாடல் வெளிப்படுத்தும் உணர்வை,அந்தக்கவிதையின் ஒலி வெளிப்படுத்தவேண்டும்.

இங்கு நான் ஒலி என்று சொல்வது கவிதையில் பயன்படுத்தப் பட்டிருக்கும் எழுத்துக்களின் ஒலி!

இக்கலையில் கம்பன் ஒரு சக்கரவர்த்திதான்.

இராமனின் அழகில் மயங்கிய சூர்ப்பனகை,தனது சுய உருவை மாற்றி ஒரு அழகிய இள மங்கையாக வருகிறாள்.

அதைக் கம்பன் சொல்கிறான் பாருங்கள்

”பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்சையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”

அவள் நளினமாக,ஒரு மயில் வருவது போல்,அடியெடுத்து அலுங்காமல் வருகிறாள்.இதன் பொருளே நமக்குத்தேவையில்லை .படிக்கும்போதே அந்த உணர்வு ஏற்பட்டு விடுகிறது.மென்மையான ஒரு பெண் ,மெல்ல அடியெடுத்து ஒரு மயில் போல் வருவது நம் கண்ணுக்குத் தெரிகிறது.காரணம் பாடலின் ஒலி.

பஞ்சி,விஞ்சு,செஞ்செ,அஞ்சொல்,வஞ்சி , நஞ்சு,வஞ்ச என்று எல்லாமே மெல்லினம்.

ஆனாலும் கடைசியில் வைக்கிறான் குட்டு!

இவ்வளவும் இருந்தாலும் அவள் ஒரு ‘வஞ்ச மகள்’

திரும்பத் திரும்பப் படித்துப் பாருங்கள்,அந்த சுவை புரியும்.

மாறாக,குகப்படலத்தில் வரும் பாடல்கள்.

பரதன் படையுடன் வருவதைக் கண்ட குகன் கடுங்கோபமடைகிறான்.

அப்போது வரும் வார்த்தைகளை,அவற்றைச் சுமந்து வரும் பாடலின் ஒலி நயத்தைப் பாருங்கள்!

”ஆடு கொடிப்படை சாடி அறத்தவ ரேஆள
வேடு கொடுத்தது பார்எனும் இப்புகழ் மேவீரோ
நாடு கொடுத்தஎன் நாயக னுக்கிவர் நாம்ஆளும்
காடு கொடுக்கில ராகி எடுத்தது காணீரோ”

ஆடு ,வேடு ,சாடி என்று வல்லினப் பிரயோகம்!படிக்கும் போதே கோபமான குகனின் உருவம் கண் முன் வரவில்லையா.!

இதே குகன் பரதன் அருகில் வந்ததும் சொல்கிறான்-

”நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை; திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?' என்றான்.”

ஒலி மாறி விட்டது.நம்பி,தம்பி,துன்பம்,என மெல்லினம் வந்து விட்டது!குகனின் மனம் கனிந்து நிற்பது புரிகிறது!

கவியரசர் கண்ணதாசன் மிகச் சிறந்த கவிஞர்தான்.தமிழ்த்திரையுலகுகுக் மறக்க முடியாத பாடல்களைத் தந்தவர்.நானும் அவரது ரசிகன்தான்!

ஆயினும் அவரது ஒரு பாடலில் ஒரு பெண் வர்ணிக்கப் படுவதைக் கம்பனோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்ல!

’கட்டித்தங்கம் வெட்டியெடுத்துக்
காதலென்னும் சாறு பிழிந்து
தட்டித் தட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா’

இந்த வல்லினஉபயோகத்தில், பெண்ணின் நளினம்,இல்லாமல் போய் விட்டது!

ஒருவேளை இப்பாடலின் நாயகர்,காதல் காட்சிகளில் கொஞ்சம் முரட்டுத்தனமாகக்
காதலிப்பார் என்பதாலோ!

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

வியாழன், மார்ச் 24, 2011

முக்கிய செய்தி!-மயிலையில் ஆன்மீக வேட்பாளர்!

காஞ்சி சங்கராசாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் ” தமிழ்நாடு தேசிய ஆன்மீக மக்கள் கட்சி” என்றொரு புதிய கட்சியைத்துவக்கியிருப்பது அனைவரும் அறிந்ததே.அது பற்றிய பத்திரிகைச் செய்தியை நான் இங்கே வெட்டி ஒட்டப் போவதில்லை!

ஆனால் நான் சொல்லப் போவது அதற்கு சம்பந்தமுடைய ஒரு முக்கிய செய்தி.!

புதிய கட்சி தொடங்கப் பட்டதைப் பற்றி ஆன்மீகச் செல்வரான சென்னை பித்தனின் கருத்தை அறிய ‘டுபாகூர் டைம்ஸ்’ நிருபரான ஹசாரி அவரைக் காணச் சென்றார்.

இது குறித்து சென்னை பித்தன் கொடுத்த பேட்டியிலிருந்து--------

“இன்று நாடு இருக்கும் நிலையில் ஆன்மீகத்துக்கு என்று ஒரு தனி அமைப்பு அவசியம்தான்.எனவே இதை நான் வரவேற்கிறேன்.உண்மையான ஆன்மீகச் சேவையாற்றும் ஒரு அமைப்பாக இது விளங்க வேண்டும்.நாட்டில் போலி ஆன்மீகவாதிகள் மிகுந்த விட்ட நிலையில்,உண்மையான ஆன்மீகவாதிகள் யாரென்று பார்த்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.நீங்கள் கேட்டீர்கள்,ஆன்மீகவாதி தேர்தலில் போட்டியிடலாமா என்று.நிச்சயமாகச் செய்ய வேண்டும் என்று நான் சொல்வேன். ”

”’இந்த நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவில் வருகிறது.
அப்போது நான் மதுரையில் பணியாற்றி வந்தேன்.தேர்தல் சமயம்.சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளரும் சிலகாலம் என்னுடன் தனிப் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றியவருமான புலவர் அவர்களும் சில நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னார்”ஆன்மீகத்துக்காக ஒரு தொகுதி ஒதுக்கித்தர வேண்டும் என்று முதல்வரைக் கேட்கலாம்” என்று.அனைவரும் ஆமோதித்தோம்.”

