தொடரும் தோழர்கள்

சனி, ஆகஸ்ட் 10, 2013

உணவும் உணவு சார்ந்த இடமும்!--சுட்ட தோசை!



அவளுக்கு மட்டும் நெறைய சாதம் போட்டிருக்கே!எனக்கும் போடு”

என் கையை நீட்டிய படியே கேட்கிறேன்.

குஞ்சுக்கையில் ஒரு உருண்டை மோர்சாதம்.

அம்மா சொல்கிறாள்”அக்கா கை உன் கையை விடப் பெரிசில்லையா?”

“அப்ப அவளுக்குக் கொஞ்சம் கொறச்சுப் போடு!”

ஆம்! அது ஒரு காலம்!

விரும்பி அழைத்தாலும் திரும்பி வராத காலம்.

என்னையும் அக்காக்கள் மூவரையும் அரை வட்டமாக அமர்த்தி  மோர் சாதம் பிசைந்து, நாங்கள்  வலது கைநீட்ட,ஒரு உருண்டை சாதத்தை அம்மா வைப்பார்கள்.ஒரு விரல் மடக்கிச் சாதத்தின் நடுவில் ஒரு குழி செய்து கொள்வோம்.அதில் அம்மா குழம்பு கொஞ்சம் ஊற்று வார்கள். அப்படியே அந்தக் கை சாதத்தை வாயில் போட்டு மளுக்கென்று விழுங்கி விட்டு அவசரமாக அடுத்த உருண்டைக்காகக் கை நீட்டிய காலம்!

என்ன ருசி!

வெறும் மோர் சாதத்துக்கு எப்படி வந்தது இவ்வளவு ருசி!

அது அம்மாவின்  கையால் போடப்பட்டது.

அந்தக்கை சாத்தோடு சேர்த்து அன்பையும் அல்லவா கொடுத்தது!

அது அன்பின் ருசி!

அந்த ருசி,அந்த இன்பம் இன்று எந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டாலும் கிடைக்காது!

வீட்டில் சாப்பிடும் இட்லி தோசை,சாதம் இவை தவிர வேறு எதுவும் வேண்டும் என்று விரும்பி யதில்லை; விரும்பினாலும் கிடைக்கும் நிலையிலும் இல்லை!

கடைத் தெருவில் ஒரு ஷாப் கடையில்(!),(அப்போதெல்லாம் சோப்பு சீப்பு பவுடர் போன்றவை கிடைக்கும் கடை ஷாப் கடை.மளிகை சாமான் கிடைக்கும் கடை மளிகைக்கடை.இப்போது போல் எல்லாம் ஒரே கடையில் கிடைக்காது)கண்ணாடி ஜாடியில் பள பள என்று பல வண்ணங் களில் படுத்துக்கிடக்கும் கோழிமுட்டை போன்ற மிட்டாயைப் பார்த்தால் ஆசையாக இருக்கும். ஆனால் அது வேண்டும் என்று ஒரு நாளும் அம்மாவைத் தொந்தரவு செய்ததில்லை.

முதன்முதல் ஓட்டலில் சாப்பிட்டது தேர்தல் வெற்றிக்குப் பின் மணிசங்கர் பவனில் மைசூர்பாகும் தோசையும்தான்.பின்னாளில் லீவுக்காகத் திண்டுக்கல் போன நாட்களில் கையில் காசு கிடைத்தால்  ஒட்டலில் போய்ச் சாப்பிட மாட்டேன்.(வீட்டிலேயே வயிறு ஃபுல்).ஆனால் எனக்குப் பிடித்த ஒரு குளிர் பானம் அருந்துவேன்.அதன் பெயர் போர்ட்டெல்லோ!இப்போதெல்லாம் கிடைப்பதில்லை!

சுட்ட தோசைக்கு வருவோம்.

தோசையென்றாலே சுடுவதுதானே,சுடாவிட்டால் வெறும் மாவுதானே என்கிறீர்களா?

இங்குத் தோசை வாங்க உதவிய பணம் சேகரிக்க உதவிய பொருள் சுட்டது!(குழப்பமா இருக்கே!)

