தொடரும் தோழர்கள்

வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 24, 2017

மந்திர உபதேசம்



மந்திரம் உண்டொன்று சொல்வேன்

மறுமையை நீக்கி இம்மைக்குச் சுகம் தரும்

ஐந்தெழுத்தும் ஆறெழுத்தும் எட்டெழுத்தும்

இதற்குப் பின்தான்.

சொல்வதற்கு எளிய மந்திரம்

பிறந்த குழந்தையும் சொல்லும் மந்திரம்

மூன்றெழுத்து மந்திரம்

“அம்மா”.

அழையுங்கள் நாவினிக்கும்

அவளுக்கும் நெஞ்சினிக்கும்.

ஓரன்னையின் பயணம்

இளம் தாய்

குழந்தைகள் கைபிடித்து

வாழ்க்கையெனும் பாதையில்

சில இடங்களில் பாதை கரடு முரடு

சில இடங்களில் முட்கள் அடர்ந்து

எங்காயினும் கால் நோவாமல் அழைத்துச் செல்கிறாள்.

சிகரங்களைக் கண்டு மலைக்காமல்

ஏறி உச்சி காணச் செய்கிறாள்

புயலைக் கண்டு நடுங்காமல்

எதிர்கொள்ளச் செய்கிறாள்.

காலங்கடந்தால்

முதுமையால் தொய்ந்த உடல்           

முன்பு போல் வழி நடத்த இயலாமல்

இப்போது குழந்தைகள் இல்லை

பெரியவர்கள்

வலிமை மிக்கவர்கள்.

தாய்க்கு ஆதாரமாய் நிற்பவர்கள்

ஒரு நாள் அவள் மறைகிறாள்

ஆயினும்

அவள் மறையவில்ல!

நம்மைச் சுற்றியிருக்கும் ஓசைகளில்

நாம் முகர்கின்ற நறு மணங்களில்

நமது சிரிப்பில்

நமது கண்ணீரில்

வாழ்கிறாள்.

அவள் வெறும் நினைவல்ல.

நம்முடன் கலந்திருக்கும் உணர்வு!

(அவள் ஒரு வரம்.இருக்கும்போது அலட்சியம் செய்து இல்லாதபோது ஏங்குபவர்கள்  பலர்.காலம் இன்னும் இருக்கிறது.அவள் காலடி தொழுங்கள்;கர்மினையும்)






வெள்ளி, செப்டம்பர் 11, 2015

அந்த மானைப் பாருங்கள்!

1998;இதே நாளில் புனே,ராஸ்தாபேட்டை  தமிழ்ப் பள்ளியில் மகாகவி பற்றி உரையாற் றியது நினைவுக்கு வருகிறது.

காலனை உதைத்தவன் முக்கண்ணன்;

காலனைச் சிறு புல்லென மதித்து, காலருகே வா உன்னை மிதிக்கிறேன் என்று அழைத்தவன் பாரதி!


 காலனை வெல்ல முடியவில்லை;ஆனால் காலத்தை வென்ற மகாகவிக்கு என் அஞ்சலிகள்.

****************


ஓர் அடர்ந்த காடு.

ஒரு நதி ஆவேசமாக ஓடிக் கொண்டிருக்கிறது

காட்டில் ஒரு மான்.

கருவுற்றிருக்கும் மான்.

குட்டியை ஈன்றெடுக்கும் நேரம் நெருங்கி விட்டது.

அருகில் இருக்கும் ஒரு புல்வெளியை அடைந்து விட்டால் நல்லது என நினைக்கிறது மான்.

அப்போது மேகங்கள் திரள்கின்றன.

வானம் கருக்கின்றது.

பெரிய மின்னல் தாக்கிக் காட்டில் மரங்கள் பற்றி எரியத் தொடங்குகின்றன

மானுக்குப் பிரசவ வலி எடுத்து விட்டது.

இடது புறம் சிறிது தொலைவில்,ஒரு வேட்டைக்காரன் தன் துப்பாக்கியுடன் தயாராகிக் கொண்டிருப்பதைக் காண்கிறது.


வலது புறம் சற்றுத் தொலைவில் பதுங்கி வரும் புலியைப் பார்க்கிறது


என்ன ஆகும் அந்த மானுக்கு?

காட்டுத்தீயில் கருகிச் சாகுமா?

வேட்டைக்காரனின் குண்டுக்கு மடியுமா?

வேங்கையின் பசிக்கு உணவாகுமா?

என்ன நடக்கும்?

எதைப்பற்றியும் இப்போது கவலைப்பட முடியாது

அதன் முழு கவனமும் சில விநாடிகளில் வெளிவரப்போகும் தன் குட்டி மீதுதான்!

அப்போது…..

ஒரு மின்னல் வெட்டி,வேட்டைக்காரனின் பார்வையைப் பறிக்கிறது

அவன் குறி தவறிக் குண்டு மானைக் கடந்து பாய்ந்து வரும் புலி மேல் பாய்ந்து அதைக் கொல்கிறது.