”இப்போது,தேர்தல் நேரத்தில்,புதிய கட்சி தொடங்கப் பட்டிருப்பது ஒரு நல்ல வாய்ப்பே!இரண்டு கூட்டணித்தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஆன்மீகத்துக்காக ஒரு சீட் கேட்கலாம்.”

”கற்பகாம்பாளும்,கபாலீச்வரரும் அருள் புரியும் ,ஆன்மீக மணம் கமழும் மயிலைத்தொகுதியை ஆன்மீகத்துக்கு ஒதுக்கச் சொல்லிக் கேட்கலாம்.அங்கு போட்டியிட நான் தயார்”

“வளர்க ஆன்மீகம்”

இதையடுத்து உடனடிப் பேச்சு வார்த்தை நடந்திருப்பதாகவும்,சென்னைப் பித்தன் மயிலை சட்டமன்றத் தொகுதியில் கட்சி சார்பின்றி, ஆன்மீகத்தின் சார்பில் போட்டியிடுவாரென்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன!


(அவருடைய நீ--ண்ட பெயருடைய கட்சி கலைக்கப் பட்டு விட்டதா என்பது தெரியவில்ல!)

புதன், மார்ச் 23, 2011

சொல்லின் செல்வர்!

ஒரு புலவர் தன் நண்பரான மற்றொரு புலவரைக் காண அவர் வீட்டுக்குச் சென்றார்.அப்புலவர் வீட்டில் அடுப்பின் முன் அமர்ந்து சட்டியில் மாவு வறுத்துக் கொண்டிருந்தார்.

முதல் புலவர் கேட்டார்”என்ன நண்பரே,மாவு வறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று.

இரண்டாமவர் பதில் சொன்னார்—

“சங்கரன் பிள்ளை சட்டியில் மாவறுத்தல் நடப்பதுதானே” சங்கரன் பிள்ளை என்ற பெயருடைய அவர் சட்டியில் மாவு வறுப்பது எப்போதும் நடப்பதுதானே என்பது வெளிப்படையான பொருள்.

ஆனால் அவர் வேறொன்றையும் சொல்லியிருக்கிறார்!

“சங்கரனின் பிள்ளையாகிய முருகன்,சஷ்டியன்று மாமரமாக நின்ற சூரபத்மனை அறுப்பது,நடப்பதுதானே!”

என்ன சொல் நயம்!

இது இன்னொரு புலவரைப் பற்றியது.அவர் ஒரு ஜமீந்தாரைக் காணச்சென்றார். அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது ஜமீந்தாரின் மனைவி அங்கு வந்தாள்.அவள் மிக நல்லவள்.அவளைப் புலவர் தன் சகோதரியாகவே நினைத்தார்.

எனவே கேட்டார்”தங்கச்சி வந்தியா?”

கேட்டவுடன் தன் தவறை உணர்ந்தார். இது ஜமீந்தாருக்குப் பிடிக்கவில்லை என்பதை முகக்குறிப்பால் உணர்ந்த அவர் சொன்னார்—

“அம்மா தலையில் மஞ்சள் மலர் சூடியிருக்கிறார்கள் .அது தங்கச் சிவந்திப்பூவா-
தங்கச் சிவந்தியா என்று கேட்டேன்”தன் சொல் நயத்தால் நிலைமையைச் சரியாக்கி விட்டார்!


இது நம் காலத்து நிகழ்வு.
திரு.கி.வா.ஜ.அவர்கள் ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தார்.பேச்சாளர் யாரையோ கடுமையாகத் தூற்ற ஆரம்பிக்கவே அவரும் அவர் நண்பரும் வெளியே செல்ல விழைந்தனர்.வாசலில் வந்து பார்த்தால் மழைத்தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது.

கி.வா.ஜ.சொன்னார்-”உள்ளேயும் தூற்றல்,வெளியிலும் தூற்றலா!”

எப்படி!

சில நாட்களுக்கு முன் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன்.
ஒரு தட்டில் வெற்றிலை,தூள் பாக்குடன் ஒரு பக்கமாகக் கொஞ்சம் பன்னீர்ப் புகையிலையும் வைத்திருந்தனர்.மண்டபத்தில் புகை வெளியேற வழிஇன்றி சூழ்ந்திருந்தது.
ஒருவர் பாக்கு என்று நினைத்துப் புகையிலையை வாயில் போட்டுக் கொண்டு அவதிப் படுவதைப் பார்த்த ஒரு நபர் கேட்டார்—

“புகையில தெரியலியா?”

புகையில்,புகையிலை என்பது தெரியவில்லையா என்பதை நயம்படக் கேட்டார்!

சிறிது நேரத்துக்குப் பின் யாரோ அவரிடம் அடையாறுக்கு வழிகேட்க அவர் முதலில் வலது புறமும் பின் இடது புறமும் கை காட்டிச் சொன்னார்—

“இப்படிப் போனால்,அடையார்;அப்படிப் போனால் அடையார்!”

