தொடரும் தோழர்கள்

புதன், ஜூலை 08, 2015

தமிழ்மணமும்,எதிர்மறை வாக்கும்!



நாம் தமிழில் வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிறோம்.

சில நேரங்களில் நான் யோசித்துப் பார்க்கிறேன்,தமிழில்தான் எழுதுகிறோமா என்று.

தொடக்க காலத்தில் நான் இயன்ற அளவு வேற்று மொழிக் கலப்பின்றி எழுதி வந்தேன்.

தெரியாத சொற்கள் வரும்போது ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லைத் தேடிப் பயன் படுத்துவேன்.

ஆனால் காலப்போக்கில் அந்நிலை மாறி விட்டது.

மொழிக்கலப்பை ஏற்றுக் கொண்டு விட்டேன்

ஏன் எப்படி என்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.

இப்போதும் பலர் கப்பின்றி எழுதுகிறார்கள்.பாராட்டப்பட வேண்டியவர்கள்.

நான் சென்னையில் ஓர் அலுவலகத்தில் பணியாற்றியபோது நானும் உடன் பணி புரிந்த சிலரும் ஒரு முடிவு செய்தோம்.

அலுவலகப் பணி சார்ந்த செய்திகள் தவிர மற்றச் செய்திகளைத் தனித் தமிழில் பேசுவது என்று.யாராவது மொழிக்கப்பு செய்து விட்டால் 25 காசுகள் கொடுக்க வேண்டும்!
.
தொடக்கத்தில் அதிகக் காசுகள் சேர்ந்தன.காலம் செல்லச் செல்ல.தொகை குறைந்து கொண்டே வந்து ஒரு நிலையில் இல்லையென்று ஆனது.

இன்று இதை ஏன் நினைவு கூர்கிறேன் என்றால் வலைப்பூவில் எழுதும்போது மொழிக்கலப்பு செய்தால்  ஏதாவது தண்டனை கொடுக்கலாம் என்பதற்காகத்தான்.  இது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்காதுதான், அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது;முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு முடிவெடுப்பவர்கள் தங்கள்பதிவுகளில் பிறமொழிக்கலப்பு காணப்பட்டால் ,அன்பர்கள் தமிழ் மணத்தில் எதிர்மறை வாக்களிப்பதை ஏற்க  வேண்டும்!ஒரு எதிர்மறை வாக்களிக்கப்பட்ட பின் மற்றவர்கள்  மேலும் எதிர்மறை வாக்குகள் அளிக்க வேண்டிய தில்லை. அவ்வாறு எதிர்மறை வாக்களிப்பவர் பின்னூட்டத்தில் மொழிக்கலப்பைச் சுட்டிக்காட்டவும் வேண்டும்.

இதற்கு உடன்படுபவர்கள் தங்கள் வலைப்பூவின் பெயருக்குக் கீழ் ”தனித் தமிழ் வலைப்பூ”
என்று சேர்ப்பது ஒரு அடையாளமாக இருக்கும்.

இது ஓர் உரத்த சிந்தனைதான்.இதைச் செயல்படுத்த இயலுமா,அவ்வாறெனில் எவ்வாறு என்பதெல்லாம் உங்கள் யோசனைக்கு விடுகிறேன்.

இது ஒரு கருத்தார்ந்த யோசனையா அல்லது வெறும் நகைச்சுவையா எனச் சிலர் ஐயப்படக் கூடும்!

ஐயம் வேண்டாம்.

இது வினைமையுடைய சிந்தனைதான்!

காத்திருக்கிறேன் உங்கள் சிந்தனை முத்துக்களுக்காக!

34 கருத்துகள்:

  1. ம்.ம்.. எப்படியோ பிரச்சினையை கிளப்பிட்டீங்க..

    பார்ப்போம்.

    நல்ல நடைமுறைதான் என்றாலும் சிலரது எழுத்தோட்டத்தினை குறைத்துவிடும் என்பது எனது கருத்து. நமது அனுபவப் பகிர்வு இயல்பாய் இருத்தலில் ஒரு சுவையுண்டு.