செங்கோவியின் ஊரில் வசித்தகாலம்.அடுத்த காம்பவுண்டில் வக்கீல் ஒருவர் இருந்தார்.அவர் வீட்டில் கம்பிகளின் வழியே பார்த்தால் உள்ளிருக்கும் புத்தகம் வைத்த பீரோக்கள் தெரியும்.ஒரு பீரோவின் மேல் ஒரு தடிமனான புத்தகம் நீண்ட நாட்களாகத் தூசி படிந்து உறங்கிக் கொண்டி ருந்தது.சட்டப் புத்தகமாக இருக்க வேண்டும் .என் நண்பன் ஒருவன் அதன் மீது கண் வைத்தான். அந்த வக்கீலின் பேரன் ,எங்களை விட ஓரிரு வயது இளையவனைத் துணைக் கழைத்தான்.ஒரு நாள் அப்புத்தகம் இடம் பெயர்ந்தது—பீரோ மேலிருந்து என் நண்பனின் கைக்கு.அப்புறம் என்ன?கடைக்குப் போயிற்று;காசாயிற்று;பாலமுருகன் கபேயின் ஸ்பெசல் தோசையாக எங்கள் (அந்த நண்பன் ,நான்,இன்னொரு நண்பன்,அந்தப்பேரன் -அவனைக் கழட்டி விட முடியுமா!—ஆகிய நால்வர்)வயிற்றுக்குள் போயிற்று.

பின்னர் நடந்ததெல்லாம் உணவு சாராதவை-உடல் சார்ந்தவை-வேறென்ன,’டின்’தான்

இதுவே சுட்ட தோசைக் கதை.

25 கருத்துகள்:

  1. //பின்னர் நடந்ததெல்லாம் உணவு சாராதவை-உடல் சார்ந்தவை-வேறென்ன,’டின்’தான்//
    யாருக்கு என்று சொல்லவில்லையே.

    அதுசரி. ‘போர்ட்டெல்லோ’ குளிர்பானம் எதிலிருந்து தயார் செய்தார்கள் என்று சொல்லவில்லையே!
    பதிவை சுவைத்தேன்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுவன் ஆயிற்றே! அதைத் தெரிந்து கொள்ள முயன்றதில்லை.இப்போதைய கோலா மாதிரி ஒன்று என நினக்கிறேன்
      நன்றி சார்

      நீக்கு
  2. அடேயப்பா, ஒரு புக் சுட்டா, நாலு பேரு சாப்பிடலாமா, அப்போ?.....இப்போ, ஒரு லைப்ரரியைவே சுட்டா தான் முடியும் சார்.

    பதிலளிநீக்கு
  3. //பின்னர் நடந்ததெல்லாம் உணவு சாராதவை-உடல் சார்ந்தவை-வேறென்ன,’டின்’தான்
    //

    உஸ்ஸ்..டின்னா?.......நான்கூட மிச்சக்காசுல, ஜல்சா வேற பண்ணிட்டீங்களோன்னு நினைச்சுட்டன்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜூ.....னியர்!அப்போது எட்டாம் வகுப்போ ஒன்பதோ படித்துக் கொண்டிருந்தேன்! அப்பப் போயி.......!

      நன்றி

      நீக்கு
  4. தோசை சுட்ட கதையோ என்று நினைத்தேன்... இது "சுட்டு" தோசை சாப்பிட்ட கதை... ரசித்தேன் ஐயா..

    பதிலளிநீக்கு
  5. சுட்ட தோசை இன்னொன்று கேட்க வைக்கிறது .
    சுவை.
    கொடி பட்டொளி வீசிப் பறப்பது அழகு.
    வந்தே மாதரம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாயின் மணிக்கொடி பட்டொளி வீசிப் பறக்க உதவியவர் பிரகாஷ்!
      வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. சுட்ட தோசை..... :) ருசியாக இருந்தது...

    //பின்னர் நடந்ததெல்லாம் உணவு சாராதவை-உடல் சார்ந்தவை-வேறென்ன,’டின்’தான்//

    இது வாங்குவதில் தான் எத்தனை விதம்! :)

    பதிலளிநீக்கு
  7. தோசை சாப்பிட்டு
    டின்னும் கட்டிக்கிட்டு --
    பதிவும் போட்டு .... பாராட்டுக்கள்..1

    பதிலளிநீக்கு
  8. //என்ன ருசி
    வெறும் மோர் சாதத்துக்கு எப்படி வந்தது இவ்வளவு ருசி!
    அது அம்மாவின் கையால் போடப்பட்டது.
    அந்தக்கை சாத்தோடு சேர்த்து அன்பையும் அல்லவா கொடுத்தது!
    அது அன்பின் ருசி!
    அந்த ருசி,அந்த இன்பம் இன்று எந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டாலும் கிடைக்காது!//

    ரஸித்து ருசித்து அழகாக எழுதியுள்ள வரிகள். மிகவும் ருசியாக உள்ளன. பாராட்டுக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  9. சுட்ட தோசை ருசித்தது! ரசித்தேன்! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. எங்க அப்பா உருட்டி கொடுக்கும் உருண்டை சோறுக்கு எங்கள் குடும்ப பிள்ளைகள் யாவருமே அடிமை...!

    சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள் எல்லாம் எங்க அப்பா என்றால் கொள்ளை பிரியம்....எல்லாம் இந்த உருண்டை சோற்றுக்குதான்.

    அப்பா எல்லாமே மிக்ஸ் பண்ணி கலவையாக கொடுப்பார்.....எல்லாவற்றுக்கும் மேலாக எங்களுக்கு தெரியாமல் எங்க அம்மாவுக்கு நைசாக தெரியாமல் கொடுப்பார் பாருங்க எங்க அக்காக்கள் கண்டு...அப்பாவை காலை வாருவார்கள்...!

    அந்தகாலம்....இனி வருமா....? அம்மா கையாலும் சாப்பிட முடியாமல் இருக்கிறோம்...!

    அப்பா இறந்தபோது அக்காக்கள் உருண்டை சோறு பற்றி சொல்லித்தான் அழுதார்கள்....

    உருண்டை சோறு அம்புட்டு ருசி.....பாசம்....!

    அருமை தல...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உருண்டை சோறு அம்புட்டு ருசி.....பாசம்....!//
      நிச்சயமாக!
      நன்றி மனோ!

      நீக்கு
  11. கையில் வைத்து உருண்டை சாதம் கொடுத்த காலங்கள் இப்போது நினைத்துப்பார்த்தாலும் வாய்க்குமா எனத்தெரியவில்லை,அது உண்ணும் உணவு மட்டுமல்ல அதில் இருக்கிற பாசமும்,அன்பும் மிதமிஞ்சிய வாஞ்சையும் நம் கலாச்சாரத்தின் ஒருபக்க அடையாளத்ஹ்தை சொல்லிச்சென்றாய் சொல்வார்கள் தங்கலைபோன்ற பெரியவர்கள்.அது இப்போது வேட்டு வைக்கப்பட்டு.பாஸ்ட புட்,மற்றும் இத்தியாதி,இத்தியாதிகளால்/ருசிகள்மெல்ல,மெல்ல காலி செய்யப்படுகின்றன யாரோலோ/

    பதிலளிநீக்கு
  12. I was reminded of my days in Sattur and the famous Mani shankar bhavan.You have nicely brought out the experience of being fed by Mother. In fact almost all those who belong the older generation must have experienced this.How fortunate we were !
    You have rightly said the best of five star hotels can not hold a candle to mothers love and preparation.Modern day Pizzas etc are nothing compared to curd rise prepared by mother with all the love.The only way we can reciprocate the love , is to ensure that we take care of the mother who selflessly showered all her love without any expectations. In this regard I salute you for taking care of your mother in her twilight years. vasudevan

    பதிலளிநீக்கு
  13. இது சுட்ட தோசையில்லை... புத்தகம் விற்ற தோசை....

    அம்மாவின் அன்பு... வேறெதிலும் கிடைக்காத ஒன்று.

    பதிலளிநீக்கு
  14. ///அதன் பெயர் போர்ட்டெல்லோ!இப்போதெல்லாம் கிடைப்பதில்லை///

    Portello இலங்கையிலும் மேல்நாடுகளிலுள்ள ஈழத்தமிழர்களின் கடைகளிலும் இன்றும் கிடைக்கிறது. கிட்டத்தட்ட CocaColaவுடன் Raspeberry Juice ஐக் கலந்த மாதிரியான சுவை, அந்தக்காலத்திலும் அப்படியான சுவையா அல்லது வேறுபட்டதா? :)

    பதிலளிநீக்கு
  15. ஆனால் அது வேண்டும் என்று ஒரு நாளும் அம்மாவைத் தொந்தரவு செய்ததில்லை//

    ஹூம்... அவ்வளவு நல்ல பிள்ளையா இருந்துருக்கீங்க. இப்பவும் அப்படித்தானா?

    பதிலளிநீக்கு