வழி கேட்டவர் ’ஙே’ என்று விழிக்க,இவர் சொன்னார்--

-”முதலில் சொன்னது அடையார் என்ற இடத்தை,பின்னர் சொன்னது எதிரே போனால் அடையாரை அடைய மாட்டார் என்ற பொருளில்”

ஆஹா!யார் கொல் இச்சொல்லின் செல்வர்!


டிஸ்கி 1.-கடைசியாகச் சொன்ன சொல்லின் செல்வர்--பேர் சொல்ல அடக்கம் தடுக்கிறதே!

டிஸ்கி 2.நிறையப் பேர் சொல்லின் செல்வர்கள்தான்!---அவர்கள் சொல்லின் மற்றவர்கள் விரைந்து செல்வர்!

டிஸ்கி 3. இந்த ‘டிஸ்கி’ என்றால் என்ன!எல்லோரும் போடுகிறார்களே என்று நானும்போட்டு விட்டேன்!disclaimer என்பதுதான் பொருளா?

செவ்வாய், மார்ச் 22, 2011

கூட்டு இல்லை!அம்மா அறிவிப்பு!!தலைவர் வருத்தம்!!

கூட்டு இல்லை என்று அம்மா கூறியதால் அ. இ.அ.பெ.கா.ரா.நெ. ஆ. தி.மு. மு.ம.ம.க. தலைவரும்,கட்சியின் ஒரே வேட்பாளருமான சென்னை பித்தன் வருத்தத்தில் இருப்பதாகச் செய்தி கசிந்ததை அடுத்து,’டுபாகூர் டைம்ஸ்’ தனது சிறப்பு நிருபராக சிறந்த அரசியல் விமர்சகரும்,அரசியல் செய்திகளைச் சுடசுடத் தருபவருமான கரீம் ஹசாரியைச் சென்னைப் பித்தனைப் பேட்டி காண அனுப்பியது!

சென்ன பித்தன் தன் வீட்டு ஹாலில் சோகமாக அமர்ந்திருந்தார்.

ஹசாரியைப் பார்த்ததும் ”வாருங்கள் ஹசாரி ”என்று அன்புடன் அழைத்து இருக்கையில் அமரச்செய்தார்.

ஹசாரி ஆரம்பித்தார்”அம்மா…....”

”பொறுங்கள்.வெயிலில் வந்திருக்கிறீர்கள்.முதலில் குளிர்ந்த நீர் அருந்துங்கள்”(’நீர்’தான்!) என்று, தானே ஃப்ரிஜ்ஜிலிருந்து நீர் எடுத்துக் குடிக்கக் கொடுத்தார்.

தண்ணீர் குடித்ததும் ஹசாரி தொடங்கினார்”கால தாமதமானதால் கூட்டு….”

சென்னை பித்தன் அவரை இடை மறித்தார்”சொல்கிறேன்,சொல்கிறேன்”

பின் கேட்டார்”சாப்பிட்டு விட்டீர்களா?சைவமா,அசைவமா?”

”இன்று சைவம்தான்.மெஸ்ஸில் சாப்பிட்டேன்”-ஹசாரி

”நிறைய காய் கறியோடு சாப்பிட்டீர்களா?” செ.பி. கேட்டார்

இதெல்லாம் ஏன் கேட்கிறார் என்று புரியாத ஹசாரி தலையசைத்தார்.பின் சொன்னார்”நான் வந்த விஷயம் ..”என இழுத்தார்.

”இதோ சொல்கிறேன்.இன்று கட்சிப்பணி அதிகமாக இருந்ததால்(!) மதிய உணவுக்கு வீட்டுக்கு வருவதற்கு நேரமாகி விட்டது.வந்து சாப்பிட அமர்ந்தேன்.அம்மா சாப்பாடு எடுத்து வைத்தார்கள்.சோறு குழம்புடன் இரண்டு அப்பளமும் வைத்தார்கள்.’என்னம்மா காய் ஏதும் இல்லையா’ எனக் கேட்டேன் ’நேரமாகி விட்டதால் முன்பே சாப்பிட்டவர்கள் கூட்டு நன்றாக இருந்தது என்று எல்லாக் கூட்டையும் சாப்பிட்டு விட்டார்கள்.’என்று சொன்னார்கள்.நான் நேரம் கழித்து வந்ததனால் கூட்டு இல்லை.நான் கூட்டு இல்லாமல் இன்று வரை சாப்பிட்டதே இல்லை” என்று சொல்லி முடித்தார் சென்னை பித்தன்!

ஹசாரி மயங்கி விழுந்தார்!

திங்கள், மார்ச் 21, 2011

தினம் ஒரு புதுப் பிறவி!

சென்ற பதிவில்-”நான் என்னும் அகந்தை”-ஸ்வாமி பித்தானந்தாவின் வெளிவராத அருளுரையை வெளியிட்டிருந்தேன்.அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததைப் பார்த்து மீண்டும் ஸ்வாமி அவர்களின் வெளிவராத ஓரருளுரையை வெளியிட முடிவு செய்தேன்.இதோ அந்த உரை!
---------------------------------------

ஒரு கிராமவாசி இருந்தான்.ஒரு முறை வெளியூருக்கு ரயிலில் போக எண்ணினான். அதுவே அவனுக்கு ரயிலில் முதல் முறை.பயணச்சீட்டு வாங்கும்போது அவனிடம் சொன்னார்கள் ’20 கிலோ எடையுள்ள பொருள்தான் எடுத்துச் செல்லலாம்’ என்று! அவனிடம் இரண்டு பொருள்கள் இருந்தன.ஒன்று பத்து கிலோ எடை;மற்றது 20 கிலோ எடை!

