தொடரும் தோழர்கள்

திங்கள், மே 07, 2012

வெள்ளைக் குதிரை வீரனும்,வெங்கட்ராமனும்


சாவித்திரி ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்.

வாசல் கதவருகே நின்றிருந்தவள் பார்வை தெருக்கோடியிலேயே நிலை குத்தியிருந்தது.

வழக்கம்போல் அவன் வருவானா?

ஒரு வாரமாக இதேதான் நடந்து கொண்டிருக்கிறது.

அவள் வாசலில் நின்றிருப்பாள்.

அப்போது தெருக்கோடியில் அந்த முரட்டு வெள்ளைக் குதிரை தோன்றும்.

அகம்பாவத்தோடு திமிறிக் கொண்டே வரும் அதன் மீது அவன் வீற்றிருப்பான்.

ஆஜானுபாகுவாக,முறுக்கு மீசையும்,கையில் சவுக்குமாய் அவன் குதிரையைப் போலவே ஒரு திமிரும் அகம்பாவமும் கலந்த தோற்றத்தில் குதிரை மீது அமர்ந்து,மெல்ல அவள் வீட்டு வாசலை அடைவான்.

அங்கு வந்தும் குதிரை நிற்கும்.

அவள் கதவுக்குப் பின் ஒளிந்து கொள்வாள்.வாசலில் நிற்கும் குதிரை மீது அமர்ந்த படியே அவன் அவள் வீட்டைச் சில நிமிடங்கள் பார்த்தவாறி ருப்பான்.

பின் குதிரையை விரட்டியபடி சென்று விடுவான்.

அவன் போகும் வரை அவள் பயத்துடன் பதுங்கியிருப்பாள்.

எது நடக்கக் கூடாதோ அது நடந்து விடுமோ என நடுங்கிக் கொண்டிருப்பாள்.

இன்று சிறிது துணிச்சலை வரவழைத்துக் கொண்டாள்.

அதோ,குதிரையும் அதன் மேல் அவனும்.

அவள் வீட்டு வாசலுக்குக் குதிரை வந்து விட்டது.

அவள் வழக்கம்போல் கதவுக்குப் பின் மறைந்து கொள்ளாமல் நின்றிருந்தாள்.

குதிரை நின்றது.

அவன் அவளை ஒரு நிமிடம் உற்றுப்  பார்த்தான்.

பின் கேட்டான்”வெங்கட்ராமன் வீடு இதுதானே?”

அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

”ஈஸ்வரா! இது என்ன சோதனை”.அவள் உடல் நடுங்கியது.

”என்ன செய்வது,என்ன சொல்வது”திகைத்தாள்

பின் சொன்னாள்”இல்லை,அதோ எதிர் வரிசைக் கடைசியில் பச்சைக் கேட் போட்ட வீடு இருக்கிறதே,அதுதான்”

அவன்,அவளைத்தாண்டி உள்ளே பார்ப்பது போல் அவளுக்குத் தோன்றியது.  

கதவை லேசாகச் சார்த்தினாள்.

அவன் அங்கிருந்து அகன்றான்.

போகும்போது அவன் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை தவழ்ந்ததாக அவளுக்குத் தோன்றியது.

“சாவித்ரி,சாவித்ரி”—கணவரின் குரல் அவள் உறக்கத்தைக் கலைத்துக் கனவுலகில் இருந்து நனவுலகுக்குக் கொண்டு வந்தது.

அவசரமாக எழுந்தாள்.

வெங்கட்ராமன் கட்டில் மீது அமர்ந்திருந்தார்.

”குடிக்கக் கொஞ்சம் வெந்நீர் குடுடி”

அவள் ஃபிளாஸ்க்கைத் திறந்து டம்ளரில் வெந்நீர்  ஊற்றி,ஆற்றிக் குடிக்கும் சூடாக அவருக்குக் கொடுத்தாள்.

அவர் முகம் கொஞ்சம் தெளிவாக இருப்பது போல் அவளுக்குத் தோன்றியது.

அவள் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவர் போல் அவர் சொன்னார் ”இருமல் குறைஞ்சிருக்கு,ஈசியா மூச்சு விட முடிகிறது”

அவளுக்குத் தோன்றியது,வந்த ஆபத்து விலகி விட்டது ,இனி அவர் பிழைத்துக் கொள்வார் என்று.

(தொடரும்)

22 கருத்துகள்:

  1. வெள்ளைக் குதிரை வீரனா...? காட்சிப் படிமமாக எருமையில் வீரன் வருவதாக எனக்குத் தோன்றியது, வேற என்னமோ சொல்ல வர்றீங்க... பொறுத்திருந்து பாக்கறேன்...

    பதிலளிநீக்கு
  2. போகும்போது அவன் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை தவழ்ந்ததாக அவளுக்குத் தோன்றியது.

    ஆரம்பமே ஜோர்.. என்ன நடக்கப் போகிறது என்று ஆவல்.

    பதிலளிநீக்கு
  3. சுவாரசியமாக இருக்கிறது. குதிரையா இல்லை எருமையா?

    பதிலளிநீக்கு
  4. ஆகக்க... கனவுகளின் பழங்களா... சூப்பர்... யூ கண்டின்யூ...

    பதிலளிநீக்கு
  5. அடுத்தது என்ன நடக்கும் என ஆவலை தூண்டி விட்டது.மிக சுவாரசியமான ஆரம்பம். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அடுத்த பாகத்தை எதிர்பார்த்து ..!

    பதிலளிநீக்கு
  7. கதையின் நாயகியின் பெயர் சாவித்திரி என இருப்பதால் வெங்கட்ராமனுக்கு ஒன்றும் ஆகாது என் நினைக்கிறேன். அடுத்து என்ன நடக்க இருக்கிறது என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. காத்திருக்கிறேன்! ஆவலுடன்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  9. கணேஷ் சொன்னது…

    //வெள்ளைக் குதிரை வீரனா...? காட்சிப் படிமமாக எருமையில் வீரன் வருவதாக எனக்குத் தோன்றியது, வேற என்னமோ சொல்ல வர்றீங்க... பொறுத்திருந்து பாக்கறேன்...//
    கனவு காண்பவரின் ஆழ்மன எண்ண ஓட்டமே படிமங்கள்.சாவித்ரிக்கு இப்படி!
    நன்றி

    பதிலளிநீக்கு
  10. பாலா சொன்னது…

    //. குதிரையா இல்லை எருமையா?//
    அவள் உருவகம் அப்படி!
    நன்றி

    பதிலளிநீக்கு
  11. வெள்ளைக் குதிரை வீரனை அறிய ஆவல்..காத்திருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  12. சுவாரசியமான ஆரம்பம், ஆவலை தூண்டிவிட்டது!.

    பதிலளிநீக்கு