மழை கொட்டத்தொடங்குகிறது

அப்பெருமழையில் காட்டுத்தீ அணைகிறதுது!

மான் குட்டியை ஈன்றெடுக்கிறது!

வாழ்க்கையில் இது போன்ற தருணங்கள் வருகின்றன.

முக்கியமான நேரத்தில் நாலாபக்கங்களிலிருந்தும் புதிய பிரச்சைனைகள் முளைக்கின்றன.

அப்போதைய நமது நோக்கம் எதுவோ அதன் மீது கவனம் சிதறாது இருத்தல் அவசிய மாகிறது.

சூழ்ந்து வரும் பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றால்,உடனடி நோக்கம் நிறைவேறாது போகலாம்.

பிரச்சினைகளும் தீராது.

அந்த மானைப் பாருங்கள்!


அதற்குத் தெரியும் தப்பி ஓட இயலாது என்று.

அச்சுறுத்தும் சூழ்நிலைகளை மாற்ற முடியாது என்று

ஏதாவது செய்யப்போய் விளவு நாசத்தில் முடியலாம்.


வாழ்க்கையின் சூறாவளிகளில் நமக்கு உதவ அவன் இருக்கிறான் என்ற  நம்பிக்கை நமக்கும் வேண்டும்.





வியாழன், ஜூலை 02, 2015

தேடல்



செல்வம் ஒன்றைத் தொலைத்து விட்டேன்

எல்லா மிடங்களிலும் தேடிக் களைத்தேன்

வீடு வீடாய்

தெருத் தெருவாய்

ஊர் ஊராய்

நாடு நாடாய்

கிடைக்கவேயில்லை!

ஏன்?

சென்றன பல ஆண்டுகள் 

கிடைத்தது எனக்கும் ஒரு போதி
புரிந்தது அந்நாள்

எல்லா இடங்களிலும் தேடியிருக்கிறேன்

தொலைத்த இடம் தவிர!



புதன், பிப்ரவரி 18, 2015

இதுதான் வாழ்க்கை!



ஆயிற்று.

இன்று 13 ஆம் நாள்,சுபஸ்வீகரணக் காரியங்கள் முடிந்து விட்டன.

நம்புவது இன்னும் கூடக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

4ஆம்தேதியன்று கூட என்னுடன் பேசியவர் 7ஆம் தேதி பிடி சாம்பலாகிக் கடலில் கரைக்கப்பட்டு விட, இன்றைய சடங்குகள் முடிவில் ஆன்மா எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று விட்டது.

அழுகைகள் குறைந்து விட்டன.

பேச்சுக்களில் சகஜ நிலை திரும்பி விட்டது.

இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பித்தானே ஆக வேண்டும்?!

இதுதான் வாழ்க்கை!

எந்தத் துயரத்திலும்,நடுவில் ஒரு மெல்லிய நகைச்சுவை தலைகாட்டத் தவறுவதில்லை.

என் அண்ணா இறந்த மறுநாள் ,அவர்கள் குடியிருப்பில் இருந்த ஒரு  வீட்டுவேலை செய்யும் பெண் ,என் அண்ணியிடம் வந்து”தை வெள்ளியன்னிக்கு,சுமங்கலியாப் போயிட்டாரு” என்றாளாம்.அதைக் கேட்ட என் அண்ணா பெண்ணுக்கு துக்கத்தையும் மீறிச்  சிரிப்பு வந்து விட்டதாம்!
அதை அன்று இரவு அவள் விவரிக்க எல்லோருக்கும் சிரிப்பு பீறிட்டு வந்து விட்டது.

இதுதான் வாழ்க்கை!

என் அண்ணா மருத்துவமனையில் இருக்கிறார் என அறிந்தவுடன் யு எஸ்ஸிலிருந்து புறப்பட்ட மற்றொரு மகளுக்கு நடு வழியில் வாட்ஸப் மூலம் செய்தி தெரிய வந்து அவள் உடைந்து அழ,உடன் இருந்தவர்கள்,ஓர் இலங்கைத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஆறுதல் சொன்னார்களாம்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன்,அவளுக்குப் பக்கத்து இருக்கையில் இருந்தவன்,அவளுடன் பேசிப் பேசி அவள் துயரைக் குறைக்க முயன்றானாம்.

அவனிடம் பேசும்போது அவளுக்குத் தெரிய வந்தது அக்குடும்பம் அந்த இளைஞனின் திருமணத் துக்காக  இந்தியா செல்கிறார்கள் என்று!

இதுதான் வாழ்க்கை!

இறுதியாக ......

"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங்காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில்மூழ்கி நினைப்பொழிந்தார்களே”--(திருமந்திரம்)

இதுதான் வாழ்க்கை!