அவன் ரயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்தான்.20 கிலோ எடையுள்ள பெட்டியைக் கீழே வைத்தான்.அதிக பட்சம் 20 கிலோ எடையைத்தான் ரயிலில் கொண்டு செல்லலாம் என்று சொல்லப்பட்டதால்,10 கிலோ எடையுள்ள பையைத் தன் தலை மீது வைத்துக் கொண்டான்.

டிக்கட் பரிசோதகர் வந்தார்,தலையில் பையுடன் அமர்ந்திருக்கும் மனிதனை பார்த்துத் திகைத்தார்.கேட்டார்”ஏன் இப்படிப் பையைத்தலையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறீர்கள்”

அவன் சொன்னான்”ஐயா! 20 கிலோ எடைதான் எடுத்துச் செல்லலாம் என்று சொன்னார்கள்.பெட்டி மட்டுமே 20 கிலோ.எனவே அதை ரயிலில் வைத்துவிட்டு இந்தப் பையைத் தலையில் சுமக்கிறேன்!”

அவருக்குச் சிரிப்பு வந்தது!அவன் தலையில் இருக்கும் எடையையும் ரயில்தானே சுமக்கிறது என்று உணராத அவன் அறியாமையை எண்ணி ,’இப்படியும் ஒரு மனிதனா’ என வியந்தார்!

நம்மில் பலரும் அந்த மனிதன் போலத்தான் இருக்கிறோம்!வேண்டாத கவலைகளை, எண்ணங்களைச் சுமந்து கொண்டு நம்மை நாமே வருத்திக் கொள்கிறோம்!நமது கவலைகளச் சுமப்பதற்கு அவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து,நாம் சுமந்தாலும் அவனும் அவற்றைச் சுமக்கிறான் என்பதை உணராது காலம் தள்ளுகிறோம்.

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே,என்னிடத்தில் வாருங்கள்;நான் இளைப்பாறுதல் தருவேன்”—ஏசு பிரான் கூற்று.

”எல்லாவற்றையும் என்னில் அர்ப்பணித்து என்னையே சரணடைபவர்களை அவர்கள் தளைகளிலிருந்து விலக்கி அமைதி தருகிறேன் “என்கிறார் கிருஷ்ண பரமாத்மா!

வள்ளுவர் அழகாகச் சொல்கிறார்--

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”

வாருங்கள்.நம் வருத்தங்களைக்,கவலைகளை,மனச்சுமைகளை அவன் காலடியில் போட்டு விட்டு நாம் சுமையின்றி இளைப்பாறுவோம்!


’நான் கடவுளை நம்பவில்லை’ என்று சொல்பவர்களாக இருப்பினும் கவலையில்லை!

நார்மன் வின்சன்ட் பீல் சொல்கிறார்”ஒவ்வொரு நாளும் படுக்கப் போகுமுன் உங்கள் கவலைகளை, வருத்தங்களை, ஒரு கற்பனையான கைக்குட்டையில் கட்டி அவற்றை வெளியே தூக்கி எறிந்து விடுங்கள். மனம் இலேசாகும்.மறு நாளைப் புதிதாகத் துவக்குங்கள்.”



வாருங்கள்!தினம் தினம் புதியவர்களாகப் பிறப்போம்!

சனி, மார்ச் 19, 2011

நீ இல்லாத வீதி!

நீ இல்லாத வீதி

வெறிச்சோடிக் கிடக்கிறது!

நேற்றிருந்த நிலைமையே வேறு;

நீ கருப்புத்தான்!

ஆனால் அதுவும் ஒரு அழகுதான்.

உரத்த குரல்தான் உனக்கு

ஆனால் அதுவும் ஒரு இனிமைதான்!

பயம்தான் பலருக்கு உன்னிடம்!

ஆனாலும் என்னிடம் உனக்கு

அன்பு அதிகம்தான்!

சிறுவர்கள் சீண்டினால் சீறுவாய்

பைக் இளைஞர்களை நீ சாடுவாய்!

கலகலப்பாய் இருந்த வீதி

இன்று களையிழந்து நிற்கிறது!

நீ இல்லாத வீதி வெறிச்சோடிக் கிடக்கிறது!

கார்ப்பரேஷன் நாய் வண்டி
நேற்றுன்னைப் பிடித்ததால்!

வெள்ளி, மார்ச் 18, 2011

நான் என்னும் அகந்தை!

நான் என்னும் அகந்தை மனிதனின் எதிரி.

தன்னம்பிக்கை என்பது வேறு;அகம்பாவம் என்பது வேறு.
என்னால்தான் எல்லாமே முடியும்,நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு,இறுதியில் தோல்வியையே தரும்.

எந்த மனதில் அகந்தை இருக்கிறதோ அங்கு குழப்பமும் இருக்கும்.

கி.வா.ஜ. அவர்கள் சொல்வார்கள்’குழம்பு குழம்பியிருக்கிறது,ரசம் தெளிவாக இருக்கிறது.காரணம் குழம்பில் ’தான்’ இருக்கிறது;ரசத்தில் அதுஇல்லை என்று.(பிராமணர்கள்,குழம்பில் போடும் காயைத் ’தான்’ என்று சொல்வார்கள்)

அகந்தையின் விளைவு குழப்பம்;அதன் விளவு அவசரம்;செயல்திறன்
குறைபாடு;தோல்வி!

பார்த்தனுக்குப் போருக்கு முன் அகந்தை ஏற்பட்டது!
போர் தொடங்கு முன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொல்கிறான் ----

”ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத!