    God Bless You

    பதிலளிநீக்கு
  2. இது உரத்த சிந்தனை மட்டுமல்ல சிறந்த சிந்தனையும் கூட. முதலில் பிறமொழிக் கலப்பு வேண்டாம் என்பதை அழுத்தி சொல்வோம். எதிர்மறை வாக்குகள் தருவதை சிறிது காலம் அவகாசம் கொடுத்து செயல்படுத்துவது நல்லது. ஏனெனில் திடீரென பிறமொழிக் கலப்பில்லாமல் எழுத பலருக்கு கடினமாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதே
      நன்றி ஐயா

      நீக்கு
  3. வணக்கம் அய்யா,
    தங்கள் சிந்தனை என் போன்றோர் அவசியம் ஏற்ககூடிய ஒன்று, என்னளவில் சரியே,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அய்யா நல்ல சிந்தனை தான் ... எல்லோரும் செவி சாய்ப்பார்களா என்பது சந்தேகம் தான் ... இருந்தும் முயற்சித்தால் இல்லாதது எதுவுமில்லை முயன்றவரை நான் கலப்பில்லாமல் எழுத இனி முற்படுகிறேன் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடக்கத்தொடங்கும் குழந்தை விழுவது இயல்பே! முயற்சி திருவினையாக்கும்
      நன்றி அரசன்(நலந்தானே)

      நீக்கு
  5. வரவேற்கிறேன்... நடக்குமா / அனைவரும் உடன்படுவார்களா என்று தெரியவில்லை...

    வரும் பதிவர் மாநாட்டில் பேசுவோமா ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாகப் பேசப்பட வேண்டிய ஒரு செயலாக்கம்தான்!
      நன்றி டிடி

      நீக்கு
  6. நல்லதொரு முயற்சி! செயல்படுத்தலாம்! அதே சமயம் சிறுகதைகள் போன்றவற்றில் உரையாடல் அமைக்கையில் இதை நடைமுறைப்படுத்துவது சிரமமாக இருக்கும். அனுபவங்கள், கவிதைகள், போன்ற பதிவுகள் எழுதும் போது இதை நடைமுறைக்கு கொண்டுவரலாம். நன்றி ஐயா. வலைச்சரத்தில் எழுதுவதாலும் சொந்த பதிவும் எழுத வேண்டி இருப்பதாலும் பதிவுகளுக்கு உடனடியாக வரமுடியவில்லை! வருந்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  7. நல்ல சிந்தனை. எனக்கு ஒத்துவரும் என்று தோன்றவில்லை!

    பதிலளிநீக்கு
  8. இதை யாரும் பெருமளவில் கடைப் பிடிக்கமையால் நானும் கண்டு கொள்ளவில்லை. இனிமேல் தங்கள் இஷ்டப் படியே தனித்தமிழில் மட்டுமே எழுத முயற்சிக்கிறேன்.நல்ல யோசனை இதை வலியுறுத்தினாலே போதும் அனைவரும் முயற்சி செய்வர். என்று நம்புகின்றேன். நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  9. இதைப் பற்றி 9 ஆண்டுகளுக்கு முன் எழுதிய என் பதிவு: http://chennaipithan.blogspot.com/2015/07/blog-post_8.html