படைகளப் பார்க்க விரும்பும் பார்த்தன் சொல்கிறான்”என்னுடைய ரதத்தை இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்து”.

நாம் நமது மகிழ்வுந்து ஓட்டியைப் பார்த்து’வண்டியை எடு’ என்றுதான் சொல்வோம்.’என் வண்டியை எடு’என்று சொல்வதில்லை

ஆனால் அர்ஜுனன் சொல்கிறான்,தேரோட்டியாக வீற்றிருக்கும் பகவானைப் பார்த்து.

இந்த அகம்பாவத்தின் விளைவு –குழப்பம்,பேடிமைத்தனம் எல்லாம்.
இதைத் தெளிய வைக்க மிகப் பெரிய அறிவுரையே தர வேண்டியதாகிறது பகவானுக்கு!

ஒருமன்னன் இருந்தான்.ஒரு நாள் அவன் ஒரு ஞானியைப் பார்த்து ஆசி பெற நினைத்துச் சென்றான்.

அவன் வருவதைப் பார்த்த ஞானி தன் குடிலுக்குள் சென்று விட்டார்.
மன்னன் திகைத்தான்.

”ஞானியே, நான் வந்திருக்கிறேன்,வெளியே வந்து அருள் தாருங்கள்”
அவர் வரவில்லை.

”நான் சிம்மவர்மன் வந்திருக்கிறேன் ,வெளியே வாருங்கள்”
அவர் வரவில்லை.மன்னன் பொறுமை இழந்தான்.

“நான் இந்த நாட்டு மன்னன் வந்திருக்கிறேன்,உங்கள் அருளுக்காக”

உள்ளிருந்தே ஞானி சொன்னார்”நான் செத்த பின் வா!”

மன்னன் குழம்பினான் .அமைச்சரைக் கேள்விக்குறியுடன் பார்த்தான்.

அந்தக் காலத்தில் அமைச்சர்கள் எல்லாம் அறிவாளிகளாக இருந்தனர்!

அவர் சொன்னார்” அவர் சொல்வது உங்களுக்குள் இருக்கும் நான் என்ற ஆணவத்தை;அதை துறந்து வரச்சொல்கிறார் ”என்று .

நாடாண்டவர்களுக்கு மட்டுமல்ல நாடாளத்துடிப்பவர்களுக்கும் இது தேவையான அறிவுரை!

அகங்காரம்,மமகாரத்தைத்-நான் எனது என்பதை- துறந்தால் நன்மையே நடக்கும்.

அரங்கன் அருள் புரியட்டும்!

(ஸ்வாமி பித்தானந்த சரஸ்வதியின் வெளி வராத அருளுரைகள்!)

செவ்வாய், மார்ச் 15, 2011

தொப்பி பற்றிய ஒரு புதுக்கதை!

தொப்பி பற்றிய ஒரு புதிய கதை இது!
நண்பர் கவிதை வீதி சௌந்தர் அவர்கள் தொப்பி பற்றிப் பல செய்திகளை வெளியிட்டிருந்தார்!
அதைப் படித்ததின் பாதிப்பே இக்கதை.
உங்களுக்கு முன்பே தெரிந்த கதையில் முடிவில் ஒரு சிறு மாற்றம்!
படியுங்கள்!
-----------
ஒரு தொப்பி வியாபாரி இருந்தான்.
அவன் ஒரு கூடை நிறையத்தொப்பிகளை எடுத்துக் கொண்டு வியாபாரத்துக்குப் புறப்பட்டான்!

வழியில் மிகவும் களைப்பாக இருந்ததனால்,கூடையைத்தலையினின்று இறக்கிக் கீழே வைத்துவிட்டு ஒரு மரத்தடியில் படுத்துக் கண்ணயர்ந்தான்.
கண்விழித்துப் பார்க்கும்போது கூடை காலியாக இருந்தது!

யாரோ திருடிக் கொண்டு போய் விட்டார்களோ என்று நினைத்த வியாபாரி சுற்றும் முற்றும் பார்த்தான்.

மரத்தில் அமர்ந்திருந்த குரங்குகள் அவனது தொப்பிகளை அணிந்திருக்கக் கண்டான்.

ஒரு கல்லை எடுத்து வீசினான்.குரங்குகளும் கையில் அகப்பட்ட காய்களை வீசின.
தலையச் சொறிந்தான்.குரங்குகளும் தலையைச் சொறிந்தன.

உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

தான் அணிந்திருந்த தொப்பியை எடுத்துக் கீழே எறிந்தான்;குரங்குகளும் தாங்கள் அணிந்திருந்த தொப்பிகளைக் கீழே எறிந்தன!

அவற்றை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு வியாபாரி புறப்பட்டான்!

ஆண்டுகள் உருண்டோடின!

அவன் பேரனும் அதே தொப்பி வியாபாரம் செய்யத்தொடங்கினான்.
தொப்பிக்கூடையுடன் செல்லும் போது ஒரு நாள் களைப்படைந்து அதே மரத்தடியில் படுத்தான்!

விழித்துப்பார்க்கும்போது தொப்பிகள் இல்லை!மரத்தைப் பார்த்தான்;குரங்குகள் தொப்பி அணிந்திருக்கக் கண்டான்.

அவன் தாத்தா சொன்னது நினைவுக்கு வந்தது.

தன் தொப்பியைக் கழற்றிக் கீழே எறிந்தான்.

மரத்திலிருந்து ஒரு குரங்கு கீழே இறங்கி வந்தது.

அவன் எறிந்த தொப்பியைக்கையில் எடுத்துக் கொண்டு அவனருகே வந்தது
அவன் கன்னத்தில் ஓங்கி ஓரறை விட்டது!

பின் சொல்லிற்று”உனக்கு மட்டும்தான் தாத்தா இருப்பாரா முட்டாளே!”

அவன் தொப்பியையும் எடுத்துக்கொண்டு மரம் ஏறிற்று!

திங்கள், மார்ச் 14, 2011

என் காதலியின் அரிய புகைப்படங்கள்!


mount road(anna salai-bata showroom corner)1890

Esplanade road(NSC Bose road) 1905

marina(kamarajar salai)1910

triplicane-pycroft's road(now bharathiyar salai)1890

kapaleeswarar temple,1906
(north mada street mylapore)

1st line beach(now rajaji salai)1915

(from the calendar of classic homes with thanks)

வெள்ளி, மார்ச் 11, 2011

கண்ணும்,கதையும்.

ஒன்பதாம் தேதியிட்ட ‘என் கண்ணே’ என்ற என் பதிவில் என் கண்ணில் ஏற்பட்ட பிரச்சினை பற்றி எழுதியிருந்தேன்.அதன் பின்னணியில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை இங்கே தொகுத்து வழங்குகிறேன்.

நான் ஊரிலிருந்து திரும்பி வந்த அன்று பக்கத்துக் குடியிருப்புக் காரர் என்னைக் காண வந்தார்.

”என்ன சார்,கண்ணெல்லாம் கலங்கியிருக்கு?” அவரது கேள்வி.
இருப்பது இரண்டு கண்கள்.அதில் ஒன்றில்தான் உறுத்தல்,கலக்கம் எல்லாம்.இவர் என்னடாவென்றால் நான் என்னவோ இந்திரன் போலக் ’கண்ணெல்லாம்’ என்கிறாரே!

’தெரியலை சார்;ஊருக்குப் போய் ரயிலிலிருந்து இறங்கும்போதே உறுத்தல் ஆரம்பமாகி விட்டது. கண்ணிலிருந்து நீர் வருது”

”அது ஒண்ணுமில்லை சார்! ரொம்ப நாள் கழிச்சு பிரயாணம் போனீங்க இல்லையா? சூடுதான்.எண்ணெய் தேய்த்துக் குளிங்க.சரியாப் போகும்”அவர் சொன்னார்.

நான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டு ரொம்ப நாளாகி விட்டது.இப்போது இவர் சொல்கிறாரென்று குளித்தால் நிச்சயம் காய்ச்சல் வரும்,இப்படித்தான் பல ஆண்டுகளுக்கு முன்,ஒருவர் சொன்னாரென்று ’த்ரிபளாதி தைலம்’(அப்படித்தான் ஞாபகம்) தேய்த்துக் குளித்து ஒரு வாரம் கடுங்காய்ச்சலில் அவதிப் பட்டேன்!

அவர் போன சில மணித்துளிகளில் தொலை பேசி அலறியது.

“ஓம் நமச்சிவாய”(நான் ஃபோனில் ஹலோ சொல்வதில்லை.)

’டேய்,ஊரிலிருந்து வந்தாச்சா” என் எம்.எஸ்சி வகுப்புத்தோழன்.

”காலைல அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்தாச்சு.போயிட்டு வந்ததில், இடது கண்ணில் உறுத்தல்;லேசாச் சிவந்திருக்கு.”நான்.

“ஒண்ணு சொல்றேன் செய்யிறியா?”

“சொல்லு”

“சாயந்திரம் என்னோடு க்ளப்புக்கு வந்து பனிக் குளிரா ஒரு கிங் ஃபிஷர் பீர் அடி. சூடெல்லாம் பறந்து போய்க் குளு குளுன்னு ஆயிடும்.ஆனால் நீகேட்க மாட்டியே!கூட வருவே;7அப் குடிப்பே;கல்தோசை சாப்பிடுவே;அவ்வளவுதானே”
நண்பன்.

”தெரியுதில்லை! வாயைத் தொறக்காம சும்மா இரு”

இவனும் இவன் யோசனையும்;பீரை’ அடி’க்கணுமாம்!

”கார்த்தாலே வந்தேளா!அக்கா எப்படியிருக்கா?” எதிர் ஃப்ளாட் பாட்டி.

”இதென்ன கண் சிவந்திருக்கே;இதுக்கு நல்ல மருந்து சொல்றேன். விளக்கெண்ணெயை அமிர்தப் பாலில் குழைச்சுக் கண்ணில் போடுங்கோ.சரியாயிடும்”

என்னடா இது சோதனை?அமிர்தப் பாலுக்கு எங்கே போக?(அமிர்தப்பால் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் யாரையாவது கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.)கையில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வீடு வீடாகப் போவதா?!இது சரியா வராது.

சோதிட நண்பர் ஒருவர் சொன்னார்”இடது கண்ணா?ஜாதகத்தில் 12 ஆவது வீடு,சந்திரன்,சுக்கிரன் எல்லாம் தசா புக்தியிலோ,கோசாரத்திலோ கெட்டுப் போயிருக்கான்னு பார்த்துப் பரிகாரம் பண்ணுங்கோ”

இதெல்லாம் செய்யிறதுக்குள்ள தானாவே சரியாகிவிடும்!-என் மனதில் நினைத்தது.

மருத்துவரிடம் சென்றேன்.

” என்ன,அழுதுகொண்டே வருகிறீர்கள்.ஃபீஸ் கொடுத்து விட்டுப் போகும் போதுதானே அழணும்.”