    இதில் உள்ள பின்னூட்டங்களிலும் நிறைய கருத்து மழை இருந்தது. முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  10. ந்ல்ல சிந்தனை ஐயா
    சிறிய அளிவிலாவது இதனைச் செயற்படுத்திட முயற்சி மேற்கொள்வது நல்லது என்றே எண்ணுகின்றேன் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  11. மிகச் சிறந்த சிந்தனை...நடைமுறைப்படுத்த நாங்களும் முயற்சித்து வருகின்றோம். ஆனால் பல சம்யங்களில் உரையாடல் வடிவத்தில் வரும்போது அதை அப்படியே தருவதுதான் செல்லுபடியாகின்றது. மட்டுமல்ல பல சொற்களுக்கு தமிழில் சரியான சொல் கிடைப்பதில்லை. நாங்கள் கூகுள், தமிழ் க்யூப் எனும் ஆங்கிலத்திலிருந்து தமிழ் அகராதி பயன் படுத்திச் செய்வதுண்டு. ஆனாலும் சில சமயங்களில் தவிர்க்க முடியவில்லை. இனி முயற்சிக்கின்றோம். நல்ல கருத்திற்கு நன்றி! ஐயா !!(தங்களை சார் என்று விளித்துக் கொண்டிருந்தோம்...இப்போது ஐயா.!!!...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைகளில் பேச்சுத்தமிழைப் பயன் படுத்தாலாம்.
      கருத்துக்கு நன்றி

      நீக்கு
  12. பெட்ரோல் போட்டுக் கொண்டு டூவீலரில் விரைந்தபோது எதிர்ப்பட்ட ஆட்டோவில் மோதினான் அவன்.
    /////இந்த வாக்கியத்தைத் தனித் தமிழில் எவ்வாறு கொடுப்பதென்பதே எனக்குப் புரிபடவில்லை. தாங்கள் விளக்கியருளினால் நானும் இம்முறைக்கு ஆதரவளிக்கிறேன் அடையாறு தல ஐயனே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "புட்போர்டில் ஏறி ரூபாய் நோட்டை நீட்டி டிக்கெட் வாங்கி"... குங்குமம் பத்திரிகை கதையிலிருந்து..

      நீக்கு
    2. மொழிக் கலப்பில் ஆங்கிலத்துக்கு மட்டுமே தடாவா?

      நீக்கு
    3. இரு சக்கர ஊர்தியில் எரிநெய் நிரப்பிக் கொண்டு விரைந்து செல்கையில் எதிரில் வந்த தானி மேல் மோதினான் அவன்-இப்படி இருக்கலாமா?!
      நன்றி

      நீக்கு
    4. பேருந்தின் படிப்பலகை மீதேறி,பணத்தாளை நீட்டிப் பயணச்சீட்டு வாங்கி?!

      நீக்கு
    5. எம்மொழியாயினும்,பிறமொழி கலவாதிருத்தல் வேண்டும்!

      நீக்கு
  13. உலக மயத்தில் மொழிக் கலப்பை தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன் .எது தமிழ்ச் சொல் பலருக்கும் தெரியாது ,உதாரணமாய் இதையே எடுத்துக்கலாம் 'இனிமேல் தங்கள் இஷ்டப் படியே தனித்தமிழில் மட்டுமே எழுத முயற்சிக்கிறேன்.'இதில் இஷ்டம் என்பது தமிழ்ச்சொல் இல்லையென்று சொன்னால் பலருக்கும் ஏற்க 'கஷ்டமாய் 'இருக்கும் :)

    பதிலளிநீக்கு
  14. மன்னிக்கணும் ... உங்க பானைச் சோற்றை உங்களுக்கே படைப்பதா...?!

    சரியான தொடுப்பு: http://dharumi.blogspot.in/2006/05/159.html

    பதிலளிநீக்கு
  15. இப்பதிவிலும் நீங்கள் சொன்ன கருத்து பற்றிய ஒரு உரையாடல் நடந்தது. அதன் தொடுப்பு - http://dharumi.blogspot.in/2009/01/289.html

    பதிலளிநீக்கு
  16. எந்தளவு இது இன்று சாத்தியம் என்று இனி வரும் காலம் தான் பதில் சொல்லும் ஐயா!தனிமொழிகள் இனி தமிழில் சாத்தியமா என்பதை முதலில் ஊடகங்கள் திருத்தி எழுதட்டும்!

    பதிலளிநீக்கு
  17. எந்த அளவிற்கு இது சாத்தியம் என்று தெரியவில்லை. முடிந்த வரை தமிழ் பயன்படுத்த முயல்வோம்.

    த.ம. +1

    பதிலளிநீக்கு