கண்ணைப் பார்க்கிறார்.”இன்ஃபெக்சன் ஒண்ணும் அதிகம் இல்லை.கண்ணை நல்ல நீரில் அடிக்கடி கழுவுங்கள்.கையை சோப் போட்டுக் கழுவாமல் கண்ணைத் தொடாதீர்கள். வெயிலில் எங்கும் போகாதீர்கள்.நாளையும் முன்னேற்றம் இல்லையென்றால் வாருங்கள். ஆயிண்ட்மெண்ட் தருகிறேன்.”

இரண்டு நாட்களில் சரியாகி விட்டது---எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல்,பீர் அடிக்காமல்,அமிர்தப் பால் போடாமல்,ஜாதகம் பார்க்காமல்!!

புதன், மார்ச் 09, 2011

என் கண்ணே!!

ஞாயிறன்று சென்னையிலிருந்து கரூர் சென்று இன்று காலைதான் திரும்பினேன்!உடல் நிலை சரியில்லாத என் மூத்த சகோதரியைப் பார்க்கச் சென்றிருந்தேன்.என் தாயார் என்னுடன்தான் இருப்பதால் என் இராமையில் அம்மாவைப் பார்த்துக் கொள்ள என் அண்ணாவும்,அண்ணியும் வந்து தங்கியிருக்கிறார்கள்.

கருரில் ரயிலினின்று இறங்கும்போதே இடது கண்ணில் ஒரு உறுத்தல்.அது நாள் முழுவதும் தொடர்ந்தது.யாருக்காகவும்,எதற்காகவும் அழாமலே கண்ணில் நீர் வடிய ஆரம்பித்தது! இன்று கொஞ்சம் முன்னேற்றம் இருந்தாலும் இன்னும் முழுவதும் சரியாகவில்லை.இன்று மாலை மருத்துவ ஆலோசனை வேண்டுமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.இந்நிலயில் பதிவு எழுதுவதோ(யாருங்க அங்கே,’அப்பா,நிம்மதியாப் போச்சு’ என்று சொல்வது!)நண்பர்களின் பதிவுக்குச் சென்று படித்துப்(!) பின்னூட்டம் இடுவதோ(இது எனக்கு ஒரு இழப்பே) சிறிது கடினம்தான் ! எனவே எனக்கு இரு தினங்கள் விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்!(கொல்கிறேன் அல்ல,அது பின்னால்,விடுப்பு முடிந்து வந்ததும்!)

சனி, மார்ச் 05, 2011

சிங்கத்திடமே திருடும் மனிதர்கள்!

ஆகா! என்ன துணிவு இவர்களுக்கு? சிங்கங்களிடமே திருடித்தின்னும் மனிதர்கள்!
பாருங்கள் காணொளி!

வெள்ளி, மார்ச் 04, 2011

ஒரு வரலாறு--6-விலைவாசி!

92 வயது நிறைந்த ஒரு பெண்மணியின் வரலாற்றில் ,அவர்களது நினைவுகள் பின்னோக்கிச் சஞ்சரிக்கும்போது, இந்றைய வாழ்க்கையின் பல அம்சங்களை
அந்தக் காலத்துடன் ஒப்பிடுவது என்பது தவிர்க்க முடியாதது ஆகி விடுகிறது
அதில் முக்கியமான ஒன்று விலைவாசி!

இன்று---

” வா,தங்கம்,வா,எப்போ வந்தேள் அமெரிக்காலேர்ந்து?’
அவர்கள் குடியிருப்பில் வசிக்கும் விஜயனும் அவர் மனைவி தங்கமும் யு.எஸ் ஸில் இருக்கும் பையனிடம் சென்று திரும்பியிருந்தனர்.ராஜியைப் பார்க்க வந்த தங்கத்திடம்தான் ராஜி கேட்டாள்.

”நேத்து ராத்திரிதான் வந்தோம் மாமி.காலையிலே ஓட்டலில் போய் டிஃபன் சாப்பிட்டு விட்டு வந்தோம்.என்ன மாமி,ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு தோசையும்,காஃபியும் சாப்பிட்டோம்; பில் 100 ரூபாய் ஆயிடுச்சு !”

ராஜி அதிர்ந்தாள்;ஆச்சரியப் பட்டாள்.அவள் மனம் பின்னோக்கிப் போயிற்று.

அன்று

அவளுக்குப் பத்து,பதினோரு வயதாக இருந்த கால கட்டம். அவள் அப்பா பள்ளித் தலைமை ஆசிரியராகஇருந்தார்.வீட்டில் காலையில் அவருக்கு மட்டும் இட்லி,தோசை இப்படி டிஃபன்.ராஜிக்குப் பழையதுதான்!மதியம் சூடான சாப்பாடு. அவள் அப்பாவுக்கு இரவும் சூடான சாப்பாடு வேண்டும்;எனவே தினமும் இரவு சூடான சாதத்துடன், துவையல், வத்தல்குழம்பு இப்படி ஏதாவது செய்வாள் அவள் அம்மா.இந்த நடைமுறை மாதம் ஒரு முறை மாறும். அந்த நாட்களில் ராஜி அவள் அப்பாவுடன் அருகில் இருந்த சுப்பையர் கிளப்பில் சாப்பிட்டு விடுவாள்.அவள் அம்மாவுக்குக் காலையில் இட்லி வாங்கப் போவாள்.ஓட்டலில் ஓர் அணாவுக்கு நான்கு இட்லிகள்.ஆனால் அவள் அம்மா அங்கு வாங்க வேண்டாம் என்று சொல்லி விடுவாள்.ஒரு பாட்டி காலையில் இட்லி விற்று வந்தாள்.அவளிடம் ஓரணாவுக்கு ஆறு இட்லிகள்(பதினாறு அணாக்கள் = ஒரு ரூபாய்;அதாவது ஒரு ரூபாய்க்கு 96 இட்லிகள்! )அவள்டம்தான் ராஜி காத்திருந்து இட்லி வாங்கி வருவாள்.

மறக்க முடியாத இன்னொரு உணவு சம்பந்தமான விஷயம்,--ராஜிக்கு எப்போதாவது காலணா கிடைத்ததென்றால், மசால் வடை வாங்கிச் சாப்பிட ஆசைப் படுவாள்; காலணாவுக்கு இரண்டு மசால் வடைகள்.ஆனால் அவள் அம்மா அதை மறுத்துக் காலணாவுக்குக் காராபூந்தி வாங்கிவா இரண்டு பேரும் சாப்பிடலாம்.’ என்று சொல்லி விடுவாள்.அதை மறுத்துச் சொல்லும் துணிச்சல் ராஜிக்குக் கிடையாது.எனவே மசால் வடையை நினைத்துக் கொண்டு காராபூந்தியைச் சாப்பிடுவாள்.

அந்தக் காலத்தில் நயம் நெல்லூர் அரிசி ரூபாய்க்கு நாலு படி.!

திருமணத்துக்குப் பின் கூட அவள் முதல் கர்ப்பத்தின் போது காலையில் குமட்டலாக இருக்கும்.சாப்பாடு பிடிக்காது.அப்போது அவள் மாமியார் அவளுக்கு மட்டும் ஓட்டலிலிருந்து இரண்டு இட்லி ஒரு தோசை வாங்கித் தருவாள்.இரண்டும் சேர்ந்து ஒன்றரை அணாதான்!ராஜி அடிக்கடி சொல்வாள் 1939 வரை,இரண்டாம் உலக யுத்தம் வரை விலை வாசி ஏறவில்லை என்று.

அவள் சாத்தூரில் இருந்தபோது பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக இருந்தவருக்குச் சம்பளம் மாதம் ரூபாய் 25 தான்.அவர் ,அவர் மனைவி,ஒரு பெண் அடங்கிய குடும்பம்.வீட்டு வாடகை ஐந்து ரூபாயும்(ஏஞ்சல்ஸ் விதியின் படி பத்து விழுக்காடுகள்தான் வாடகை தர வேண்டும் ;ஆனால் அது என்றுமே சாத்தியமில்லை)கொடுத்து அவர்கள் ஓரளவு வசதியாகவே வாழ்ந்ததாகவே ராஜி சொல்வாள்.

ஆனால் இன்றோ!

ராஜி பெருமூச்சு விட்டாள்!

(அடுத்த வாரம்---ராஜியைப் பெண் பார்க்கும் படலம்!)

வியாழன், மார்ச் 03, 2011

’கர’ ஆண்டுக்கு ஒரு கவிதை!

வருக,வருக,கர ஆண்டே;தருக நன்மைகள் பல

இதுவல்ல புத்தாண்டு இனிமேலென்றுரைத்தார்

கரும்பான தைப் பொங்கல் புதிய புத்தாண்டென்றார்

சிரித்தது ஏப்ரல் 14 எதிர்காலம் தெரியக் கண்டு

வருகின்ற கர ஆண்டு பிறப்பதற்கு முதல் நாளில்

மாற்றியவர் தலையெழுத்தே மாறலாம் என்பதனால்

அருமையான பெயர் ஆண்டுக்குக் ’கர’ என்று

அதனால்தான் இப்போது ’கரத்தால் ’பிரச்சினையோ?

எருமை வாகனமேறும் இவ்வாண்டு தேவதையால்

எவர்க்கெல்லாம் என்னென்ன பிரச்சனையோ யாரறிவார்?

இருக்கிறது எத்தனை எத்தனையோ மனக்கவலை

எனக்கேன் வேண்டாத அரசியல் விசாரமெல்லாம்?

செவ்வாய், மார்ச் 01, 2011

சூரியாஸ்தமனம்!(கவிதை)

”அடிவானத் தேயங்கு பரிதிக் கோளம்
…………..
………….
பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
என்னடீயிந்த வன்னத்தியல்புகள்!
எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
----------------------(பாஞ்சாலி சபதம்)

ஆம் அய்யா பாரதி அத்தனையும் சரி
மலை வாயில் சூரியன் விழும் நேரம் வந்தாச்சு!

மெல்ல மறைகின்றான் கதிரவன் அங்கே!!

படர் முகில் வடிவங்கள் என்ன என்ன அவற்றின்
சுடர் விடும் வண்ணங்கள் என்ன என்ன!
சிவந்த வானத்தில் கரு நிற முகில்கள்!

சிவப்பும் கருப்பும் என்னவொரு கலவை!

மஞ்சள் வண்ணத்தில் துண்டு துண்டாய்
பஞ்சுப் பொதி போன்ற மேகங்கள்

அதோ ஒரு மேகம்!மாம்பழம் போல் தோற்றம்!
சிறுத்தை பாய்வது போல் மற்றுமொரு மேகம்!

மறைகின்ற சூரியனை தடுக்கவா முடியும்
வெறும் கை கொண்டு நிலைமையை மாற்றவா முடியும்!

சுட்டெரிக்கும் சூரியன் மறைந்திடுவான்

கொட்டு முரசே! குளிர்ந்த நிலவொளியில்

பாலகர்கள் பம்பரம் விளையாட தீப்பந்த ஒளியினிலே

அம்மா பரிமாற

இரட்டை இலை போட்டு நிலாச் சோறு நடக்குதென்று!